கேரளாவில் மலபார் பரோட்டா-பீஃப் கறி, ஆந்திராவில் உள்ளிபாயா பராத்தா, அஸ்ஸாமின் பராத்தா-ஆலு சப்ஜி, பீகார் மற்றும் ஜார்கண்டில் சட்து பராத்தா, குஜராத் முள்ளங்கி பராத்தா, ஹரியானாவின் ரோதக் கடை பிரமாண்ட பராத்தா, ஹிமாசலப் பிரதேசத்தில் வெண்ணெய் தடவிய ஆலு பராத்தா, மேற்கு வங்கத்தில் முகலாய் பராத்தா, கர்நாடகாவில் பிலி ஹோலிகே என்ற பாரம்பரிய அரிசி மாவு பரோட்டா, மத்திய பிரதேசத்தின் சாஹி பராத்தா. மகாராஷ்டிராவின் தாஷ்மி ரோட்டி என்ற மசாலா பராத்தா மற்றும் பய்தா ரோட்டி, பஞ்சாபின் தாபா ஆலு பராத்தா, ராஜஸ்தானின் குர்மா பராத்தா என்ற பச்சைப்பயறு பரோட்டா, உத்தரப்பிரதேசத்தின் பெட்மி பராத்தா, காஷ்மீரின் பாகர்கானி பராத்தா, பாண்டிச்சேரி நெய் பரோட்டா, தமிழ்நாட்டின் பொறிச்ச பரோட்டா சால்னா…
விடுபட்ட மாநிலங்களில் எங்கெங்கும் ஆலு பராத்தா உண்டு. சொல்லப்போனால் தேசத்தின் உணவாக விஸ்வரூபமெடுத்துப் பரவிக் கிடக்கிறது பரோட்டா. இதன் மூலம் என்ன? வரலாறு என்ன? இது பாரம்பரிய உணவுகளில் ஒன்றா? பராத்தா என்ற பரோட்டா நம் மண்ணில் சாம்ராஜ்ஜியம் அமைத்தது எப்படி?
லேயர் லேயராக பிரித்துச் சுவைப்போம்.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மேற்கு சாளுக்கிய அரசரான மூன்றாம் சோமேஸ்வரா, ஆட்சி, அரசியல், பண்பாடு, கலாசாரம், உணவு, பொருளாதாரம், சோதிடம், வானியல், கலை, விவசாயம், இசை என்று பல்வேறு லேயர்கள் அடங்கிய ஒரு நூலைத் தொகுத்துள்ளார். Mānasollāsa என்ற அந்த சமஸ்கிருத நூலில் பூரணம் வைத்துச் செய்யப்பட்ட இனிப்பு போளி குறித்தும் எழுதப்பட்டிருக்கிறது. உணவியல் ஆய்வாளரான K.T. Achaya, இனிப்பு போளியே பரோட்டோவின் மூதாதையர் என்று குறிப்பிடுகிறார். மாவுக்குள் இனிப்பையோ, மசாலாவையோ சேர்த்து உருட்டி, தட்டையாக இட்டு சுட்டுத் தின்னும் பண்டம்.
சொல் ஆராய்ச்சிக்குள் புகுந்தால், சமஸ்கிருத விளக்கத்தின்படி Parat மற்றும் atta என்ற இரண்டு சொற்களின் கூட்டணியே Paratha. அதாவது சுட்டுத் தின்னும் மாவுப்பண்டம் என்று பொருள். வரலாற்றுக் குறிப்புகளின்படி பார்த்தால், பராத்தா என்பது பஞ்சாப் மண்ணின் பாரம்பரிய உணவாக இருந்திருக்கிறது. பஞ்சாபின் ஆட்சியாளர்களும் உயர்குடிமக்களும் பராத்தாவை விரும்பி உண்டிருக்கிறார்கள். பண்டைய பஞ்சாபில் இது செல்வந்தர்களுக்கான உணவாக இருந்ததாக, பக்ஸிஷ் சிங் நிஜ்ஜார் என்ற வரலாற்றாளர் தனது Panjāb under the Sultāns, 1000–1526 AD நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இன்னொரு பக்கம் முகலாயர்களும் பராத்தா பிரியர்களாக இருந்திருக்கிறார்கள். முகலாய மன்னர்களின் சமையலறைக்குள் பராத்தா, துருக்கியிலிருந்து நுழைந்திருக்கிறது.
