உணவும்,வாழ்வும் அவியலும்

நீங்கள்

சமைக்கத் தெரியாதவர்களை சந்தித்தால்

பாடாதீர்கள்

பிரசங்கிக்காதீர்கள்

பதிலாக  எனது அறிவுரையைக்

கருத்தில் கொள்ளுங்கள்

அவர்களிடமிருந்து

விடை பெற்றுச் செல்லுங்கள்.

ஏனெனில் சமைக்காதவன்

அன்பினுடைய நெருப்பை

அதன் மகத்துவத்தை

எவ்விதம் அறிவான்

.            -ரூமி

உலகில் நாம் அறிந்த முதல் உணவும்,நாம் அறிந்த முதல் ருசியும் அம்மாவின் தாய்ப்பால் தான்.அதிலிருந்தே நம் உணவையும்,அதன் ருசியையும் அறிந்து பெரியனவாகி வரும் வரையிலும் அம்மாவின் சமையல் ருசியே நாம் அறிந்தவற்றுள் முதன்மையானதாக இருக்கிறது.பின்னால் திருமண உறவிற்குள் நாம் நுழையும் போது அனைத்து தாய்களும் கவலைப்படுவது, வருகிறவள் நமது பையனுக்கு எப்படி சமைத்து தருவாளோ என்கிற பயமும், தாயின் சமையல் சுவையிலிருந்து எப்படி கணவனை மீட்கப் போகிறோம் என்கிற பயத்திற்கும் ,மீட்பிற்கும் நடைபெறுகிற உள்ளூர சண்டை தான் குடும்பங்களில் வருகிற பெரிய சரவெடி.

எனது அம்மா சமையல்கலையின் பெரிய விற்பன்னர். எனக்கு எப்படி ருசித்து சாப்பிட வேண்டும் என்பது மட்டுமல்ல சமையலை ஒரு கலையாகும் வித்தையை அவளிடம் தான் பார்த்தேன். அடுப்படியில் என்னை அருகில் நிற்கவைத்து கொதித்து வரும் கொழம்பினை உள்ளங்கையில் ஊற்றுவதற்கு கையை நீட்ட சொல்வாள்.சூடு தாங்காமல் சிந்திவிடுவேன் . தன் உள்ளங்கையில் ஊற்றி அதை உறிஞ்சிக் குடிக்கையில் அவளது முகம் அடைகிற பரவசத்தை நான் எந்த திரைப்படத்திலும் பார்த்ததில்லை.

அம்மா செய்கிற உணவு வகைகளில் தனக்கு ஈடு இணையாக யாராலும் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு இடம் என்றால் நாம் அனைவரும் அறிந்த அவியல் தான். இன்றுவரை அந்த உலக கோப்பையை அம்மாவிடமிருந்து யாராலும் வீழ்த்தி வெற்றி பெற முடியவில்லை.

