பசி என்ற ஒன்று இல்லை என்றால், இந்த உலகில் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காது. பசிதான் இவ்வுலகக் கோளத்தின் அச்சு. பசியின் துரத்தலில் உணவின் தேடலில்தானே உலக நாகரிகத்தின் பாதைக்கான முதல் காலடி எடுத்துவைக்கப்பட்டது. பசிதான் வேளைதோறும் மனிதனுக்கு வாழ்தலை நினைவூட்டி இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. எனவே, பசி போற்றப்பட வேண்டிய ஒன்றல்லவா. உண்மையாகவே பசியை இறையாக்கி இருந்தால் உணவு கழிவு ஆகியவற்றை விலக்கிய தேவாதி தேவர்களின் பொய்யான புராணங்கள் தோன்றியிருக்காது. இறை உருவத்திற்கு நான்குதலை எட்டு கைகள் பத்துதலை இருபது கைகள் எல்லாம் தோன்றியிருக்காது.
ஒரு குளத்தில் உழவனின் கலப்பை விழுந்துவிட்டதாம். அவன் தேடிப்பார்த்தானாம் கிடைக்க வில்லையாம். விழுந்த இடம் அதுதான் என்றால் எப்படி கிடைக்காமல் போகும் என்றுதானே நாம் சொல்வோம். பசி என்னும் இறை, தேடலை ஊக்குவித்து கோடாரியை எடுக்க வைத்திருக்கும் அல்லவா. குளத்தில் விழுந்த கலப்பையை உழவனே எடுத்திருப்பான். எங்கிருந்தோ ஒரு இறை வந்து எடுத்துத்தர காத்திருக்க வேண்டியதில்லை.
அவர்கள் நமக்குச் சொன்ன கதையில், பசிக்குத் தொடர்பில்லாத இறை வந்து நடந்ததைக் கேட்டு, குளத்திலிருந்து தங்கக் கலப்பை காட்டி இதுவா எனக் கேட்க இல்லை என்றான். வெள்ளிக் கலப்பையைக் காட்டி இதுவா எனக் கேட்க இல்லை என்றான். இரும்புக் கலப்பையைக் காட்டி இதுவா எனக் கேட்க ஆமாம்; நன்றி என்றான். பேராசை இல்லாதவன் நீ எனவே மூன்றையுமே எடுத்துக்கொள் என்று வழங்கியபோது பரவசமடைந்தான். மற்றொருவன் இதைக்கேட்டு வேண்டுமென்றே கலப்பையைக் குளத்தில்போட்டு இறையிடம் மன்றாடினான். இறை தங்கக் கலப்பையைக் காட்ட ஆமாம் என்றான். வெள்ளிக்கலப்பையைக் காட்ட அதற்கும் ஆமாம் என்றான். இரும்புக்கோடாரியைக் காட்ட தனது இல்லை என்றான். அவனுடைய பேராசையைக் கண்டு தங்கம் வெள்ளி கலப்பைகள் மறைந்துபோயின என்று இணைகதை உருவாக்கப்பட்டது.
உழைத்தால்தான் எதுவும் கிடைக்கும். என்னுடைய உழைப்பில் கிடைக்கும் உணவும் பொருளும் எனக்குப் போதும் என்றிருந்தால் இறையின் வருகைக்கு அவசியமில்லை. கிடைப்பதைக் கொண்டு வாழவேண்டும். நமக்கு உரியதல்லாதவற்றின் மீது ஆசைபடக் கூடாது. பேராசை இல்லாமல் இருந்தால் இறையருளால் எல்லாம் கிடைக்கும் என்று போதிக்கும் பொய்யான கதைகள் உருவாகி யிருக்காது. தங்கமும் வெள்ளியும் மண்ணைத் தோண்டினால் கிடைக்கும். ஆனால், மண்ணைத் தோண்ட அவை உதவாது என்று மறுத்திருப்பான். ஆனால் அவர்களே கட்டிய கதையில் அவன் அவ்வாறு மறுக்க வாய்ப்பில்லை. இதைச் சிந்திக்காமல் அந்தக்கதையை அறியாமையோடு வாயைப் பிளந்துகொண்டு கேட்டு மகிழ்கிறோம். செவிக்கு தேவாமிர்தம் கிடைத்த மகிழ்வில் பசியை மறக்க பழகிக்கொள்கிறோம்.
தங்கம் வெள்ளியைக் காட்டி மயங்கவைத்து, பசியைக் கருதாதே. இந்த ஒரு வேளைக்குக் கிடைக்கும் உணவை நினைக்காதே. பொருளைத் தேடு, பொருள் இருந்தால்தான் இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்ற வழிகாட்டலில், அவன் தேடி உருவாக்கும் பொருள்களையெல்லாம் அதே இறையைக் காட்டி ஏமாற்றி, சந்தை வழி தமதாக்கிக்கொண்டு, சொற்பக்கூலியை உழைப்புக்கு விலையாகக் கொடுத்து, பசியை மட்டுமே மிச்சமாக அவர்களுக்கு வழங்குவதையே உலகம் நடப்பியலாகக் கொண்டுள்ளது. இவை பசியையும் உழைப்பையும் கீழ்மைப் படுத்தி, நீ உழைக்கப் பிறந்தவன்; கேள்விகேட்க உரிமையற்றவன். வேண்டுமானால் இறையிடம் உன் குறையை முறையீடு செய, என்ற கற்பித்தல் நிகழ்த்தப்படுகிறது.
இறை இருக்கிறதா, எங்கேகாட்டு என்று நாம் கேட்டிருந்தால், உழைக்காமல் ஏமாற்றிப் பொருள்குவிக்க, அவர்களுக்கு வசதியாக உருவாக்கப்பட்ட கற்பனைதான் இறை என்பது நமக்குப் புரிந்திருக்கும். ஆனால், நம்மைக்கேட்க விடாமல். இறை ஒரு பேராற்றல், கண்ணுக்குத் தெரியாது, இறையை வணங்கினால் உழைக்காமலே எல்லாம் கிடைத்துவிடும் என்ற மடமையைச் சற்று உற்று நோக்கினால், இது உழைக்காமலே வயிறு வளர்க்கும் வசதியில் திளைக்கும் முதலாளிக் கூட்டத்தின் திரைக்கதை வசனம் என்பதை உணரலாம். இதனூடே கிடைப்பதைக் கொண்டு இருப்புக்கேற்ப வாழவேண்டும். தன் நிலைமைக்குமேல் தகுதிக்கு மேல் ஆசைப்படாமல் இருந்தால்தான் இறை அருள் கிடைக்கும் என்ற கற்பிதம் மனிதர்களை மேல்கீழாக – படிநிலைக் கட்டமைப்பை – நிலைநிறுத்தும் கற்பித்தலாகிறது, இறைவன்தான் படியளக்கிறான். அவரவர் விதிப்படி அவரவர் வாழ்க்கை அமைகிறது. நீ உழைத்தும் ஓடேந்துகிறாய் என்றால் அது இறையின் கணக்கு. பசிக்கு உணவு கிடைக்கவில்லையென்றால் பசியை அடக்கி வாழ். அதன்பேர் தவம். தவத்தில் இறையை நாடு, நீ கேட்டது கிடைக்க வாய்ப்பு உண்டு என்றெல்லாம் பசித்த மக்களுக்கு அறிவுரை கூறி உணவை ”குதிரை முன் கட்டிய கேரட்டாக்கி,” ஏன் ஓடுகிறோம் என்று சிந்திக்க விடாமல், ஓடிக்கொண்டே இருக்க வைக்கிறது.
இந்த நிலைதான் பசியை என் இருத்தலுக்கான வேர் என்று நேசிக்க விடாமல் உணவுக்கு வழியில்லாதவர்களின் நோய் என்று நம்ப வைக்கப்படுகிறது, இந்த உலகத்தின் கொடிய நோயாக பசி கூறப்படுகிறது. உணவுதான் அதற்கான மருந்து என்று மொழியப்படுகிறது.. ”பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ” என வினவுகிறது ஒரு சங்கப்பாடல் (புறநா.188). உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே அல்லவா. அவர்கள் உருவாக்கிய பண்பாக்கங்களின்படி வாழ்ந்தால்தான் மனிதனாக மதிக்கப்படுவோம். நற்குடி பிறத்தல், மேலோர் போற்றும் விழுமியங்களாகிய ஒழுக்க நெறி கடைப்பிடித்தல், கற்பிதங்களாகிய கல்வியினால் அவர்கள் ஊட்டும் அறிவைப் பெறுதல், பழிக்கு அஞ்சி நாணுதல், இல்லறத்தைப் பேணுதல் ஆகிய நற்பண்புகளால்தான் மனிதன் மனிதாக மதிக்கப்படுகிறான். அவன் பசிக்கு முதன்மை கொடுத்தால் இவை எல்லாம் அழிந்துபோகும். மனிதன் என்ற தகுதியை இழந்து விடுவான். சமூகத்தின் முன் குற்றவாளியாக நிறுத்தப்படுவான். ஆகவே, எளியோர் வேதனை கண்டு. அவர்கள் சார்பில் நின்று, பசி என்பது கொடிய நோய், அது ஒரு பாவி என்று கற்பிக்கிறது மணிமேகலை.