Bazlama, துருக்கியின் பாரம்பரிய தடிமனான ரொட்டி. கோதுமை மாவும் தயிரும் கலந்து தயாரிக்கப்படுவது. அதே போன்றதொரு இன்னொரு துருக்கிய ரொட்டி, கோஸ்லெமெ (Gözleme). மாவு, உப்பு, ஈஸ்ட், தண்ணீர் எல்லாம் கலந்து பிசைந்து லேயர் லேயராகத் தயாரிக்கப்படும் ரொட்டி இது. உள்ளே கறியோ, மசாலாவோ நிரப்பப்பட்டிருக்கும். துருக்கியர்கள் காலை உணவாக விரும்பி உண்ணும் இது வங்கத்தின் வாசல் வழியாக இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்தது. கி.பி. 1204. துருக்கிய-ஆப்கன் தளபதியான முகம்மது பக்தியார் கில்ஜி (அல்லது கல்ஜி), வங்கம் மற்றும் பீகாரின் மீது படையெடுத்து வந்து ஆட்சி அமைத்தார். வங்கத்தில் அமைக்கப்பட்ட முதல் இஸ்லாமிய அரசு இதுவே. அவரது ஆட்சி அங்கே நீண்ட காலம் நிலைக்கவில்லை என்றாலும் துருக்கியர்களின் உணவுக் கலாசாரம் வங்க மண்ணுக்குள் நுழைய வழி வகுத்தது. குறிப்பாக, கோஸ்லெமெ. கில்ஜி வம்சத்தினரது ஆட்சியானது வட இந்தியாவில் பரவியபோது துருக்கிய கோஸ்லெமெ பராத்தாவும் பரவி தன் அடையாளத்தைப் பதித்தது.
முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் ஆட்சிக் காலம் (1569-1627). பேரரசரின் மெனுவில் பராந்தா (Parantha), அதாவது பராத்தாவும் இருந்தது. ஒரே மாதிரியான பராத்தா அவருக்குச் சலிப்பைத் தந்தது. ‘யோவ், இதையே திங்குறதுக்கு வெறுப்பா இருக்கு. அரண்மனைல இத்தனை செஃப் இருக்குறீங்கள்ல. என்னதையாவது புதுசா செஞ்சு தாங்கய்யா! பத்து நாள்தான் டைம். எனக்கு புதுவித பராந்தா வந்தே ஆகணும்’ என்ற விதமாகக் கடுப்பைக் கொட்டிக் கட்டளையிட்டார். ஜஹாங்கீரின் சமையலறையில் பணியில் இருந்த ஒருவர், அடில் ஹசிஃப் உஸ்மான். வங்கத்தின் பர்தமான் என்ற ஊரைச் சேர்ந்தவர். பேரரசரை எப்படியாவது குஷிப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் மாவைக் கையில் எடுத்தார். பிசைந்தார். பராத்தாக்களில் பரபர ஆய்வு முயற்சிகள் சுடச்சுட அரங்கேறின. எட்டு நாள்கள் தீவிர பரிசோதனைகளுக்குப் பிறகு ஒன்பதாவது நாள் பேரரசரின் தட்டில் அந்தப் புதிய பராந்தா காத்திருந்தது. துருக்கிய கோஸ்லெமெவை ஆதர்ஸமாகக் கொண்டு சற்றே மாறுதல்களுடன் செய்யப்பட்ட இறைச்சி திணிக்கப்பட்ட லேயர் வகை பராந்தாதான் அது.
ஜஹாங்கீர் வந்தார். பார்த்தார். கையில் எடுத்தார். ஏதோ ஒரு வழக்கமான பராந்தா என்று ஆர்வமின்றிக் கடித்தார். சுவைத்தார். அவரது முகத்தில் மாற்றம். இன்னொரு துண்டைக் கடித்தார். மகிழ்ச்சியில் முழங்கினார். ‘யோவ் அடில் ஹசிஃப். அசத்திட்ட போயா! இந்த பராந்தா செஞ்ச உன்னோட அற்புதமான கைகளுக்கு ஆயிரத்தொரு பொற்காசுகள் பரிசு!’
