உணவு பற்றி ஒரு சித்த மருத்துவர் எழுதுகிறார் என்ற வழக்கமான எதிர்பார்ப்புடன் இந்த இதழை படிக்க முயன்றால் சற்று ஏமாந்து தான் போவீர்கள் என்கின்ற சுய மறுப்பு பதாகையுடன் என் கருத்துக்களை முன் வைக்கிறேன். இங்கு உணவு என்பது ஆரோக்கியம் தாண்டி ஒரு பெரிய உயரடுக்கு தனத்தை கொடுப்பதாகவே பார்க்கிறேன். இங்கு உணவும் மொழியும் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியது அவசியம் தான். உணவு பற்றிய பார்வையும் புரிதலும் தான் மாற வேண்டியுள்ளது. ஆன்லைன் மருத்துவர்களும் food vloggerகளும் அதிகமாகிவிட்ட காலத்தில் உணவின் தன்மையும் உணவை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ள பொருளாதார சுரண்டல்களும் இங்கே நம்மை மீறி நடந்தேறிக்கொண்டு தான் இருக்கின்றன. நடுத்தர சாமானிய மக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துவதில் இந்த உணவு, பொருளாதார ரீதியாக ஒரு பின்னடைவை ஏற்படுத்துவதாக தோன்றுகிறது.
என்ன நீங்க வாழறதே இந்த ஒரு சான் வயித்துக்குத்தான் இப்படி பொசுக்குன்னு பொருளாதாரம் அது இதுனு பேசிட்டு இருக்கீங்க என்கிற குமுறல்கள் கேட்க தான் செய்கிறது . இந்த ஒரு சான் வயிறு தான் இங்கே பெரும் பொருளாதார உணவு சந்தையாகி இருக்கிறது. சமூக வலைத்தளங்கள் தாக்கத்தால் நிறைய உணவுகள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை..ஆனால் அவைகள் எல்லாம் elite ஆக்கப்பட்டது தான் கொடுமை.
எனக்கு விவரம் தெரிந்து என் அம்மா எங்களுக்கு சமைக்க மண்டையை பிய்த்து கொண்டதாக நினைவில் இல்லை. என் அம்மாவின் சமையல் அறையில் என்ன இருந்ததோ அது எனக்கு மன நிறைவாகவும் வயிறு நிறைவாகவும் வாழங்கப்பட்டது. சமயங்களில் பள்ளிகளின் சத்துணவும் உண்டு . எந்த உணவும் முதன்மை படுத்தப்படவில்லை.
பண்டிகை பதார்த்தங்கள் என்பது பெரும்பாலான சமையல் அறைகளில் இருந்து காணாமல் போய் விட்டன. இஸ்லாமிய குடும்பம் என்பதால் பெரும்பாலும் என் பண்டிகை காலநினைவுகள் ரம்ஜானை ஒட்டியே இருக்கும் . ரமலான் மாதம் நோன்பு,தொழுகை என்பதை தாண்டி நினைவுக்கு வருவது என் நாணி ( தாய் வழி பாட்டி) தான். ரமலான் மாதம் வந்து விட்டால் மூட்டைகளில் சுகமாக தஞ்சம் புகுந்து கொண்ட ரேஷன் கடை பச்சரிசியை ஊற வைப்பதில் இருந்து தொடங்கும் எங்கள் மிஷன். எங்க மிஷன் தலைவி எங்கள் நாணி.அவளின் முக்கியமான உப தலைவர்கள் நானும் என் அக்காவும் .ஒரு பூரிப்போடு சின்ன சின்ன வாண்டுகளுக்கு மத்தியில் கெத்தாக நானி கொடுக்கும் கொஞ்சம் கமிஷன் காசுடன் சிலிப்பிக்கொண்டு அந்த எடுபுடி வேலைகளை செய்வோம். சரி அந்த ஊற வைத்த அரிசிக்கு வருவோம். ஊறிய அரிசியை களைந்து நானி அதே ரேஷன் கடையில் சண்டை போட்டு இல்லாத தாத்தாவிற்கு சேர்த்து அவள் சேலையோடு வேட்டியும் வாங்கி பட்டு பீதாம்பரம் பொறாமை படும் அளவிற்கு பெட்டியில் பூட்டி வைத்தது இருப்பாள். எங்களுக்கு நானியின் பெட்டி திறப்பது என்பது வருடத்திற்க்கு ஒரு முறை அல்லது இரு முறை நிகழும் ஒரு அறிய நிகழ்வு. அந்த பெட்டியில் ஓரமா பட்டு துணியில் மூடி வைக்கப்பட்டுள்ள குரானை பார்ப்பது அதிலும் அறிய நிகழ்வு. அந்த திருக்குரானை பார்க்க முடியுமே தவிர அவள் அனுமதி இன்றி அவ்வளவு எளிதில் தொட்டு விட முடியாது.