குடிப்பிறப்பு அழிக்கும், விழுப்பம் கொல்லும்,
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்,
நாண் அணி களையும், மாண் எழில் சிதைக்கும்,
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி” (மணிமே. பாத்திரம் பெற்ற காதை. அடி.76-80)
மேற்சொன்ன பண்புகள் யாவும், இனக்குழு வாழ்வில், ”இயற்கையின் படைப்பில் யாவையும் பொது” என்று வாழ்ந்த இனக்குழு மாந்தர்களை, அரசின் கீழ் நகரிய நாகரிகத்தில் குடிகளாக மாற்ற உருவாக்கப்பெற்ற மேலாக்கப் பண்புகள். இது நகரிய உடைமைக்குவிப்பின் தேவைக்காக, திணைநிலை வாழ்க்கையைச் சிதைத்து, உழைக்கும் எளிய மாந்தர்களாக்கி, உடைமையைப் பணிந்து வாழ்வதன் மூலம் தங்களுக்கான வாழ்க்கையை வாழ முடியும் என்ற மாற்றத்தை இயல்பாக்கிய காலச்சுழல். சுழலில் சிக்கியவன் வெள்ளத்தை நொந்துகொள்வதை விட, உயிர்காத்துக்கொள்ள முயற்சித்தல்தானே அறிவு. அதற்கான நம்பிக்கையைக் கொடுப்பதுதானே சக மனிதன் செய்ய வேண்டிய அறம். சீத்தலை சாத்தனாரும், திருவள்ளுவரும் இப்படித்தான் உடைமை மீது வினா எழுப்ப இயலாத சமூகக்கட்டமைப்பில் எளிய மாந்தர்பால் இரக்கமுற்று பசியை கேள்விக்கு உட்படுத்துகின்றனர் பசியில் பத்து பண்பும் காணாமல் போனால், நீங்கள் கற்பித்த அறம உங்களைக் காப்பாற்றாது என்று உயர்ந்தோருக்கு உணர்த்துகிறார்கள். இவர்கள் உழைப்பில்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். இவர்கள் இல்லையென்றால் உங்கள் அரியணை கிடையாது. எனவே இவர்களை மதித்து வாழுங்கள் என்று அந்த உயர்ந்தோரை நோக்கிக் குரல்கொடுக்கின்றனர். புரட்சிக்கான காலம் வரும்வரை இதுதான் இயல்பென வாழுங்கள் என்று எளியோருக்கு வழிகாட்டுகிறார்கள். ஆனால், உங்கள் உழைப்பில் நீங்கள் வாழ்கிறீர்கள். எனவே, உங்கள் உழைப்புக்கு மட்டுமே தலைவணங்குங்கள். வேறுயாருக்கும் பணிய வேண்டிய அவசியமில்லை என்று கற்பிக்கிறார்கள். கற்பித இறையை நம்புவதை விட. நெஞ்சத்திற்கு நேர்மையான அறத்தை நம்புங்கள் என்கிறார்கள்.
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்று தட்டிக்கொடுக்கிறார் வள்ளுவர். ஊழையும் ஒருநாள் உப்பக்கம் காண்போம் என்று நம்பிக்கை விதைக்கிறார். பசியை ஆடுகளமாக்கி, உழைக்கும் மாந்தர்களை இரவலர்களாக வீழ்த்திய உடைமைக்கு எதிராக இரவை முன்னிறுத்தும் சமன்பாட்டின் மீது கடுங்கோபம் கொள்கிறார் வள்ளுவர். இரப்பவன் இருக்கும் வரைதான் இருப்பவன் கொடையாளனாக அடையாளப்பட முடியும் என்ற குரல் கொடுக்கிறார். கொடுக்காதவனிடம் இரக்காதீர்கள் என இரவலர்களைப் பார்த்து கெஞ்சுகிறார்.
”இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுகஇவ் வுலகியற்றி யான் (குறள்.1062)
என்று, பசியால் ஒருவன் பிச்சையேற்று அலைவுறுவதுதான் விதி என்றால் அந்தக் கடவுள் முதலில் பிச்சையெடுத்து அலைந்து பார்க்கட்டும். மானமிழந்து நிலைகுலைந்து அழியட்டும் என்று இறைமைக்கே சாபம் இடுகிறார். இறைவனை பசியில் தவிக்கும் மாந்தனாகப் படைத்து அவன் கையில் பிச்கைப் பாத்திரத்தைக் கொடுத்து, தன் கவிதையில், அலைந்து திரிய வைக்கிறார். சீத்தலை சாத்தனாரோ அத்தகைய எளிய மாந்தர்களையே கதைமாந்தர்களாக்கி, பசித்த வயிற்றுக்கு அள்ள அள்ள குறையாமல் உணவு வழங்கும் அமுதசுரபி என்ற பாத்திரத்தைக் கற்பனை உலகில் படைத்துக் காட்டுகிறார்.
இனக்குழு வாழ்வியலில் ”என் கால்களில் கலை உள்ளது. நாவில் புலமையுள்ளது. கைவல் தச்சனிடம் கோடாரி இருந்தால் போதும், காடுமுழுவதும் மரந்தானே. அதுபோல, எத்திசை செல்லினும் அத்திசை சோறே” (புறநா.206) என்று அதியமானின் உடைமையப் புறக்கணித்துத் தன் திறமைக்கான மதிப்பிடம் தேடி அரசவையை விட்டு வெளியேறினாள் முற்கால ஔவை. ஆனால், இனக்குழு வாழ்வியல் சிதைந்து அரசின் கீழ் அலைவுறுதலே வாழ்க்கை என்று ஆனபின், தெய்வம் தரும் என்பதெல்லாம் கற்பனை; கற்பனை என்பது கானல்நீர் – தாகம் தீர்க்காது; உழைப்பை நம்புங்கள். பசிக்கு உழைப்பின் வழியே உணவு தேடுங்கள் பசிக்கு பதில்தர வழியில்லாமல் அறத்தைக் கைவிடாதீர்கள். பசி கொடிய நோய்தான். அதற்கு பலியாகாதீர்கள். அது மனிதனை மனிதனாக்கும் பத்துப் பண்புகளையும் அழித்துவிடும் என்பதை .
“மானம் குலங்கல்வி வண்மை அறிவுடைமை,
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் – பத்தும்
பசிவந்திடப் போம் பறந்து.” (நல்வழி.பா.26 )
என்று மனிதனின் அடிப்படை மானம். பசி அதற்கு அடுத்ததுதான் என்று எடுத்துரைக்கிறாள் பிற்கால ஔவை. இப்படி பசியை முன்னிறுத்திய இயல்வாழ்க்கையை வீழ்த்தி, பசியைப் பின்னுக்குத் தள்ளியது எது?
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை (குறள்.66) என்று வயிற்றுக்காக வாழாதே, அறத்திற்காக வாழ் வள்ளுவனையே என்று சொல்ல வைத்தது எது?
பசிக்கு உணவைத் தேட உழைக்கத் தயார். ஆனால், எங்கே வேலை என்று சமூகத்தின் மீது கோபப் படாமல், பசியில் அழும் குழந்தையை அடித்து அடங்க வைக்கும் தாய்போல, ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏல்என்றால் ஏலாய் – ஒருநாளும்
என்நோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது ( நல்வழி.பா.11) என்று பிற்கால ஔவையை, வயிற்றின் மீது கோபப்பட வைத்தது எது?
அதைவிட, தனிப்பாடல் புலவன் ஒருவன் பசியைப் போக்க வழி தெரியாமல் படைத்த கடவுள் ஏன் என் பசிபோக்க வழிகாட்டவில்லை. பசிக்கு விடையில்லையெனில் என்னைப் படைத்தது ஏன் என்று வினா எழுப்புவது பசிக்கொடுமையின் உச்சமாக தலைவிரித்தாடுகிறது.
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்ப்பித்தானா இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் ரட்சித்தானா அல்லைத்தான் சொல்லத்தான் யாரைத்தான் நோவத்தான் ஐயோ எங்கும் பல்லைத்தான் காட்டத்தான் பதுமத்தான் புவியில்தான் பண்ணினானே”.( இராமச்சந்திர கவிராயர்)
பசியென்ன அவ்வளவு கொடிய நோயா? அப்படியானால் பசியுள்ள அனைவரும் நோயாளர்களா? இந்த உலகம் என்ன மருத்துவமனையா? மனிதஉடலின் இயல்பாகிய பசி எப்போது நோயாயிற்று? உணவு எப்போது மருந்தாயிற்று? எப்போது உணவை உணவாக உண்ண முடியாமல் போயிற்று? இவை குறித்து இதுவரை சிந்தித்திருக்கிறோமா!