அடில் ஹசிஃப், சந்தோஷத்தில் வானம் தலையில் இடிக்க எகிறிக் குதித்தாலும், ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருந்தார். தனது அந்த புதிய பராத்தா ரெசிப்பி ரகசியம், அரண்மனையின் சக செஃப்களுக்குத் தெரியவே கூடாது. குறிப்பாக டெல்லி, லக்னோ சமையல்காரர்கள் மோப்பம் பிடித்து வருவார்கள். யாரும் மூச்சுவிடவே கூடாது என்று தன் உதவியாளர்களுக்கும் குடும்பத்தினருக்கும் கட்டளையிட்டார். அரண்மனைச் சமையலறைகளில் இந்த ரெசிபி ரகசிய அரசியலெல்லாம் சகஜம்.
அடில் ஹசிஃபின் காலத்துக்குப் பிறகும் அவரது சந்ததியினர்கள் முகலாய ஆட்சியாளர்களின் சமையலறைகளில் பராத்தா சுட்டார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அடில் ஹசிஃபின் வழி வந்தவர்கள், வங்கத்தின் தெருக்களில் பிழைப்புக்காக ஆட்டிறைச்சியோ, மாட்டிறைச்சியோ மாவினுள் நிரப்பி பராத்தா சுட்டு விற்றார்கள். ஜஹாங்கீர் காலத்தில் உருவான அந்தச் சிறப்பு பராத்தா, ‘முகலாய் பராத்தா’ என்ற பெயருடனேயே விற்கப்பட்டது. இன்றைக்கும் பெங்காலிய உணவுக் கலாசாரத்தின் புகழ்பெற்ற சாலையோர உணவாக நிலைத்து நிற்கிறது. முகலாயர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, அவர்களது அரண்மனைச் சமையல்கட்டுகளில் தொழில் கற்றுக் கொண்ட கலைஞர்கள், பல்வேறு சமஸ்தானங்களிலும் ஜமீன்களிலும் வேலைக்குச் சென்றனர். ‘முகலாய பாணி உணவு வகைகள்’ இந்தியா முழுக்கப் பரவியது இப்படித்தான். பராத்தாவும் அதில் ஒன்று.
முகலாய பராத்தாவுக்கு ஒன்றுவிட்ட தம்பி போலவே மகாராஷ்டிரப் பகுதியில் இருந்தும் ஒரு வகை பராத்தா புகழ்பெற்றிருக்கிறது. அது Baida Roti. மாவில் முட்டை சேர்த்து பிசைந்து கோழிக்கறியோ, ஆட்டுக்கறியோ நிரப்பித் தயாரிக்கப்படும் பராத்தா வகை. இதற்கு பர்மா ரொட்டி என்ற பெயரும் உண்டு. பர்மாவிலும் இதுபோன்ற மாமிசம் நிரப்பப்பட்ட பாரம்பரிய பராத்தா உண்டு. பர்மாவும் இலங்கையும் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் இருந்தன. மகாராஷ்டிரப் பகுதிகளில் இருந்து பர்மாவுக்குச் சென்றுவிட்டு வந்த மக்கள் மூலமாக அங்கே பர்மா ரொட்டி, பய்தா ரோட்டியாகப் புகழ்பெற்றிருக்கலாம்.
பராத்தா என்றாலே அசைவம்தானே. அதில் பாரம்பரிய சைவ பராத்தா என்று எதுவும் உண்டா என்று நினைத்தால் அங்கே குறுக்கே வந்து நிற்கிறது ஆலு பராத்தா. ஆலு என்றால் உருளைக்கிழங்கு என்று தெரியும். ஆலு பராத்தாவின் தாய்வீடு பரந்துவிரிந்த பழைய பஞ்சாப். பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே மாவுக்குள் எதையாவது உள்ளே வைத்து பராத்தா சுடும் பழக்கம் இருந்தததாக உணவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். வட இந்தியாவில் போளி போன்ற பதார்த்தங்கள், இனிப்பு பராத்தாவாகத்தான் கருதப்பட்டன. ஆரம்பத்தில் ராஜவள்ளிக்கிழங்கு என்ற செவ்வள்ளிக்கிழங்கை, மாவுடன் சுவைக்காகச் சேர்த்துப் பிசைந்து பராத்தா தயாரித்திருக்கிறார்கள். பதினேழாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவுக்கு உருளைக்கிழங்கை எடுத்துக் கொண்டு வந்தனர். அதன் பின்னர் பிரிட்டிஷார் உருளை விவசாயத்தை தேசமெங்கும் பரப்பினர். இந்திய உணவுக் கலாசாரத்தில் ஒன்றிணைந்த உருளைக்கிழங்கு, ராஜவள்ளிக்கிழங்கி நகர்த்திவிட்டு மெதுமெதுவாக பராத்தாவுக்குள்ளும் புகுந்து ‘ஆலு பராத்தா’வாக அவதாரம் எடுத்தது.
