மனிதரின் அகத்தேவையின் பாற் உருவாக்கப்பட்ட உணவு. பசியின் பாற் தேடப்பட்ட உணவுச் சங்கிலி. தேவைக்கு மட்டும் அன்றி உடல் உரம் கூட்டுவதற்கான, புரதச்சத்துக்களை தருகின்ற (உணவு) மனித வளர்ச்சியின் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. மனித நாகரீகத்தின் உயிர் பதமாக இருக்கும் உண்ண உணவு, உடுக்கை உடையும், இருக்க இருப்பிடம் என்பதில் பண்பாட்டுக் கலவையினூடாக இம்மூன்றும் அமைந்துள்ளது. இதில் உணவுக் காட்டும் பண்பாட்டை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். உணவுத் தட்டை உதைக்கூடாது. அரிசியை சிதைக்க கூடாது. கடுகை கொட்டக் கூடாது. சோறு போடுபவர் சாமி, வளமை இருந்தா தான் நீதி. இன்னும் எத்தனையோ தத்துவங்கள் உண்டு.
உணவு இடத்திற்கு இடம் வேறுபடுவதுடன் சமூக அமைப்பில் அதன் பொருள் பொதிந்த அர்த்தங்ளையும் வளைத்து வைத்திருக்கிறது. இந்தியாவில் தென் மாவட்டங்களில் இருக்கும் உணவு வகைக்கும் வட மாவட்டங்கள் இருக்கும் உணவு வகைக்கும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இருப்பதற்கு, அந்தந்த இடங்களிலுள்ள தப்பு வெப்பநிலைகள் மிக முக்கிய காரணியாக அமைகிறது. உணவுப் பண்பாட்டு வெளியில் சில உணவுகளை ஏற்றுக் கொள்ளாமல் வாழும் மனிதர்கள் இங்கே ஏராளம்.
முகமதியர்கள் தடியங்காய் (வெள்ளைப்பூசனைக் காய்) என்ற நீர்மை சத்து நிறைந்த பூசணிக்காயைச் சாப்பிடுவது இல்லை. அதே நேரத்தில் ஹராம் (தடைசெய்யப்பட்டது) ஹலால் (ஏற்றுக் கொள்ளப்பட்டது) என்ற இரட்டை பொருள் பதத்தை கொண்டுள்ளனர். அதற்கு ஏற்ப உணவு வகைகளை உண்ணுபவர்களாகவும் வாழ்கின்றனர். ஹலால் போன்ற உணவுகளை ஏற்றுக் கொள்கின்றனர். ஹராம் போன்ற உணவுகளைத் தவிர்த்து விடுகின்றனர். அய்யா வைகுண்டர் வழியில் கும்பிடப்படக்கூடியவர்கள் சுரைக்காயை உணவுக்குள் ஏற்றுக் கொள்வது இல்லை. ஆனால் அந்தச் சுரைக்காயைக் காய வைத்து குடுவையாகத் திருநீர் போட பயன்படுகின்றனர். பிராமணர்கள் மண்ணுக்கு அடியில் இருக்க படக்கூடிய எந்த வகையான உணவுப் பொருட்களையும் ஏற்றுக் கொள்வது இல்லை என்ற ஐதீகம் வைத்துக் கொண்டு இருக்கின்றனர். பூண்டு, வெங்காயம், இஞ்சி இவை போன்றவற்றை உணவு வகைகளுக்குள் புகுத்துவதில்லை. மேலும் இதே நிலையில் பச்சரிசி என்ற சாப்பாட்டை ஏற்றுக் கொள்கின்றனர். புழுங்கரிசி என்ற சாப்பாட்டை ஏற்றுக் கொள்வது கிடையாது. புழுங்கலை தீட்டாகக் கருதுகின்றனர்.
