நாம் உண்ணும் உணவே நாமாகிறோம்

உணவு என்றால் “உணர்வு”. அது உடலை மட்டுமல்ல, மனதையும் ஆட்டி படைக்கும் சக்தி. நாம் உண்ணும் உணவே நாமாகிறோம். அத நம்பறீங்களா?  மனம் சோர்வாக இருக்கும் நேரங்களில்,  அதிகமா இனிப்பு வகை உணவுகளை சாப்பிட தோன்றும். அடிக்கடி, வெளியே  காரசாரமா உணவு சாப்பிடுபவர்கள் பயங்கர கோவக்காரர்களா இருப்பார்களாம். அதனால் தான் உடல்நிலை சரியில்லாத சமயம்,  “கம்ஃபர்ட் ஃபுட்”, அதாவது உப்பு, காரம் லாம் அளவா போட்டு, வீட்டிலேயே செய்யப்படுகிற, ஆறுதல் உணவையே, மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். 

உணவின் நிறம் கூட உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டவை. மாம்பழம், உருளைக்கிழங்கு போன்ற மஞ்சள் உணவுகள் மகிழ்ச்சியை அதிகரிப்பதாகவும், செர்ரி, டொமேட்டோ போன்ற சிவப்பு உணவு வகைகள் எரிச்சலடைந்த மனதை சமன் படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

உலகம் முழுவதும் பார்த்தோமேயானால், ஏகப்பட்ட வித்தியாசமான உணவு பழக்கங்கள். இந்திய உணவு, மேற்கு, இத்தாலியன், கொரியன், ஜப்பானீஸ், மெக்ஸிக்க்கன், சைனீஸ் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவு ஏன்? இந்தியாவிலேயே வடக்கு, தெற்கு என்று உணவு பழக்கங்கள் வெகுவாக மாறுபடும். வடக்கில் அதிகம் மசாலா வகை உணவுகள் பிரசித்தம். தெற்கில், பாரம்பரிய உணவுகளே விரும்பி சாப்பிடப் படுகிறது. தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் என்கிற போது இட்லி, தோசை, இடியாப்பம், பணியாரம், அடை, சோளம், தினை, கம்பு போன்ற பல அடங்கும். 

இது போக பண்டிகை கால உணவுகள் என்பது ஒரு வகை. தீபாவளி என்றாலே ஏதாவது ஒரு ஸ்வீட், தீபாவளி மருந்து, முறுக்கு, மிக்ஸர் என்று அசத்துவோம். கிருஸ்துமஸ் என்றால் கேக், பொங்கல் வந்தா சக்கரைப் பொங்கல், விநாயகர் சதுர்த்தி என்றால் கொழுக்கட்டை, கிருஷ்ணஜெயந்தி வந்தா சீடை, நவராத்திரி என்றால் கேட்கவே வேண்டாம், பத்து நாளும் வித விதமான சுண்டல் வகைகள் என்று இந்த லிஸ்ட் நீளமானது.  சமீப காலங்களில், முக்கியமாக கம்ப்யூட்டர் சம்பந்தபட்ட வேலையில் உள்ளவர்கள் வேறு மாநிலம், தேசம் என்று சென்று சில வருடங்கள் அங்கேயே தங்கி, வேலை பார்த்து, பொருள் ஈட்டிக் கொண்டு வருவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிப் போச்சு. அதனாலேயே அவர்கள் உணவு பழக்கவழக்கங்களும் வெகுவாக மாறி விடுகிறது. இவர்களைப் போன்றோர், தன் தாய்நாட்டிலும், அதே உணவு வகைகளை எதிர்பார்க்க ஆரம்பித்த காரணத்தால், இங்கு பிரசித்தமானவை தான் சேட் ஃபுட்ஸ, ஃபாஸ்ட் ஃபுட்ஸ் போன்றவை.  கார்பனேட்டட் குளிர்பானங்கள், பேக்கட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ், பிட்சா, பர்கர், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற ஃபாஸ்ட் ஃபுட்ஸ், பானிபூரி, சமோசா, பகோரா, போன்ற சேட்ஃபுட்ஸ், என இவை அனைத்துமே ஜங்க் ஃபுட்ஸ் வகையைச் சேர்ந்தவை தான்…

நாம மேலே பார்த்த ஜங்க் ஃபுட்ஸ் எதுலயுமே நார்ச்சத்தோ, புரதச்சத்தோ, கிடையாது. இவை சர்க்கரை, கலோரி, கொழுப்பு, சோடியம் போன்றவை அதிகம் உள்ளதாகவே இருக்கின்றன. அப்படியும் இவற்றை அனைவரும் விரும்பி உண்ண முக்கியமான காரணம், அதில் போடப் படுகிற சுவை ஊட்டிகளே! என்ன செய்ய? நம்மில் பலர் இவற்றின் சுவைக்கு அடிமையாகி கிடக்கிறோம். 

ஜங்க் ஃபுட்ஸ் தொடர்ந்து உட்கொள்வதால் பல வித உடல் பிரச்சனைகள் வரலாம். உடல் எடை அதிகரிப்பு இதில் முதல் இடம் வகிக்கிறது. உப்பு & சக்கரை இந்த உணவுகளில் அதிகம் இருப்பதால், உயர் இரத்த அழுத்தம், சக்கரை நோய் போன்றவை வர வாய்ப்புகள் அதிகம். செரிமானம் சரியாக ஆகாத படியால், வயிறு மந்தமாவது, அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை குழந்தைகள் ஃபேஸ் செய்கிறார்கள். அதிக கொழுப்பு உள்ளதால், கொலஸ்ட்ரால் அதிமாகி இதய நோய்கள் வர காரணமாகிறது. 

அடிக்கடி ஜங்க் ஃபுட் வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தைகளுக்காக சில டிப்ஸ் சொல்றேன், கேளுங்க. 

நல்ல புளித்த தோசை மாவில், வெங்காயம், தக்காளி, கொடைமிளகாய், கொத்தமல்லி எல்லாம் போட்டு, கரம் மசாலா கொஞ்சம் தூவி தோசை செய்து குடுக்கலாம். பீட்சா சாப்பிடும் ஃபீல் குடுக்கும். மீந்து போன இட்லியை, பிச்சி போட்டு, இட்லி மஞ்சூரியன் செய்து குடுக்கலாம். வீட்டிலேயே சேவை பிழிஞ்சு, அதுல மசாலா சேர்த்து, ஹோட்டலில் செய்கிற நூடுல்ஸ் போல தரலாம். பானி பூரிக்கு, கோதுமை மாவில் வீட்டிலேயே  சின்ன சின்னதா பூரி செஞ்சு, புளித்தண்ணி, புதினா தண்ணி, உருளைக்கிழங்கு செய்து குடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். 

நல்ல சுத்தமான எண்ணெய்ல, நாம வீட்லயே அரச்சு வச்சிருக்கற மசாலா பொருட்களைப் போட்டு இவற்றை செய்வதால், உடலுக்கு கேடு வந்து விடுமோ என்று கவலைப் பட வேண்டியதில்லை. 

இப்படி செய்வதால், வெளியே ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்தி விடுவார்கள் என்று சொல்ல முடியாது. அடிக்கடி சென்று சாப்பிடுவது நிச்சயம் குறையும். 

நம் முன்னோர்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவு வகையும் உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத படி ஜாக்கிரதையாக உண்டு வந்தார்கள். அதனால தான், உடல் எடை கூடுதல், சர்க்கரை, கொலஸ்ட்ரால் போன்ற எந்தவித பிரச்சனையும் அத்தனை எளிதில் அவர்களை பாதித்ததில்லை. இந்த காலத்தில், சர்வ சாதாரணமாக இது போன்ற ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதால், அஜீரணம், அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகள் வந்து விடுகிறது. இதெற்கெல்லாம் மருந்து, நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியிலேயே இருக்கு என்று சொன்னால் நம்ப முடிகிறதா? 

சளி, காய்ச்சல் என்றால், மிளகு, சீரகம் நிறைய சேர்த்து சூப் குடிக்கலாம். ஜுரத்தின் போது, மிளகு சீரக ரசம் சாதம் சாப்பிடுவது, வயிற்றுக்கு நல்ல இதமா, லைட்டா இருக்கும். வயிறு உப்பிசம் இருந்தா, ஒரு டம்ப்ளர் வெந்நீர்ல பெருங்காயம் போட்டு குடித்தாலே போதும். மாதவிடாய் காலங்களில் பெண்களை வாட்டும் தீராத வயிற்று வலிக்கு வெந்தயமே சிறந்த மருந்து. 

இது போல அஜீரணம், உடல் எடை கூடுதல் போன்ற எந்த பிரச்சனைகளும் வராம இருக்க, நாம கண்டத சாப்பிடாம, பேலன்ஸ்ட் டயட் என்று சொல்லப் படுகிற சமச்சீர் உணவு உட்கொள்ள வேண்டும். 