உடல்-உயிர், நகம்-சதை, கடல்-அலை இணை போலவே பராத்தாவுக்கென்ற படைக்கப்பட்ட கிழங்காக உருளை ருசி தந்ததால் ‘ஆலு பராத்தா’வின் புகழை யாராலும் தடுக்க இயலவில்லை. இந்தியாவில் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் ஆலு பராத்தா கிடைக்கும். இன்றைக்கு இந்தியாவின் தேசிய உணவு எது என்று வாக்கெடுப்பு நடத்தினால் ஆலு பராத்தா கடும் போட்டி கொடுக்கும். இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவாக ‘ஆலு பராத்தா’ விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.
தெற்கு நோக்கி இறங்கி வருவோம். தூத்துக்குடியில் இருந்து ஆரம்பிப்பதே பரோட்டாவுக்கு செய்யும் நியாயமாக இருக்கும். தூத்துக்குடியில் தடுக்கி விழுந்தால் ‘நைட் கிளப்’ வாசலில்தான் விழ வேண்டியதிருக்கும். நைட் கிளப் என்றால் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கும் இடமல்ல. பரோட்டா கடை. இந்தப் பெயருக்கும் காரணம் உண்டு.
1950களின் இறுதி. தூத்துக்குடி துறைமுகம் சார்ந்த ஊர், முக்கியமான வியாபாரஸ்தலம் என்பதால் எப்போதுமே வெளியூர் மக்களின் வரத்து அதிகம் உண்டு. தூத்துக்குடிக்கு வந்த வேலையை எல்லாம் முடித்துக் கொண்டு கடைசிப் பேருந்துக்கு ஊருக்குத் திரும்பிப் போகும் ஆள்கள் அதிகம். ஆனால், இருட்டியதும் ஊர் அடங்கிவிடும். கடைகள் எதுவும் இருக்காது. டிபன் எல்லாம் கிடைக்காது. கடைசி பஸ்ஸில் ஊருக்குத் திரும்பும் வியாபாரிகள் நிலை திண்டாட்டமாக இருந்தது. அப்போது தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜாமணி என்பவர், இதைத் தனக்கான வியாபார வாய்ப்பாகப் பார்த்தார்.
1959-ம் ஆண்டு தன் சகோதரர் கோயில்பிள்ளை உடன் இணைந்து இரவு நேர டிபன் கடை ஆரம்பித்தார். அதில் பிரதான உணவு பரோட்டாதான். அதுவும் எண்ணெயில் பொரித்த பரோட்டா. அந்தப் பரோட்டா மீது ஊற்றி ஊறவைத்து உண்பதற்காகவே ராஜாமணி, தன் கைப்பக்குவத்தில் பிரத்யேகமாக மட்டன் சால்னாவை உருவாக்கினார். உள்ளூர்வாசிகளையும் சுண்டியிழுத்த சால்னாவின் மணம், அவர்களை பரோட்டாவுக்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் ஆக்கியது. இரவு நேரத்தில் மட்டுமே இயங்கும் டிபன் கடை என்பதால், ‘ராஜாமணி நைட் கிளப்’ என்று பெயர் வைத்தார். வியாபாரம் சிறக்கவும் பின்பு அவரது சகோதரர் கோயில்பிள்ளை தனியாக ‘ஸ்டார் நைட் கிளப்’ என்ற பரோட்டா கடையைத் திறந்தார். இவர்களிடம் தொழில் கற்ற பலரும் பின்பு தனியாக பரோட்டோ கடை போட்டனர். தூத்துக்குடி ‘நைட் கிளப்’ நகரமான வரலாறு இதுதான்.
