உணவு எனப்படுவது என்ன? உண்பவர்/உட்கொள்வதன் யாவர்க்கும் தீமை பயக்காத பண்டம் எனலாமா? உணவு எப்படி தீமை பயக்கும் – உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தானே உணவு உண்கிறோம் உட்கொள்கிறோம். உணவே மருந்து என்று தானே நம் முன்னோர்கள் இருந்தார்கள். பின்னர் எப்படி….?
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிறிய உடல் உபாதைகளுக்காக மருத்துவரிடம் சென்றால், என்ன சாப்பிட்டீர்கள் என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கும். இன்று இருக்கக்கூடிய மிகப்பெரிய நோய்களான கேன்சர், உடற்பருமன், நீரிழிவு, ரத்த கொதிப்பு மற்றும் குழந்தை பேறு இன்மை ஆகிய அனைத்தும் நாம் உண்ணும் உணவுடன் பின்னிப் பிணைந்து இருப்பதை, உணவைப் பற்றி சற்றே ஆழமாக படித்து/கேட்டு தெரிந்து புரிந்து கொண்டால், எளிதில் விளங்கும். அடுமனையகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஊர்தோறும், மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதை காணலாம்.
நிற்க!
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் சமைப்பதற்கு அவரைக்காய் வாங்கி வந்தோம். பார்க்க பச்சையாக பள பள என்று இருந்தது. நறுக்கும் போதே திவாகரன் அதில் இரசாயனம் வாடை அடிக்கிறது என்றார். அப்படி பார்த்தால் நாம் எதையும் சாப்பிட முடியாது என்று கூறி சமைக்க ஆரம்பித்தேன். காய் வேகும் போது இரசாயனத்தின் வாடையை மிகவும் அதிகமாக உணர முடிந்தது. அப்படியே அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறியதும், குப்பையில் கொட்டி விட்டோம். கீரை வாங்கி சமைக்கும் போதும் இது போன்ற அனுபவம் நிறைய உண்டு. அன்றிலிருந்து அவரைக்காய் வாங்குவதே இல்லை. ஒரு நாள் இரசாயனமே பயன்படுத்தாமல் விவசாயம் செய்து நாமே அவரைக்காய் விளைவித்து சாப்பிடுவோம் என்று பேசிக்கொண்டோம்.
கோவிட் ஊரடங்கின் போது, அனைத்தையும் விட்டு விட்டு ஊருக்குப் போய் விவசாயம் செய்வோம் என்று 2020 ஜூலை மாதம் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு கிராமம் நோக்கி பயணித்தோம். முன்னோர்களின் தயவால் கிடைத்த நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யத் துவங்கினோம். இருவருக்கும் விவசாயத்தில் முன் அனுபவம் கிடையாது. நம்மாழ்வார், பாமையன் அவர்களின் புத்தகங்கள், யூ ட்யூப் மூலம் தெரிந்து கொண்டது, இயற்கை விவசாயத்தில் அனுபவம் உள்ளவர்களுடன் கலந்தாலோசிப்பது என்று எங்கள் இயற்கை விவசாயப் பயணம் துவங்கியது. 15 வருடங்களுக்கு பிறகு இப்போது நாங்கள் இயற்கை விவசாய முறையில் விளைவித்த அவரைக்காயை பறிக்கும் போதே ஆனந்தமாய் உணர்ந்தோம். சமைத்து சாப்பிடும் போது இது அல்லவா அமிர்தம் என்று தோன்றியது. (அமிர்தம் எப்படி இருக்கும் என்று தெரியாத போதும்)
இந்த பயணத்தில் நாங்கள் மிக முக்கியமாக உணர்ந்தது என்னவெனில் இன்றைய பெரும்பான்மையான விவசாயிகள் பெருநிறுவனங்களின் மூலப் பொருட்கள் (raw-materials suppliers) தயாரித்து கொடுக்கும் நபர்களாக மாறிவிட்டனர் என்பதும், உணவு, உணவு உற்பத்தி, உணவின் வரலாறு, உணவு உற்பத்தி பற்றிய பாடங்கள் எதுவும் நம் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் இல்லை என்பதுமாகும். மனிதனின் அடிப்படை தேவைகளான உணவும், நீரும், காற்றும் நஞ்சாகிப் போயிருக்கும் இன்றைய சூழலில் உணவு, அதிலும் நஞ்சில்லா உணவு, இரசாயன பயன்பாடு இல்லாத உணவு உற்பத்தி என்பதைப் பற்றி ஒவ்வொருவரும் சிறு வயதிலிருந்தே அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
மனித வாழ்வின் அனைத்து நிகழ்வுகளுமே வணிகமாகிவிட்ட, உணவு வணிகமும் மருத்துவ வணிகமும் ஏறக்குறைய இரண்டறக் கலந்து விட்ட இன்றைய சூழலில், நமது இளைய சமுதாயமும் வருங்கால சந்ததியினரும் உணவைப் பற்றிய வரலாற்றை தெரிந்திருப்பது இன்றியமையாததாகும். அதற்கு இளம் வயது முதலே நமது பாடத்திட்டத்தில் உணவு பற்றிய பாடம் இடம்பெற வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகிறது. தற்போது உள்ள பாடத்திட்டத்தில் விவசாயம் சார்ந்த கல்வி என்பது, நமது சமுதாயத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் தொடர்பற்ற ஒரு விஷயமாக கருதப்படுகிறது.