உணவு தேவையின் பால் உருவானது என்றாலும், அதன் நெறி பிறழ்களை சில சமூகத்தார் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு அதை நகர்த்திச் செல்லவும் செய்து கொண்டிருக்கின்றனர். கல்யாண உறவு முறைகளில் பல்வேறு சமூக அமைப்பில் ஒரே மாதிரியான சாப்பாடு முறை என்பது கிடையாது. உதாரணமாக தென் மாவட்டங்களில் இருக்கிற வேளாளர் சமுதாயமான பிள்ளைமார்கள் திருமணத்திற்கு மறுநாள் உறவினர்கள் அனைவருக்கும் சேர்த்து சொதி சாப்பாடு போடுகிற வழக்கம் உண்டு. இது உறவுமுறை கூறும் கட்டாகவும் தொடர்ந்து இன்று நடத்தப்படுகிறது. சொதி இலங்கையில் மிக பிரபலம். இவ்வுணவு தேங்காய் பாலில் செய்வதாகும். அதிக கொழுப்பு சக்தி நிரம்பி இருப்பதால் இந்தச் சாப்பாட்டுடன் இஞ்சி பச்சடி கூட தொடுகறியாகப் பயன் படுத்துவர். அதைப்போல கம்மாளர் ஆசாரிகள் இவர்களில் தென் மாவட்டங்கள் இருக்கப்படக்கூடிய அய்யாரெட்டு என்ற பிரிவு கொண்ட ஆசாரிகள் இவர்களை மாநாட்டு ஆசாரிகள் என்று கூறிக் கொள்கிறார்கள். இவர்களுடைய திருமணத்தன்று கண்டிப்பாக புளிக்கறி இடம்பெற வேண்டும். எல்லா வகையான தொடு கறிகள் இருந்தாலும் கண்டிப்பாக புளிக்கறி இடம் பெற்று இருக்கும். அது போல் திருமண முடிந்து மறுநாள் மீன் சாப்பாடு போடுவதுண்டு. இந்த உறவு நிலை பற்றி பழமரபு கதை ஒன்று உண்டு. கம்மாள சாதி பெண்ணுக்கும் நாடார் சாதி ஆணுக்கும் கலப்பில் உருவானதாக உள்ளது.
இதைத் தாண்டிய நிலையில் நாம் பார்ப்போமானால் புளிப்பு தமிழனின் இணக்கமான ஒரு உறவு முறையில் வளர்ந்திருக்கிறது. புளிப்புச் சேர்த்துக் கொள்ளாத தமிழர்கள் இருக்க மாட்டார்கள் மருத்துவர்கள் வயது கூடிய அதிக பேருக்குச் சொல்லும் மருந்தாக ’புளிப்பை குறைத்துக் கொள்ளுங்க’ என்பதான வார்த்தை இடம்பெறுகிறது. புளிப்புச் சேர்த்த தமிழ் பிரதேச உணவு முறை அவர்களின் தட்ப வெப்பநிலைக்கான உணவில் முறையாக இடம் பெறுகிறது. இங்கே புளிப்பு சேர்க்கப்படுவதனால் உடம்பில் இருக்கும் நீர்ம நிலையை வளர விடாது வெப்பநிலையான உடல் சூட்டைப் பதப்படுத்தி வைத்திருக்கும். இதே நிலை வடபகுதிக்குக் கிடையாது. வடபகுதியில் அதிக உரப்பு உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்வார்கள். மிளகாய் அதிகம் பயன்படுத்துவார்கள் இவ்வாறான கார வகைகளை பயன்படுத்துவதனால் அங்கே வெப்பம் தேவையில்லை அதற்கு பதிலாக நீர்மைச்சத்து தேவைப்படுகிறது. இந்தக் காரச்சத்தின் மூலம் நீர்மச்சத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான உணவு இயல் முறையாக அமைகின்றது.
பகிர்ந்து அளித்தமை முறையை வேட்டை சமூகம் கற்றுக் கொடுத்தது. வேட்டையிலிருந்து சாப்பிட கூடாதென தெய்வ வேந்தலை சார்ந்த பொருட்களைத் தவிர்க்க கற்றுக் கொடுத்த நிலையும் தொடர்ந்து செய்யப்படுகிறது. ஆமையும் நத்தையும் மானையும் சாப்பிட்டவர்கள் தானே பழந்தமிழர்கள்.