மதியம்தான் கடையைத் திறந்து வேலையைத் தொடங்குவார்கள். சாயங்காலம்போல சால்னா வாசம் தூக்கும். நள்ளிரவு வரை பரோட்டா கல்லில் பொரிந்து கொண்டே இருக்கும். தூத்துக்குடி மக்கள், பரோட்டாவை ‘ரொட்டி’ அல்லது ‘செட்’ என்றே அழைக்கிறார்கள். இந்த ரொட்டியும் சால்னாவும் தூத்துக்குடி மக்களின் ரத்தத்தோடு கலந்தது. சால்னாவிலும் காரம் அதிகமானது, குறைவானது என்று இரண்டு வகை உண்டு. சால்னா தயாரிப்பு ஃபார்முலாவை இப்போதும் பல நைட் கிளப்காரர்கள் ரகசியமாகப் பாதுகாத்து வருகிறார்கள். தொழில் ரகசியம்!
இங்கே இலங்கைக்கும் தூத்துக்குடிக்குமான பரோட்டா பந்தத்தையும் பேசியாக வேண்டும். யாழ்ப்பாணம் வாழ் தமிழர்கள் மத்தியில் பரோட்டாவும் விருப்பத்துக்குரிய உணவு. அந்தத் தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு, குறிப்பாகத் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வேலைக்கு வந்தபோது இங்கே அது ‘சிலோன் பரோட்டா’வாகப் பரவியது. இலங்கையின் கிழக்கு மாகாணங்களில் 1960-களில் ‘கொத்து பரோட்டா’, பிரபலமடைந்தது. சூடான கல்லின் பரோட்டாக்களைப் பிய்த்துப் போட்டு விருப்பத்துக்கேற்ப மாட்டுக்கறியோ, கோழிக்கறியோ, ஆட்டுக்கறியோ அல்லது மீனையோ போட்டு, அவை ஒன்று கலப்பதற்காக சட்டுவம் கொண்டு கொத்தித் தரும் உணவு. இந்த பரோட்டா பிறந்த கதைக்குள் வறுமையும் இருக்கிறது.
ஏழை மக்களுக்கு சூடான பரோட்டாவோ, அதற்குத் துணையாக கறியோ வாங்கும் அளவுக்குக் காசு இருக்காது. ஓட்டல்காரகளுக்கு மீந்து போன பரோட்டாவை விற்றாக வேண்டும். ஆக, மீந்த பரோட்டாக்கள் மீது, மிச்சமிருக்கும் கறிக்குழம்புகளை ஊற்றி, சூடான கொத்துப் பரோட்டா ஆக்கினார்கள். எளிய மக்களுக்கு, குறைந்த விலையில் சுவையான உணவு பிறந்தது.
இந்தக் கொத்து பரோட்டாவானது இலங்கைத் தமிழர்கள் வழியாக தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் அறிமுகமானது. வேறு பகுதிகளுக்கும் பரவியது. இன்றைக்கு சைவ கொத்துப் பரோட்டா, முட்டை கொத்து பரோட்டோ, பனீர் கொத்து பரோட்டா, பீஃப் கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா என்று பல்வேறு விதங்களில் ஸ்டார் ஹோட்டல்களின் மெனுக்களிலும் ‘காஸ்ட்லியாக’ இடம்பெற்றிருக்கிறது.
தமிழ்நாடெங்குமே பரோட்டாக்களின் ராஜாங்கத்துக்குக் குறைவில்லை. ஒரு காலத்தில் விருதுநகர், மாநிலத்தின் முக்கியமான எண்ணெய் உற்பத்திக் கேந்திரமாக இருந்ததால், அங்கே எண்ணெய் பரோட்டா என்ற பொரிச்ச பரோட்டா அடையாள உணவாகப் புகழ்பெற்றது. நாகப்பட்டினம் பகுதியில் லாப்பா என்ற முக்கோண பரோட்டா. செங்கோட்டைக்கு அருகில் விரானூரில் பார்டர் பரோட்டா, மதுரையில் பன் பரோட்டா, நாமக்கல்லில் முட்டை கலக்கி பரோட்டா, பேராவூரணியில் வீச்சுப் பரோட்டா, காய்ன் பரோட்டோ, கிழி பரோட்டோ, இலை பரோட்டா, சட்டி பால் பரோட்டோ என்று தமிழர்களின் உணவிலும் உணர்விலும் பரோட்டா ஒன்று கலந்திருக்கிறது.
இங்கே ஒரு பாடலையும் குறிப்பிட்டாக வேண்டும். இது பரோட்டா மீது வெறுப்பை உமிழ்ந்த பழைய தமிழ் சினிமா பாடல்.
ஒரு ஜான் வயிறே இல்லாட்டா
இந்த உலகில் ஏது கலாட்டா?
உணவுப் பஞ்சமே வராட்டா
நம்ம உயிரை வாங்குமா பரோட்டா!
அந்தக் காலத்தில் கோலிவுட்டின் சூப்பர் கவிஞர் தஞ்சை ராமையாதாஸ், 1951-ம் ஆண்டில் வெளியான ‘சிங்காரி’ என்ற திரைப்படத்துக்காக எழுதிய பாடல் இது. மேற்படி நான்கு வரிகளுக்குள் வரலாறும் உணவு அரசியலும் புதைந்து பரோட்டாவாக வெளிப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போர், அதனால் விளைந்த உணவுப் பஞ்சம் காரணமாக இந்தியர்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தானியப் பற்றாக்குறையைச் சமாளிக்கும்விதமாக பிரிட்டிஷ் இந்திய அரசு, மெட்ராஸ் மாகாணத்தில் கோதுமையை அதிக அளவில் இறக்குமதி செய்தது. கோதுமை, கோதுமை மாவு, மைதா மாவு சார்ந்த உணவுகளை உண்ணச் சொல்லி மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். வட இந்தியர்களின் பிரியத்துக்குரிய உணவுகளான சப்பாத்தியும் பரோட்டாவும் நம் வாய்க்குள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதாக தமிழ் மக்கள் கருதினர். சிறு தானியங்களுக்கும் அரிசிக்கும் பழகிய நாக்குகளுக்கு பரோட்டா அந்நியமாகவே இருந்தது. ஆகவே, தஞ்சை ராமையாதாஸின் வரிகளில் பரோட்டா வறுத்தெடுக்கப்பட்டது. இன்றைக்கு நிலைமை தலைகீழ். பரோட்டா மாஸ்டர்களை உருவாக்கும் டிரெயினிங் சென்டர் மதுரையில் இருக்கிறது. நல்ல சம்பளத்துடன் மாஸ்டர்கள் ‘கொத்து பரோட்டா’ இசைக்கிறார்கள்.
இறுதியாக, பரோட்டோ பெருவெறியரான லக்னோ நவாப் ஒருவரது கதையைச் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் அவர் கடும்கோபம் கொள்வார். கட்டுரை எழுதியவருக்கு கன்னத்தில் ‘பளார்’ கூட விழலாம். ஆகவே…
அயோத்தி ராஜ்ஜியத்தின் நவாபாக 1814 முதல் 1827 வரை காசி உத்-தின் ஹைதர் என்பவர் இருந்தார். தினமும் பராத்தா சாப்பிடாவிட்டால் அவரால் உயிர் வாழவே இயலாது என்ற அளவுக்குத் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தார். அதில் ஒரு கட்டுப்பாடும் வைத்திருந்தார். தினமும் ஆறு பராத்தாக்கள் மட்டும்.
