சித்த மருத்துவம் புற்று நோயை எவ்வாறு பார்க்கிறது?
புற்றுநோய் தொற்றா நோய்ப் பிரிவைச் சேர்ந்த்ததாகும். இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 100 பேர் புற்றுநோய் அறிகுறிகளுடன் உள்ளனர். 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் 14 லட்சம் புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
சித்த மருத்துவத்தில் புற்றுநோய் குறித்தும் அதை குணப்படுத்துவதற்கான மருந்துகள் பற்றியும் பல்வேறு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. சித்தர் அகத்தியரால் எழுதப்பட்ட அகத்தியர் இரணநூலில் பல நூறு வகையான புற்று நோய்கள் இருப்பதாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல சித்த மருத்துவத்தில் புற்றுநோயைக் குணப்படுத்த பல மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன.. பிற்காலத்தில் மனித குலத்துக்கு பயன்படும் என்ற தொலைநோக்கு பார்வையில் அன்றைக்கே சித்தர்கள் ஓலைச்சுவடிகளில் புற்று நோய்க்கான மருத்துவ குறிப்புகளை எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
புற்று நோய்க்கு சித்தர்களால் அருளப்பட்ட அரிய வகை மருந்துகளான ரசகெந்தி மெழுகு, இடிவல்லாதி மெழுகு, சன்டமாருத செந்தூரம், கவுரி சிந்தாமணி, சிவனார் அமிர்தம், லிங்க செந்தூரம், மகா வல்லாதி லேகியம் போன்றவை தரப்ப்படுகின்றன.. இந்த மருந்துகள் அனைத்தும் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. சித்த மருத்துவ ரகசியங்கள் அடங்கிய 1084 அரிய ஓலைச்சுவடிகள் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், புற்றுநோயைப் பொறுத்தவரை அது குணப்படுத்த முடியாத நோய் என்றே கருதப்படுகிறது. காரணம், அந்நோயின் தீவிரத்துக்கு ஏற்ப முறையான சிகிச்சை அளித்தால் மட்டுமே நோயைக் குணப்படுத்த முடியும். பெரும்பாலும் சிகிச்சைக்கு வருபவர்கள் நோய் முற்றிய நிலையிலேயே வருகின்றனர். இருந்தாலும், சித்த மருத்துவத்தில் புற்றுநோயைக் குணப்படுத்த மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. நோய் பாதிப்பு எந்த இடத்தில் வேரூன்றி இருக்கிறது என்பதை நாடிப் பரிசோதனை மூலம் அறிந்து அதற்கேற்ப மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால், அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களால் மட்டுமே புற்றுநோயைக் குணப்படுத்த முடியும். நோய் தீவிரத்துக்கு ஏற்ப மருந்துகள் மட்டும் போதுமா அல்லது துணை சிகிச்சைகள் தேவையா என்பதையும் அவர்கள் கணித்துச் சொல்வார்கள்.
ஆரம்ப நிலையில்அல்லது நோய் முதிர்ச்சி அடையாத நிலையில் புற்றுநோய்க்கு மூலிகை மருந்துகளை தாராளமாக பயன்படுத்தலாம் என்று வைத்திய ரத்தினம் ஜட்ஜ் வி.பலராமையா தனது “புற்றுநோயை வெற்றி கொள்ளும் வழிகள்” என்ற நூலில் கூறியுள்ளார். முதலில் ஒருவேளை மருந்தை உட்கொண்டபிறகு அது உடலில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து இரண்டு வேளை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் மருந்து சாப்பிடும்போது உடலில் சூடு அதிகரித்தால் பாலினை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். முதிர்ச்சி அடைந்த புற்றுநோய் கட்டிகள் அல்லது புற்றுப் புண்களை ஔஷதி (மூலிகை) மருந்துகளால் எளிதில் குணப்படுத்த இயலாது. எனவே பாஷாண உபரச வேதியியல் சித்த மருந்துகளை சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.
.புற்றுநோய்க்கு காரணிகள் குறித்து சித்தக் கோணத்தில் என்னவாக கருதப்படுகிறது?