முதலில் அம்மா காய்கறி நறுக்குவதிலிருந்து அவளின் தொழில்நுட்பம் ஆரம்பமாகும் .நான் சமையிலின் உதவிக்கு அம்மாவுக்கு சமையற்கட்டு மைதானத்தில் பந்து எடுத்து கொடுப்பதற்கு இணையான காய் நறுக்குகிற வேலையில் உடன் நிற்பேன்.அவியலுக்கு தேவையான காய்தறிகளை முதலில் பட்டியலிடுகிறேன்.1.கத்திரிக்காய்2.அவரைக்காய்.3.முருங்கைக்காய்4.உருளைக்கிழங்கு 4.சேப்பங்கிழங்கு 5.வாழைக்காய்6.கேரட்.7.சிறுகிழங்கு. இத்தனை காய்கள் நறுக்குவது என்பது நீங்கள் நினைப்பது போல அவ்வளவு எளிதன்று.அதைக் கணிதவியலோடு எனது அம்மா தொடர்பு படுத்தி அனைத்து காய்களையும் ஒரே மாதிரியாக நீளவாக்கில் நறுக்க வேண்டும்.அளவில் சிறியதான கத்திரிக்காயினை இரண்டு பாகங்களாக நீளவாக்கில் வெட்டி பின் அதன் இரண்டு பாகங்களையும் நீளவாக்கில் வெட்டி நான்கு பாகங்களாக வெட்டி ஒவ்வொரு கத்திரிக்காயினையும் வெட்டியபின் அதே நீளத்திற்கு மற்ற உயரமான கேரட்,அவரை போன்றவற்றை காய்களை வெட்டி அருகே உள்ளே தண்ணீர் பாத்திரத்தில் போடவேண்டும். இது சற்றேறக்குறைய பல்வேறு நிறங்களுக்கு கொண்ட அரசியல் கட்சிகள் கூட்டணி என்ற பானைக்குள் இருப்பதைப்போல அனைத்துக்கும் வண்ணங்கள் கொண்ட காய்கறிகளும் ஒரே பாத்திரத்தில் வைக்கவேண்டும்.அந்தக் கூட்டணியை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் . இந்தக் காய்கறி கூட்டணியை அம்மா பார்த்துக் கொள்வார்.

உணவின் அடுத்த கட்டம் கணிதம் முடிந்து இயற்பியல் .எந்த அளவிற்கு காய்களின் அளவு உள்ளதோ அதற்கேற்றாற்போல தண்ணீரின் அளவு இருக்க வேண்டும்.தண்ணீரின் அளவு கூடினாலோ,குறைந்தாலோ,காரியம் முழுவதும் கெட்டுவிடும்.ஒன்று சரியாக வெந்திருக்காது இல்லை எனில் அதிகப்படியாக வெந்து விடும்.

இதைப் பரிட்சை அறையில் கண்காணித்துக் கொண்டிருக்கிற ஒரு ஆசிரியரைப் போல அம்மாவின் கண்கள் அடுப்பில் ஏற்றப்பட்ட பானையின் மீது இருக்கும்.

இறுதியாக முக்கியமாக அறிவு தாவரவியல் சம்பந்தப்பட்டது.பலவகைக் காய்களை ஒன்றாக வேகவைக்கும்போது சில காய்கள் விரைவில் வெந்துவிடும்.சிலகாய்கள் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். இந்த கணிதவியல்,இயற்பியல்,தாவரவியலை பள்ளியின் வாசலே அறியாத எனது அம்மாவிடம் தாவரவியலில் பட்டம் வாங்கி அத்துறையில் அதிகாரிகாரி ஆகிவிட்ட எனது மனைவி பள்ளி மாணவி போல இன்றுவரை மிரள,மிரள விழிப்பது தான் நடக்கிறது.

இப்படி அனைத்து காய்களும் சம அளவில் வெந்தபிறகு தேங்காயை ஒரு பூமாதிரி திருகி அதனுடன் சீரகம்,,வெல்லப் பூண்டு,சிறிய வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றை நன்றாக அரைத்து ,அதனுடன் சேர்த்து கலக்க வேண்டும்.இப்படி கலக்கிய பின்பு தேங்காய் எண்ணெய் அதன் ஆதிக்கம் செலுத்தாத வகையிலும், புழிப்பான சுவுக்கு சிறிது தயிரையும் சேர்க்க வேண்டும்.தயிரின் அளவிற்கு சிறிது வேதியியல் அறிவு வேண்டும்.சிறிது அதிகமானாலும் திரிந்து விடும். இப்படி தயாரான அவியலை ஒரு பாத்திரத்தின் கீழும் இலை போட்டு அதன்மீது அவியலைக் கொட்டி அதன் மீதும் இலையை மூடி சூடு குறையாத அளவிற்கு மூடி வைத்துவிட்டு வேண்டும்.இதைப் பார்க்கும் போது தம்பிரியாணி தயாரிக்கும் முறை ஞாபகம் வருவதை தவிர்க்க முடியாது.