அவரது தலைமை சமையல்காரருக்கு தினமும் முப்பது சீர் (Seer) நெய், பரோட்டா சுடுவதற்காக ஒதுக்கீடு செய்யச் சொல்லி உத்தரவிட்டிருந்தார் நவாப். சீர் என்பது அப்போது புழக்கத்தில் இருந்த அளவீட்டு முறை. பிரதேசத்துக்கேற்ப இதில் மாறுபாடுகள் உண்டு. ஒரு சீர் என்பது ஒன்றே கால் கிலோ என்பது பிரிட்டிஷ் கணக்கு. நெய்யை அளப்பது என்றால் ஒரு சீர் என்பது உத்தேசமாக ஒரு படி உழக்கு என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஒரு படி என்றால் எட்டு ஆழாக்கு. ஓர் ஆழாக்கு என்பது 168 மிலி. எனில் ஒரு படி என்றால் 1.3 லி. எனில் 30 சீர் நெய்யைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
அந்தச் சமையல்காரர் ஒரு பராத்தாவைச் சுட்ட ஐந்து சீர் நெய்யைப் பயன்படுத்தினார். என்னது ஒரு பராத்தாவுக்கு அவ்வளவு நெய்யா? என்ன சமையல்காரர் ஏமாற்றுகிறாரா?
உங்களுக்கு வந்த அதே சந்தேகம், அங்கே பிரதம மந்திரியாக இருந்த மோதாமத்தௌலா அகா மிர்ருக்கும் வந்தது. ‘ஒரு நாளைக்கு முப்பது சீர் நெய் எதற்கு?’ என்று சமையல்காரரிடம் கணக்கு கேட்டார். ‘பராத்தா சுடுவதற்குத்தான்’ என்றார் சமையல்காரர். ‘எங்கே என் கண் முன்னாலேயே பராத்தா சுட்டுக் காண்பி!’ என்று கட்டளையிட்டார்.
ஐந்து சீர் நெய்யை ஊற்றி பராத்தா ஒன்றைப் பொரித்தெடுத்தார் சமையல்காரர். மீதி நெய்யைக் குப்பையில் ஊற்றினார். பிரதம மந்திரிக்குக் கோபம் வந்து விட்டது. ‘ஏன் அப்படிச் செய்தாய்?’ என்று கேட்கவும், ‘அய்யா, ஒரு முறை பராத்தாவைப் பொரித்தெடுத்துவிட்டால் அது நல்ல நெய் அல்ல. சுவை தராது’ என்றார் சமையல்காரர்.
‘நெய்யை இப்படி வீணடிக்கக்கூடாது. இனிமேல் ஒரு பராத்தாவுக்கு ஒரு சீர் நெய் மட்டுமே தர முடியும்’ என்று கட்டளையிட்டார் பிரதம மந்திரி. அதன் பிறகு சமையல்காரருக்கு ஆறு சீர் நெய் மட்டுமே வழங்கப்பட்டது. அதிலேயே சிக்கனமாக பராத்தா சுட்டு நவாபுக்குப் பரிமாறினார். அவர் முகம் சுருங்கிப் போனது. ‘பராத்தா முன்பு போல சுவையாகவே இல்லையே. ஏன்?’ என்று சமையல்காரரிடம் கேட்டார் நவாப். அந்தத் தருணத்துக்காகவே காத்திருந்த அவர், நடந்ததை எல்லாம் சொல்லிப் புலம்பினார்.
உடனே பிரதம மந்திரி விசாரணைக்கு அழைக்கப்பட்டார். ‘சமையல்காரன் உங்களை ஏமாற்றுகிறான்’ என்று அவர் புகார் வாசிக்க, வேகமாக எழுந்து வந்த நவாப், பிரதம மந்திரியை பளார் என்று அறைந்தார். ‘நீங்களெல்லாம் என் ராஜ்ஜியத்தில் எவ்வளவு கொள்ளையடிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாதா? கூடுதல் நெய்யில் என்ன கெட்டுவிடப் போகிறது? அதுவும் என் உணவிலேயே கை வைக்கிறாயா?’ – நவாப் சூடான நெய்யில் விழுந்த பராத்தாவாகப் பொரிந்து தள்ளினார்.
பிரதம மந்திரி திகைத்து நின்றார். மன்னிப்பு கேட்டார். தோப்புக்கரணம் போடுவதுபோல காதில் கைகளை வைத்து மீண்டும் மீண்டும் வருத்தம் தெரிவித்த பிறகே நவாபின் கோபம் குறைந்தது. பிறகு பிரதம மந்திரி தன் வாழ்வில் பராத்தாவைப் பற்றி நினைக்கவே இல்லை. நவாபுக்கான ஆறு பராத்தாக்கள் மீண்டும் முப்பது சீர் நெய்யில் நீந்தத் தொடங்கின.