சித்த மருத்துவத்தில் புற்றுநோய் விப்புருதி நோய் எனக் குறிப்பிடப்படுகின்றது. உடலின் பாகம், தோற்றம், பாதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு வேறு பெயர்களும் வழங்கப்படுகின்றன. உடலின் செல்களில் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பு புற்றுநோய் எனப்படுகிறது. இது மரபணு காரணமாகவோ அல்லது வாழ்க்கைமுறை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றால் ஏற்படலாம். இதில் மாறிவிட்ட வாழ்க்கைமுறையை குறிப்பிட்டு சொல்லலாம். அதாவது புகைப்பிடிப்பது, அதிகப்படியாக மது அருந்துவது, ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் உடல்பருமன் போன்றவற்றால் புற்றுநோய் பாதிக்க வாய்ப்புள்ளது. இதேபோல் செல்போன் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் மூலம் கதிர்வீச்சு வெளியாவதாலும், ரசாயனங்கள் சிலவற்றாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
புகைப்பழக்கம் மட்டுமல்லாமல் சிலர் புகையிலையை வாயில் போட்டு மெல்வதாலும் வாய்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இவை அல்லாமல் புகையிலை மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு அந்தப்பழக்கம் உள்ள மற்றவர்களால்கூட பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், மலக்குடல், குரல்வளை, கணையம் மற்றும் வாய்ப் பகுதிகளில் புற்றுநோய் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
சித்த மருத்துவர்கள்கூட புகையிலையின் பயன்பாடு, ஆரோக்கியமில்லாத உணவுமுறை, குறைவான உடலியக்கம் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவை புற்றுநோய் பாதிக்க முக்கிய காரணங்களாக இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனாலும் ஏற்கெனவே கூறியதுபோல மதுப்பழக்கம்தான் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் என்பதால் அப்பழக்கத்தைத் தவிர்த்துவிட வேண்டும். சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனாலும், ஒரேமாதிரியான உணவுப்பழக்கம் உடைய வாழ்க்கைமுறையை பின்பற்றக்கூடிய சிலரில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிக்கவும், இன்னொருவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமலிருப்பதும் நிகழ்கிறது. சிலரிடம் பேசும்போது, அவருக்கு எந்தவித கெட்ட பழக்கமும் கிடையாது; அவருக்கு எப்படி புற்றுநோய் வந்தது என்று தெரியவில்லை என்பார்கள். சில நேரங்களில் சிறிய பாதிப்புகள்கூட நோய் உண்டாகக் காரணமாகலாம்.
உதாரணமாக, போதையூட்டும் பாக்கு போடும் பழக்கம் உள்ளவரை பாதிக்காத நிலையில் வெற்றிலை போடுவதற்காக பயன்படுத்தும் பாக்கினை தொடர்ந்து பயன்படுத்தியவருக்கு புற்றுநோய் பாதித்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அதை நுகரும் அளவு, கால அளவு மற்றும் அவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைப்பொறுத்தே இந்நோய் பாதிக்கலாம். இதற்கும் மேலாக, தன்னுடல் சுகாதாரம் அவசியமாகும்.
புற்றுநோயை தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் முக்கிய உணவுகள் எவை?
புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை ஒருபுறமிருக்க அன்றாட உணவில் நாம் சிலவற்றை உட்கொள்வதன்மூலம் நோய் வராமல் தடுக்கவும், அதிலிருந்து மீளவும் முடியும் என்கிறது சித்த மருத்துவம். உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் தினமும் காலையில் காபி, டீ குடிப்பதை தவிர்த்து அதற்குப்பதிலாக முள் சீத்தா இலையை கொதிக்க வைத்து குடிக்கலாம். இல்லையென்றால் தேங்காய்ப்பால், வெண்பூசணிச்சாறு குடிக்கலாம். தேங்காய்ப்பால் செய்வதற்கு தேங்காய்த்துண்டுகள் மற்றும் ஏலக்காய், நாட்டுச் சர்க்கரை போதும். இவை மூன்றையும் மிக்சியில் அரைத்து வடிகட்டிக் குடிக்கலாம். இதேபோல் வெண்பூசணியின் சதைப்பகுதி மற்றும் ஏலக்காய், நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைத்தால் வெண்பூசணிச்சாறு தயார். இதில் குறிப்பாக தேங்காய்ப்பால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவும். மேலும் புற்றுநோயை உண்டாக்கும் உயிரணுக்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள நெல்லிக்காயில் காணப்படும் வைட்டமின் சி மரபணுவில் பிழை அல்லது பிறழ் ஏற்படாமல் தடுக்கக்கூடியது. இதேபோல் ஊதா நிறத்தில் உள்ள சில காய்கறிகள், பழங்கள் புற்றுநோயைத் தடுப்பதில் சிறப்பான பங்காற்றுகின்றன. குறிப்பாக கத்தரிக்காய், நாவல்பழம், திராட்சை, அத்திப்பழம், பீட்ரூட் போன்றவற்றில் உள்ள அபூர்வமான மருத்துவ குணம் புற்றுநோயைத் தடுக்கக்கூடியது.
கத்தரிக்காய் மற்றும் வெங்காயத்தின் மேற்பகுதியில் ஃபிளேவனாய்டு என்ற நிறமிகள் நிறைந்திருப்பதால்தான் அவை ஊதா நிறத்தில் காணப்படுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கறுப்பு நிற திராட்சை பழத்தின் விதைகளும்கூட புற்றுநோய்க்கு நல்ல மருந்தாகும். அதனால் விதைகளுடன் கூடிய கறுப்பு திராட்சையை சாப்பிடுங்கள். வழக்கமாக நம்மில் பலர் விதைகளை துப்பிவிட்டு அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை மட்டுமே சாப்பிடுவோம். ஆனால், திராட்சையின் விதைகளில் புற்றுநோயை எதிர்க்கும் தன்மை உள்ளது. குறிப்பிட்ட சில கடைகளில் திராட்சை விதைகள் தனியாக விற்கப்படுகிறது.
கோதுமைப்புல் ஜூஸ் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக புற்றுநோய்க்கு காரணமான செல்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது கோதுமைப்புல். பொதுவாக கோதுமைப்புல் சாறு கொஞ்சம் அடர்த்தியாக இருக்கும் என்பதால் அதனுடன் நீர் சேர்த்து அருந்துவது நல்லது. கோதுமைப்புல்லினை நாமே வீடுகளில் வளர்க்கலாம். நெல்லினை எப்படி விதைக்கிறோமோ அதுபோல் கோதுமையையும் விதைத்து புல் வளர்த்து பயன்படுத்தலாம். ஆனால், நேரடியாக வெயில்படும்படி வைக்காமல் நிழலில் இருந்தால் நன்றாக வளரும்.
வெள்ளைப்பூண்டு புற்றுநோயை தடுக்கக்கூடியது. குறிப்பாக குடல் மற்றும் கணையத்தை பாதிக்கும் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியது. ஆகவே, தினமும் பூண்டு சாப்பிடுவது நல்லது. ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை போன்ற பழங்கள் புற்றுநோயாளிகளுக்கு நல்லது. இதேபோல் கருங்குறுவை, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசிகளை அவ்வப்போது சமைத்துச் சாப்பிடுவதன்மூலமும் புற்றுநோயிலிருந்து மீண்டு வர முடியும். இதுபோன்று எளிய உணவுமுறைகளை சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது உணவில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். தவிர்க்கும் உணவுகள் என சித்த மருத்துவர் சொல்லும் உணவுகளை கட்டாய்மாகத் தவிர்த்துவிட வேண்டும். மருந்தின் வீரியத்தை அதிகரிக்க உதவும் உணவுகள், பக்க விளைவுகள் ஏற்பட்டால் அல்லது ஏற்படாமல் இருக்க உணவுகள் என பரிந்துரைக்கப்படும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏதேனும் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் உள்ளனவா?