இன்று கிராமப்புறங்களில் கூட புற்றீசல்களாக உருவெடுத்துள்ள தனியார் பள்ளிக்கூடங்களில், நீட் தேர்வு எழுதுவதற்கும், ஐஐடிஜி தேர்வு எழுதுவதற்கும் ஆறாம் வகுப்பு முதல் சிறப்புப் பயிற்சிகள் தரப்படுவதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. எந்த பள்ளியிலும் – நமது அரசாங்க பள்ளிகள் உட்பட – விவசாயம் குறித்தோ, விவசாயிகள் குறித்தோ, விவசாயம் சார்ந்த தொழில்களில் இருக்கும் விவசாய கூலிகள் குறித்தோ பாடத்திட்டத்திலும் வகுப்பிலும் எந்தவித பாடமோ மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கருத்துப் பரிமாற்றுமோ இல்லை என்பது மிகவும் வருத்தத்துடன் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். விவசாயம் செய்வதை விடவும், விவசாயக் கூலி வேலை செய்வதை விடவும், கட்டிட வேலை செய்வது என்று லாபகரமானதாகவும் சுலபமானதாகவும் பார்க்கப்படுகிறது. கிராமப்புறங்களில் இருந்து விவசாயிகளும் சிறியவர்களும் பெரியவர்களும் நகரங்களை நோக்கி அன்றாடம் படையெடுக்கும் அவலத்தை நாம் தினமும் கண்டுவருகிறோம். விவசாயம் என்பது லாபமற்ற தொழிலாகப் பார்க்கப்படுகிறது. நமது முன்னோர்கள் விவசாயம் என்பதை தொழிலாக எண்ணியதில்லை. விவசாயம் நமது கலாச்சாரமாக இருந்தது. விவசாயம் நமது மண்ணின் அடையாளமாக இருந்தது. விவசாயம் நமது வாழ்க்கை முறையாகவும், வாழ்வு நெறியாகவும் இருந்தது. உடல் தன்னிச்சையாக மூச்சை சுவாசிப்பதை போல நமது முன்னோர்களின் வாழ்வும் விவசாயத்துடன் பின்னிப்பிணைந்திருந்தது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு, ரசாயன உர நிறுவனங்களும் ரசாயன உர மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை இயல்பாக கொண்ட விதை நிறுவனங்களும் பெருமளவில் தோன்றின. (பெரு நிறுவனங்களின் விதைகள் அடைக்கப்பட்டு வரும் பாக்கெட் களை சற்று கவனியுங்கள் – TREATED WITH POISON – என்றிருக்கும்) இந்த பெரு நிறுவனங்களின் ஒரே குறிக்கோள் லாபம் மட்டுமே. இந்த விதைகளையும் உரங்களையும் உபயோககிப்பதன் விளைவாக சிதையும் மண்ணின் வளம், வீரியமற்ற விதைகளின் தரம், உண்ணும் மக்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் ஆகியன பற்றிய கவலைகள் ஏதும் இந்நிறுவனங்களுக்கு இல்லை.
