உணவெனப்படுவது நிலத்தொடு நீரேதிருவண்ணாமலை வட்டார உணவுகள்

மண்ணிலிருந்து பிறந்தோம் மண்ணை உண்டு வாழ்கிறோம் மீண்டும் மண்ணில் இணைவோம் என்பது உயிர் உருவாகி உணவை உண்டு உடல் வளர்த்து உயிர் வளர்ப்போம் என்ற உயிரின பரிணாமத்தின் அடிப்படை. உணவு என்பது வாழ்வதற்கு தேவையான ஒரு அடிப்படையான காரணியாகும். இது உடலுக்குத் தேவையான சக்தியை அளித்து, உடலின் இயக்கம் சீராக செயல்படவும் உயிர் வளமாக இருக்கவும் நல்ல ஆரோக்கியமான உணவாதாரம் தேவைப்படுகிறது. ஒரு நாட்டின் உணவு பழக்கம் என்பது மண்வளம், பருவநிலை மாற்றம், கலாச்சாரம், தொழில்கள், விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், மற்றும் இயற்கையாக கிடைக்கும் வாசனைப் பொருட்கள் ஆகியவற்றை பொறுத்து அமைகிறது. குறிப்பாக நம் தமிழக உணவுப் பழக்கம் என்பது ஐந்திணை வழி வட்டாரம், பண்பாடு, விழா, சடங்கு, வழிபாடு, விரதம் எனப் பண்பாட்டுக் கூறுகளின் சார்ந்து உள்ளது. 

கிழக்கு தொடர்ச்சி மலைகளான கல்வராயன் மற்றும் ஜவ்வாது மலை உட்பட பல்வேறு மலைகள் அடங்கியது திருவண்ணாமலை மாவட்டம். பண்டைய காலந்தொட்டு இன்றளவும் ஆன்மீகம் கலை பண்பாடு இலக்கியம் வேளாண்மை மற்றும் எளிய வாழ்வியல் முறை என்று பலவிதமான சிறப்புகளை உடையது திருவண்ணாமலை வட்டாரம். பல்லவர்கள், சோழர்கள், சம்புவரையர்கள் ஆட்சிக்காலத்தில் தொண்டை மண்டலம் , நடு நாடு என்று அழைக்கப்பட்ட பகுதிகளில் முக்கிய பங்கு பெற்ற திருவண்ணாமலை ஹொய்சாள மன்னர்களின் ஆட்சியின் போது, அவர்கள் ராஜ்யத்தின் தலைநகராக செயல்பட்டது. மேலும் இப்பகுதி சாளுவர், துளு, விஜயநகரப் பேரரசு மற்றும் கர்நாடக நவாப் அதன் பின்னர் வந்த டச்சுக்காரர்கள் ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆட்சியாளர்களால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்ததால் இங்கு பல்வேறு இன மக்கள் அவர்களின் வாழ்க்கை முறைகள் என்ற கலவையான பாரம்பரியம் இன்றும் கூட காணப்படுகிறது. பல்வேறு கலாச்சார பின்னணி கொண்ட மக்கள் வாழ்ந்தாலும் அவர்களது அன்றாட வாழ்வியல் முறையில் உணவுப்பொருட்கள் பெரும்பாலும் இங்கு உள்ள தட்பவெப்பநிலை மற்றும் மண் சார்ந்ததாகவே இருக்கிறது. ஐந்திணைகளில் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி, காடும் காடு சார்ந்த முல்லை, வயலும் வயல் சார்ந்த மருதம் மற்றும் வானம் பார்த்த பூமியாக தரிசாக மழை இல்லாத காலங்களில் பாலை போன்று இருக்கும் நால்வகையும் கலந்த அதிசய நில அமைப்பு கொண்டது திருவண்ணாமலை மாவட்டம். இங்கு அதிகமான வெப்பம் மற்றும் குளிர் இரண்டும் இருக்கும். பெரும்பாலும் நீராதாரம் மழையை நம்பியே உள்ளது . இருந்தாலும் திருவண்ணாமலை மாவட்டம் அரிசி உற்பத்தியில் முன்னனியில் உள்ள மாவட்டமாகும். பல்வேறு வகையான பாரம்பரிய அரிசி வகைகள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உருவாகும் அரிசி முதல்தரமான ரகம் என்பதால் மாநிலத்தின் பிற பகுதிக்கும் பிற மாநிலங்களுக்கும் வெளி நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த மக்கள் தொகையில் சுமார் 56 சதவீதம் விவசாயத்தை சார்ந்துள்ளனர்.

