உணவென்றால் என்ன என்பதைப் புரிந்து சாப்பிட்ட மரபில் வந்தவர்கள் நாம்! என்ன சாப்பிடுகிறோம்… எதற்காகச் சாப்பிடுகிறோம்… எவ்வளவு சாப்பிடுகிறோம்… என உணவின் பொருள் உணர்ந்து அளவறிந்து உணவை ருசித்தவர்கள் நாம்! சாப்பிட்ட உணவுகளின் மூலம் உடலுக்குக் கிடைக்கும் பலன்களை முழுமையாக அனுபவித்தவர்கள் நாம்!
ஆனால் இன்றோ உணவெனப்படுவது யாது எனும் கேள்வியை உள்ளுக்குள் சுமந்துகொண்டு, பதில் தெரியாமல் தெளிவில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறோம். உணவுகளை உணர்ந்து சாப்பிட்ட போது நோய்களின் தாக்கம் பெரிதாக நம்மை ஆட்கொள்ளவில்லை. உணவுகள் குறித்த அடிப்படை சிந்தனை இல்லாமல் சாப்பிடத் தொடங்கிய பிறகு தான் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
உணவியலுக்கும் இலக்கணம் உண்டு:
மொழிக்கு இலக்கணம் இருப்பதைப் போல, உணவியலுக்கும் இலக்கணம் இருக்கிறது. ஒரு மொழியின் இலக்கணத்தில் பிழை ஏற்பட்டால் எப்படி மொழியின் அழகு சிதைந்துவிடுமோ, அதைப் போல உணவியல் இலக்கணத்தில் பிழை ஏற்படின் ஆரோக்கியத்தின் அழகு பெருமளவில் சிதைந்துபோகும். அப்படியான சூழலுக்கு நாம் சில ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டோம் என்பது வருத்தமான செய்தி.
‘உணவே மருந்து…’ என்றிருந்த நமது பாரம்பரிய பிணைப்பில் கடும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது! மருந்து தான் இனி உணவு என்று சொல்லும் காலத்தில் வாழப் பழகிவிட்டோம். உணவுகளால் நோய்களைப் போக்கிய நாம், இன்றோ உணவுகளால் நோய்கள் ஏற்படக் கூடும் என்ற கையறு நிலையில் இருக்கிறோம். தண்ணீரை விலை கொடுத்து வாங்குவோம் என்று சென்ற தலைமுறையில் யாரும் சிந்தித்திருக்க மாட்டார்கள்! அதைப் போல உணவுகளின் மூலம் நோய்கள் ஏற்படக்கூடும் என்று சென்ற தலைமுறையினர் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்.
பல்வேறு வேளைக்கான உணவுகளைத் திட்டமிட்டு பின்பற்றி வந்த நம்மிடம், இப்போது ஒரு வேளைக்கான ஆரோக்கிய உணவுத் திட்டம் இல்லை என்பது எவ்வளவு வேதனை! அவ்வப்போது நமக்குப் பிடித்ததைப் போல டயட் முறைகள்! வசதிக்கேற்ப டயட் முறைகள்… ஆண்டுக்கு ஒரு முறை புது புது டயட் முறைகளை முயற்சித்துப் பார்க்கிறோம்! அவற்றால் பலன் கிடைத்தால் பரவாயில்லை! பல்வேறு டயட் முறைகளைப் பின்பற்றியும் உணவுத் திட்டத்தில் பலருக்கும் தெளிவில்லை.
உணவுகளைப் பொறுமையாக ரசித்து, ருசித்து, அனுபவித்து, சுவைத்துப் பழகியவர்கள் அல்லவா நாம்! ஆனால் இன்றோ அனைத்திலும் அவசரம். அவசர கதியில் உணவை ரசிப்பதற்கும், ருசிப்பதற்கும் நேரமில்லாமல் சாப்பிடுவது நமது மரபணுக்களுக்குப் புதுப் பழக்கம் அல்லவா! மரபணுக்களுக்கே பெரும் குழப்பம் உண்டாகும் வகையில் நமது உணவியல் இப்போது இருக்கிறது. உணவுகளின் மூலம் நோய்களை உருவாக்கி மரபணு அச்சில் பதியச் செய்துகொண்டிருக்கிறோம்.
