நச்சுக்களாகிக் கொண்டிருக்கிறதாநம் உணவு பழக்கங்கள்??

மனிதன் உயிர் வாழ்வதற்கு அதி முக்கிய காரணங்களாக சொல்லப்படுவது காற்றும் உணவும். நீர் என்பது உணவுக்குள் சேர்த்தி என்பதால் அதை தனியாக குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். பிராணவாயுவை உள்ளிழுத்து கரியமிலவாயுவை வெளியேற்றும் நுரையீரல்களின் பணி ,அத்தியாவசியமானது தான் என்றாலும்  அவைகள் தடையின்றி இயங்குவதற்கு இரத்தத்தில் போய் சேரும் ஊட்டச்சத்துக்கள் தேவையானதாக இருக்கிறது. அந்த ஊட்டச்சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவின் மூலமே நமக்கு கிடைக்கிறது. ஆக அனைத்தையும் விட முக்கிய தேவையாக இருப்பது உணவும் ஊட்டச்சத்தும். 

உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்த நம் முன்னோர்கள் ” உணவே மருந்து”  என்று உணவை மருந்தாக பாவித்து பழமொழிகள் உருவாக்கியிருக்கிறார்கள். உணவை மட்டுமல்லாமல் உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் “நொறுங்க தின்றால் நூறு வயது” என பழமொழிகள் வகுத்திருக்கிறார்கள். நம் முன்னோர்களின் இந்த கோட்பாடு வெறும் பழமொழி அல்ல. உதாரணமாக, தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் நீரிழிவு மற்றும் இருதய நோய்களை தடுக்கும் “குறைந்த கிளைசமிக் இன்டெக்ஸ்” ( Low Glycemic Index) கொண்டவை. இன்று இவை “சூப்பர் ஃபுட்ஸ்” என்று உலகம் பாராட்டும் போது, நாம் ஏன் இவற்றை மறக்க வேண்டும்?  அய்யன் திருவள்ளுவரும்

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 

அற்றது போற்றி உணின்”

என்னும் குறளில் உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை என உணவு குறித்து குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பாரம்பரியத்தில் பிறந்து வளர்ந்திருக்கும் நாம், இன்றைக்கு உணவு விஷயத்தில் எப்படி இருக்கிறோம்?? எந்தெந்த உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும்?? நம் வாழ்க்கை முறையில் உணவு ரீதியாக என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும்?? என்பது குறித்தான  பார்வையே இந்த கட்டுரை.

உணவு குறித்து செல்வதற்கு முன்பு, நோய்கள் குறித்தும் அதன் தாக்கங்கள் குறித்தும் பார்க்கலாம். 90களில் இறப்பிற்கான காரணங்களில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்த  வயிற்றுப்போக்கும், நுரையீரல் தொற்றும் இன்று பின்னுக்கு சென்று விட்டன. இன்றைய காலகட்டத்தில் முதலிரண்டு இடங்களை இதய நோய்களும் சர்க்கரை வியாதியும் அதற்கடுத்த இடத்தில் மன அழுத்தமும் பிடித்திருக்கின்றன. குறிப்பாக இந்த மாற்றங்கள் நம் தமிழ் சமுதாயத்தில் மட்டுமே.  இந்திய திருநாட்டின் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது கடந்த 40-50 வருடங்களில் தமிழ்நாடு பொருளாதார ரீதியில் நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கிறது. 1960 களில் வறுமை கோட்டுக்கு கீழ் கிட்டத்தட்ட பீகார் மாநிலத்தோடு இணைந்திருந்த தமிழ்நாடு இன்று 15 சதவீதம் மட்டுமே வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களை கொண்டிருக்கிறது. 