இப்படி அறிவியலின் அனைத்து துறை அறிவோடு இருக்கும் ஒருவரால் தான் அவியல் ஒன்றை சுவையாக செய்து தரமுடியும் . அவியலுக்கேற்ற கொழம்பு என்றால் சாம்பார் தான்.அவியல் வீட்டில் மற்ற நேரங்களை விட தைப் பொங்கல் என்றாலே நினைவுகளில் எழுவது மாட்டுப்பட்டி பொங்கல் தான்.பெரும்பொங்கல் அன்று அதிகமாகவே பொங்கலும்,அவியலும் தயாரிப்பார்கள்.மீதியான பொங்கலை தண்ணீர் ஊற்றி பழைய சோறாக்கி,அதிகமான சாம்பாரையும்,அவியலையும் ஒன்றாக கலக்கி ஒரு கொதிக்க வைப்பார்கள்.அவியல் சாம்பாருடன் கெட்டியாகும் சுண்ட காய்ச்சி கூடவே நல்லெண்ணெய் ஊற்றி கிளறியபடியே இருப்பார்கள் .கிளறி வருகையில் காற்றில் பரவும் அதன் நெடியை வைத்தேஅதன் ருசியை அவதானித்து விடுவாள். அதன் பெயர் தான் தென்தமிழ்நாட்டில் மட்டுமே புழங்கும் மறுமார்த்தம்.அவியலோடு சாம்பார் கலந்து ஒரு கெட்டியான வடிவத்தில் சாம்பாரின் ருசி இறங்கிய தேவலோகத்திலிருந்து அம்மாவின் காதுகளுக்குள் ரகசியமாக சொல்லப்பட்ட வரு சமையல் உணவு தான் மறுமார்த்தம்.

மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளின் கொம்புகளுக்கு விதவிதமான வண்ணங்கள் அடித்து உறவினர்கள் அனைவரும் மாட்டு வண்டிகளில் ஊரின் ஏரிக்கரையில் ஒன்று கூடுவோம்.அனைவரின் வீட்டு சமையல் பாத்திரங்களும் ஒன்றாக வைக்கப்பட்டு அனைவரின் வீட்டு மறுமார்த்மும். இலைகளில் பரிமாறப்படும்.ஒவ்வொருவர் வீட்டு மறுமார்த்தமும் ஒரு சுவை இருக்கும்.பெரிய ஆலமரத்தடியில் பழைய தோறும் ,மறுமார்த்மும் சாப்பிட்ட வாழ்க்கை எல்லாம்இன்று பழங்கனவாய் நினைவுகளில் சஞ்சரிக்கிறது.

நான் மாற்றலாகி வேறு ஊருக்கு வந்த பின்பு மனைவியின் சமையலே கதி என்று ஆன ஒருநாள் எனது மனைவி எவ்வளவு சொல்லியும் கேட்காது அவியல் செய்கிறேன் என்றாள்.சரி விதி யாரை விட்டது என று உடனிருந்து செய்ய ஆரம்பித்தோம்.சரியாக காய்களை வேகவைக்கும் வைபவம் நடக்கும்போது எதிர் வீட்டில் கணவன்,மனைவி சண்டை சரவெடியாக வாசலில் வெடிக்க அனைவரும் வேடிக்கை பார்க்க சென்று விட்டோம்.அவியல் ஞாபகம் வந்து அவசரமாக ஓடிவந்து அடுப்பிலிருந்து இறக்கி வைத்தாள்.சாப்பிடுகையில் அனைத்தும் சரியான அளவில் வெந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.எனது மனைவி முதன்முறையாக தாவரவியல் பட்டம் பெற்ற உணர்வை அத்தோடு முடித்திருந்தால் பிரச்சனை தலை தூக்கியிருக்காது.எனது அம்மாவின் முன்னால் நிரூபிக்க வேண்டும் என்ற ஆசை.