வாழ்வியல் முறையும், உணவு முறையும் மாறிவிட்டதால் பல்வேறு நோய்கள் மனிதர்களை பதம்பார்க்கின்றன. நம் முன்னோர் சாப்பிட்டு வந்த எளிய உணவுகளால் அவர்களை நோய்கள் பெரிதாகப் பாதிக்கவில்லை. ஆனால், இன்றைக்கு உடலுக்கு ஊட்டமளிக்க வேண்டிய உணவுகள் விஷமாகி உயிருக்கு உலை வைக்கின்றன. அதிலும் குறிப்பாக சில உணவுகளை தவறான வழிகளில் உட்கொள்வதால் புற்றுநோய் பாதிக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருள்கள் மற்றும் இறைச்சிகளின் மூலம் புற்றுநோய் வருவது தெரியவந்துள்ளது. அதேபோல் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் வறுத்த உணவுகளை உட்கொள்வதால் புற்றுநோய் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.
கிரில், பார்பிகியூ, தந்தூரி, ஷவர்மா போன்ற உணவுகளை உட்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் பல உணவுகள் தீயில் நேரடியாக எரியூட்டப்பட்டு தயாரிக்கப்படுவதால் அவற்றை தொடர்ந்து உண்பவர்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக வெப்பநிலையில் சமைக்கப்படும் இந்த உணவுகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாம். வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ள இந்த உணவு வகைகள் சமீபகாலமாக நம்மிடையேயும் அதிகரித்துவருவதால் அவற்றின்மூலமும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம். ஆகவே, இதுபோன்ற உணவுகள் உண்பதை தவிர்ப்பது நல்லது.
நம்மில் பலர் டீக்கடைகளில் சூடா, டிகாஷன், சுகர் தூக்கலா ஒரு டீ போடுங்கன்னு சொல்வாங்க. இதேபோல் கொதிக்க கொதிக்க காபி அருந்தும் பழக்கத்தை நம்மில் பலர் கொண்டுள்ளனர். இதுபோன்று காபி, டீ மட்டுமல்லாமல் சூடான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் சிலருக்கு உணவுக்குழாய் மற்றும் வயிற்றுப்பகுதியில் புண் உண்டாக வாய்ப்பு உள்ளது. அந்தப்புண் நாளடைவில் புற்றுநோயாக மாறவும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் அதிக காரம், அதிக உப்பு நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் இரைப்பை மற்றும் குடல் தொடர்பான புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.
புகையிலையில் உள்ள நச்சுப்பொருள்கள் புற்றுநோயை உண்டாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சுருட்டு, பீடி மற்றும் சிகரெட் புகைப்பவர்களுக்கு நுரையீரலில் பாதிப்பு உண்டாகவும், தொண்டை வழியாக புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். புகையிலையால் குரல்வளையில் தொடங்கி நுரையீரல், உணவுக்குழாய், சிறுநீர்ப்பை, தொண்டை, சிறுநீரகம், வயிறு, கல்லீரல், பெருங்குடல், கணையம், மலக்குடல் மற்றும் கருப்பை போன்ற இடங்களில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மற்றபடி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை உணவுகளை தவிர்க்க வேண்டும். அதேபோல் உப்பு, எண்ணெய் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். பால் பொருள்களையும் தவிர்ப்பது நல்லது. மதுபானங்கள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் மதுபானம் அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
புற்றுநோயை குணப்படுத்த சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகள் அல்லது மருந்துகள் எவை?