இந்த அபரிமிதமான வளர்ச்சி மருத்துவ துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. தொற்று நோய் மரணங்கள் குறைந்து போய், வாழ்வியல் மாற்றம் காரணமாக வரும் தொற்றாத நோய்களான ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி, மன அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் முதலிடத்தை பிடித்திருக்கின்றன. இதன் காரணமாகவே முப்பது நாற்பது வயதுக்குள்ளாகவே இள வயது மரணங்கள் கூடிக்கொண்டே போகின்றன. 90களில் இரண்டு மூன்று சதவீதத்திற்கும் குறைவாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மட்டும் இப்போது 40 முதல் 50 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது என்கின்றன புள்ளி விவரங்கள். 

வாழ்வியல் மாற்றம் என்று பொதுவாக சொன்னாலும், உணவு, தூக்கம்,  மன அழுத்தம் ஆகிய மூன்றின் மாற்றமே  இதன் மைய காரணங்கள் எனலாம்.  தூங்க வேண்டிய இரவில் கண்விழித்து வேலை பார்ப்பவர்கள், வேலையே இல்லாவிட்டாலும் இரவெல்லாம் அலைபேசிக்கு அடிமையாய் இருப்பவர்கள், 

வயிற்றின் தேவைக்காக சாப்பிடாமல் சுவை நரம்புகளின் பேராசைகளுக்காக மிட் நைட் பிரியாணி உள்ளிட்ட கலாச்சார மாற்றங்களுக்கு தங்களை பறி கொடுத்தவர்கள், உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்காதவர்கள் என பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். துரதிர்ஷ்டவசமாக இந்த பட்டியலில் ஏதாவது ஒன்றில் நாமும் இருப்போம் என்பது  நிதர்சனம். 

வாழ்க்கை முறையின் முக்கிய மாற்றத்திற்கு காரணம் நம் உணவுமுறை மாற்றம் தான்.  உடற்பயிற்சி, மன அழுத்தம் உள்ளிட்டவற்றிற்கு தீர்வுகள் இருக்கின்றன அல்லது தனிமனிதன் நினைத்தால் அதற்கான தீர்வுகளை நோக்கி செல்ல முடியும். ஆனால் உணவு அப்படியல்ல.  நமக்கு அறியாமலேயே நம் கிராமத்து சமையலறைகளில் கூட நூடுல்ஸ் உள்ளிட்ட  பதப்படுத்தப்பட்ட உணவுகளும், கடைகளில் வாங்கப்படும் சிக்கன் ரைஸ் போன்ற உணவுகளும் வெகு சாதாரணமாக நுழைந்திருக்கின்றன. அப்படி அவை நுழைவதற்கு காரணமாக இருக்கும் காரணிகளை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்று. 

பன்னாட்டு குளிர்பானங்கள் மெல்ல மெல்ல 90களில் தொலைக்காட்சி பெட்டிகளின் வழியே நம் வீட்டு வரவேற்பறைகளுக்குள் சத்தமின்றி நுழைந்தன. அன்றைய காலகட்டங்களில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் அவர்களே முக்கிய ஸ்பான்சர்களாக இருந்தார்கள். பிரபலமான நடிகர்களும் அதன் விளம்பரங்களில் தோன்றி நடித்தார்கள். இந்த இரண்டு காரணங்கள் போதாதா?? இளம் தலைமுறையினரிடம் எளிதாக போய் சேர…

அடுத்ததாக உலகமயமாக்கலுக்கு பிறகு  நூடுல்ஸ், பாஸ்தா, சிப்ஸ், குர்குர்ரே உள்ளிட்ட உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகள் பாரம்பரியமான கடலை மிட்டாய், வேர்க்கடலை, பொரி, வாழைப்பழம் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகளை விரட்டி அடித்து பெட்டிக் கடைகளில்  கவர்ச்சிகரமான நெகிழிப் பைகளில் குறைந்த விலைக்கு தொங்கவிடப்பட்டிருந்தன. தொங்கவிடப்பட்டது நம் ஆரோக்கியம் தான் என்பது அன்றைய காலகட்டத்தில் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் பிடிபடவே இல்லை. 