திருவண்ணாமலை வட்டாரத்தில் நெற்பயிர் தவிர்த்து கரும்பு, எள் , உளுந்து, மல்லாட்டை எனும் நிலக்கடலை, கேழ்வரகு ,பச்சை பயறு, சோளம், கம்பு, வாழை போன்ற நன்செய் மற்றும் புன்செய் பயிர்கள் அதிக அளவில் பயிரிட படுகிறது. இவை தவிர முருங்கை, புளி, மா, தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை, மரவள்ளி கிழங்கு , வெற்றிலை, அவரை, சுரை, புடலை, பாகல், பீர்க்கன் , தர்பூசணி, முலாம்பழம், பலவிதமான கீரைகள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.

படவேடு பகுதியில் அதிக அளவு வாழை பயிரிடப்படுகிறது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜவ்வாது மலையில் திணை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள், மூங்கில் அரிசி,ஐவனம் ,மலை நெல்லி, பல்வேறு வகையான கிழங்குகள் மற்றும் மிளகு உள்ளிட்ட மூலிகைகள், மா, பலா, சீத்தாப்பழம் , கொய்யா, விளாம்பழம் போன்ற பழ வகைகளும் பயிரிடப்படுகின்றன. 

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே – புறநானூறு,

மிக எளிமையான வாழ்வியல் சார்ந்த திருவண்ணாமலை வட்டார உணவு பழக்கம் என்பது பெரிதாக கவனிக்க படாத ஒன்றாகவே உள்ளது.திருவண்ணாமலையின் சமூக மற்றும் கலாச்சார கட்டமைப்பில் திருவிழாக்கள் ஒரு முக்கிய பகுதியாகும். இவை இப்பகுதியின் வளமான மரபு மற்றும் பாரம்பரியத்தின் உணவு பழக்க வழக்கத்திலும் பிரதிபலிக்கிறது. 

நில அடிப்படையில் உணவு பண்பாடு:

மருதம் நிலமான வயல் மற்றும் வயல் சார்ந்த பகுதிகளில் 

செந்நெல், கரும்பு, வெண்ணெல் அரிசி, மல்லாட்டை, மிளகாய், காய்கறிகள்,பருப்பு வகைகள், மீன், மாடு, ஆடு, கோழி, போன்ற உணவுகள் 

குறிஞ்சி நிலமான மலை மலை சார்ந்த பகுதிகளில், மலை நெல், மூங்கில் அரிசி, கிழங்கு வகைகள், மா, பலா, தேன், உடும்பு கறி, பன்றி கறி, கடமான் கறி போன்ற உணவுகள்

முல்லை நிலமான காடு மற்றும் காடு சார்ந்த பகுதிகளில் 

நெல், வரகு, தினை, சிறு தானியங்கள், காய்கறிகள், முயல், உடும்பு கறி, பன்றிக் கறி போன்ற உணவுகள் 

பாலை நிலமான வறண்ட நிலப்பகுதிகளில் சோளம், கேழ்வரகு, பருப்பு வகைகள், எள், கருவாடு, வெயிலில் வறுத்த மற்றும் பொரித்தவை, மாமிச உணவுகள், 

இவை அனைத்தும் கலந்த உணவு பண்பாடு இருந்தாலும் பெரும்பாலும் தினசரி உணவில் சைவ உணவுகள் தான் முதன்மை பெருகிறது. அதிலும் குறிப்பாக விதவிதமான கீரை உணவுகள் சிறப்பு பெறுகிறது. எங்கள் பகுதியில் உள்ள சொலவடை ஒன்று இந்த வட்டார உணவில் கீரையின் மகத்துவத்தை எடுத்துரைக்கும். பொன்னாங்கண்ணி கீரை தங்க சத்தும் இரும்புச் சத்தும் நிறைந்தது. கண் பார்வைக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. ஆனால் அதன் சுவை சற்று காட்டமாக இருக்கும். சாப்பிட மறுக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க, 

” பொன்னாங்கண்ணி கீரை கடைஞ்சா எனக்கு ஒரு வாய்னு உண்ணாமுலை அம்மனே வருவாராம்” என்பர். 

அதாவது கீரையின் பயன் எவ்வளவு முக்கியம் என்பதை ஆன்மீகத்துடன் கலந்து கற்றுக் கொடுத்தனர்.

தினசரி உணவு பழக்கம்:

பொதுவாக தினசரி உணவில் பழைய சோறு, இட்லி, தோசை, பொங்கல், உளுந்து வடை, மல்லாட்டை சட்னி, உளுந்து எள் மிளகாய் பொடி, கேழ்வரகு களி, கேழ்வரகு கஞ்சி, கூழ், கம்பங்கூழ், அரிசி சோறு, பருப்பு குழம்பு, காய்கறிகள், கீரை, மோர், ஊறுகாய் போன்றவை இடம் பெறும். சிறப்பு மற்றும் பண்டிகை தினங்களில் பருப்பு பாயசம், பருப்பு போளி, பருப்பு வடை, சர்க்கரை பொங்கல் போன்றவை அதிகம் இடம் பெறும்.  சில பகுதிகளில் சிறுதானிய உணவுகள், மாமிச உணவுகள் மற்றும் பழவகைகள் சிறப்பு உணவாக சேர்த்துக் கொள்ளப்படுகிறது. பலகார வகைகள் என்றாலும் பணியார வகைகள், சுண்டல் கேழ்வரகு சிம்லி, கொழுக்கட்டை, அதிரசம்,  முறுக்கு,போன்றவற்றுடன் பொரி கடலையும் முக்கிய உணவாகிறது.

பொரி கடலை மகத்துவம்:

திருவண்ணாமலையில் இந்த பொரி கடலை தயாரிப்பும் விற்பனையும் நிறைய இடங்களில் நடை பெறுகிறது. அதிலும் குறிப்பாக திருவூடல் வீதி மற்றும் நேரடி வீதி சந்திப்பிற்கு “கடலை கடை மூலை” என்று சிறப்பு பெயரே உண்டு. 

“நொறுங்க தின்றால் நூறு வயது” என்று பழமொழிக்கேற்ப அன்றிலிருந்து இன்றுவரை இந்த வட்டார மக்களின் சிறு தீனியாக இந்த பொரி கடலை இருக்கிறது. இதில் பொரி, உப்பு கடலை, பொட்டுக்கடலை, மல்லாட்டை, பட்டாணி அனைத்தும் மணலில் பதமாக வறுக்கப்பட்ட புரதம் நிறைந்த பசி நிறைக்கும் உணவாக இருக்கிறது. விலை மலிவாக ஆரோக்கியம் நிறைந்த இந்த பொரி கடலையை நிதானமாக மென்று நொறுங்கிய பின்னர் தான் விழுங்க முடியும். இன்றும் எங்கள் வட்டாரத்தின் மிகச்சிறந்த உணவு பண்டமாக உள்ளது.

பத்திய உணவு:

சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு எளிதாக செரிமானம் ஆகக்கூடிய தாகவும் உடலை வலுவாக்கும் பால் சோறு, பருப்பு சோறு,  ரசம் சோறு, கேழ்வரகு கஞ்சி, அரிசி கஞ்சி ,  பிள்ளை பெற்றவர்களுக்கு  செலவு ரசம், மருந்து குழம்பு  இவற்றுடன் பிஞ்சு அவரைக்காய். பிஞ்சு முருங்கை காய்  சேர்த்த பத்திய உணவுகள் பரவலாக அனைத்து மக்களாலும் செய்யப்படுகிறது 

ஆன்மீகமும் உணவும்:

சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் அம்மன் ஆலயங்களில் கூழ் வார்த்தல் திருவிழா நடைபெறும். அதில் கேழ்வரகு, கம்பு, அரிசி குருணை சேர்த்த கூழ், ஊற வைத்து இடித்து பச்சரிசி மாவில் வெல்லம் கலந்து துள்ளுமாவு, தேங்காய் சேர்த்து அரிசி கஞ்சி , புளி வெல்லம் சேர்த்து பானகம் போன்றவை அம்மனுக்கு படைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும். இவை பொதுவாக உடல் சூடு குறைக்கவும் வலிமை பெறவும் உதவும் என்று அனைவருக்கும் அறிவிக்கும் நிகழ்வாகவே பார்க்கிறேன். 

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதை விட தண்ணீர் பந்தல் மோர் பந்தல் அமைத்து வரும் கடும் வெயில் காலத்தில் மக்களுக்கு உதவினால் புண்ணியம் கிடைக்கும் அதே நேரத்தில் அனைவரும் பயன் பெறலாம் என்ற உயரிய பண்பாடு திருவண்ணாமலை வட்டாரத்தில் பல  இடங்களிலும் பார்க்கலாம்.

இதுபோன்றே அவரவர் இன மத கலாசார அடிப்படையில் மக்கள் வழங்கும் உணவு தானத்தை முறையாக செய்து வருவது கண்கூடு.

நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலையின் தீபத்திருவிழா நாளில் விரதம் இருந்து மாலையில் மலை உச்சியில் தீபம் ஏற்றி வீடுகளில் விளக்கீடு இட்ட பின் படையலிட்டு உணவு அருந்தும் பழக்கம் உண்டு. இதில் முழுக்க முழுக்க உள்ளூரில் விளைந்த காய்கறிகள் பழங்கள் மட்டுமே பயன்படுத்தி சமைக்கப்படும். சிறு குழந்தைகள் மற்றும் பசி தாங்க முடியாதவர்களுக்கும் வீட்டில் தேனும் திணை மாவும் கலந்து அல்லது அரிசியை வறுத்து பொரி மாவாக வெல்லம் சேர்த்து தின்னத் தருவர். மலை வலம் வரும் பக்தர்களுக்கும் வழி நெடுக தேனும் திணை மாவும் விற்பனைக்கு இருக்கும்.

இரவு முழுவதும் கண்விழித்து சிவனை வழிபட அன்றைய மாலை படையில் “கொட்டை கொழுக்கட்டை” என்று பயறு சுண்டல் மற்றும் கொழுக்கட்டை மில் தேவையான புரதச்சத்து மாவுச்சத்து இரும்பு மற்றும் கொழுப்பு சத்துக்கள் அனைத்தும் அடங்கி இருக்கும். 

இவ்வாறு ஒவ்வொரு பண்டிகை கால உணவுகளும் பெரும்பாலும் பாரம்பரிய உணவாக இருக்கிறது.

உணவு அரசியல்:

“தோட்டத்திலே மரக்கூட்டத்திலே – கனி யிட்டத்திலே பயிரூட்டத்திலே தேட்டத்திலே யடங்காத நிதியின் சிறப்பினிலே உயர்நாடு” 

என்று மகாகவி பாரதியார் பாடியதை திருவண்ணாமலை வட்டார மக்களின் எளிய வாழ்வியலின் பிரதிபலிப்பாக என் இளவயதில் பல்வேறு சூழல்களில் பல்வேறு மக்கள் வழியாக கேட்டு வளர்ந்த 

ஒரு குடும்பம் நல்லபடியாக வாழ்வதற்கு ஒரு பசு மாடு, ஒரு முருங்கை மரம், வாழை மரம் இருந்தாலே போதும்”

எளிமையான கருத்து ஆனால் எவ்வளவு பெரிய உணவு அரசியல் பற்றிய விழிப்புணர்வை தருகிறது. 

இவையெல்லாம் பெருக கூடியவை. தங்கள் தேவைக்கு போக மீதமுள்ளவற்றை விற்று பொருளாதாரம் மேம்படுத்த முடியும் என்ற விவசாய மேம்பாட்டின் அடிப்படை சிந்தனையை எங்கள் வட்டார உணவு மற்றும் வாழ்வியல் குறித்த முக்கிய புரிதலாக பதிவு செய்கிறேன்.

உணவே மருந்து:

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று. (திருக்குறள் – 941) 

 ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும், நோயாகும். சித்த மருத்துவ அடிப்படையில் கூறப்படும் வாதம் பித்தம் கபம் போன்றவை அதிகமானாலும் குறைந்தாலும் நோயாகும். 

அதேபோல் ஐந்திணை நிலங்களில் மருத நிலத்தின் தன்மை இந்த மூன்றையும் சமப்படுத்த கூடியது. அந்த மண்ணில் விளையும் விளைப்பொருட்கள பெரும்பாலும் உடல் நலத்தை காக்கும் விதமாக இருக்கும். அவ்வகையில் திருவண்ணாமலை வட்டார மக்களின் உணவுப் பழக்கம் இந்த மண் சார்ந்ததாகவே இருப்பதால் பொதுவான ஆரோக்கியம் இங்கு மற்ற பகுதிகளை விட கூடுதலாக உள்ளது. பெரு நோய்த்தொற்று காலத்தில் நோய் தாக்கம் குறைவாகவும் நோயிலிருந்து விரைவில் குணம் பெற்றவர்கள் அதிக அளவிலும் திருவண்ணாமலை வட்டார மக்கள் என்பதே திருவண்ணாமலை வட்டார உணவின் மக(ரு)த்துவம் ஆகும்.

சிறப்பாக கொண்டாடப்படும் மற்ற வட்டார சிறப்பு உணவுகள் பலவற்றையும் அன்றாட உணவாக கொண்டிருக்கும் எங்கள் திருவண்ணாமலை வட்டார உணவு மற்றும் மக்களின் வாழ்வியல்  ஆவணப்படுத்தப் படும்போது ஆன்மீகம் கலை இலக்கியத்தில் மட்டும் அல்லாமல் பாரம்பரிய உணவு பண்பாட்டின் சிறப்பு அனைவருக்கும் வழிகாட்டியாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *