மனித உணவுச்சங்கிலியில் பாம்பின் பங்கும், அவற்றின் வியக்க வைக்கும் இனப்பெருக்க முறையும்.

 பாம்பு, பகலில் சூரிய ஒளியிலும், இரவில் சந்திர ஒளியிலும் பல வைரங்களை ஒன்றோடு ஒன்றாக வைத்தாற் போல் பளபளப்பான வசீகரிக்கின்ற செதில்களையும், கண்ணுக்கு கவர்ச்சியான வண்ணங்களையும், மனிதர்களைக் காட்டிலும் பல நற்பண்புகளையும், மனித வாழ்விற்கு மறைமுகமாக பல நன்மையானவற்றை செய்யும் அதிசயத்தக்க உயிரினமாகவும் விளங்குகிறது.    அக்காலத்திலிருந்து  இக்காலம் வரை “பாம்பு என்றாலே படையும் நடுங்கும்”, “விதி முடிந்தவனுக்கு விரியன் கடி “ என்று பாம்புக்கு எதிராக பல பழமொழிகளும்,  வாய்மொழியாகவும், செவி வழியாகவும் பரப்பப்படுகின்றன.  போதாக்குறைக்கு செய்திகளில், செய்தித்தாள்களில் கொடிய விடம் கொண்ட பாம்பு, ஆபத்தான பாம்பு என்று கூடுதலாக மக்களை பாம்பின் மீது வெறுப்பை ஊட்டுகின்றன. மக்களால் அதிகம் விரும்பப்பட்டு பார்க்கும் சினிமாவில் கூட பாம்புகள் எதிர்மறையாக தான் காட்டப்படுகின்றன.  

      பேய்களை நாம் நேரில் பார்த்ததில்லை, அதனால் அவைகளைப் பற்றி வரும் செய்தி உண்மை என்றே நம்பப்படும்.  அதுபோல தான் பாம்பும். அதைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை, தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை . இதன் காரணமாகவே அதைப் பற்றி சொல்லப்படும் கட்டுக்கதைகள், பொய்கள், புரளிகள், மூடநம்பிக்கைகள், அனைத்தும் நம்பப்பட்டு, அதன் மீது  பயத்தை உண்டாக்குகிறது.  இதற்கு ஆங்கிலத்தில்  OPHIDIOPHOBIA ( Fear of Snakes )  என்றழைக்கப்படுகிறது.  பல உயிர்களை கொடூரமாக கொல்லும் நஞ்சுள்ள நாகப்பாம்பை ஏன் நல்ல பாம்பு என்று அழைக்கிறோம் ?

        உலகளாவிய பாம்புக்கடி இறப்புகளில் பாதிக்கு மேல் இந்தியாவில்தான் பதிவாகியுள்ளது. ஓர் ஆண்டில் கிட்டதட்ட 50,000 முதல் 60,000 பேர் பாம்புக்கடியால் இறக்கின்றனர். இவை அரசின் பதிவேட்டில் உள்ள எண்ணிக்கை மட்டுமே.   மருத்துவமனைக்கு வர முடியாமல், என்ன கடித்தது என்று தெரியாமல், தனக்குத் தானே மருத்துவம் செய்து இறந்தவர்களின் எண்ணிக்கை வேறு . இந்த எண்ணிக்கை தான் பாம்பின் மீது பயத்தை அதிகமாக்குகின்றது. 

        ஆனால் இதே இந்தியாவில் தான்  சாலை விபத்திலும், வாகன விபத்திலும் சுமார் 4½ லட்சம் பேர் இறக்கின்றனர். அதாவது பாம்புக்கடியை விட சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 மடங்கு ஆகும். அதற்காக வாகனங்கள் வாங்காமலோ, சாலையில் செல்லாமலோ, இல்லை. அவை வாழ்க்கைகக்கு முக்கியமானவையாக மாற்றப்பட்டிருக்கிறது. அதுபோலத்தான் பாம்புகளும் நம் வாழ்விற்கும், நம் உணவுச்சங்கிலிகளும், இயற்கையை சமநிலையில் வைப்பதற்க்கும் மிக மிக முக்கியமானவை ஆகும்.      