மிக அதிக சத்து/பலம் தரக்கூடிய, பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய நமது பாரம்பரிய ரக நெல்/அரிசி, பருப்பு, காய்கறிகள், பழ ரகங்கள் இன்று சந்தையில் இருந்து மிக வேகமாக மறைந்து கொண்டிருக்கின்றன.
வீரிய விதையை கொண்டு உற்பத்தி செய்யப்படும் அரிசியோ பருப்போ, பழமோ காய்கறியோ தம்முடைய இயல்பில் இருப்பதில்லை. அவற்றிலிருந்து கிடைக்கப்பெறும் விதைகளின் மூலம் வளரும் செடிகள், கொடிகள், மரங்கள் ஏதும் காய்ப்பதில்லை. விளைச்சல் தராத விதைகளைக் கொண்ட உணவுப் பொருளை உண்ணும் மனிதர்களும் மலடாகும் பரிதாபத்தை நாம் இன்று பல்கிப் பெருகும் செயற்கை கருத்தரிப்பு மையங்களின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.
மண்ணின் மலட்டுத்தன்மை தொடர்பாகவும், அதற்கு காரணமான ரசாயன உரங்களின் பயன்பாடு தொடர்பாகவும் பல்வேறு இடங்களில் பல வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு ஆய்வுமே, முடிவில் ரசாயன உரம்தான் மண்ணின் எதிரி என்பதை நிரூபித்துக் கொண்டுதான் வருகிறது. ஆனால் ரசாயன உரங்களுக்கு மானியம் கொடுத்து, அதன் மூலம் கல்லா கட்டும் அரசுகளும், அரசியல்வாதிகளும் ரசாயன உரங்களின் விளைவாக ஏற்படும் தீமைகளைப் பற்றி எந்த கவலையும் இல்லாதவர்களாகவே இன்றளவும் உள்ளனர். (இவர்களில் சிலர் தங்களுடைய பண்ணைகளில் மட்டும் இயற்கை விவசாயம் செய்து வருவதையும் நாம் ஆங்காங்கே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்).
மேற்சொன்ன அனைத்து விவரங்களையும் நம்முடைய குழந்தைகளுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் கடத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பது கல்விக்கூடங்கள்தாம். இன்று பொதுவெளியில் விவசாயம் என்பது வணிகமாகவும் விவசாயி என்பவர் எப்பொழுதுமே நஷ்டத்தில் இயங்கும் வணிகனாகவும் சித்தரிக்கப்படுகிறது. இந்த பிம்பத்தை உடைப்பதற்கு பள்ளிக்கூடங்களில் இருந்தே விவசாயத்தைப் பற்றியும், உலகம் முழுவதும் செயல்பாட்டில் உள்ள பல்வேறு பாரம்பரிய மற்றும் புதிய விவசாய முறைகளையும் (ஹைட்ரோஃபோனிக்ஸ், அக்வாஃபோனிக்ஸ், வீட்டு தோட்டம், மாடி தோட்டம்) பற்றிய தரவுகளையும் அன்றாட வகுப்புகளில் இடம்பெறச் செய்ய வேண்டும். அதை தனி நபரோ நிறுவனமோ சாத்தியப்படுத்துவது என்பது இயலாத காரியம். ஒரு சமூகமாய் இணைந்து இந்த மாற்றத்தை நோக்கி நாம் நகர வேண்டும். அதற்கு, இந்த சமூகம் அனைத்து அடிமைத்தனத்திலிருந்தும் அறியாமையிலிருந்தும் வெளிவர வேண்டும்.