ஆசைதான் துன்பத்திற்கெல்லாம் காரணம்.எனது அம்மா பொங்கலுக்கு நான் பணிபுரியும் ஊருக்கு வந்திருந்தார்.எனது மனைவியின் முதல் கட்டளை உங்கள் அம்மா சமையல் கட்டு பக்கம் வரக்கூடாது.அவர்கள் பேரக்குழத்தைகளோடு பொழுதை போக்கினார்கள்.அவியல் தயாராகி சாப்பிடும் நேரம் .அவியலை எடுத்து வாயில் போட்டவுடன் எனது முகம் நாற்புறமும் கோணியதை எனது அம்மாவும் கூடவே இல்லாளும் பார்த்துவிட்டார்கள்.இருவருக்கும் புரிந்து விட ருசியின் ஏமாற்றத்தினை உணர்ந்த எனது நாக்கு என்னை அறியாமல் இல்லை அன்றைக்கு எதிர் வீட்டில் சரவெடி வெடித்ததைப் போல இன்றும் வெடித்திருந்தால் சரியாக வெந்திருக்கும் என்றபோது அன்று சரவெடி எனது இல்லத்திற்குள் வெடிக்க எனது மனைவி தீப்பெட்டி தேடிக் கொண்டிருந்தாள்.

0

வயதுக்கு வந்தோருக்கான உளுந்தப் பருப்பு சோறு

———————————————————————————-

வயது வந்தோருக்கான திரைப்படம்,புத்தகங்கள் என பலவற்றைப் பார்த்திருப்போம் இல்லை கேள்விப் பட்டிருப்போம்.இது என்ன வயது வந்தோருக்கான ஒரு சோறு.

எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் அம்மாவின் நினைவுகளுக்குள்ளிலுருந்து தான் தொடங்குகிறது. எங்களது வீட்டைக் கடந்து செல்லும் எனது பதின்வயதை ஒத்த எந்த ஒரு யுவதி சென்றாலும் எனது கண் முதலில் பார்ப்பதை விட எனது அம்மாவின் ஓசை முதலில் தொட்டுவிடும்.ஏம்மா எப்போ பெரிய மனுஷி ஆகப் போற,சீக்கிரம் இந்த அத்தை உளுந்தம் பருப்பு சோறு பொங்கவேண்டாமா என்பதும்,உனது சோற்றுக்காக நான் பெரிய மனுஷி ஆகனுமா என்று அந்தப் பெண் பிள்ளைகள் நாணுவதும் இயல்பான ஒன்று.

வழக்கமாக பொங்கும் புழுங்கல் அரிசியுடன் உடைக்கப்பட்ட தோல் உளுந்தப்பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.எடுக்கும் அரிசியின் அளவில் 1/3 அளவிற்கு தோல் உளுந்தப் பருப்பை எடுத்து ஒன்றாக கலந்து பொங்க வைக்க வேண்டும்.தண்ணீரின் அளவிற்கு ஏற்றாற்போல் சோறு கெட்டியாகவோ, உதிரியாகவோ வரும்.இந்த உளுந்தம் பருப்பு சோறு பார்ப்பதற்கு அரிசியோடு தோல் உளுந்து கறு நிற வண்ணத்தில் நாம் வீட்டிலே தரையில் பதிக்கும் டைல்ஸ் போல காட்சியளிக்கும்.

பருப்பு சோறு தயாராகிவிட்டது.இதனுடன் நாம் கலந்து உண்பதற்கு எள்ளுத் துவையல் தயார் செய்ய வேண்டும்.கருப்பு எள்ளாக இருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.கருப்பு உளுந்து,சிறிது புளி,தேங்காய் துண்டு கலந்து அம்மியில் வைத்து அரைத்து துவையல் தயாரிக்க வேண்டும். இளைச்சவனுக்கு எள்ளு,கொளுத்தவனுக்கு கொள்ளு என உணவு. சார்ந்த பழமொழியே நமது பண்பாட்டில்உள்ளது.வயது வந்த பெண்களுக்கு சரீரத்தில் சத்தை உண்டாக்குவதற்காகத்தான் உளுந்தம்,எள்ளும்.