       பாம்பை விட மனிதர்களின் கண்களுக்கு தெரியாமல் அதிக சேதத்தை  ஏற்படுத்துவது எலிகளே. எலிகள் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 200 மில்லியன் மக்களுக்கு போதுமான உணவை அளிக்கின்றன.  கொரித்துண்ணிகள் உலகின் 20% உணவு விநியோகத்தை உட்கொள்கின்றன. அவைகளால் பிளேக் நோய் பரவுகின்றன. அதைத்தவிர வயலில் நெற்சேதம், வீட்டில் உள்ள பொருட்கள், கார்கள், நெல் சேமிப்பு கிடங்குகள் என்று பல தொந்தரவுகளை எலிகள் தருகின்றன.  

      அந்த எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மிக முக்கியமான உயிரினமாக பாம்பு திகழ்கின்றது. பூனை, நரி, பருந்து, ஆந்தை இவையெல்லாம் எலிகளை வேட்டையாடுகின்றன . ஆனால் எலியின் வளையில் சென்று வேட்டையாடி அதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரே உயிரினம் பாம்பு மட்டுமே . 

       பாம்புகளின் வளர்ச்சி      எலிகளை கட்டுப்படுத்துதல் 

மனிதனின் சிறு அழிவு 

      பாம்புகளின் அழிவு     எலிகளின் பெருக்கம் மனிதனின் பேரழிவு 

      இவையெல்லாம் தான் பாம்புகள், உணவுச்சங்கிலியை உடையாமல் இருக்கவும், இயற்கையை சமநிலையில் வைக்கவும், பிளேக் மற்றும் பஞ்சம் ஆகியவை வராமல் இருக்கவும் உதவுகின்றன. ஆனால் மக்கள் இதைப் பற்றி அறியாமலும் , இதனை புரிந்துக்கொள்ள முயற்சிக்காமலும் , பார்த்தவுடன் எந்த வித காரணமில்லாமலும், கருணையில்லாமலும் பாம்பை அடித்துக்கொல்கின்றனர். அதுமட்டுமன்றி மனிதனால் சாகச விலங்காகவும், சட்டவிரோத வர்த்தகத்திற்க்காகவும், இறைச்சிக்காகவும், பயத்திலும், அதன் மீது வைக்கப்படும் மூடநம்பிக்கைகளாலும் கொல்லப்பட்ட பாம்புகளின் எண்ணிக்கை பாம்பு கடித்து இறந்த மனிதர்களின் எண்ணிக்கையை  விட மிக மிக அதிகம். 

      யானை- மனித மோதல்கள், சிறுத்தை- மனித மோதல்கள், காட்டுப்பன்றி- மனித மோதல்களைக் காட்டிலும், பாம்பு- மனித மோதல்கள் அதிகம். ஏனெனில் பாம்பும் மனிதர்களும் ஒரே நிலப்பரப்பை பகிர்ந்துள்ளனர். இதில் அதிகம் கொல்லப்படுவது அல்லது விரட்டப்படுவது விலங்குகள் தான், அதிலும் முக்கியமாக பாம்புகள் தான். 

      பல ஆண்டுகளாக அழிக்கப்பட்ட பாம்புகள், இதுவரையிலும் எப்படி முற்றிலும் அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு அதன் இனப்பெருக்க பரிணாம வளர்ச்சியே இதன் முக்கிய காரணம். 

     இயற்கைக்கு தெரியும் எவை எவை பூமிக்கு தேவை, எவை தேவையற்றவை என்று.  டைனோசர் மற்றும் மாமூத் ஆகிய உயிரினங்கள் தேவையில்லை என்று இயற்கை நினைத்ததால் முற்றிலுமாக அழித்துவிட்டது. ஆனால் பாம்புகள் இந்த பூமிக்கு தேவை என்பதால் அதனை அழியவிடாமல், உயிர்பிழைக்க வைக்க சில வகையான இனப்பெறுக்க வகைகளை கொண்டிருக்கிறது. 