நாம் செய்த உணவியல் பிழைகள்:
உணவுகள் சார்ந்த பாரம்பரியத்தை மறந்தோம்… மரபைத் தொலைத்தோம்… சிறுதானியங்களை வெறுத்தோம்… நலம் கொடுத்த பெருந்தானியங்களுக்குப் பெயிண்ட் அடித்து பாலிஷ் செய்தோம்… நம் நாட்டு பானங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டு பன்னாட்டு குளிர்பானங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தோம்… நீரில் கலப்படம்… அடிப்படை உணவுப் பொருட்களில் கலப்படம்… கீரைகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம்… பழங்களில் செயற்கை இரசாயன தாக்குதல்… என நாம் செய்த மற்றும் செய்துகொண்டிருக்கும் தவறுகளால் நோய்களின் வடிவில் விபரீதங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்! நோய்கள் சூழந்த தீவில் தனி மனிதன் சிக்குண்டதைப் போன்ற சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!
சிறுதானியங்களை அன்றாட உணவாகப் பயன்படுத்திய நாம், எப்போது… என்ன காரணத்துக்காக அவற்றின் பயன்பாட்டைத் தொலத்தோம் என்று யோசனை செய்து பார்த்திருக்கிறோமா! பல்வேறு வண்ணங்களில் நம்மிடம் புழக்கத்தில் இருந்த பாரம்பரிய அரிசி ரகங்களை எப்போது… ஏன் தவறவிட்டோம் என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டிருக்கிறோமா! நிறமிச்சத்து நிறைந்த அரிசி ரகங்களை உணவாக்கி அனுதினமும் சாப்பிட்டவர்கள் தானே நாம்! ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பளிச்சென்ற வெண்ணிற அரிசியின் பயன்பாட்டுக்கு மட்டும் நம்மை நாமே சுருக்கிக்கொண்டது ஏன்!…
நாம் மறந்த பானங்கள்:
பானங்களுக்கா நம்மிடையே பஞ்சம்! ஒவ்வொரு பெரும்பொழுதுக்கும், சிறுபொழுதுக்கும் என காலம் அறிந்து பானங்களைப் பருகியவர்கள் நாம்! உடலைத் தேற்ற… நோயிலிருந்து மீள, உடலை உற்சாகமாக்க… என ஏகப்பட்ட பானங்கள் நம்மிடம் இருந்தன! பழங்களை நொதிக்கச் செய்து தயாரிக்கப்பட்ட ‘நொதி பானம்…’ அரிசி ரகங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ‘ஊறல் பானம்…’ அஞ்சறைப் பெட்டி பொருட்களை ஈடுபடுத்தி தயாரிக்கப்பட்ட ‘மருந்து பானம்…’ என பானங்களோ எக்கச்சக்கம்!
நமது அஞ்சறைப் பெட்டி பொருட்களை வைத்தே ஐம்பது நாட்களுக்கு ஐம்பது வகையான பானங்களைத் தயாரித்து நம்மால் பருக முடியும்! சீரக நீர், கருஞ்சீரகக் கொதி நீர், அன்னாசிப் பூ தேநீர், பட்டைக் கஷாயம், குங்குமப் பூ பானம், கலவைத் தேநீர் எனப் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும்! ‘ஆராய்ச்சிகள் அஞ்சறைப் பெட்டியிலிருந்து தொடங்க வேண்டும்…’ என்று பேராசிரியர் தொ.ப அவர்களின் கருத்தையும் இங்குப் பொருத்திப் பார்க்கலாம்.
உணவு அரசியல்:
தொண்ணூறுகளின் மத்தியில் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் செய்த மாய விளம்பரங்களை நம்பி அல்லவா நமது பாரம்பரிய பானங்களின் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டோம்! பானகத்தின் சுவைக்குப் பன்னாட்டு குளிர்பானங்கள் ஈடாகுமா! தாளித்த மோர் கொடுக்கும் நலம் பயக்கும் நுண்யிரிகள் பன்னாட்டு குளிர்பானங்களால் கொடுக்க முடியுமா! இப்படி உணவு சார்ந்த அரசியலும் பெருமளவில் நம்மை ஆட்கொண்டிருக்கிறது. பன்னாட்டு அரசியல் குறித்து தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் நாம், பன்னாட்டு உணவு அரசியல் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளின் அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் விஷயங்களைப் பொறுமையாகப் படித்துப் பார்த்து, அது பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி இருக்கிறோமா! பாக்கெட் செய்யப்பட்ட அவ்வுணவுப் பொருளுக்கான ஆயுள் காலத்தை மட்டும் பார்க்கும் விழிப்புணர்வு பலருக்கும் ஏற்பட்டிருப்பது பெரும் ஆறுதல்! ஆனால் அதைத் தாண்டி அவற்றில் தெரிந்துகொள்ள வேண்டிய எக்கச்சக்கமான விஷயங்கள் இருக்கின்றன! அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் சேர்மானங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டால் பல்வேறு விஷயங்களில் தெளிவு பிறக்கும்.
ஒரு அதிர்ச்சியான தகவல் சொல்லட்டுமா!… ‘தரமிக்க உணவுப் பொருட்களை மட்டும் தான் உங்களுக்கு வழங்குகிறோம்’ என்று சொல்லும் சில உணவு நிறுவனங்கள், தரம் உயர்ந்த உணவுப் பொருளை மேலை நாடுகளிலும், தரம் குறைந்த உணவுப் பொருளை நமது நாட்டிலும் ஒரே விலையில் விற்பனை செய்துகொண்டிருக்கின்றன! ‘அடடா… இது தான் சிறந்த உணவு நிறுவனம்…’ என மெச்சிக்கொண்டு அவர்களின் உணவுப் பொருட்களை அதிகளவில் நுகர்ந்துகொண்டிருக்கிறோம் நாம்!
உணவு சார்ந்த ஆய்வுகளும் என்ன சொல்கின்றன தெரியுமா! பல நேரங்களில் கட்டுப்பாடுகளை மீறி சில சிக்கல்கள் எழத் தான் செய்யும்… நுகர்வோரான பொதுமக்கள் தான் கொஞ்சம் கூடுதல் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கின்றன! நாம் முழு விழிப்புணர்வோடு இருக்கிறோமா எனும் கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுப்பாருங்கள்.
ஒரு புறம் உணவு அரசியல் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்க, மறுபுறமோ நாம் செய்யும் உணவியல் தவறுகளால் கூடுதல் சிக்கல்களை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்கிறோம்! உணவுகளைத் தவிர்ப்பது… காலம் தவறி உணவுகளை எடுத்துக்கொள்வது… அதி உணவு… குறை உணவு… உடலுக்கு ஒவ்வாத உணவு… கொஞ்சமும் ஊட்டம் இல்லாத சக்கை உணவுகளைச் சாப்பிடுவது… என பல்வேறு உணவியல் தவறுகளையும் செய்துகொண்டிருக்கிறோம்!
பொறுமையாக அமர்ந்து சிந்திக்க வேண்டிய நேரமிது! இந்தக் கட்டுரை படித்த உங்களுக்குள் பல்வேறு கேள்விகள் எழலாம். அவறுக்கான பதிலை நீங்களே கண்டுபிடியுங்கள். உங்கள் உடலுக்கு ஏற்ற உணவுக் கணக்குகளைப் போட்டுபாருங்கள், உணவியலில் தெளிவு பிறக்கும்! உணவியல் தவறுகளிலிருந்து தப்பிக்க மாற்று வழியைக் கண்டுபிடியுங்கள்! அதாவது இங்கு மாற்று வழி என்பது நேர் வழி… பாரம்பரிய இயற்கை வழி…
உணவோடு உறவாடுங்கள்… உங்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிக்கும் உணவுகளோடு பழகுங்கள்… உடலில் நோயில்லாமல் வாழ, இன்றிலிருந்தே உணவியலில் மாற்றங்களை மேற்கொள்வேன் என்ற சிந்தனை உங்களுக்குப் பிறக்குமாயின் ஆரோக்கியம் நோக்கி முதல் அடியை எடுத்து வைத்துவிட்டீர்கள் என்று பொருள்!…
‘உணவெனப்படுவது யாது…’ அதாவது நாம் சாப்பிடும் உணவுகளின் முக்கியத்துவம் என்ன… எதற்காகச் சாப்பிடுகிறோம்… நம்மை சூழ்ந்திருக்கும் உணவு அரசியலின் தந்திரங்கள் யாவை… போன்ற விஷயங்களைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்! இல்லையெனில் மருத்துவர்களின் கையில்!…