அந்த பாலியஸ்டர் சேலையும் வேட்டியும் வானவில்லை போல மடிப்பின்றி தரையில் விரிக்கப்பட்டு விடும். அரிசியை அதன் மீது பரப்பி சரியாக மூன்று மணி நேரம் ஈரப்பதம் தன்னுள் ஒளித்து மேல காய்ந்தது போல் கட்ட வேண்டும். அது வரை நாங்கள் தான் அதன் body gaurds. பின் அதை அரைக்கும் மிஷின்க்கு சைக்கிள் ஒட்டி கொண்டு போய் வருவது ஒரு சிறு சன்மானத்துடன் கூடிய சாதனை. அரைத்த மாவு வந்தவுடன் எங்கள் மூத்த மாமி வந்து மேற்பார்வை பார்த்து விட்டு சரி சரி கொஞ்சம் காயா வைங்க இதோ வந்துடறேனு போகும் போது நானி தன் கடை கண்ணால் ஒரு கனல் பார்வையை வீசிட்டு, இந்தா ஷாயினு அடுப்பமூட்டி தண்ணி வை மாவு பெசஞ்சி சாய்ந்தறதுக்குள்ள பிழிஞ்சிடனும்னு கட்டளை இடும் எங்கள் ராஜமாதா. மாமியும் இந்த ரம்ஜான் நோம்புல இது வேற வேலைவாங்குதுனு முணுமுணுத்து படி இந்தா வரேன் அத்தனு போய்டுவாங்க. அப்படி ஏன் எங்க நானி இவ்ளோ அவசர படுத்துனா சேமியா பிழிய எங்க மொத்த முஸ்லீம் தெருவுக்கே ஒன்னு இல்லைனா ரெண்டு பலகை தான் இருக்கும். எல்லாரும் முறை வச்சு செஞ்சிப்பாங்க. இன்னைக்கு எங்க வீட்டு முறையா இருக்கும்.அந்த பலகை பற்றி சற்று விரிவாக பார்ப்போம் .அது அப்போது எங்களால் இயக்கக் கூடிய அதி அற்புதமான இயந்திரம்.. பலகையை விட அதில் பொருத்தர சேமியாவை சாரம் சரமா பிழியற மெஷின் தான் ஹார்ட் ஒப்பி தி மெஷின். அந்த பலகை பழைய காலத்துல பெட்டிக்கடைகளை மூட பயன்டுத்துற வரிசையா எண்கள் போட்டு வச்சி இருக்கும் சாதா மரப்பலகை, ரம்ஜான் மாதத்தில் ஸ்பெஷல் மரபலகையா மாறிடும். அந்த மரப்பலகைல சரியா நடுவுல இருக்கற மாதிரி அந்த இயந்திரத்தை மாட்டி உக்காந்துக்குவோம் அப்போ எல்லாம் வீட்ல இருக்குமே மடக்கற மாதிரி இரும்பு நாற்காலி, அத ரெண்டு பக்கமும் போட்டு பலகை நடுவுல வச்சி இரண்டு பேர் நகரமா பலகை மேல உக்காந்துக்குவோம். மாமி பிசைந்த மாவை அந்த மெஷின் ல போடா வீட்ல இருக்க எல்லாருமா மாத்தி மாத்தி பிழிய அழகா அலை அலையா நீண்ட முடிவே இல்லாத சேமியா அருவி மாதிரி கொட்டும். அப்போ அத அலேக்கா மூங்கில் கூடையை திருப்பி போட்டு அதுல வாங்கி அப்டியே போய் வெயில்ல காயப்போட்டு பார்க்கறப்போ அட அட பெரிய பெரிய காளான் மாதிரி தெரியும். அதுக்கு நடுவுல நின்னு காவல்காக்கிறப்போ ஏதோ சொர்க்கத்துல அறிய மலர்கள் நடுவே நின்று பயபக்தியுடன் பாதுகாக்கும் உண்மை சேவகனை போல் உணர்வோம். அப்படி காயவைத்து சேகரித்த சேமியாவை கோலார் தங்க வாயிலில் இருந்து சேகரித்த தங்கத்தை விட பத்திரமாக பெரிய பெரிய தகர டின்களில் மீண்டும் ராஜமதவாகிய நானியின் வசம் போய்விடும். அவ்வளவு தான். மீண்டும் அதை ரம்ஜான் நாளில் தான் கண்ணில் காட்டுவார்கள். ரம்ஜான் அன்று காலையில் குளித்து புத்தாடை உடுத்தி பார்த்த விழி பார்த்த கமல் போல் நானியின் அரை கதவை பார்த்து இருப்போம். காலை ரமலான் சிறப்புத்த்தொழுகைக்காக வீட்டில் உள்ள மாமா அப்பா எல்லாம் சீக்கிரம் கிளம்புவார்கள். நானி டின்களை உருட்டும் சத்தம் கேட்டவுடன் மூளையில் அலாரம் அடிக்க தொடங்கிவிடும். சமையல் அறை பக்கம் போகும்போது அறை முழுவதும் அரிசி மாவு வெந்த வாசம். அப்படி என்ன வாசம் வந்துவிடும் அந்த வெறும் வெந்த சேமியாவிற்கு என்று இன்று வரை தெரியவில்லை. ஆனால் அந்த வாசம் ஒரு வித சந்தோசத்தை தந்தது ஒரு வித பரவசத்தை தந்தது காத்திருப்பதற்கான பொறுமையை தந்தது.அவிந்த சேமியாவை குளிந்த தட்டில் போட்டு அது மூழ்க காய்ச்சிய பால் விட்டு வாழைப் பழ துண்டுகளை அடுக்கி பொடியாக நறுக்கிய முந்திரி திராட்சைகளை வடிவேலு சொல்வதை போல் மலைச்சாரல் போல தூவி மேல கசகசா தூவிய அந்த முழுத்தட்டை பார்க்கும் பொது பிக்ஸோகள் பிட்சை எடுக்கக் கூடும். மீதி சேமியா அவரவர் குடும்ப ஆட்களுக்கு ஏற்ப நானி பகிர்ந்து அளித்து விடுவார். அங்கே சச்சரவுகள் வந்தது இல்லை. இயல்பாக அனுசரணையும் உறவுகளுக்குள் புரிதலும் இருந்தது. உனக்கு இவ்வளவா எனக்கு இவ்வள்வு தான் என்ற பேச்சுக்கள் இருந்தது இல்லை. இந்த பண்புகள் சாதாரணமாக அடுத்த தலை முறைக்கு கடத்தப்பட்டதாகவே நினைக்கிறேன். நானி மறைந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. அவள் ஒவ்வொரு ரமலானில் எங்கள் நினைவுகளோடு கொண்டாடப்படுகிறாள்.ரமலான் இப்படி தொடங்கும் போது இருந்த பரவசம் இப்பொது என் பிள்ளைகளுக்கு இல்லை. அவர்களுக்கு இதுவும் மற்றொரு நாளே. ஒரு உணவு அரிதாக கிடைத்த காலங்களில் அது விரயம் ஆனதாக தெரியவில்லை. இன்று நமக்கு தெரிந்து நம் வீடுகளில் உணவு விரயம் என்பதுசொல்ல வேண்டியது இல்லை. அடுத்ததலைமுறைக்கு உணவின் வழியாக பண்புகளும் பொறுப்புகளும் எளிமையாக போதிக்கப்பட்டது. உணவு வயிற்றுக்கானதாக மட்டும் இருக்கவில்லை. நம் பிள்ளைகளுக்கு பெரும்பாலும் என்ன உணவு உண்கிறோம் என்பதே தெரிவதில்லை. கைபேசி திரைகள் அவர்களின் கண்களை களவாட வாயில் திணிக்கப்படுவது என்னவாக இருக்கும் என்பதே தெரிவதில்லை.