      சில பாம்புகள்  முட்டை போடும் ( OVIPAROUS ). அவைகள் நல்ல பாம்பு, சாரைப்பாம்பு, தண்ணீர் பாம்பு, ராஜ நாகம், மலைப்பாம்பு, கட்டு வரையன், கொம்பேறி மூக்கன் ஆகும். சில பாம்புகள் குட்டி போடும் (OVIPARTOUS)  அவைகள், சுருட்டை விரியன், மண்ணுளி  பாம்பு, பச்சை பாம்பு, உழவன் பாம்பு, கடல் பாம்புகள் ஆகும்.  சில பாம்புகள் (OVOVIVIPAROUS) அதாவது முட்டைகளை உடம்பின் உட்புறமாக வைத்து குஞ்சு பொரிப்பதன் மூலம் குஞ்சுகளை பெற்றெடுக்கும். அவை கண்ணாடி விரியன் ஆகும். இந்த முறையை சில சுறாக்களிலும், சில பூச்சிகளிலும், சில மீன்களிலும் காணலாம். ஒரு வகையான பாம்பு PARTHENOGENESIS (ASEXUAL) பால்சாரா இனப்பெருக்கம் செய்யும். ஆண் மற்றும் பெண் ஒரே உயிரினத்திலிருந்து உடலுறவு இல்லாமல் தன் சந்ததியை தானே உருவாக்கும் வல்லமைப்பெற்றுள்ளது.  அந்த வகையில் மழைக்காலத்தில் வீட்டிற்குள் மண்புழு போல் தோற்றமளிக்கும் உடலைக் கொண்ட செவிட்டுப்பாம்பு அல்லது கானாக்கடியன் ஆகும். இதன் குட்டிகள் பெரும்பாலும் பெண்ணாகவே இருக்கும்.  

       சமீபத்திய ஆராய்ச்சியில் இதைவிட மிகவும் சுவாரசியமான இனப்பெருக்க முறையையை ஆராய்ச்சியாளர்கள் பாம்புகளில்  கண்டுபிடித்துள்ளனர். அது விந்தணு  சேமிப்பாகும் ( SPERM STORAGE). ஒரு முறை ஆண் பாம்புடன்  உடலுறவு வைத்துக்கொண்டால் போதும், அதன் விந்தணுவை ஒரு வகை புரதத்தின்  மூலம் அந்த விந்தணுவை உயிருடன் வைத்துக்கொள்கிறது. எதிர்காலத்தில் ஆண் பாம்பு இல்லாவிட்டாலும்,  அதனோடு இனச்சேர்க்கை வைத்துக்கொள்ள முடியாவிட்டாலும்  இதனைப் பயன்படுத்தி இனப்பெறுக்கம் மேற்கொண்டு தன் இனம் அழியாமல் பாதுகாக்கிறது  . குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 7 வருடம் வரை இந்த விந்தணுவை தன்  உடம்பில்  சேமித்து வைக்க முடியும் . 

    இவையெல்லாம் தான் பாம்பு இனங்கள் அழியாமல் இருக்க பேருதவி செய்கின்றன. இயற்கையும் அதை அழியாமல் பாதுகாத்துக்கொள்கிறது.  இந்தியாவின் பறவை மனிதன் சலீம் அலி கூறியவாறு “விலங்குகள்,பறவைகள், ஊர்வனங்கள், பூச்சிகள் இல்லாமல் மனிதர்களால் உயிர் வாழ முடியாது, ஆனால் மனிதன் இல்லாமல் அவைகளால் மகிழச்சியாக உயிர் வாழ முடியும்”. 

    எனவே தான்,  மனிதர்கள் வாழ சிறு பூச்சிகள் முதல் பெரிய யானைகள், திமிங்கலங்கள் வரை தேவைப்படுகின்றன.  இதை எப்போது மனிதன் உணர்கிறானோ, புரிந்து கொள்ள முயற்சிக்கிறானோ அன்று தான் உணவு சங்கிலி உடையாமலும், இயற்கையின் சமநிலை மாறாமலும் இருக்கும். அதுவரை இந்த உலகம் EGO-SYSTEM ( மனிதன் மட்டும் தான் என்ற அகங்காரத்துடன் மட்டுமே இருக்கும் ), ECO- SYSTEM ( சூழல் மண்டலம் ) ஆக இருக்காது .               

        “நீ  இயற்கையை பாதுகாத்தால் 

         இயற்கை உன்னை பாதுகாக்கும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version