புற்றுநோய்க்கு எண்ணற்ற மருந்துகள் உள்ளன. கட்டு, கழங்கு என்ற உயர் நிலை சித்த மருந்துகள் புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கிய மருந்துகள். ஆனால் இம்மருந்துகளை மிகக் கவனமாக உரிய முறைப்படி தயாரிக்க வேண்டும். ஆனால், அவற்றை சரியான மருத்துவர்களால் மட்டுமே வழங்க முடியும். நவபாஷாணம் மூலம் புற்றுநோயை குணப்படுத்துகின்றனர். நவபாஷாணம் என்பது ஒன்பதுவகையான விஷங்களாகும். இதில் நவம் என்றால் ஒன்பது; பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். ஆக, சித்தர்கள் முறைப்படி ஒன்பது விஷங்களை சேர்த்துக்கட்டுவதே நவபாஷாணம் ஆகும். அதாவது அணுக்களைப் பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்று சொல்லப்படுகிறது. இந்த நவபாஷாணத்தின் தன்மையில் நவக்கிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன. ஆக, நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வச்சிலைகள் நவக்கிரகங்களின் சக்தியை பெற்றிருக்கும் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் நவபாஷாணங்களால் உருவாக்கப்பட்ட சிலைகளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தைப் பருகுவதால் நாள்பட்ட தீராத நோய்கள் தீரும் என்று கூறப்படுகிறது. பழனி முருகன் சிலை நவ பாஷாண சிலை, அதனால் அதன் அபிஷேக நீருக்கு மருத்துவ குணம் உள்ளது. அந்தவகையில் தீராத நோய் வரிசையில் இருக்கும் புற்றுநோயும் குணமாகும். ரசகந்தி மெழுகு/லெகியம், சுருள்பட்டை சூரணம், நந்திமெழுகு, குருபதங்கம் போன்ற சித்த மருந்துகள் புற்று நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.
மற்றபடி மிகச்சாதாரணமாகக் கிடைக்கும் சில மூலிகைகளும்கூட புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. அந்தவகையில் சப்பாத்திக்கள்ளி மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு மூலிகையாகும். இது ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தியாக உதவுவதுடன் புற்றுநோயை போக்கவும், வராமல் தடுக்கவும் ஒரு மெய்க்காப்பாளன் போல செயல்படுகிறது. சப்பாத்திக்கள்ளி பழத்தில் உள்ள அஸ்கார்பிக் என்ற அமிலமானது நமது உடலில் உள்ள நல்ல செல்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜனை கொண்டு செல்லும். அதேவேளையில் புற்றுநோய் செல்களுக்கு செல்லக்கூடிய ஆக்சிஜனை தடை செய்து புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியது. மேலும் மனிதர்களுக்கு வரக்கூடிய அனைத்துவிதமான கட்டிகளையும் கரைக்கக்கூடியது சப்பாத்திக்கள்ளி.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சொடக்குத்தக்காளி பழத்தை சாப்பிடுவதன்மூலம் புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் பரவாமல் தடுத்து அதன் வீரியத்தைக் குறைக்கும். குறிப்பாக சொடக்குத்தக்காளியில் உள்ள அரிய வேதிப்பொருள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படக்கூடியது. மேலும் இது புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் பரவாமல் தடுக்கும். குப்பைமேடுகளில் மிகச்சாதாரணமாக வளரக்கூடிய சொடக்குத்தக்காளியை கிராமப்புறங்களில் உள்ளவர்கள் எடுத்துச் சாப்பிடுவது வழக்கம். இந்தப்பழத்தை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் பார்த்துக்கொள்ளலாம். குறிப்பாக பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும்.
சீத்தாப்பழம் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல் முள்சீத்தா என்றொரு பழம் இருக்கிறது. இது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம். இந்த பழத்தில் பொட்டாசியம் சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் இதிலுள்ள வேதிப்பொருள்கள் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டவை. ஆனால், ஆரோக்கியமான செல்களுக்கு எந்தவிதமான ஆபத்தையும் ஏற்படுத்தாது. ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நாள்பட்ட நோய்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கக்கூடிய தன்மையும் முள் சீத்தாபழத்துக்கு உண்டு. குறிப்பாக வயிறு, நுரையீரல், மார்பு, கணையம் போன்ற உறுப்புகளை பாதிக்கும் புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்டது முள்சீத்தாப்பழம். கிட்டத்தட்ட 12 வகையான புற்றுநோய்களைக் குணப்படுத்தக்கூடிய தன்மை உள்ளதாகவும் கூறப்படுகிறது. முள் சீத்தாப்பழம் மட்டுமல்லாமல் இதன் இலைகளை தேநீராக்கி குடித்தாலும் அதே பலன்கள் கிடைக்கும்.