கோனார் என்ற யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மாடுகளை இறைச்சியாக சாப்பிடுவதில்லை அதை வேளையில் ஏதாவது ஒரு காய்கறிகள் மேல் சத்தியம் செய்து அதை வாழ்நாள் முழுவதும் தொடுவதில்லை . அதாவது தவிர்த்து விடுவார்கள். இப்படி பல்வேறு பட்ட உணவுகள் முறைகள் உணவுப் பண்பாட்டுக் கலவை நிறைந்து கிடைக்கிறது.
இறப்பு வீடுகளை சடங்குகளில் உள்ளவைகளைப் பார்த்தால், பிரேதம் எடுக்கும் வரைக்கும் அந்த வீட்டில் உள்ள அடுப்பு எரியக் கூடாது என்பது ஒரு வகையான ஐதீகம் . அதே நிலையில் வெளியே பிரேதம் எடுத்து சென்ற பின் வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு சோறு, ரசம், அவியல் என்ற சாப்பாடு மட்டும் பயன்படுத்தப்படுகிறதைப் பார்க்கலாம். இது எளிமையான உணவாக இருந்தாலும் நெருக்கமான உறவின் துக்கங்களை அனுசரிக்கும் ஒரு கட்டமைப்பை இது வெளியே பறைசாற்றும். அதே வேளையில் தேவர், ஆதிதிராவிடர் சமூகத்தினரிடம் அரிசி சாமாண்கள் கொண்டுவரும் பழக்கமும் உள்ளது. அரிசி சாப்பாடு திராவிடரின் பிரதானமான உணவு என்பதினை அறிந்து கொள்வதற்கு நெல் விடுதூது என்கிற பெயரில் இருவர்கள் சிற்றிலக்கியங்களை எழுதியுள்ளனர். ஒருவர் திரிகூட ராசப்ப கவிராயர். இந்நூல் கிடைக்கவில்லை. இப்பதிவு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் உ.வே.சாமிநாதய்யரிடம் கூறிய தகவல். இன்னொன்று வடகரைச் செம்புலிக்குமார துரைச் சின்னணைஞ்ச பூபதி என்ற பெரியசாமித் துரையின் தானாபதி வைத்தியநாத பிள்ளை மீது இயற்றப்பட்டது. இந்நூல் எஸ்.வையாபுரிப்பிள்ளை சிற்றிலக்கியத் திரட்டில் இடம்பெற்றுள்ளது.
அறுசுவை உணவோடு கல்யாண அமைப்பு சார்ந்த உணவு பதார்த்தங்கள் திரவ நிலை, திட நிலை என்பவையிலான அமைப்பிற்குள் கட்டமைத்து இருக்கின்றார்கள். நாஞ்சில் நாட்டில் நடக்கும் திருமண அமைப்பில் இரண்டு அல்லது மூன்று வகையான பாயாசங்களோடு இடம் பெறும். திருநெல்வேலியில் அப்படி அல்ல ஒரு வகையோடு அதிகமான தொடு கறிகளை வைத்து பறிமாறு நிலையினைக் காணலாம்.
இப்படிய எல்லா உணவியல் முறை கொள்ளும் ஒரு வகையான தனித்துவ அடையாளங்கள் இருக்கிறது. தைத்திருநாள் திருவிழா விளக்கின் முன் படைக்கப்படக்கூடிய உணவுப் பொருட்கள் அனைத்தும் இயற்கை கடவுளுக்குப் படைத்து அதை கொண்டாடும் நிலையைப் பார்க்க முடியும். சித்திரை விசு, நைனார் நோம்பு காலங்களில் அவல் வாங்கி (இடித்து) சாப்பிடும் வழக்கமின்னும் இருக்கின்றது.
மேலும் சில தகவல்கள் ரேஷன் கடை உருவாக்கம் கூட இரண்டாம் உலகப் போரில் உருவாக்கமாகும். உணவு தட்டுப்பாடு பஞ்சங்கள் உருவாகும்போது அதை சமாளிப்பதற்காகக் குறைந்த விலையில், இலவசமான முறையில் உருவாக்கும் பெற்றது தான். இப்படி கூறுவது மூலம் தமிழ்ச் சமுதாயத்தில் சத்திரங்கள் சாவடிகளில் அன்றைய காலத்தில் இலவசமான வழிப்போக்கர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. உணவுகளை விற்பனைச் செய்யும் தன்மை தமிழர்களிடம் இல்லை பிற்கால சோழ, நாயக்கர்கள் காலத்திற்குப் பின்னர் விடுதிகள் ஹோட்டலாக பரிணாமம் அடையும்போது உணவுகள் விற்பனைச் செய்யும் அமைப்பில் மாறியது. ஆங்கிலேயர் காலத்தில் மிக விரிவான முறையில் ஹோட்டல்கள் பிரபலம் அடைந்தது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பற்றிய தகவல்களில் காலை சாப்பாடே வெறும் பால் கஞ்சி மட்டும் தான். கரிசல் காட்டில் வேலை செய்பவர்கள் கம்மங்கஞ்சி அதிகம் சாப்பிட அறிவுறுத்துவார். அப்போது தான் மறுநாள் தண்ணீர் தாகம் எடுக்காமல் அதிக நேரம் உழைக்க முடியும்.
நெல்லு சாப்பாடு அறியதாகப் போன காலத்தால் கஞ்சி சாப்பாடு தலைதுக்கப்பட்டிருக்கின்றது. அவ்வையார் நோன்பு காலத்தில் ஆண்கள் பார்க்காத படி ஆண் குறி வழிபாட்டு உணவு முறையாகும் (செந்தீ நடராசன் இது பற்றி பதிவு செய்திருக்கின்றார்). கெண்டி அடித்து கொண்டு வரும் வைணவ யாசகர்களிடம் கக்கி தரும் சாப்பாட்டை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதாகவும் நம்பிக்கை உள்ளது. இதைப்போல திருப்பணி கரிச குளப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் கொடை விழாவில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வண்ணார் சமூகம் சார்ந்தவர்களிடம் வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.
உணவுகளை குறியீடுகளாலும் தமிழ்ச் சமூகம் பயன்படுத்துகிறது எலுமிச்சை, தடியங்காய் இந்த இரண்டையும் மத்திய பகுதியை வெட்டி குங்குமம் வைத்து அதை முச்சந்தியில் படைத்தல் அல்லது சாமி படங்களுக்கு முன் படைத்தல் பலிக்கான அர்த்தம் ஆகிறது. அதாவது ஒரு தடியங்காய் வெட்டுவது ஒரு வெள்ளாட்டை வெட்டுவதற்கு சமமாகும். இந்தக் கோவிலில் ஒரு காலத்தில் மாமிச படையில் விடப்பட்டு இருக்கிறது. தற்போது அது தவிர்க்கப்பட்டு இருக்கிறது என்பதற்கான ஆழ்பொருள் உட்புறமாக கிடைக்கின்றது.
சாப்பிடும் முறையில் கூட முதல் முறையாக உணவை சாப்பிடும் குழந்தைகளுக்கு வெள்ளி கிண்ணத்தில் வைத்து கொடுக்கும் ஒரு சம்பிரதாய சடங்காகவே பயன்படுத்துவர். தாய்மார்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பெரிய சட்டியில் சோற்றைப் பிசைந்து ஒவ்வொருக்கும் சிறு கவளமாகக் கொடுத்து சாப்பிட வைக்கும் அழகிய வாழ்வியல் நிலை கால நீட்சியில் இன்று மறைந்திருக்கிறது. தானிய உணவுப் பொதுவாக உடம்புக்கு அனலைத் தருகிறது. மேலும் மாவுச்சத்து நிரம்பியதாகக் காணப்படுகிறது. பெண் வயதுக்கு வந்த காலங்களில் உளுந்தம் பருப்பிலான நல்லெண்ணெய் சேர்ந்த களி கிண்டி கொடுப்பது முக்கிய உணவாக உள்ளது. அதை வேளையில் மாமிசம் எடுத்துக் கொள்ளும் பிற சமூகத்தினர் குஞ்சு கோழியை அவித்து அதன் சாறை எடுத்து தினமும் கொடுக்கக்கூடிய பழக்கமும் இருந்திருக்கிறது ஒரு உளுந்து, மாமிசம் சாப்பாட்டிற்கான புரத சத்துக்களைக் கொண்டது.
நம் காலத்து உணவுகளும் வகைகளும்
நாம் வாழும் தற்போதைய காலத்தில் பழைய உணவு பழக்க வழக்கத்தில் இருந்து முற்றிலும் மாறிவிடவில்லை. நகரமயமான வாழ்க்கைப் போக்கை கொண்ட இடங்களில் இந்த மாற்றங்களை தற்போது காண வேண்டியது உள்ளது. பெரு நகரங்களில் இரவு நேரக் கடைகள் பெருக்கங்களும், அதனை உட்கொள்ளும் கூட்டங்களும் பெருகி கொண்டே உள்ளது. இதை நன்மை தீமை பற்றி யாரும் யோசிப்பதில்லை.
அன்றாட வாழ்வியல் உணவு எப்பொழுதும் பிரதானமான இடத்தினைப் பெற்றிருப்பதனையும் அதன் தேவைகளால் உணவு விடுதிகள், தள்ளு வண்டிகள், சாலை ஓரக்கடைகள் எனப் பல்வேறு உணவு விற்பனைக்கூடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதைப் பார்க்க முடியும். உணவு விலை பட்டியலில் காலை நேர உணவுகள், மதிய நேர உணவுகள், இரவு நேர உணவுகள் என்பதாக நெடிய பட்டியல் வளர்ந்திருப்பதையும் உணர வேண்டும். சில கடைகள் முழு மூன்று வேளை உணவுகள் பரிமாறப்படுகிறது. சில இரவு நேரக் கடைகளாக மட்டும் ஏராளமாக வீதி தோறும் இருக்கின்றன. ஹோட்டல்களில் பெருக்கத்தினாலும் உணவுப் பற்றிய கவலை குறைந்து கொண்டுள்ளதையும் தற்போது உணர வேண்டும். ஒரு அலைப்பேசி இருந்தால் போதும் இருக்கின்ற இடத்திற்கு வந்து உணவைக் கொடுத்து பணம் வாங்கி செல்பவர் வந்து விட்டனர். (சுகி, சொமேட்டோ இன்னும் உதிரியான சில உணவு விடுதிகள் )
உணவு வகைகள் அதிக சமையல் கலைஞர்களால் பிறந்து வளர்ந்த பின். உணவின் கலைகளால் அதை பாடமாக சமையல் கலைஞர்களாக (shef )படிப்பும் வந்துவிட்டது. உணவு எல்லாத் தேச மக்களுக்கும் தேவை என்பதை விடவும் சுவையான உணவாக தருவதில் போட்டிகளும் உருவாக்கி விட்டன. இதைப்பற்றி கூறும்போது ”நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பன்னாட்டு நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன” என்கிற எஸ் ராமகிருஷ்ணனின் கருத்தை உற்று நோக்க வேண்டியதுள்ளது. பழங்காலத்தில் இருந்து உணவு பட்டியல் அரிசி சாப்பாட்டை நல்ல உணவாக உட்கொண்டிருந்தனர். ஊன்சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்சோறு, பெருஞ்சோறு, புளிச்சோறு, பாற்சோறு, வெண்சோறு, சிறுஞ்சோறு, உளுந்தஞ்சோறு இன்னும் பல சோறுகளைச் சாப்பிட்டு உள்ளனர்.