இங்கே எல்லா நாளும் எல்லாமும் கிடைக்க அதன் தனி தன்மையும் அதை பற்றிய சுவாரசியமும் குறைந்துள்ளது.
குழந்தைகள் மீது அக்கறை காட்டுகிறோம் பேர்வழி என்று நாமும் சில தவறுகளை செய்து கொண்டு இருக்கிறோம். நான் என் குழந்தைக்கு சத்தானதை தான் தருகிறேன் என்ற கண்மூடி தனமான பராமரிப்பு சில சமயங்களில் அவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். என்ன பாதிப்பா? ஆம். இப்பொது சொல்வதை கேட்டால் நீங்க உண்மையான சித்த மருத்துவரா? என்று கூட தோன்றும். இங்கே சிறுதானியங்கள் என்று சொல்லப்படும் அத்தனையும் எல்லா நாளுக்கானதாக குறிப்பிட படவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
சிறுதானியங்களில் சில கரப்பான் பண்டங்கள் என சொல்வது உண்டு. அதாவது இயல்பாக வாதத்தை (இப்பொது சித்தமருத்துவர் என்று ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்) அதிகப்படுத்துவன. வாதம் அதிகரித்தால் கரப்பான் போன்ற தோல் நோய்கள் வரும் என சித்த மருத்துவம் கூறுகிறது. சோளம் கம்பு தினை கேழ்வரகு பாகற்காய் இவைகளை தோல் நோய் உள்ள குழந்தைகளுக்கு வழங்க கூடாது. இவற்றில் உள்ள சில உட்பொருட்கள் தோல் நோய்களை அதிகரிக்க கூடும். ஆனா இது தானே ஆரோக்கியமான உணவுகள் என்றால் நிச்சயமாக உண்மை தான். ஆனால் இவை தினமும் வழங்க வேண்டிய உணவுகள் இல்லை.
இங்கு சில ஆண்டுகளாக முன்னிலைப்படுத்தப்படும் சிறுதானியங்களை சுற்றி உருட்டப்படும் உருட்டுகள் சில நேரங்களில் எல்லை தாண்டி போய்க்கொண்டு இருப்பது ஜீரணிக்க முடியவில்லை. இவ்ளோ வருடம் இது இங்க தான இருந்துச்சு இப்போ எப்படி பளபளக்குற டப்பால ? அதும் பில்லியன் டாலர் காரங்க கிட்டன்னு ஒரு வித நெருடல். ஒரு பிரபலமான Health drink காரன் கையில மில்லேடாக மின்னிட்டு இருக்கு. இதனால் பிரபலமான கம்பெனியோட சத்து பானம்ன்னு எல்லாரும் தினமும் கொடுத்துட்டு வரும் போது நாம என சொன்னாலும் நம்ப மாட்டாங்க.