புதினா புண்களை ஆற்றும் தன்மை கொண்டது என்பதால் புதினா ஜூஸ் குடிக்கலாம். டீ. காபி அருந்துவதை தவிர்த்து தேங்காய்ப்பால், வெண்பூசணிச்சாறு அருந்துவதும் புற்றுநோயிலிருந்து மீள உதவும். இவை தவிர அன்றாட உணவில் சில மாற்றங்களைச் செய்தாலே புற்றுநோயிலிருந்து மீண்டுவரலாம். இதுதவிர ஏழிலைப்பாலை, கொடிவேலி, தொட்டாற்சுருங்கி, நொச்சி, தண்ணீர்விட்டான், வில்வம், தாளிசபத்ரி, அதிமதுரம், அமுக்கரா போன்ற மூலிகைகளும்கூட புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன்.
சித்த மருத்துவ சிகிச்சைகள் முற்றிலும் பாதுகாப்பானவையா? பக்கவிளைவுகள் உள்ளனவா?
சித்தர்களின் கூற்றுப்படி நோயின் தீவிரம், கால அளவு அறிந்து அதற்கேற்ப மருத்துவம் செய்யப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் முதலில் மூலிகைகள் மற்றும் அவற்றின் வேர்களைக்கொண்டு மருந்துகள் கொடுக்கப்படும். குறிப்பாக வேர்களைக்கொண்டு செய்யப்பட்ட மருந்துகளால் நோய் குணமாகவில்லை என்றால் மூலிகையின் மற்ற பாகங்களையோ அல்லது சமூலத்தையோ (தாவரத்தின் முழுமையான பகுதி) பயன்படுத்தி மருந்துகள் கொடுக்கப்படும். இதுபோன்று ஒவ்வொரு படிநிலையாக மருந்து சாப்பிட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் மருந்துகள் சாப்பிட்டு எத்தகைய பலனும் கிடைக்காது என்பதுடன் வேறு சில பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
சித்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும்போது சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அதாவது சில மருந்துகளைச் சாப்பிடும்போது பத்தியம் பின்பற்ற வேண்டியிருக்கும். உதாரணமாக இனிப்பு விஷயத்தில் கண்டிப்பு தேவை. வழக்கமாக நாமெல்லாம் காலங்காலமாக வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தி பழக்கப்பட்டுவிட்டதால் அதைத் தவிர்க்க நிறைய யோசிக்கிறோம். அடிப்படையில் வெள்ளைச் சர்க்கரை தயாரிக்கப்படுவதன் பின்னணியில் பல்வேறுவிதமான ரசாயனப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. ஆகவே, சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்.
இதுபோன்று இன்னும் சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டியிருக்கும். ஆகவே, புற்றுநோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளும்போது எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்று மருத்துவருக்கு தெரிந்திருக்க வேண்டும். மாறாக, சாப்பிட்டால் பரவாயில்லை என்று நோயாளியின் விருப்பத்திற்கேற்ப தலையசைத்தால் மருந்தின் வீரியம் குறையவோ, வேலை செய்யாமல்போகவோ அல்லது பக்கவிளைவை ஏற்படுத்தவோ வாய்ப்பு உள்ளது.
வேறு சில சிகிச்சைகளை எடுக்கும்போது பலர் பசியை இழக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் குமட்டல், வாந்தி, சோர்வு உள்ளிட்டவை ஏற்படலாம். அதுமாதிரி நேரங்களில் சித்த மருத்துவத்தில் பாதுகாப்பான சில வழிமுறைகள் உள்ளன. குமட்டல், வாந்தி போன்றவற்றுக்கு இஞ்சி பலனளிக்கும் என்றாலும் எரிச்சல், புண் போன்றவை இருந்தால் இஞ்சி சேர்ப்பது சரியல்ல. இதேபோல் நோய் பாதிப்பைப்பொறுத்து மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் நோயாளிக்கு கொடுக்கப்படும் மருந்துகள் பாதுகாப்பற்றதாகவும், பக்கவிளைவு ஏற்படுத்தக்கூடியதாகவும் மாற வாய்ப்புள்ளது. ஆங்கில மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வரும்போதுகூட சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். இன்று ஒருங்கிணைந்த மருத்துவ முறை உருவாகி வருகின்றது பல மருத்துவ முறைகளிலும் சிறப்பாக உள்ளவற்றை எடுத்து சேர்த்து ஒருங்கிணைந்த முறையில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அவ்வகையில் புற்று நோய்க்கு ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுகின்றது
தற்போதைய உணவு பழக்க வழக்கத்தில் நாம் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாக நீங்கள் கருதுவது?