எங்கும் இயற்கை நிறைந்திருக்கும்போது, மனிதர் இயற்கையோடு இணைந்து இயற்கையின் கூறாக வாழ்ந்தபோது, அரசு என்ற ஒன்றின் ஆளுமை உருவாகாதபோது, பசியும் உணவும் விருப்பத்தின் பண்பும் பயனுமாக இருந்தன. அதனால்தான் தன் உணவுத்தேடலுக்குத் தமிழன் வைத்த பெயர் வேட்டை. வேட்டு என்பதன் பெயராக்கம் வேட்டை. வேள்+து= விருப்பமானதைத் துய்ப்பது. அது தொழிற்பெயர் ஆக்கத்துக்காக அம், ஐ என்ற ஈறுகளைத் தேவைக்கேற்ப இணைத்து வேட்டம், வேட்டை என்ற வடிவங்களைப் பெற்றது. விலங்குகளின் பசிக்கு சக விலங்குகள் வேட்டைப்பொருள். மனிதனுக்கு விலங்குகள் வேட்டைப்பொருள்.
மனிதன் மரஇனப் பொருட்களை உணவாகக் கண்டடைந்தது உணவு வரலாற்றில் முதல் திருப்புமுனை. வேட்டை ஒருபுறமாக, மறுபுறம் காய்கள் கனிகள் கிழங்குகள் இலைதழைகள் பூக்கள் என உண்ணத் தொடங்கியபோது வன்மையினூடே மென்மையும், உயிர்களைக் கொல்லாமலே உணவைப் பெறுதலும் இணைந்தது. ஒவ்வொரு மரஇன வகையும் குறிப்பிட்ட பருவங்களில் உணவுப்பொருட்களைத் தரும் என்பதைத் தம் தேடலின் வழியே கண்டடைந்தபோது காலம் வசப்பட்டது. உலர்கனிகள் உலர்கிழங்குகள் தேன் முதலியன நாள் கடந்து சேகரித்து வைத்தலையும் குறிப்பிட்ட காலத்தில் இவை கிடைக்கும் என்ற பருவம் குறித்த அறிவையும் உணர்த்தின.
இரண்டாம் திருப்புமுனையாக விலங்குகளில் ஊன்உண்ணி, மரஇனஉண்ணி என்ற பாகுபாட்டைக் கண்டடைந்ததோடு பால்படு பொருள்களையும் கண்டடைந்தது உணவுத்தேடல் பயணத்தைப் பண்டமாற்றம் மற்றும் சந்தை உருவாக்கம் நோக்கி நகர்த்தியது. இதன் மூலம், மரஇன உண்ணிகளை வளர்ப்பு விலங்குகளாக ஆக்கிக்கொண்டது. அவற்றின் வழி இறைச்சியும் முட்டையும் பால்படுபொருள்களும் தம் தேவைக்கேற்ப அன்றாட உணவுப்பயன் ஆயிற்று. இதன் வாயிலாக விலங்குடனான பகை என்னும் உறவுநிலை ஊன்உண்ணிகளோடு பகையுறவும் மரஇன உண்ணிகளோடு இணையுறவும் கொள்ளும் நிலையாக உருப்பெற்றது. இதன் மறுபக்கமாக இனக்குழுப் பகைமை என்ற உறவுநிலை சகஇனக்குழுக்களுடன் நிலங்கடந்து உணவுப்பொருட்களைப் பகிர்ந்துகொள்ளும் இணையுறவுநிலை உருவாயிற்று. அதனோடு, பால் – நாள், தயிர் – வாரம், வெண்ணெய் – பருவம், நெய் – ஆண்டு என்ற காலப்பகுப்பை கற்பித்தது. மேலும் உபரியின் இருப்பு பண்டமாற்றுக்கு வழிவகுத்தது. மேலும் இறைச்சி மீன் முதலியன காயவைத்து வற்றலாக்குவதன் மூலம் தேவையின்போது பயன்கொள்ளும் அறிவையும் கற்பித்தன.
வாழ்தல் என்பது விருப்பம் சார்ந்த போராட்டமாக விலங்குகளுக்கும் மனிதருக்கும் உழைப்பின் வழியே உணவைப் பெறுதல் என்று ஆனபோது, பசியின் ஒருங்கிணைந்த தேவை, விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு நோக்கியது; கூட்டுழைப்புக்கு அழைத்துச் சென்றது; கூட்டுழைப்பின் வழியே உணவுக்கான உறுதிப்பாட்டை வழங்கும் சமூகக் கட்டமைப்பை உருவாக்கியது. கிடைக்கும் உணவுப்பொருளைப் பொதுவாக்கிப் பகிர்ந்துண்ணும் கொள்கை நிலவியது, வேட்டையில் ஒரு விலங்கு உணவாகக் கிடைத்தால் அதைக் கொண்டாட்டமாக ஆடிப்பாடி மகிழ்ந்து பகிர்ந்துண்டனர். மக்கள் பெருக்கத்தில், உணவின் இருப்புக்கான சமூகங்களின் பசி, உணவைக் கையிருப்பாக உறுதியளிக்கும் கால்நடை வளர்ப்பு சார் மேய்ச்சல் வாழ்வியலுக்கு வழிவகுத்தது. உணவுக் கையிருப்பாகிய கால்நடைகள் சார் குழுக்களின் போர், பகைமைகளை வளர்த்து, உணவு மற்றும் பாதுகாப்பு சார் குழுநிலை இறுக்கங்களை உருவாக்கி அரசினைக் கட்டமைத்தது.
வேட்டை வாழ்வியலின் மறுபக்கம் மரஇனங்களின் வழி காய்கனி தானியங்கள் சார்ந்த சேகரிப்பு வாழ்வியலை உருவாக்கியது. அதன் வளர்ச்சியில் தனக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தாமே பயிர் செய்யும் உற்பத்தி வாழ்வியலுக்கு அழைத்துச்சென்றது. உற்பத்தி வாழ்வியலில் விளைந்த உபரியின்மதிப்பு உடைமைக்கு வழிகாட்டி.நிலங்களைக் கையகப்பட்டுத்தச் செய்த்து. உற்பத்தி உபரி வழியே உடைமையைப் பெருக்க. நிலங்களும் நீராதாரங்களும் தேவைப்பட்டபோது போர் முதன்மை பெற்றது. அந்நிலங்களில் வேளாண் மற்றும் மேய்ச்சல் தொழில்களை மேற்கொள்ள உழைப்பாளர்கள் மிகுதியாகத் தேவைப்பட்டனர். அதன் காரணமாக, இனக்குழு மக்கள், தங்களுக்கான உணவைத் தங்கள் நிலங்களிலேயே காடுகளிலேயே வேட்டை சேகரிப்பின் வழியே பெறுவதும், தம்மிடமுள்ள இருப்பைப் பண்டமாற்றாக்கி மாற்றுணவு கொள்வதும் தடைசெய்யப்பட்டது. அந்த மாந்தர்கள் நிலங்களைக் கையகப்படுத்தும் போரில் படைவீரர்களாகவும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான உழைப்பாளர்களாகவும் கூலிக்குப் பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
எந்த உணவுப்பண்ட உற்பத்தியும் அவற்றின் மூலப்பொருட்களும் சந்தைக்குரியன ஆயின. பொருள்களின் சந்தைமதிப்பின்வேறுபாடு பண்டமாற்றை வீழத்திப்பணத்தை உருவாக்கியது. சந்தையில் தங்கள் பொருளை, அதன் பொருள்மதிப்பிற்கேற்ப. விற்றுப் பணமாக்கி அப்பணத்தின் வழியே தங்களுக்கான பொருள்தகுதிக்கேற்ற உணவைப் பெறுதல் காலத்தின் கட்டாயமாயிற்று. மக்கள் உழைப்பு வணிகர்களால் கையகப்படுத்தப்பட்டு சந்தைக்குச் சென்றபோது, உழைக்கும் மக்களுக்கும் அவர்கள் உழைத்து உருவாக்கிய பொருள்களுக்கும் மீதான உரிமை உழைப்புக்கூலியாக சுருக்கப்பட்டது. பொருள்களின் விலைமதிப்பு வணிகர்களுக்கும் அரசர்களுக்கும் உரியதாகியது. தனிநபர்களாக, கூட்டுச்சமூகமாக இருக்கும் வரை இவர்களை உழைப்பாளர்களாக அடிமைப்படுத்த இயலாது. அவர்களின் தனித்தன்மையைச் சார்புநிலையாக மாற்ற உடைமைச்சமூகம் முற்பட்ட போது குடும்பம் என்ற கருத்தாக்கம் உருப்பெற்றது. தனக்காக இல்லையென்றாலும் தன்னைச் சார்ந்த குடும்பத்தை குடியை வாழவைக்க உடைமையின் கீழ் சார்ந்துவாழப் பணித்த்து காலம். இவ்வாறு, கூட்டுச்சமூக வாழ்வியல் குடும்ப அமைப்பு முறைக்கு முன்னேறியபோது, சார்புநிலை வாழ்வியல் வழியே, குடும்பத் தலைமையே பொருள்தேடி அலைவுற்று, ஈட்டிய பொருளால் அனைவருக்குமான உணவுத்தேவையை நிறைவேற்ற வேண்டும் என்ற கடப்பாடு உருவாயிற்று. மலை காடு ஆறு கடல் சார்ந்து தன்னுழைப்பில் வாழ்ந்த தலைமக்கள் பொருள்தேடி உழைப்பை வழங்க நகரங்களுக்குப் பயணப்பட்டனர்.
மக்களின் இயல்பான ஊண் வாழ்க்கை, உற்பத்தி சந்தை வளர்ச்சியில், ஒவ்வொரு பொருளும் விலைமதிக்கப்பெற்று அதற்கேற்ப நாணயம் செலுத்திப் பெறும் பொருள்முதல் வாழ்க்கை தலைமை பெற்றது. உணவும் சந்தையின் விலைபொருள் ஆனது. தனிமனிதனின் உணவுத்தேடல் மாறி, உழைப்பின் வழி பொருள் ஈட்டி,தன் குடும்பத்துக்கான உணவைப் பெறுதல் என மாற்றம் பெற்றது மனிதர்கள் சந்தைமையத்தின் கீழ் உழைப்புக்கூலிகளாக மாற்றப்பட்டனர். அது முதல் உணவுத்தேடல் வாழ்வியல் என்பது, பொருள்தேடலாக உருமாறியது. ”உழைப்பு – பொருள் – உணவு“ எனப் பொருளின்கீழ் உணவ அடிமைப்படுத்தப்பட்டது. உணவுத் தேடலின் இயலாமையில் பசி, நோயாக உருமாற்றம் உற்றது.
நகரியம் உருவாக்கிய மனிதனுக்கான அடையாளப்பண்புகள் ஒவ்வொரு தனிமனிதனையும் பாதித்தது. உழைப்பின் வழி உணவு பெறுதல் என்பது படிப்படியே உணவைக் கடந்து இருப்புக்கும் நுகர்வுக்குமான தகுதிப்பாடுகளை நோக்கியது. பசியில்லாம்வாழ்தல் மாறி சமூகத்தில் பழியில்லாமல் வாழ்தல் என்ற ஒழுக்க நிலைப்பாடு முதன்மை பெற்றது. இவ்வாறு, திணைநிலை வாழ்வியலும் மலைக்காடுகளில் வாழும் இயல்நிலை வாழ்வியலும் இப்புதிய பணப்பரிமாற்ற வாழ்வியலால் பாதிப்புக்கு உள்ளாயின. இதன் மூலம் உருவான அரசின் அசுரத் தேவைகள் இரண்டு. ஒன்று உற்பத்திக்கான உழைப்பினை வழங்கும் மனிதவளம். மற்றொன்று, மலை காடு ஆறு கடல் சார் பகுதிகளின் கிடைக்கும் பொருள்வளம் மற்றும் கனிமவளம். இவற்றுக்காக தம்மை அறியாத மாந்தர்மீதும் தன்னதிகாரத்தைச் செலுத்துவதன் வாயிலாக, பொருள் மற்றும் கனிம வளங்களை அரசுக்குக் கொண்டு சேர்த்தல், உற்பத்திக்கான உழைப்பாளர்களை நிலங்களை நோக்கி வழிநடத்தல், அவற்றுக்காக நகரங்களைத் தேடி அலைவுறு வாழ்க்கையினராக பயணப்படுதல். தன்னியல்பில் வாழ்ந்த இம்மக்கள், நகரங்களில் யாருக்காகவோ அவர்களின் அதிகாரத்தின்கீழ் உழைக்கின்ற வாழ்வியலுக்கு ஆளாதல் ஆகிய செயல்பாடுகள் நிகழ்ந்தன.
மலைகளிலும் காடுகளிலும் ஆறு மற்றும் கடல்சார் நிலங்களிலும் மக்கள் தம்மியல்பில் வாழ்ந்தபோது, உடைமை என்னும் தனிநலச் சிந்தனை கிடையாது. இயற்கையின் வளம் எல்லோருக்கும் பொதுவானது. அவரவர் உழைப்பின் வழி அவரவர் கைகொள்ளும்போது அப்பண்டம் அவரவருக்கானது. அதே நேரம் சமூகக் கூட்டுறவு மற்றும் கூட்டுழைப்பின் வழியே தத்தமக்குள் உழைப்பின் தகுதிக்கேற்ப பங்கிட்டுக்கொண்டனர். ஆனால், இனக்குழுக்களின் மோதல்கள் வழியே அரசு உருவாக்கம் நிகழ்ந்த போது உடைமை என்னும் தனிநலம், தனிநபர் பொருள்குவிப்பு என்னும் அதிகார வாழ்வியலாக உருப்பெற்றது.
உடைமை வாழ்வியல் உழைப்பைத் தன்கீழ் ஆளத் தலைப்பட்டபோது, இயற்கையின் பொதுவுடைமையில் திளைத்த மாந்தர்கள் உடைமைச் சமூகத்தை எதிர்கொள்ள இயலாதவாறு அறம் என்ற பேரில் சமூக சட்டங்கள் உருப்பெற்றன. இயற்கையின் பொதுமை ஒரு தனிநபரின் உடைமையானபோது, அதனைப் பொதுவாகக் கருதும் இயல்மாந்தரின் செயல்பாடு களவாக வடிவம் பெற்றது. அதற்குமாறாக, அலைவுறும் மாந்தரின் துயர்நிலையறிந்து உடைமையாளர்கள் தம் உடைமையிலிருந்து அவர்களுக்குத் தாமாக வழங்குதல் கொடை என்று வடிவம் பெற்றது. அது உணவுக் கொடையாக இருந்தால் அதற்கு விருந்தோம்பல் என்று பெயர். பசித்த வயிற்றுக்கு உணவு இடுதல் என்பது உடைமையாளரின் அறம் ஆயிற்று. குறிப்பாக, வேளாண் தொழிலை மேற்கொள்பவரின் வாழ்வின் பிரிக்கமுடியாத பகுதியாக விருந்தோம்பல் இணைக்கப்பட்டது.
தத்தம் நிலப்பகுதிகளில் வாழ்ந்தாலும் அந்நிலம் அரசின் கீழ் ஆளுமைக்கு உட்பட்டதெனில், அங்கும் உழைப்பின் உற்பத்திவிளைவு சந்தைக்கு உரியதாயிற்று. சமூகம் உழைக்கும் வர்க்கம், ஆளும் வர்க்கம் என இருவேறு இயற்கையதாகப் பிரிவுற்றது. இங்குதான் தன் பசிக்கான உணவைத் தானே உழைப்பின் வாயிலாகத் தேடியுண்ணும் இயற்கைசார் வாழ்வியல் தொலைந்துபோய், வேற்று நிலங்களில் உழைப்பின் வழியாகப் பொருளீட்டி உண்ணுதல் என்றும், தன்னிலங்களிலும் உடைமையின் முன், அந்நியராய் அகதியாகிப் பொருளீட்டி உண்ணுதல் என்ற அவலநிலை உருவாயிற்று.
உழைப்புக்கான களங்கள் அனைவரையுமே எளிதாக அரவணைத்துவிட வில்லை. எனவே திணைசார் உதிரிமாந்தர்களின் அலைவுறுநிலை உணவுக்காக கையேந்தும் அவல நிலையாகவும், அவர்களுக்கு உணவிடுதல் அதிகார உடைமை வர்க்கத்தின் பெருமிதமாகவும் உருப்பெற்றது. இரத்தல் உதிரிமாந்தர்களின் வாழ்வின் பகுதியாக, தம் மிகுதியிலிருந்து வழங்கும் உடைமையாளர் கொடையாளர்களாக அடையாளப்பட்டனர். கொடையாளர் புகழை விரும்ப, அவர்தரும் கொடையை எதிர்நோக்கி இயல்மாந்தர் வாழத் தலைப்பட்டனர்.
இவற்றோடு இணைத்துக் கருதத்தக்க மற்றொரு மாற்றம், பொதுஉணவுமுறை. ஒவ்வொரு நிலத்திலும் அவ்வந்நிலத்திற்கேற்ற உணவை அவரவர்கள் உண்ட நிலை மாறி, இப்போது வேளாண் உற்பத்தி வழியே, உணவு சந்தைப்பொருளாகிவிட்ட நிலையில், ஒரு குடையின்கீழ் வாழும் மக்களுக்கான ஓருணவுமுறை உண்டாயிற்று. அதுதான் நெல்லுணவு அல்லது அரிசிச்சோறு. மக்கள் தத்தம் நிலம்சார் பல்லுணவுமுறையினை சந்தைமைய வாழ்வியலில் இழந்து நெல்லுணவுக்கு அடிமைப்பட்டனர். இதன் வாயிலாக தத்தம் தனி அடையாளங்களான குழுநிலையைக் கைவிட்டுக் குடிநிலைக்கு மாறினர். பல்லுணவு என்னாயிற்று என்கிறீர்களா? காடுகளை அழித்து நாடாக்கி, மேடுகளை நிரவி நிலமாக்கி, குளம் வெட்டி. ஏரி வெட்டி என்று பெருமை பேசுகிறோமே. அந்த அழிவுற்ற காடுமேடுகளின் விளைவுதானே அவை. அவற்றை நெல்லுக்காக அழித்தபின் பல்லுணவு எங்கே இருக்கும். வெவ்வேறு இனக்குழு வாழ்வில் நிலங்களையும் வளங்களையும் கையகப்படுத்தும் போர்களின் வாயிலாக அரசுக்கு முரண்பட்டும் இணைவுற்றும் தந்நிலை இழந்தபோது அரசு என்றும் ஒரு அமைப்பின்கீழ் அனைவரும் ’குடிகளாயினர். அனைவரின் உணவும் நெல்லுணவு ஆயிற்று.
நெல்லுணவு சந்தைப்பொருளானபோது, உழைப்பின் வழியே ஈட்டி வாழ்ந்தவர்கள் ” தம் இல் இருந்து தமது பாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு” என்று பெருமிதம் கொண்டனர். உழைக்க வாய்ப்பில்லாத உதிரிமாந்தர்கள் விருந்தோம்பல் வழியே இரந்து பெற்று வயிறு நிறைந்தனர். இந்த நெல்லுணவு மைய அரசின் கீழான புதுவாழ்வியலைத் திணைமாந்தர்களுக்கு அறிமுகம் செய்து அரசின் நிலவியல் பயணத்தடத்தை வரைந்து வழிகாட்டியது. அவர்களின் ஆற்றுப்படைகளில் திணையுணவுகளையே வழியிடை உணவாக ஆசையூட்டி. அரசின் கீழ்ப்படுத்தலுக்கு வலை விரித்தது.
ஒருவர் விருந்தோம்பலின் வழியே உயர்ந்தவராக உருப்பெறும் பெருமிதத்திற்கு அவர்களிடம் கையேந்தும் வாழ்வியல் தேவையாயிற்று. உபரியின் வணிகச்சந்தை. பல்வேறு உழைப்புக் களங்களை உருவாக்கினாலும். அது நகர வாழ்வியலில் தொழில்சார் படிநிலைகளை உருவாக்கி மாந்தரைத் தகுதி பிரித்தது. வேலைப் படிநிலைகளில் பிறப்பு தகுதியாயிற்று. குடிநிலை குலப்பாகுபாடுகளில் சிக்குண்டு தவித்தது. இவற்றின் வாயிலாக உடைமை அதற்கு எதிர்நிலையில் வறுமையை இன்மையை உருவாக்கி மகிழ்ந்தது.
அரசை அறியாத மலை, காட்டு எளிய மக்களுக்கு, அரசு நிறுவனத்தையும் அந்த அரசின் அடையாளத்தையும் பெருமிதமிக்க ஈர்ப்பாகக் காட்டுவதற்கு கலைவழி உழைப்பாளர்களான பாணரும் கூத்தரும் பொருநரும் விறலியரும் தலைமையேற்றனர். பல்வகைக் கலைஞர்களும் எளிய மக்களை, ஆளும் அரசுக்கு உரிய குடிகளாக மாற்றும் மனப்பான்மை உருவாக்கத்திற்கென தத்தம் கலைகளின் வழியே ஊர்ஊராகப் பயணப்பட்டுப் பணியாற்றினர். அந்தப் பணியில், சிறுசிறு பூச்சிகளுக்கு சிலந்திவலை ஈர்ப்பாக அவர்கள் முன்வைத்தது விருந்தோம்பல் என்னும் உழைக்காமல் பெறும் உணவுப்பண்பாடு.
இன்மையில் பசி இரவாயிற்று. இன்மையின் வெகுளி கரவாயிற்று. கரவு தண்டிக்கப்பட்டது. இரவு நிந்திக்கப்பட்டது. விருந்தோம்பல் தகுதியுடையோருக்கானதாக மேம்பட, இரவு பிச்சையேற்றலாக இழிவுற்றது. கொடுப்பவரை நாடி தேடி அவரைப் புகழ்வதன் வாயிலாக கிடைத்ததை உண்பதாக முன்பு அரசின் ஊடகர்களாக செயல்பட்ட கலைஞர்களின் வாழ்வியலும் வீழ்ச்சியுற்றது. கலைவாழ்க்கை அரசர் மற்றும் செல்வந்தர்களின் கேளிக்கை வாழ்வியல்கீழ் சிறைப்பட்டது.
போர்கள் நகரங்களை உருக்குலைக்கும்போது உணவுக்காகப் போராடும் அலைவுறு வாழ்வியலை உருவாக்கின. மழையின்மை கொடுங்கோடை முதலியன நீர்ப்பற்றாக்குறையை உருவாக்கும்போது விளைச்சலில்லா சூழல் வறுமையை உருவாக்கி ஒருவாய் உணவுக்குக் கையேந்தும் நிலைக்கு உதிரிமாந்தர்களைப் பெருக்கியது. கெட்டும் பட்டணம் போ என்ற இன்றைய மொழி அன்றைய அழைப்புக்குரல்தான். நகரங்கள் அடைக்கலம் தந்தபோது, இவர்கள் இரவலர்களாக அடையாளப்பட்டனர். இல்லாதவர்களுக்கு உணவிடுதல் சமூக அறம் என்று கட்டமைக்கப்பட்டது. அதுவும் அறவோர்க்கு அளித்தல், அந்தணர்க்கு ஈதல், துறவோரை எதிர்தல் எனப் படிநிலைப்படுத்தி. எளியோரைப் புறக்கணித்தது (சிலம்பு. கொலைக்களக் காதை, அடி.71-73) களவுக்கு எதிராக கொடையை நிறுத்தி சமூக அறம் சமன்பாட்டை உருவாக்கியது. இரத்தலுக்கு எதிராக விருந்தோம்பலை அவ்வாறே சமன்பாடாக்கியது.
சங்கப் புலவர்களும் திருவள்ளுவரும் இளங்கோவடிகளும் சீத்தலைச்சாத்தனாரும் விருந்தோம்பலை இல்லற உயர் ஒழுக்கமாகச் சித்திரித்து, எளியோரின் பசிதீர்க்க வழிகாட்டினர். இனக்குழு வாழ்வில் பங்கிட்டுப் பகிர்ந்து உண்ணும் பொதுமை அறம் நகரிய வாழ்வில் விருந்தோம்பல் வழியே கொடையறமாக மாற்றம் கண்டது. அது படிப்படியே கொடைநிலையிலிருந்து கீழிறங்கி பசித்த வயிறு கண்டால் உணவைப் பகிரும் தாய்மை உணர்வாக உயிர்பெற்றது.
உணவுச் செயல்பாட்டில் மற்றுமொரு புதிய நிலைப்பாடு உருவாயிற்று. அதுதான் கொல்லாமை. புலால் உணவை மறுத்தல்.. நெல் மற்றும் மரஇன உணவுப்பொருள்களின் உபரி உற்பத்தி, உழைப்புக் களங்களின் வழியே மக்களை நாகரிகப்படுத்தும் அடையாளமாயிற்று. அதன்காரணமாக, மாந்தர்களை வன்மையானவர்கள் மற்றும் நாகரிகமானவர்கள் என்று இருகூறு படுத்திற்று. விலங்குகளை வேட்டையாடி இறைச்சியை உண்பது என்பது கொலைத்தன்மைக்கு உரியது. மாறாக நிலத்தில் உழைத்து பயிர் விளைவித்து உண்பது அறத்தின் பகுதியாயிற்று. ஆகவே, புலாலை மறுத்து மரஇன உணவை உட்கொள்வதே நாகரிகமாயிற்று. அவ்வாறே, காரணம், ’புலால் உணவு வேட்டையின் வழியே போர்க்குணத்தை வளர்க்கும்.. எனவே, இறைச்சியுணவை இயல்வாழ்க்கையாக அன்றாடம் பின்பற்றிய மாந்தர்களை அவற்றிலிருந்து பிரித்து விட்டால், அவர்கள் உணவுக்காக வரவேண்டிய இடம் நகரம். அவர்கள் இழக்க வேண்டிய பண்பு போர்க்குணம். அரசு உருவாக்கத்துக்காக போர்க்குணத்தைக் கள்கொடுத்தும் ஊன்கொடுத்தும் வளர்த்த நகரமாந்தர், அரசு உருவான பின் போர்க்குணம் தன்னை நோக்கி ஆயுதம் ஏந்திவிடக்கூடாது என்பதில் கவனம் கொண்டதன் விளைவே, கள்ளை மறுத்த்தும் கொல்லாமையை முன்னிறுத்தியதும் ஆகும்.
வேட்டைவாழ்வியலிலிருந்து விலகி, மேய்ச்சல் வாழ்வியல் வழியே விலங்குகளுக்காகத் தம்மை மாற்றிக்கொண்ட மாந்தர்களை, குறிப்பாக முல்லைநில மாந்தர்களை நல்லவர் என்றும் வேட்டைப்பண்பை இழக்காத மாந்தரை, குறிப்பாக, குறிஞ்சி மற்றும் பாலைநில மாந்தரை வன்கண்ணர் என்றும் குறிப்பிட்டனர். எனவே. வேட்டைவழி விலங்குணர்வை மறந்து, எளிதாகப் பெறும் உணவுமுறை மறுக்கப்பட்டு, நகர்சார் நாகரிக மரஇன உணவை முன்னிலைப்படுத்தும்போது உணவுத் தேடல் அன்றாடப்ப் போராட்டமாகிறது. இதில், கவனிக்க வேண்டிய ஒரு கூறு யாதெனில், இவ்வுலகின் உணவுத் தேவையின் சரிபாதியை இறைச்சியுணவே ஈடுசெய்கிறது. வெறும் மரஇன உணவை மட்டுமே முன்னிறுத்தினால் இவ்வுலகின் பெரும்பான்மை மக்களுக்கு உணவே கிடைக்காத நிலைதான் ஏற்படும். அவ்வகையில் கொல்லாமை மற்றும் கள்ளாமை வழியே எளிய மாந்தரின் உணவுரிமை பறிக்கப்பட்டதோடு அவர்கள் மாற்றுணவு தேடி நகரவீதிகளில் அலைவுறச் செய்தது. உணவுக்காக களவை மேற்கொள்வதை அறம் தடுத்தது. இருக்கும் ஒரே வழி இரத்தல்தான் என்றது.
இப்போதுதான் உடைமையாளர்களின் கொடைப்பண்பு புகழுக்கான தடமாயிற்று. உணவு கிடைக்காது பசியில் தவிக்கும் நிலை நோய் எனப்பட்டது. உணவுக்கொடை நல்கும் உடைமையாளன் மருத்துவன் ஆனான். பசிப்பிணி மருத்துவர் இல்லம் அணித்தோ சேய்த்தோ என்ற குரல்கள் திசைதேடின. கொடையைப் புகழ்ந்து கொடையின் முன் வறுமை நோயன்று என்று மொழிந்தன கற்பிதக் காப்பியங்கள். வீதி முழுதும் விருந்தோம்பல் போட்டி. ஆகவே, எம் இல்லத்தில் விருந்துண்டால் இன்னின்ன பரிசுப்பொருள்கள் கிடைக்கும் என்று அறிவிப்புகளை முழக்கியது சீவகசிந்தாமணி. எல்லாருக்கும் எல்லாம் என்று திகழும் கோசலத்தின் அயோத்தி நகரத்தில் பசியில்லை ஆகவே கொடை இல்லை என்பதை, ”வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்” (கம்ப.பா.84) என்று முரண்சுவையில் அமைதி காண்கிறார் கம்பர்.
மறுமலர்ச்சி காலத்தின் காலனி ஆதிக்கம் நிலத்தை அடிமைப் படுத்தினாலும் அறிவை விசாலப்படுத்தியது. சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை அறிமுகப் படுத்தியது. புதிய சிந்தனை புதிய மொழிநடையில் அரங்கேறத் தொடங்கியது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என உயிர்நேயம் காட்டி, உலக உயிர்களின் பசிபோக்க, அணையா அடுப்பை மூட்டினார் வள்ளலார். தனியொருவனுக்கு உணவிலை எனில் சகத்தினை அழித்திடுவோம் என்று கொதிக்கிறார் பாரதி. ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர் நொடிக்கும் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவர் உணரப்பா நீ” என அறிவைக் கூர்தீட்டுகிறார் பாரதிதாசன். வசதிபடைத்தவன் தரமாட்டான், அதை வயிறுபசித்தவன் விடமாட்டான் என்று பொதுவுடைமையைப் பிரகடனப்படுத்துகிறார் பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார். ஆனால் நடப்பில் இவையெல்லாம் இடைத்தட்டு நடுத்தர வர்க்க மாந்தர்களின் அரங்க உரையாடல்களாகவே மதிப்பிழந்து போகின்றன. உண்மைக் காட்சியாக, வீதி தோறும், உழைப்பதற்கு இயலாதவர்களும் உடல்தளர்ந்த முதியவர்களும் உழைப்பு மறுக்கப்பட்டவர்களும் பசியை நோயாக்கி மருந்து தேடி இரந்து உழல்கின்றனர். அவர்கள் நோக்கமும் இந்தப் பொழுதின் பசிபோக்கும் உணவைச் சிந்திக்காமல், நாளைக்கும் உணவை உறுதிபடுத்தும் பணத்தைப் பிச்சையாக இரந்து பெறுவதாக இருப்பதுதான் உழைப்பு – பொருள் – உணவு என்ற உடைமைக் கோட்பாட்டைக் கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலைக்கெல்லாம் மூலகாரணம் எது தெரியுமா? உணவெனப் படுவது உணவுப்பொருள் என்று இருந்த நிலையை மாற்றி உணவெனப்படுவது உற்பத்தி செய்தல் என்றும், அவ்வுற்பத்திக்கு அடிப்படை தேவை நிலத்தொடு நீரே என்றும், சேகரிப்பு வாழ்வியலை உற்பத்திக்கு மாற்றியதன் மூலம் உடைமைச் சமூகத்தை உருவாக்கியதும் சமூகத்திற்கான உணவு வழங்கல் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்ததும்தான்.
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியல் ஞாலம்
தாளின் தந்து, தம் புகழ் நிறீஇ,
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய
பெருமைத்தாக, நின் ஆயுள்தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;
வான் உட்கும் வடி நீள் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி,
ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே;
வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன்
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே; அதனால்,
அடு போர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே;
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே. (’புறநா. பா.18)
(திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.
பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.)
புன்செய் நிலங்களும் நன்செய் நிலங்களாக மாற நீரைப் பெருக்கி நிலத்தொடு இணைக்க வேண்டும் என்பது குடபுலவியனார் கூற்று. அதாவது போர் மூலம் இழப்புகளின் வழியே கொள்ளைப் பொருள் பெறுவதைக் காட்டிலும், உழைப்பின் வழியே உற்பத்தி செய்து உணவை அனைவருக்கும் வழங்க வழிசெய்வதே சிறந்த ஆட்சி என்று அரசனுக்கு அறிவுரை கூறப்படுகிறது. நிலம் நெளிந்த பள்ளங்களிலெல்லாம் நீரை நிரப்பி அது கடைபோகாதவாறு அணையிட்டுத் தடுத்தவரே இவ்வுலகை ஆக்கியோர் என்று நீர்மேலாண்மையை முன்னிறுத்தி வேளாண் தொழிலை வளப்படுத்தவும் பெருக்கவும் வழிகாட்டுகிறது இப்பாடல். இதன்கண் மூன்று அடிகள் மிகவும் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சிறப்புடையன. அவை,
- உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
- உண்டி முதற்றே உணவின் பிண்டம்
- உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
இவ்வுலகில் பசி மிகவும் கொடியதாகப் பெருகியுள்ளது. பசிக்கு உணவு கிடைக்கவில்லை எனில் மாந்தர் இறப்பது உறுதி. எனவே, அப்பசியின் தவிப்போருக்கு உணவு கொடுப்போர் உயிர்கொடுத்தற்குச் சமம் என்கிறது முன்னடி.
இந்த உலகத்து மக்கள் யாவருக்கும் உணவுதான் அடிப்படைத்தேவை. உணவைப் பெற்றுத்தான் உடல் இருக்கிறது; வளர்கிறது; வாழ்கிறது. அதனால் உணவினால் மட்டுமே ஆகிய பிண்டம் என்று இவ்வுடலைக் குறிப்பிடுகிறது இடையடி. நடைமுறை வழக்கில் எதற்கும் உதவாக மனிதரை சோற்றுப்பிண்டம் என்று வசைபாடுவதை இதற்கு இணையாக நோக்கலாம். இதனைத்தான் உணவினால் வாழும் பொருள்தான் உடல் என்று அறிவிக்கிறது. இடையடி.
இந்த நிலைகள் அதாவது பசி என்பது உயிர்கொல்லும் நோய் என்ற முன்னடிக் கூற்றும், உடல் என்பது உணவால் ஆகிய பிண்டம் என்பதன் வாயிலாக பசி என்னும் உயிர்க்கொலை நோய்க்கு மருந்தாக உணவு அமைவதைக் குறிப்பிடும் இடையடிக் கூற்றும் எதனால் தோன்றியது என்பதற்கான விளக்கமாக மூன்றாம் அடி அமைகிறது. அதாவது, மனிதர்களை அவரவர் இடங்களில் அவரவர் இயல்பில் வாழ அனுமதித்தால் பசி நோயன்று; உணவும் மருந்தன்று. ஆனால், தனிமனிதனின் பசியையே. தனக்கான உழைப்பின் தேவையாக்கி, அவனைத் தன் நிலத்தில் தன் இயல்பில் வாழ விடாது, அரசு என்னும் நிறுவனத்தின் வழியே, நகரத்தில் அலைக்கழித்து உழைக்க வழியின்றி இரந்து வாழும் நிலைக்குத் தள்ளியது.
இங்கு சங்க இலக்கியம் நுட்பமாக ஒன்றைப் பதிவு செய்கிறது. உணவு கிடைக்காமல் பசியில் வாட்டமுறுவதும். உணவு தேடி அலைவுறுவதும் உணவுக்காக அரசர்களையும் செல்வந்தர்களையும் புகழ்ந்து பாடுவதும் ஆகியவை உடல் உழைப்பு சாராத கலைகளின் வாயிலாக இயங்கும் பாணர் முதலானோரின் நிலைதானே ஒழிய, உழைக்கும் மக்களின் நிலையாகக் காட்டப்பெறவில்லை. அவர்களுள்ளும் புலமையால் மேம்பட்ட புலவர்கூட்டம், வரிசையறிந்து நல்க வேண்டும் என்று அரசனை நோக்கிக் கூறுவது கலைகள் மீதான மதிப்பு படிப்படியே வீழ்ச்சியுறுவதையே காட்டுகிறது. அதே நேரம் உழைக்கும் தேவையில்லாதபடி. சிறுபிள்ளைகளுக்குப் பண்ணன் உணவு உருண்டைகளை வழங்க. எறும்புக்கூட்டம் வரிசையில் செல்வது போல் செல்வதன் வழி, பசிப்பிணி மருத்துவன் இல்லம் அடையாளப்பட்டது என்கிறார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
உண்டி கொடுப்பது உயிர்கொடுப்பதற்குச் சமம். ஏனென்றால் இந்த உடல் உணவால் ஆகிய பிண்டம். எனவே, உயிர் வளர்க்க உடலுக்கு உணவிடுங்கள் என்று கொடைப்பண்பை முன்னிறுத்தியது நாகரிகம். உணவிடுவதை விருந்தோம்பல் எனப் பண்பாடாக்கியது. அதற்கெல்லாம் அடிப்படைதான் உணவெனப்படுவது உணவன்று; நிலத்தொடு நீரை இணைத்து வேளாண்மை மேற்கொண்டு உழைப்பின்வழி ஆக்கப்பெறும் உற்பத்தி என உணவைப் பொருள்மதிப்புள்ள உற்பத்திப்பொருளாக்கி மகிழ்கிறது. உற்பத்தியை உறுதி செய்வதன் வழியே உணவை உறுதிசெய்தல் என்று அரசின் கையில் உணவுச் செயல்பாட்டைக் கையளித்தது. இதனைத்தான் உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்று பெருமை பேசுகிறார் குடபுலவியனார். அப்படியானால் அரச நிறுவனத்தின் கீழ் உணவெனப்படுவது உணவு இல்லையா என்ற வினாவிற்கு பதில் ஏது?
அடுத்த வினா, உணவு என்பது சுவைப்புலன் சார்ந்ததா உடல் சார்ந்ததா? உணவு என்பது வயிற்றுக்காயினும் அதனை சுவைத்து மகிழ்வது உதட்டின் உள்ளுறுப்புகளுடன் தொண்டை வரையிலான வாயறைதான். குறிப்பாக, சுவைமொட்டுகள் அரும்பிய நாவே உணவை முழுமையாக அனுபவிக்கிறது. ஆனால், அது உடலுக்குப் பொருந்துமா பொருந்தாதா என்ற வினா எப்போது உருவானது எனில், மனிதன் மனிதனாக மதிக்கப்பெறாமல், மனிதவளப் பார்வையில் உழைக்கும் மாந்தனாக அடையாளப்பட்ட போதுதான்.
ஒரு வேளை நோய் என்று சோர்ந்தாலும் ஒரு வேலை நின்றுவிடும் என்ற அதிகார நிறுவனத்தின் பார்வையில் உடல் நோயுறா வண்ணம் உண்ண வேண்டும் என்ற பார்வை உருவாகிறது, மேலும், தனிமனிதனாக இருந்தவரை பசிநோய் ஒரு பொருட்டில்லை. ஆனால் குடும்பமாக உருப்பெற்ற நிலையில் சக உயிர்களின் பசி தீர்த்தல் தலைவனின் பொறுப்பாகிறது. எனவே, தன்னுடையதும் சக உயிருடையதுமாகிய பசி உணவு கிடைக்காத நிலையில் நோயாக வாட்டியது. நிறுவனத்தின் பார்வையில் உழைக்கும் மனிதனின் உடல்நலம் பாதுகாப்பதற்குரியது. அங்குதான் நம்முடைய இரண்டாவது வினாவுக்கும் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது உணவினால் ஆகியதே இவ்வுடம்பு. எனவே, இவ்வுடம்பெனும் பிண்டத்தை வாழவைக்கும் உணவு தேவை. எனவே, உடம்பை வருத்தாத உணவு; வயிற்றின் கொள்ளளவு, மற்றும் உழைப்பின் அளவு கருதி உடலில் ஆற்றலை நிலைக்கச் செய்யும் உணவு; இவற்றோடு நோயை வழங்காத உணவு, ஒருவேளை நோய் ஏற்படின் அதனை மாற்றுகின்ற அல்லது போக்குகின்ற மருந்து என்றவா’று உணவு முறைப்படுத்தப்பட்டது. படிப்படியே செல்வ வளத்தில் நோய்க்கு எதிராக, நோய் போக்கும் மருந்து சந்தைமயப்பட்டது.
நமது உடல், அறிவு, சிந்தனை அனைத்துமே நன்னிலையில் வளர்வதற்கும் இருப்பதற்கும் உணவே அடிப்படை. ஆகவே, உணவே உடலின் ஆதாரம் என்பது அறத்தின் வழக்காக அமைகிறது. உண்டி முதற்றே உணவின் பிண்டம் என்றவாறு, உடலை உணவினால் ஆகிய ஒரு பொருள் என்கிறது அப்படி உடல் கருதி யோசிக்காமல் உண்பது சாத்தியமா என்ற வினாவை எழுப்பினால், இரண்டு நிலைகளைக் கருதிதான் உணவு உண்பது சாத்தியம். ஒன்று பசியெடுத்தால் மட்டுமே உண்பது; மற்றொன்று முன்பு உண்டது செரித்து அற்றபின்னர் உண்பது. அற்றது அறிவித்தல் பசியின் செயல்பாடு. அதாவது. பசியறிந்து உண்பதுதான் உணவுக்காக உணவை உண்பது. எனவே பசி இயற்கையின் கொடை.
பசிக்காத மனிதர் என்று எவரேனும் உண்டா? ஆனால் நாம் பசியை மதிக்காமல் பசியை நோய் என்று சொல்லி, உணவைத்தான் அருட்கொடை என்று போற்றுகிறோம். அவரவர் உழைப்பில் அவரவர் உண்ணும்போது உணவு இயல்புதானே. அவருடைய உழைப்பில் கிடைத்த பயன்தானே. அது எப்படி கொடையாகும் என்ற வினாவை நாம் ஒருபோதும் சிந்திப்பதில்லை.
பசி எடுத்த ஒருவருக்கு உணவு கிடைக்காத நிலை ஏன் எப்படி எப்போது உண்டாயிற்று? அவர் வேட்டை என்னும் விருப்பு உணவுத்தேடலுக்கு மறுக்கப்பட்டு நகரியம் சார்ந்து ஒரு நிறுவனத்தின் கீழ் உழைப்பில் ஈடுபடுத்தப்படும்போதுதானே. உணவு வழங்குதல் தன்விருப்பத் தேடலாக இல்லாமல், நிறுவனத்தின் செயல்பாடாக அமையும்போதுதானே. அவர் பசித்தவுடன் உண்ணமுடியாமல் நிறுவனம் கொடுத்தால் உண்ணும் நிலைக்கு ஆட்பட்ட போதுதானே.
தன் உழைப்பில் தான் உணவு ஈட்டல் என்ற நிலை மாறி, உழைப்பு இவருடையதாக இருந்தாலும் உணவு எவரோ கொடுக்கும் கூலியாகிறது. உழைப்புக்கு வழியில்லாதபோது, அல்லது உழைக்கும் வலிமையோ தகுதியோ இல்லாதபோது, அல்லது அந்த நிறுவனம் உழைக்க அனுமதிக்காத போது பசிக்கான உணவை எவ்வாறு ஈட்டமுடியும்? அப்போதுதான் பசித்த மனிதருக்கு உணவு கொடையாகிறது. இப்படி ஒரு உணவு தேவையா என்று மனம் நொந்த நிலையில்தான் பசியின்மீது கோபம் வருகிறது. அந்தப்பசியை நோய் என்று பகடி பேசுகிறது நிறுவனமயப்பட்ட சமூகம்.
பசி எப்படி ஒரு நோயாகும்? ஒருவர் பசியில்லை இப்போது உணவு வேண்டாம் என்று கூறினால், ஏற்கெனவே உண்டது செரிக்கவில்லை என்பதுதான் பொருள். இதைத்தான் பசித்தபின் புசி என்கிறது பழமொழி. இப்போது சொல்லுங்கள் உடலின் நலமும் வளர்ச்சியும் மனதின் நலமும் வளமும் பசியால் அமைவதா? அல்லது உணவால் அமைவதா? இரண்டும்தான் என்று சொல்லத் தோன்றும். ஆனால் உற்றுநோக்கினால், பசிதானே விதை. அதில் துளிர்த்ததுதானே உணவுத்தேவை. அந்த உணவுத் தேவையில் கிளைத்ததுதானே உயிர்வாழ்க்கை.
பசித்த மானிடத்தின் பகிர்வு நோக்கிய கூட்டுழைப்புதானே சமூகத்தை உருவாக்கியது. நாளையை அடையாளப்படுத்தியது. நாகரிகத்தைக் கற்பித்தது. ஆக, பசி என்பது ஆக்கம். உணவு என்பது அதன் உற்பத்தி விளைவு. அப்படியானால் இந்த உலக உயிர்களின் அனைத்து வளர்ச்சிகளுக்கும் உயர்வுகளுக்கும் வேராகத் தாங்கி நிற்பது பசியே.
பசித்த உயிருக்கு உணவு தருவதிலிருந்தே அறம் தோற்றம் கொள்கிறது. எந்த மனிதர் எதிர்ப்பட்டாலும், வீட்டிற்கு வந்தாலும் உரையாடலின் தொடக்கமாக அமையும் முதல்சொல், சாப்பிட்டியா / சாப்பிட்டீங்களா. பசியை மதிக்கும் பண்பாடுதான் உலகத்தின் சிறந்த பண்பாடாக வழிநடத்தும். சாப்பிட்டியா என்ற ஒற்றைச் சொல்லை செங்கோலாக ஏந்தி மானுடத்தை ஆளும் பண்பாட்டு மொழி தமிழ். இதனைத்தானே வள்ளுவரும் ஈத்துவக்கும் இன்பம் என்கிறார். ஒருவகையில் மனிதனின் தகுதியை நோக்காது, வயிற்றின் பசியை நோக்கும் பார்வையிலேயே சமத்துவம் உயிர்பெறுகிறது.
உணவு சுழற்சியில் இரண்டு நிகழ்வுகள் முதன்மையானவை. ஒன்று வேட்டைவழி உணவுக்கான தேடலை இயற்கையின் ஆளுமையிலிருந்து விடுத்து, விலங்குகளை வளர்த்தெடுப்பதன் வாயிலாக உணவைத் தன் ஆளுமைக்கு மனிதன் கொண்டுவந்தது முதல் நிகழ்வு. இரண்டாவது நிகழ்வு இறைச்சி முதலான கடின உணவுப்பொருள்களை நெருப்பிலிட்டு வேகவைப்பதன் வழியே மென்மையாக்கி உண்ணுதல். மனிதன் விலங்கு நிலையிலிருந்து ஆறாம் அறிவின் வழி விலங்குகளிலிருந்து வேறுபிரித்து தன் ஆளுமையை உணர்ந்ததன் விளைவு இவை. ஆனால் அதன் நீட்சியில் உபரிகளின் வழியே சந்தையைக்கண்டடைந்தபோது, உணவு ஈட்டலைப் பொருள் ஈட்டலின் காரியச்செயல்பாடாக மாற்றினான். தனது கையிருப்பு அல்லது சேகரிப்பு உணவுப்பொருள்களை, பசித்தபோதெல்லாம் உணவு கிடைக்கும் வகையில் பக்குவப்படுத்தி சேமித்தல். இதன் தொடர்ச்சியே, உடலின் தேவையறிந்து உண்ணுதல். செரிக்கத் தக்க உணவை உண்ணுதல், நோயுற்றபோது நோய்ப்போக்க உதவும் உணவை உண்ணுதல், நோயே வராத வண்ணம் முறையான உணவை நலந்தரும் உணவை உண்ணுதல் என்றவாறு உண்ணும்போதே உணவு மருந்தாகிறது.
உணவின் பொதுமை நோக்கிய வாழ்நிலை மாற்றங்கள் உடல் செயல்பாட்டிலும் மாற்றங்களை உருவாக்கின. அவற்றின் விளைவாக. பற்பல நோய்கள் புதிதாக அடையாப்படுகின்றன. அவற்றைப் போக்க மருந்து நிறுவனங்கள் உருவாகின்றன. வேம்பும் கடுவும் முதல் மருந்துகளாயின.(தொல்.செய் நூ.422 ) மருத்துவம் தனித்துறையாகத் தோற்றம் கொள்கிறது. மருத்துவன் தாமோதரன், மருத்துவன் நல்லச்சுதன் ஆகியோரைச் சங்க இலக்கியம் அறிமுகம் செய்கிறது. மருத்துவத்தின் நிறுவனச் செயல்பாட்டை, ”உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வான் என்று அப்பால் நாற்கூற்றே மருந்து” என்று விளக்குகிறார் வள்ளுவர் (குறள்.950). திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என மருந்துகளை எடுத்துரைக்கிறது பதினெண் கீழ்க்கணக்கு. நோய்களை நுட்பமாக வகைப்படுத்தி,
மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தெனல் சாலும்
மறுப்பது இனிநோய் வாரா திருப்ப
மறுப்பது சாவை மருந்தென லாகும் ( திருமந்திரம். பா. )
என்று விவரிக்கிறார் திருமூலர்.
இந்நிலையில், எந்தெந்த நோய்களுக்கு எதுவெல்லாம் மருந்தாகும் என்று உணவு முறையிலேயே மருத்துவம் மேற்கொள்வதை எளிய மக்களின் அனுபவப் பாடம் சொலவடைகளாக, மரபுத் தொடர்களாக மக்களிடையே கொண்டு சேர்த்தது. உணவையே மருந்தாக உட்கொள்ளும் வாழ்க்க்கை மாற்றம் சமூக நியதியாகிவிட்டது. உணவு முறைப்படுத்தப்பட்டு முறை மீறும்போது மருத்துவம் செயல்பட்டது. உனக்குப் பிடிச்சத நீ சாப்பிடு, நல்லா சாப்பிடு, வயித்துக்கு வஞ்சனை செய்யாம சாப்பிடு. முடிஞ்ச அளவு சாப்பிடு, அடுத்த வேளைக்கு கிடைக்குமோ என்னவோ, எனவே கிடைக்கும்போது முழுமையாக சாப்பிடு என்ற உபசரிப்புச் சொற்கள் உணவை உணவாகவே உண்ணுதலுக்கானவையாக நம்மில் இன்றும் நிலைத்து நிற்கின்றன என்பது உணவுக்காக உணவு என்பதை உணர்த்தி ஆறுதல் அளிக்கின்றன.
குறிப்பு இங்கு உணவு என்று கூறும்போதே இணையாக நீரும் இணைந்தே மொழியப் படுகிறது. சந்தைமய வாழ்வியல் புதிய புதிய நோய்களுக்கு வரவேற்பு வழங்கும் விரைவு உணவு முதலியவற்றையும் மாற்றுணவையும் அறிமுகப்படுத்தி மருத்துவமும் மருத்துவர்களும் செழித்து வளர வழிசெய்வது எல்லோருக்கும் தெரிந்ததே என்பதால் சொல்லாமல் விடப்பட்டது. .