துவையலோடு முடிந்துவிடவில்லை.இதனோடு சேர்ந்து உண்பதற்கு வாழைக்காய் பொறியல் தயாரிக்க வேண்டும்.வாழைக்காய் பொறியல் என்றால் வட்ட வட்டமாக நறுக்குவது அல்ல. பதினைந்தாவது நாள் நிலவு போல அரை வட்டவடிவத்தில் இருக்க வேண்டும்.அதனோடு தேங்காயை துருவி சேர்த்து தாளிக்க வேண்டும் .

பொறியல் தயாரானதோடு முடிந்துவிடவில்லை.மிக சாதரணமான ஆனால் மிக கடினமான ஒன்றை தயாரிக்க வேண்டும்.நாம் அனைவரும் உட்கொள்ளும் அப்பளம்தான்.ஆனால் தயார் செய்யும்முறை வேறு.அப்பளத்தை வழக்கமாக பொறிப்போம்.ஆனால் உளுந்தப்பருப்பு சோற்றிற்கு அப்பளத்தை நெருப்பில் லேசாக வாட்டி எடுக்க வேண்டும்.சுட்ட அப்பளம் தான் இந்த சோற்றிற்கு இனிது.

சுட்ட அப்பளத்தோடு முடிந்துவிடவில்லை அடுத்து வடகம்.இது தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் காணப்படுவது தாளிப்பதற்கான வடகம் அல்ல.இதுவேற. இதை ஒரு வருடத்திற்கு தேவையான அளவிற்கு தயாரித்து சேமித்து வைப்பார்கள். சித்திரை மாதக் கொளுத்தும் வெயிலில் எங்கள் ஊர்ப் பெண்களுக்கு மொட்டை மாடியில் இதுதான் வேலை.சாம்பார்வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்டி எந்த அளவிற்கு வெங்காயம் உள்ளதோ அதில் நான்கில் ஒருபங்கு வெள்ளை உளுந்து எடுத்து,ஊற வைத்து அரைத்து நறுக்கப்பட்ட வெங்காயத்தோடு கலக்க வேண்டும். இதனுடன் கடுகு,சீரகம்,வெந்தயம்போன்றவற்றை அதேநான்கு பங்கு அளவில் பச்சையாக அரைத்து உருண்டையாக உருட்டி வெயிலில் காயவைத்து ஒரு வருடத்திற்கு எந்தவகையிலும் கெட்டுப்போகாத ஒரு உணவும் பொருள் தான் தென்தமிழ் நாடு என்று கூட சொல்லிவிட முடியாது திருநெல்வேலி மாவட்ட்த்தில் மட்டுமே அறிமுகமான ஒன்று.இதைப் பொறித்து இதையும் உளுந்தப் பருப்பு சோறுவுக்கு துணை உணவு.இப்போது அனைத்தையும் இலையில் பரிமாறலாமா.முதலில்உளுந்தப் பருப்பு சோறு,அதன் மேல் எள்ளுத் துவையல்,இலையின் மறுபக்கம் வாழைக்காய் பொறியல்,சுட்ட அப்பளம்,பொறித்த வடகம் எள்ளுத்துவையல் வைக்கப்பட்ட சோற்றின்மீது சிறிது நல்லெண்ணெய்,சிறிது தேங்காய்ப் பூ வினைத் தூவி அதன்பின் தான் கலந்து சாப்பிடவேண்டும்.இப்படி ஏழு நாளைக்கு தாய்மாமன் வீட்டிலிருந்துவந்து பூப்பெய்த பெண்ணிற்கு உளுந்தப் பருப்பு சோறு செய்துவரும் பண்பாடு திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றும் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version