இன்றைக்கு வாழ்வியலே மாறிப்போய்விட்டது. அதிலும் குறிப்பாக உணவுப்பழக்கத்தில் நிறைய மாற்றங்களைக் காண முடிகிறது. பல வீடுகளில் அடுப்புகள் எரிவதில்லை; உணவகங்களில் விடிய விடிய உணவுகள் சமைக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக நள்ளிரவைத்தாண்டி இறைச்சி உணவுகள் சமைக்கப்பட்டு பரிமாறப்படுகின்றன. கிரில், தந்தூரி, பார்பிக்யூ போன்ற வெளிநாட்டு உணவுகள் சுடச்சுட கிடைக்கின்றன. உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கும் நள்ளிரவு வேளையில் இதுபோன்ற உணவுகளை வயிறு நிறைய உண்டால் என்னாகும்? மேலும் முகமறியாத நபர்கள் சமைக்கும் உணவுகளை ஆர்டர் செய்து வாங்கி உண்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.
பணமிருந்தால் தாயைத்தவிர எல்லாவற்றையும் வாங்க முடியும் என்பதுபோல எல்லாவிதமான உணவுகளும் வீடு தேடி வருகின்றன. அவை எத்தகைய சூழலில் தயாரிக்கப்படுகின்றன; எந்த அளவுக்கு சுகாதாரமாக சமைக்கப்படுகின்றன என்பது நமக்கெல்லாம் தெரியுமா? அதுமட்டுமல்ல அளவுக்கதிகமான இறைச்சி உணவுகளை நள்ளிரவுகளில் தொடர்ந்து உட்கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அதுமட்டுமல்ல இன்றைக்கு பெரும்பாலான உணவுகளில் மைதா நிறைந்திருக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட உணவுப்பொருள்களில் ஒன்றான மைதாவை தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோயில் தொடங்கி பக்கவாதம் மற்றும் சிலவகையான புற்றுநோய்கள் பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.
ஏற்கெனவே கூறியதுபோல இறைச்சி உணவுகளில் பெரும்பாலும் அதிக கொழுப்பு நிறைந்திருக்கிறது. ஆக, அதிக கொழுப்பு நிறைந்த, நார்ச்சத்து குறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால் குடல், நுரையீரல், புராஸ்டேட், கருப்பை போன்றவற்றில் புற்றுநோய் பாதிக்கும் அபாயம் அதிகரிக்கிறது. மக்கள் பெருக்கத்துக்கேற்ப வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் இறைச்சி உணவுகளை நீண்டநாட்கள் பதப்படுத்தி வைத்து சமைத்து தருவதால் பெருங்குடல் புற்றுநோய் பாதிக்கிறது. மேலும் இவை தவிர நாம் உண்ணக்கூடிய பெரும்பாலான உணவுப்பொருள்களில் சர்க்கரை நிறைந்திருக்கிறது. அதுமட்டுமல்ல உணவு உண்டதும் கூல்ட்ரிங்க்ஸ் அருந்தும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. அவற்றிலும் இனிப்பு நிறைந்திருக்கிறது.