உணவு வகைகளில் சைவ உணவு, அசைவு உணவு அதாவது மரக்கறி, ஊண்கறி மட்டுமின்றி திரவ வடிவிலான உணவுகளையும் உண்டிருக்கின்றனர். இதன்படி சோறு என்பதற்கு அடிசில், கூழ், அழினி, அவிழ், நிமிரல், புழுங்கல், கொன்றி, கொம்மன், மிதவை எனப் பல சொற்கள் தமிழில் வழங்கப்பட்டு இருப்பதை உணர முடியும். அதே வேளையில் நீரிலிட்டு அவித்தும் அவித்து வேக வைத்தும் வறுத்தும் சுட்டும் வற்றலாக்கியும் எண்ணெயில் விட்டு பொரித்தும் வேகவைத்தும் சாப்பிடுகிற பழக்கம் இருந்திருக்கிறது. நீரில் கலந்த சோற்றினை பருக்கையுடனவையை ’கஞ்சி’ கூழ்’ என்று அழைக்கின்றனர். கம்மங்கஞ்சி, சோளக்கஞ்சி, கேப்பக்கூழ், கம்மங்கூழ் இவ்வாறானவைகளை நாம் பார்க்க முடியும்.
நெல் வகையான அரிசி உணவை பிரதானமான உணவாக இருந்திருக்கிறது. அதை பல்வேறு வடிவத்தோடு சாப்பிடக் கூடியவர்களாகவும் இருந்திருக்கின்றனர். அரிசி சாப்பாடு மதிய உணவு சாப்பாட்டின் முக்கிய உணவாக உள்ளது. அரிசியில் இருந்து உளுந்தோடு ஊற வைத்து தோசையாக, இட்லியாக சாப்பிடுகிற பழக்கமும் இருக்கின்றது. அரிசி அரைத்து மாவாக உருவாக்கி முறுக்கு சுடுவதும் இடியாப்பம் என்கிற முறையில் சாப்பிடுவதும் கொழுக்கட்டை, அதிரசம் போன்ற தின்பண்டங்களாகச் சாப்பிடுவதும் அரிசியை ஊறவைத்து இடித்து அவலாக் சாப்பிடுவதும் உள்ளது. உணவு காய்கறிகள் பண்பாட்டு வெளியில் பெரும் தாக்கத்தைக் கொண்டவையாக விளங்குகின்றது. சில உணவு வகைகளை அல்லது சில காய்கறிகளை பல இனக் குழு மக்கள் அல்லது ஒரே இனம் சார்ந்த மக்கள் அந்த வகையான காய்கறிகளை தங்களது உணவில் சேர்த்துக் கொள்வது கிடையாது. மேலும் சில உணவு காய்கறிகளின் மேல் சத்தியம் செய்து அந்த உணவை உட்கொள்ளாமலும் இருக்கின்றனர்.
துரித உணவு வகைகள்
இவை கீழே தோராயமான பட்டியல் தான் காட்டப்பட்டுள்ளது. விரிவான பட்டியல் போட வேண்டும். துரித உணவு என்பது விரைவாக சமைத்து வழங்கப்படும் உணவுகள் என்பர். எந்த வகையான உணவாக இருந்தாலும் அதற்கான படிய முறைப்படி வேக வைத்து எடுத்து வைத்து சாப்பிடுவதே சிறந்ததாகும். இவற்றின் விதியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அரைகுறையாக வேக வைத்து எடுத்து வைத்து கொள்கின்றனர். வாடிக்கையாளர் கேட்பதற்கு ஏற்ப உணவுகளை உடனடியாகச் செய்து துரிதப்படுத்தி செய்யும் உணவு வகையாக இஃது விளங்குகிறது. சுவை கூட்டுவதற்காக பல்வேறு பேரிக் ஆசிட், சோடியம், பாரசிடமல் மாத்திரை, அஜினமொட்டோ, கெட்ட எண்ணெணைய் இப்படிப் பட்டியல் நீள்கிறது.