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் 2023 ஆய்வு ஒன்று, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மனச்சோர்வு மற்றும் கவலைகளை 35% அதிகரிக்கிறது என கூறுகிறது. தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினரிடையே தற்கொலை விகிதம் உயர்வதற்கு இந்த வகை உணவுகளின் அதிகப்படியான நுகர்வு ஒரு மறைமுக காரணமாக இருக்கலாம். இதற்கு மாறாக, வாழைப்பழம், தேங்காய், பாதாம் போன்றவை செரோடோனின் அளவை அதிகரிக்கும் “மனதை மகிழ்விக்கும் உணவுகள்”.

நம் மனித நாக்கின் சுவை நரம்புகளுக்கு வீடுகளில் கிடைக்காத சுவை உணவகங்களில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. எப்போதோ ஒரு முறை ஹோட்டலுக்கு சென்ற தலைமுறையினர், பொருளாதாரத்தில் முன்னேற்றம் வந்ததும் வாரத்திற்கு இரண்டு முறை மூன்று முறை செல்ல ஆரம்பித்தார்கள். சைவம் அசைவம் பாகுபாடின்றி அனுமதிக்கப்படாத நிறமிகளை சேர்ப்பது, அதுவரை அறியாத சுவையை சுவைக்க வைப்பதற்காக சில உப்புக்களை கலப்பது உள்ளிட்ட விந்தைகளை செய்து அடிமையாக்கி கொண்டன உணவகங்கள். கூடுதல் சுவைக்கும் நிறத்திற்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வியாபார யுத்தி நம் ஆரோக்கியத்தை காவு வாங்க தொடங்கியது.

இது ஒரு புறம் இருக்க விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு இந்த காலகட்டத்தில் தான் அதிகரிக்க தொடங்கியது. மரபணு மாற்றம், அதிக மகசூலுக்கு ஏற்ற நெல் உள்ளிட்ட பயிர் வகைகள், காய்கறிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் ( உதாரணத்திற்கு சொல்வது என்றால் சீக்கிரம் கெட்டுப் போகாத தடிப்பான ஹைபிரிட் தக்காளி), நிலத்தடி நீரில் கலந்த தொழிற்சாலை உள்ளிட்டவற்றின் கழிவுகள் என பல காரணங்கள் ஒன்று சேர்ந்து கண்ணுக்கு தெரியாமல் பூதாகரமாக வளர்ந்து நம் உடல்களுக்குள் நுழைய ஆரம்பித்தன.

இப்படிப்பட்ட பல மாற்றங்களின் விளைவாகவே தொற்றா நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தொற்றா நோய்கள் இருக்கட்டும், சமீப காலங்களில்  புற்றுநோயின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்திருக்கிறது. 70களில் திரைப்படங்களில் மட்டுமே அறிமுகமாகி இருந்த புற்றுநோய் இன்று நம் சொந்தத்தில் யாரோ ஒருவராவது பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்ற அளவுக்கு அதிகரித்து இருப்பதற்கும் காரணம் உணவுமுறை மாற்றம் தான். 

காரணங்களை அடுக்கியாகிவிட்டது இப்போது எப்படி இதிலிருந்து நாம்  மீண்டெழுவது??  கொரோனா உள்ளிட்ட எத்தனையோ சவால்களை சந்தித்த மனித இனத்திற்கு இது ஒன்றும் முடியாத காரியம் அல்ல. மாற்றங்களை உண்டாக்கியே ஆக வேண்டும் என்ற உறுதியிருந்தால் நம்மால் அதை சாத்தியப்படுத்த முடியும். சிறு விதையில் இருந்து தானே ஒரு காடு உருவாகிறது. விதையை நாம் விதைக்க தொடங்குவோம். நம் அடுத்தடுத்த சந்ததியினர் நாம் உருவாக்கும் காடுகளில்  வாசம் புரியட்டும்.