சமச்சீர் உணவு என்பது நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு ஆகியவற்றை வேண்டிய அளவு வழங்கும் முறை. இது போன்ற சமச்சீர் உணவு உட்கொள்வது, நோய்கள் வராமல் காக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது… 

இந்த சமச்சீர் உணவை சரியாக உண்பது என்பது ஒரு கலை. உணவை ஒரேயடியாக அடைத்துக் கொள்ளாமல், கொஞ்சம் கொஞ்சமாக குறிப்பிட்ட நேர இடைவெளியில் உண்பது அவசியம். நம்மள்ல சிலர், பரபர னு அஞ்சே நிமிசத்துல எதையோ சாப்ட்டு போவோம். நாம உண்ண 20 நிமிடங்களுக்கு குறைவாக எடுத்துக் கொண்டால், நம் மூளை சாப்பிட்டதாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளாதாம். இப்படி அறிவியலில் சொல்லப் படுகிறது. இன்னும்  செய்யக்கூடாத ஒன்று, தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே உண்வை மேய்வது. சமச்சீர் உணவே ஆனாலும், சரியான முறையில் உணவை எடுத்துக் கொண்டால்  தான், அதன் நன்மைகளை நாம அனுபவிக்க முடியும். 

‘எந்த வேலைக்குமே ரிடையர்மண்ட், அதாவது ஓய்வு னு ஒண்ணு உண்டு. ஆனா, சமைக்கறதுக்கும், சாப்படறதுக்கும் மட்டும் ரிடையர்மண்ட்டே கிடையாது’ என்று ஒரு விஜய் பட வசனம் வரும். 100% உண்மை. அதுனால தான் பார்த்தீங்க னா, எத்தனை ஃபுட் கோர்ட், ஃபுட் ஸ்டால்ஸ், ஹோட்டல்ஸ் னு புதுசு புதுசா முளைச்சிகிட்டே   இருந்தாலும், எதுவுமே சோடை போவதில்லை. 

சில வருடங்கள் முன் இணைய தளத்தில், முகநூல் பக்கங்களில் மட்டும், அங்கும் இங்குமா சில சமையல் குறிப்புகள் தென்படும். ஆனா, இப்ப  ‘ஃபுட் வ்ளாக்கிங்’ என்ற பேரில் பலர் யூ ட்யூபில், தன் சமையல் வீடியோக்களை பதிவு செய்கின்றனர். ஸ்மூத்தி, ஜூஸ் வகைகள், சாலட், சேட், பாரம்பரிய உணவு, மேற்கத்திய உணவு என்று அவரவர்க்கு தெரிந்தவற்றை செய்முறையோடு வீடியோ பதிவிடுகின்றனர். அவர்கள் சேனலின் ஃபாலோயர்ஸ், வ்யூஸ் பொறுத்து, மாசம் ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பாதிக்கின்றனர். 

நாம் இதுவரை, பல்வேறு உணர்வுகளுக்கு ஏற்ற உணவுகள், வித விதமான உணவு பழக்கவழக்கங்கள், ஜங்க்ஃபுட், மருந்தாகும் உணவுகள், சமச்சீர் உணவு, உட்கொள்ளும் முறை, ஃபுட் வ்ளாகிங் போன்றவற்றை பற்றித் தெரிந்து கொண்டோம். இறுதியாக, உணவை வீணாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.. 

கல்யாணங்களில், வீட்டு விசேஷங்களில், இலை போட்டு சாப்பாடு ஐட்டம்ஸ் பரிமாறுவார்கள். நமக்கு வேண்டாத உணவை வேண்டாம் என்று போடும் போதே சொல்லி விடலாம். சிலர் சங்கோஜப் பட்டுக் கொண்டு, இலையில் எல்லாவற்றையும் போடும் வரை அமைதி காத்து விட்டு, பின் சாப்பிட்டு முடிச்ச பின்னர் இலைய பார்த்தோம் என்றால், பாதிக்கு மேல வீணடித்திருப்பார்கள். எப்படித் தான் மனசு வருமோ! 

இன்னொன்று, நம்மில் எத்தனை பேருக்கு சரியாக சாப்பிடத் தெரிகிறது? உணவு உண்பது ஒரு கலை. புறங்கை, முகம் லாம் ஈஷிக் கொண்டு சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட பிறகு, நுனி விரல்கள், உதட்டோரம் மட்டும் தண்ணீர் விட்டு துடைத்துக் கொண்டால் போதுமானதாக இருக்க வேண்டும். அந்தளவு அழகாக சாப்பிடணும். 

மக்களே! நல்ல உணவே, நல்ல வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அதனால், அளவாய் உண்டு வளமாய் வாழ்வோம்!

One thought on “நாம் உண்ணும் உணவே நாமாகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version