உணவு இன்றி உயிர்கள் இல்லை. பல்லுயிர்ப்பெருக்கம் இன்றி உணவு இல்லை. மண்வளம் இன்றி பல்லுயிர்ப் பெருக்கம் இல்லை. இயற்கையோடு இயைந்த முறைகளின் மூலமே மண் வளப்படும். நம் முன்னோர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள் – நம் மண்ணின் மாடு, இரண்டு மூன்று ஆடுகள், ஐந்தாறு கோழிகள், இவை அனைத்தின் எச்சமும் மிச்சமும் நிலத்திற்கு உரம், நிலத்தின் விளைச்சல் வீட்டிற்கும், கால்நடைகளுக்கும் என ஒரு சுழற்சியில் தற்சார்ப்பு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இன்றைய தலைமுறையினர் அந்த வாழ்க்கை முறையையும் அறிய மாட்டார்கள். விவசாயம் / உணவு உற்பத்தி என்பதற்கும் இயற்கை விவசாயத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது போலவும், வேளாண்மை பற்றிய அறிவு தேவையற்றது என்பது போன்ற பிம்பத்திலும் பெரும்பான்மையான மக்கள் இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் ஏதோ ஒரு மூலையில் ஒரு விவசாயி வேளாண்மை செய்து கொண்டிருப்பார், அங்கே சென்றால் தெரிந்து கொள்ளப்போகிறோம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். மண், நீர், காற்று, இவற்றின் பயன்பாடு மற்றும் உழுவது முதல் உணவு வரை உள்ள வேளாண் செய்முறைகளைப் பற்றி, நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லத் தவறுவது, உணவு மீதும், உணவு உற்பத்தி மீதும், பயிர் தொழில் மீதும் அவர்கள் எந்த மரியாதையும் இன்றி வளரும் போக்குக்கு காரணமாகிறது. ஒரு புறம் உணவு, உணவு உற்பத்தி, அதனை சுற்றியுள்ள அரசியல் பற்றிய புரிதலும் பார்வையும் இன்றி நம் குழந்தைகளை நாம் தள்ளி வைக்கிறோம் என்றால், மறுபுறம் குழந்தைகளின் மறுவீடான பள்ளிக்கூடங்களும் அவற்றின் பாடத்திட்டங்களும் மாணவர்களை வேளாண்மையிலிருந்து வெகு தூரத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
நமது பள்ளிகளில் அனைத்து பாடங்களிலும் உணவு மண் முதல் தட்டு வரை செய்யும் பயணத்தை ஒவ்வொரு பாடத் திட்டத்திலும் சேர்க்க வேண்டும். அறிவியல், வரலாறு, கணிதம், மொழி என அனைத்து பாடங்களிலும் வேளாண்மை பற்றிய அறிவினை குழந்தைகளுக்கு வளர்த்தெடுக்கும் முறையில் அமைத்தல் வேண்டும்.
இன்றைய சமூக வலைத்தளங்களில் பல வெளிநாட்டு பள்ளிகளில் குழந்தைகள் விளைநிலங்களில் பல்வேறு பணிகளை செய்வது போலவும், உணவு தயாரிப்பில் ஈடுபடுவது போன்ற பதிவுகளும், பகிரப்பட்டு வருகிறது. அதை காணும் பெற்றோர்கள் நம் குழந்தைகளுக்கும் இது போன்ற கல்வி பள்ளிகளில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. நம் நாட்டிலும் மிகச் சில தனியார் பள்ளிகளில் விவசாய வேலைகளில் குழந்தைகள் ஈடுபடுத்தும் சூழலும் உள்ளது.
நகரங்களில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு நெல் என்றால் என்ன, அரிசி எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது போன்ற விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளன என்பதும், அதில் எத்தனைங வகைகள் உண்டு என்பதும் இன்றறைய சூழலில் கிராமங்களிலேயே பிறந்து வளர்ந்த பெரும்பான்மையானோருக்கு தெரிய வாய்ப்பில்லை. சமுதாயமாக உள்ள இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஒன்றாம் வகுப்பு முதல் உணவு, விவசாயம், பயிர்கள், நிலம், மண், நீர் என்பன பற்றிய கல்வியும் அதை சார்ந்த அறிவும் பள்ளிக்கூடங்களில் பாட திட்டங்களில் கொண்டும் வரப்பட வேண்டும். அப்போது அனைவருக்கும் உணவு பற்றிய புரிதலும், நல்ல உணவு குறித்த தேடலும் எழும். ரசாயன பயன்பாடு தேவையா, இயற்கையாக வேளாண்மை சாத்தியமா என்ற கேள்விகளுக்கு, குழந்தைகளிடம் விடை இருக்கும். அப்படியான நாள் நிச்சயம் வரும். அந்த நாள் வரும்வரை, நாம் ஒரு சமுதாயமாக செய்ய வேண்டியது உணவு பற்றிய வினாக்களை வீடுகளிலும் பள்ளிகளிலும் குழந்தைகளிடம் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருப்பதுதான்.