சமீப காலங்களில் உணவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது என்பது உண்மைதான். பேலியோ டயட் எனப்படும் ஆதிமனிதன் உட்கொண்ட உணவு முறை, intermittent fasting எனப்படும் பல நேர அளவுகளில் கடைபிடிக்கப்படும் விரத உணவு முறை, வழக்கமான உணவு முறைகளில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகள், அதிகளவு நார்ச்சத்து மற்றும் புரதங்கள் எடுத்துக் கொள்ளுதல் என வழக்கமான உணவுகளில் ஏற்பட்டுள்ள controlled & balanced Diet உணவு முறை என்று பலவகைகளில்  நல் மாற்றங்கள் ஏற்பட தொடங்கி  இருக்கிறது. குறிப்பாக ஆரோக்கியம் மீது  அதிக அக்கறை உள்ளவர்களும், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் மத்தியிலும் இது 

அதிகம் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையை பெருவாரியான மக்களிடம் போய் சேர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் ஒரு கட்டுரையாளனாகவும் இயன்முறை மருத்துவராகவும் என்னுடைய குறிக்கோள்.

இந்தக் குறிக்கோளை நோக்கிய பயணத்தின் முதல் அடியாக இந்த கட்டுரை இருக்கும் என்பது என் நம்பிக்கை.

மேலே குறிப்பிட்டுள்ள உணவு முறை மாற்றங்களை பற்றி விரிவாக அந்த துறை சார்ந்தவர்கள் விளக்குவார்கள். அல்லது துறை சார்ந்தவர்களை அணுகி அதற்கான விளக்கங்களை நாம் பெற்றுக் கொள்ளலாம்.  அதை விடுத்து ஆரோக்கியமான உணவு முறைகள் குறித்து ஒரு முன்னோட்டமாக நான் ஒரு சிலவற்றை பதிவு செய்யகடமைப்பட்டுள்ளேன். 

பழங்கால உணவு முறைகளான சிறுதானிய உணவு முறைகளை மீண்டும் நம் சமையலறைக்குள் எப்பாடுபட்டாவது கொண்டு வாருங்கள், fast food எனப்படும் துரித உணவுகளை முடிந்த அளவு குழந்தைகளுக்கு தருவதை தவிருங்கள், கார்போஹைட்ரேட் எனப்படும் சோறு இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளை குறைத்து, குறிப்பாக மதிய நேரங்களில் மூன்று முதல் நான்கு காய்கறிகள், சிறிய கோப்பையில் சோறு என பழக்கிக் கொள்ளுங்கள், அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகளை தவிர்த்து அதற்கு பதிலாக  வீட்டிலேயே செய்யப்படும் சுண்டல் உள்ளிட்ட உணவுகள், பழங்கள், உலர் பழங்கள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துங்கள், எண்ணெய் மற்றும் உப்பு பயன்பாட்டை கூடுமானவரை குறைக்க பழகுங்கள், சர்க்கரை நோய் இருந்தால் அதற்கான உணவு கட்டுப்பாட்டை கண்டிப்பாக பழக்கிக் கொள்ளுங்கள், மிக மிக முக்கியமாக இரவு உணவை இரவு 8 மணிக்குள் முடித்து விடுங்கள் – இவற்றையெல்லாம் கடைபிடித்து வந்தாலே போதும், நோய்களற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கான வேலையை நம் இல்லங்களில் இருந்து நாம் தொடங்கி விட்டோம் என பெருமையுடன் காலரை தூக்கிக் கொள்ளலாம்‌‌. அதற்கான முயற்சிகளில் ஒன்று தான்  இந்த எழுத்தும். உணவு முறைகளின் மாற்றம்  வருங்கால சமுதாயத்தின் ஏற்றம் இந்த கட்டுரையை படித்து முடித்த உடன், உங்கள் அடுத்த உணவை தேர்ந்தெடுக்கும்போது, “இது என் உடலை வளர்க்குமா? அல்லது வியாதியை வளர்க்குமா?” என்று ஒரு முறை கேளுங்கள். உங்கள் பதில் தான் தமிழ்நாட்டின் எதிர்காலம்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *