சிறியது; ஆனால் முழுமையானது

ஒரு பக்கத்திற்குள் முடிந்துவிடும் கதைகளை வாசிக்கும்போது தான், வாசிப்பதில் சோம்பேறியாக இருக்கும் என்னைப் போன்றவர்களும் புத்தகத்துடன் நெருக்கம் கொள்ள முடிகிறது. அந்த வகையில், எளிதில் வாசிக்கத் தூண்டும் ஒரு குறுங்கதைத் தொகுப்பாக “காற்றுக் குடுவை” என்னை ஈர்த்தது.

மொத்தம் 31 கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில், ஒவ்வொரு கதையும் தனித்த தன்மையுடன் நிற்கிறது. ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாத உலகங்கள்; ஆனால் அனைத்தையும் இணைக்கும் மனித உணர்வுகளின் நுண்மையான நூல்—அதுவே இந்தப் புத்தகத்தின் பலம். அன்றாட வாழ்வில் நாம் கவனிக்காமல் கடந்து போகும் சிறு தருணங்களில் ஒளிந்திருக்கும் அற்புதங்களை, எழுத்தாளர் மிக நுட்பமாக காட்சிப்படுத்தியுள்ளார்.

தினசரி வாழ்வில் நிகழும் ஒரு சந்திப்பு, ஒரு நினைவு, ஒரு சிறு நிகழ்வு,அவை அனைத்தையும் கதையாக்கும் திறன் இந்தத் தொகுப்பில் தெளிவாக வெளிப்படுகிறது. சிறுவயதில் “மயிலிறகை நோட்டுக்குள் வைத்தால் குட்டி போடும்” என்ற நம்பிக்கையை நினைவூட்டும் “கற்கண்டு” கதை, கற்கண்டுகளை நட்சத்திரங்களாகப் பார்க்கும் அந்தச் சிறு கற்பனை அழகனவை.

ஒரு சாதாரண இரவில் நிகழும் அதிசய சம்பவம், திடீர் விழிப்பில் காணாமல் போன மனிதன், அவனது இடத்தில் மிதக்கும் கைப்பந்து.கதையின் முதல் வரியிலேயே வாசகரை கட்டிப் போட்டு விடுகிறது. இறுதியில் அந்த கைப்பந்து மீண்டும் தோன்றும் தருணம், கனவுக்கும் நிஜத்திற்கும் இடையிலான எல்லை எங்கு இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

தெய்வமும் மனிதனும் பகிர்ந்து கொள்கின்ற ரகசியங்களைப் பற்றிய மென்மையான சிந்தனைகளும் இந்தத் தொகுப்பில் இடம் பெறுகின்றன. ஓசூர் மலை, சந்திரசூடேஸ்வரர், நந்தியின் காதருகே குசுகுசுத்துச் செல்லும் பெண்களின் ரகசியங்கள்,அவை நட்சத்திரங்களாய் வானில் சிதறி நிற்பது போலக் காட்சியளிக்கும் கதை, படிப்பவரின் மனதில் ஒரு கனவுத்தன்மையை உருவாக்குகிறது.

“வீழ்கையில் இறகு; எழுகையில் பறவை” என்ற கதை சமூக–அரசியல் மையத்தைத் தொடும் வலிமையான படைப்பு. அரசின் அடக்குமுறையும், மக்களின் எதிர்ப்புணர்ச்சியும், ஒரு சிறிய கனவில் நாயகனுக்குக் கிடைக்கும் அதிசயமான முன்னறிவிப்பும் ஒன்றிணைந்து, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. “வீழ்கையில் இறகாகவும், எழுகையில் பறவையாகவும்” என்ற சொற்றொடர், தனித்த தத்துவ வாக்கியமாக மனதில் பதிகிறது. ஆனால் எதார்த்தம் எப்போதும் போல பாரமானதே.

இந்தத் தொகுப்பின் கதைகள் நிஜத்திற்கும் நிழலிற்கும் இடையில் கனவுகளாக அமைந்தவை. காதல், நட்பு, தவறிப்போன உறவுகள் இவை அனைத்தையும் சில வார்த்தைகளில் உயிரோட்டத்துடன் நகர்த்திச் செல்கிறார் எழுத்தாளர். மனித வாழ்வின் அர்த்தம், மரணம், நினைவு, மறதி போன்ற அடுக்குகளில் மனித உணர்வுகளின் நுணுக்கங்களைப் பிடித்துக் காட்டுகிறார்.

கவிஞர் ந. பெரியசாமியின் எழுத்து எளிமையானது; ஆனால் அதன் உள்ளார்ந்த ஆழம் மிகுந்தது. சொற்றொடர்களை அவர் சிக்கலாக்குவதில்லை. அவை சீராக ஓடும் ஓடை போலப் பாய்கின்றன. அந்த ஓட்டத்தில் நுழைவதே தனி அனுபவமாக மாறுகிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும், “சிறியது ஆனால் முழுமையானது” என்ற உண்மையை உறுதியாக நிரூபிக்கின்றன. சில கதைகள் சில நிமிடங்களில் வாசித்து முடித்துவிடலாம். ஆனால் அவற்றின் பின்சுவை, ஒரு முழு நாளும் மனதில் தங்கிவிடுகிறது.

அன்றாட வாழ்வின் சின்னஞ்சிறு உணர்வுகளை அற்புதங்களோடு இணைத்துக் காட்டும் இந்தத் தொகுப்பில், ஒவ்வொரு கதையும் ஒரு “காற்றுக் குடுவை” போலவே. திறந்தவுடன் அதன் உள்ளிருக்கும் காட்சிகளும் வாசனைகளும் மனதை நிரப்புகின்றன.

அதனால், “காற்றுக் குடுவை” ஒரு குறுங்கதைத் தொகுப்பு மட்டுமல்ல; மனித உணர்வுகளின் பல்வேறு தருணங்களை தாண்டிச் செல்லும் 31 சிறு பயணங்களின் தொகுப்பு.

ஒரு மூச்சில் வாசித்து முடித்துவிட்டோம் என்று தோன்றலாம். ஆனால் அதன் தாக்கம் நம்முள் நீண்ட நேரம் நிலைத்து நிற்கும். ஒவ்வொரு கதையும் காற்றை பிடித்து குடுவையில் அடைத்தது போல, நொடிக்கு நொடி திறந்து வாசிக்கும்போது, அதன் நறுமணம் மனதை மெதுவாக குளிர்விக்கிறது.

நூலின் பெயர்: காற்றுக் குடுவை (குறுங்கதைகள்)
ஆசிரியர்: ந.பெரியசாமி
பதிப்பகம்: தேநீர் பதிப்பகம்
விலை:110/-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version