சில சமயங்களில் மருத்துவமனைக்கு வரும் சில அதிமேதாவி பெற்றோர்கள் நம் பொறுமையை சோதிக்கவே வருவார்கள். குழந்தைக்கு தோல் நோய்க்கான ஆலோசனையும் சிகிச்சையும் எடுத்து இருப்பார்கள். நாமும் மருந்து வழங்கி நோய்க்கான பத்தியங்களைக்கும் சொல்லி அனுப்பி இருப்பிப்போம். அவர்களும் மண்டைய மண்டைய ஆட்டிட்டு எல்லா கேள்வியும் கேட்டுட்டு போவார்கள். அடுத்த முறை வரும் போது என் குழந்தைக்கு நீங்க குடுத்த மருந்து செட்டே அகல டாக்டர் னு குமுறுவர்கள். என்னடா இது நல்ல மருந்து தான கொடுத்தோம் எங்க தவறு நடந்துச்சுனு யோசிச்சு குழந்தைக்கு என்ன சாப்பிட குடுத்தீங்கன்னு கேக்கும் போது அந்த பிரபலமான கம்பெனியோட மில்லெட் drink கொடுக்குறோம் னு சொல்லும் போது கொஞ்சம் ஆத்திரம் வந்தாலும் அடக்கத்தான் வேணும். நோயாளர் ஆச்சே. காலம் காலமா அவர்களின் நம்பிக்கையான அந்த கம்பெனியோட பொருளை பற்றி சொன்னால் நம்மை கொஞ்சம் ஏளனமா பாக்கும் பார்வை சற்று கடுப்பை ஏற்படுத்தினாலும் , எல்லாவற்றுக்கும் பிரதானம் அந்த குழந்தையின் உடல் நலம்.
இது ஒரு புறம் இருக்க , டாக்டர் நான் தினமும் என் குழந்தைக்கு மில்லெட்ஸ் தான் கொடுக்குறேன் னு சொல்லும் போது வரும் பாருங்க. அய்யா அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பது இங்கு பெற்றோர்க்கு சொல்லவேண்டி உள்ளது. உணவு என்பது இயல்பாக , எளிமையாக உடலுக்கு த புத்துணர்ச்சி தருவதாக இருக்க வேண்டும். இன்று உங்கள் குழந்தைக்கு அந்த சத்து தேவை இந்த சத்து தேவை என்ற விளம்பரங்கை பார்க்கும் போது, குழந்தைகள் உணவிற்கென்றே பிரத்தேயாக சந்தை உருவாகி , ஐயோ நம் குழந்தைகளுக்கு நாம் இதை தர முடியவில்லையே என்ற பெரும் குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கி தங்கள் சந்தை மதிப்பை பெருக்கி பல நிறுவனங்கள் குளிர்காய்கின்றன. இப்படி நம்மை அறியாமல் நம் பொருளாதாரம் சுரண்டப்படுகிறது.
ஆகவே மக்களே உணவு உண்ணப்படவேண்டுமே தவிர ஊட்டிவிடப்படக் கூடாது. நம் உணவை நம் உடல் நலத்திற்கு தகுந்தாற்போல் உண்ண வேண்டுமே தவிர சமூக ஊடகங்களில் தேடக்கூடாது. ஒரு காலத்தில் ஊட்டச்சத்து குறைவை சந்தித்த நம் தலைமுறைகள் ஆதீத ஊட்டச்சத்தால் பல்வேறு வளர்ச்சிதை மாற்ற நோய்களான நீரிழிவு போன்றவற்றின் பிடியில் சிக்கி மருந்து மாபியாக்கள் கையில் தன் பதின் பருவத்தை தொலைத்துக்கொண்டு இருக்கிறது. ஆரோக்கியமான தலைமுறைக்கு நல்ல உணவு அவசியமானது. நல்ல உணவு என்பது உடலையும் மனதையும் சந்தோச படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். உடலை வற்புறுத்தி சீரணிக்க செய்யாத எல்லா உணவும் நல்ல உணவே. எப்படியாவது நல்லதை கொடுத்துவிட துடிக்கிறோம் ஒழிய எப்படி குடுக்க வேண்டும் என்பதை தெரிந்து குடுக்க வேண்டும். குழந்தைகள் காய்கறி பழங்களை உண்ண வேண்டும் என்பதற்காக அவற்றை காயவைத்து டின்களில் அடைத்து விற்கும் ஒரு தொழில் செய்வதை கண்டு அதிர்ந்து போய்விட்டேன். ஒரு பொருளின் இயல்பை மாற்றுதல் மதிப்புக் கூட்டல் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும். இவர்களுக்கு தர கட்டுப்பாடு யார் விதிப்பது. எந்த நம்பிக்கையில் கொடுப்பது. உணவு என்பது சுவை தாண்டி உடல் ஆரோக்கியத்தை முன்னிறுத்த வேண்டும். இந்த சிறுதானிய வலையில் இருந்து வெளியில் வந்து எந்த காலத்தில் எந்த மாதிரி உணவுகளை உண்ண வேண்டும் என்பதை அறிந்து உன்ன வேண்டும்.
காலங்களுக்கு ஏற்ப உணவை தகவமைக்க சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டு உள்ளது. முன்பனி பின்பனி காலத்தில் இனிப்பு சுவை உள்ள உணவுகளையும் கார்ப்பு சுவை உள்ள உணவுகளையும் உண்ண வேண்டும். இளவேனில் முது வேனில் காலத்தில் உப்பு கைப்பு சுவையுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். மழை காலத்தில் புளிப்பு துவர்ப்பு சுவை உணவுகளை உட்டகொள்ள வேண்டும் , எல்லாக்கத்திலும் அறுசுவை உணவே சிறந்தது. ஆனால் மேற்சொன்னவாறு சுவைகளை கூட்டி குறைத்து சாப்பிட வேண்டும். அவ்வளவு தான் சூட்சுமம் சத்தான உணவினை உட்கொள்ள. உணவு நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கலந்து உள்ளது. சாதாரணமாக சுவையோடு நில்லாதது,உணவும் கலாச்சாரமும் உணவும் திருவிழாக்களும் , உணவும் பாரம்பரியமும், உணவும் மருத்துவமும் , உணவும் உடல் ஆரோக்கியமும் உணவும் கவுரவமும் என ஒவ்வொரு தருணத்திலும் நம்மோடு நம் கலாச்சாரத்தோடும் பின்னிப்பிணைந்த உணவை கார்பொரேட்களின் கையில் கொடுத்து விட வேண்டாம் என்பதே இந்த இதழ் வாயிலாக என் கோரிக்கை. ஒரு சித்த மருத்துவராக இன்னொன்றும் சொல்ல வேண்டிய தார்மீக கடமை எனக்கு உள்ளதாக நினைக்கிறன். உணவே மருந்து என்று ஒரு கூட்டம் சுத்திகொண்டு இருக்கிறது. ஆனால் உணவு நோய் வராமல் காக்குமே ஒழிய ஒரு காலும் நோய்க்கான மருந்து இல்லை. உடலை நோய் வராமல் காப்பதை ஒரு நல்ல உணவு செய்யும். அந்த வகையில் அது மருந்து என சொல்லலாம். உணவு ஐம்புலன்களுக்கானது. ஒரு உணவை காதால் கேட்டு , கண்களால் பார்த்து நாசியால் நுகர்ந்து , கைகளால் உணர்ந்து , நாவல் ருசிக்கும் போது தான் முழுமையாக உண்ட திருப்பதி கிடைக்கும். ஒவ்வொரு உணவையும் கலோரிகளால் அளவிடும் போது திருப்தி தராது. உணவை நம் உணர்வால் உண்டு உடல் ஆரோக்கியம் பெறுவோம்.