இந்த நிலையில் தற்போதைய காலத்தில் உணவு வகைகளில் அதிகம் சாப்பிடும் உணவு வகையாக இளைஞர்கள் இடம் பெற்று இருக்கின்றார்கள். இந்த உணவு வகைகளில் அதிக சாப்பாடாக பரோட்டா, நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் ஃபாஸ் புட்டாக இடம்பெருக்கின்றன. இதனோடு டொமடோ சாஸ் பரிமாறப்படுகின்றது. நூடுல்ஸ் பற்றிய ஒரு கருத்து இந்தியாவில் ஆண்டு தோறும் 4,500 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
திரவ வடிவிலான குளிர்பானங்கள், சாப்பாடு வகைகள், நொறுக்கு தீனிகள் என்ற மூன்று பதிவுகளான அமைப்புகளில் சாப்பாட்டை தனித்து பிரித்து பார்க்கலாம். இந்த அடிப்படையில் குளிர் பான அமைப்புக்கான கோடைகால ஜிகர்தண்டா, எல்லாக் காலங்களிலும் சாப்பிடப்படுகின்றது. சோடா போஜ், நன்னாரி சர்பத், ஃபாலூடா, ஜூஸ்கிரீம் இன்னும் ஏராளமான குளிர்பதனங்கள் அருந்தப்படுகிறது. இதில் கூட பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்களையும் அதிக விரும்பி உட்கொள்ளுவர்களும் இருக்கிறார்கள். இதை தவிர்த்து கருப்பட்டி புளி கரைசல் சேர்த்த பானாக்காரம் நல்ல கோடை வெயிலை தனிக்கும் நீராகரமாகும். மேலும், பதநீர், நுங்கு கலந்த சர்பத், மோர் இவற்றில் வடிவிலான சாப்பாடு திரவ உணவு உடலுக்கு நல்ல சக்தியைத் தருவதாக அமைந்திருப்பதை யாரும் உணரவில்லை.
நொறுங்கு தீனியான பல்வேறு உணவு வகைகள் நாம் பார்க்க வேண்டியவைப் பல நீண்டு கிடக்கின்றது. பாப்கான், சமோசா, பப்ஸ், வெஜி ரோல், பர்கர், பீட்சா, சிப்ஸ், பிரெஞ்சு ஃபிரையர், தந்தூரி சிக்கன், பிரஸ் மேக்கர்ஸ், சாண்ட்விச், கட்லட், கோபி மஞ்சூரி, ஆனியன் ரய்தா, பிரட் ஆம்லெட், என்பதான பல்வேறு நொறுக்கு தீவன உணவுகளாக பெரும் கடைகள், சாலையோர கடைகள் விற்பனையைப் பெருக்குகின்றனர். இதனோடு டொமேட்டோ சாஸ், மயோனைஸ் கூடுதலாகச் சேர்த்து உண்ணப்படுகிறது.
உணவு வகைகளாக பல்வேறு உணவுகள் உட்கொள்ளப்படுகிறது ஃபாஸ்ட் ஃபுட் சவர்மா, ப்ரைட் ரைஸ் என்பதான உணவுகள் தற்போது மதியம் சாப்பாடாகவும் ஆரம்பித்து இருக்கின்றது. அரைகுறையாக வேக வைக்கப்பட்ட அரிசி, அதனோடு கோழி இறைச்சி சேர்க்கப்பட்டு, வேதிப்பொருட்களான சில வகை சேர்க்கப்பட்டு உணவு சுவையைக் கூட்டி கொடுக்கிறார்கள்.
உணவு கலாச்சார அமைப்பிலிருந்து முற்றிலும் புதுமையான, பலரால் நேசிக்கப்படக்கூடிய உணவு வகைகளின் புரோட்டாவிற்கே முதலிடம் கொடுக்கப்படும். அந்த அளவிற்கு இந்தியா மூலை முடுக்குகளில் இயங்கும் உணவு வகையாக உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் பரவிக் கிடக்கும் உணவு வகையாக வளர்ந்து வருகின்றது. இந்தியாவில் உணவை காசு கொடுத்து வாங்கி சாப்பிடும் பழக்கம் ஆரம்பத்தில் கிடையாது. சத்திரங்கள் வைத்து வழிப்போக்கர்களுக்கு உணவை தானமாக கொடுத்து வந்தனர். பின்னர் வந்த காலங்களில் சிற்றுண்டிச் சாலை வரவால் உணவை விற்பனை பொருளாக்கினர். புரோட்டா கண்டுபிடிப்பு கூட ஒரு வகையில் மக்களுக்கான உணவாக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட மனிதர்களுக்கான, அதாவது ராணுவ வீரர்கள்களுக்கான உணவாக கண்டுபிடிக்கப்பட்டது. கெட்டுப் போகாமல் ஒரு சில நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்கக் கூடிய உணவு வகையாக இருக்க புரோட்டா கண்டுபிடிக்கப்பட்டது. பரோட்டா (parotta or paratha) புரோட்டா, பரோட்டா, ப்ராத்தா என்றழைக்கப்படும் ரொட்டி வகைகள் ஆகும்,.
இந்தியாவில் இரண்டு வடிவிலான புரோட்டா மாவு உள்ளது, வடபகுதி கோதுமை கழிவான மாவில் இருந்து உருவாக்கப்படக்கூடிய புரோட்டா மாவும் உண்டு. தென்பகுதியில் மரவள்ளிக்கிழங்கு என்ற மாவிலிருந்து உருவாக்கப்படக்கூடிய மாவாகவும் உள்ளது. இந்த மாவிற்கான பெயர் காரணத்தை குறிப்பிடுவோமானால் ஆரம்பத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய மாவாக இருந்தது. அதனால் அமெரிக்கன் மாவு என்று அழைக்கப்பட்டது, ’அ’ மருவி மெரிக்கன் மாவானது, மரிக்கன் மாவும் பின்னர் மைதா மாவாக வந்து நின்றது. இதைபோல ஜாவாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் ஜாவா அரிசி ஜவ்வரசியானது. வட பகுதியான கோதுமை மாவு வெளிர் மஞ்சள் நிறத்துடன் இருப்பதைத் தவிர்க்க மாவுடன் ’போன்சோயில் பெராக்சைடு’ செய்யப்படுகிறது. அதன் பின் உணவு சுவை கூட்டும் பொருளாக அலோன்சான் கலக்கப்படுகிறது. இதுதான் பலருக்கு சர்க்கரை வியாதியை உருவாக்குகின்றது.
புரோட்டோ தமிழ்ச் சமுதாயத்துக்குள் ஊடுவதற்கு முன்பாகவே மைதா மாவு மிட்டாய் கடைகளான போளி என்ற உணவு வடிவத்தில் இருந்துள்ளது. லாலாக் கடைகளையும் முன்னுதாரணமாக கூறலாம். தமிழர்களின் உளவியல் முறையில் கால அமைப்பிற்கு ஏற்றதாக அமைத்திருந்தனர். பஞ்ச காலங்களில் கிழங்கு வகையான சீனிக்கிழங்கு ஏழிலைக் கிழங்கு என்னும் மரவள்ளிக் கிழங்கு உணவு வகைகள் பயன்படுத்தி இருந்தனர். கோடை காலங்களில் தேவை பொருட்டு பருவக்காலத்திலையே அதிகமாக கிடைத்த உணவு தானியங்களைப் பதப்படுத்தி வைத்து வடகம் போட்டு பயன்படுத்தி இருக்கின்றனர். புரோட்டா இந்திய சமூகத்தோடு எந்தக் காலத்தில் கலந்தது என்ற ஒரு கேள்வி எழத்தான் செய்யும். இட்லி கடைகள் கடை வடிவத்தில் வருவதற்கு முன்பே அவை வீடுகளில் புழங்கு பெற்ற உணவு வகையாக இருந்திருக்கிறது என்பதை போல கேரளவில் பரவி இருந்த புரோட்டக்களை இங்கிருக்கும் முனியாண்டி விலாஸ், உடுப்பி ஹோட்டல் கடைக்காரர்கள் கேரளா மாப்பிளா இசுலாமியர்களிடம் இதணை கற்று வந்து தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தினர்.
Sir super sir