நாகரிகம் என்ற பெயரில் டீக்கடைகளில் தரப்படும் பேப்பர் கப்புகளில் பூசப்பட்டிருக்கும் மெழுகு காலப்போக்கில் வயிற்றில் புற்றுநோயை உண்டாக்க வாய்ப்புள்ளது. அதேபோல், உணவு மற்றும் சட்னி, சாம்பார் மற்றும் பல துணை உணவுகள் அனைத்தும் சுடச்சுட பாலித்தீன் பாக்கெட்டுகளில் அடைத்து தரப்படுகின்றன. அவற்றின்மூலம் புற்றுநோய் பாதிக்கும் அபாயம் அதிகம் இருக்கிறது. நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதன்மூலமும் புற்றுநோய் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்றைக்கு நாம் உண்ணும் உணவுகளின் வழியாக மிக எளிதாக புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
அடுத்த தலைமுறைக்கு உணவுரீதியாகவும் தினசரி வாழ்வியல் போக்குகளை எப்படி வடிவமைக்க வேண்டும்?
அடுத்த தலைமுறை என்றில்லை, இன்றைய தலைமுறையினரும், போன தலைமுறையினரான மூத்தோரும்கூட தங்களது அன்றாட வாழ்க்கையில் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஏற்கனவே நாம் நமது பாரம்பரிய ரக அரிசிகளையும், சிறுதானியங்களையும் மறந்துவிட்டோம். இன்றைய தலைமுறைக்கு பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்களில் நிறைந்திருக்கும் சத்துகள், நோய்களிலிருந்து விடுதலை அளிக்கும் அவற்றின் மகத்துவம் குறித்தும் தெரிந்திருக்கிறது. ஆனாலும் அவற்றையெல்லாம் நாம் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம்.
உணவே மருந்து; மருந்தே உணவு என்று கூறிய காலம் மலையேறி இன்றைக்கு உணவு விஷமாகி விட்டது என்று சொல்லுமளவு ரசாயனங்களும், பூச்சி மருந்துகளும் தெளிக்கப்பட்ட உணவுகளையே உண்டு கொண்டிருக்கிறோம். அதிக விளைச்சல் பெற வேண்டும், கைநிறைய காசு பார்க்க வேண்டுமென்ற ஆசையில் சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த மனிதர்களும் நோய்களின் பிடியில் சிக்கித்தவிக்கிறார்கள். இந்நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயற்கை விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், சிலர் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைத்து அவற்றின்மூலம் மருந்து தெளிக்காத காய்கறிகளை விளைவித்து உண்டு வருகின்றனர்.
நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அவரவர் வசிக்கும் பகுதியிலோ, சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவிலோ விளைவிக்கப்படும் இயற்கை விளைபொருள்களை நேரடியாகச் சென்று வாங்கி வர வேண்டும். கூடவே, வருங்கால தலைமுறைக்கு நாம் உண்ணும் உணவு குறித்தும், அவை நஞ்சற்றவையாக இருக்க நம்மாலான உதவிகளை செய்ய வேண்டுமென்றும் எடுத்துச் சொல்ல வேண்டும். அதேபோல், உணவகங்களுக்குச் சென்று மேற்கத்திய உணவுகள் உண்பதை நிறுத்திவிட்டு நமது முன்னோர் உண்டுவந்த உணவுகளின் மகத்துவம் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். ஃபாஸ்ட்புட் எனப்படும் விரைவு உணவுகளை உண்பதால் ஏற்படும் தீமைகளை பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
அடுத்த தலைமுறை குழந்தைகளின் பள்ளிப்பருவத்திலேயே உணவை ஒழுங்குபடுத்த வேண்டும். ஸ்நாக்ஸ் என்ற பெயரில் வயிற்றுக்கு கேடு விளைவிக்கும் வறுத்த, பொரித்த மற்றும் மைதா உணவுகள் எடுத்துச் செல்வதை நிறுத்த வேண்டும். அவற்றுக்குப் பதிலாக அவரவர் வீடுகளில் தயாரித்த உணவுகளை கொடுத்தனுப்பலாம். சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் முளைகட்டிய பயறு வகைகள், கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பொரி உருண்டை, சிறுதானிய லட்டு மற்றும் நட்ஸ், உலர் பழங்கள் என ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி கொடுத்து அனுப்பலாம். அதேபோல், பழச்சாறுகள் மற்றும் எலுமிச்சை, புதினா ஜூஸ்களையும் கொடுத்தனுப்பலாம். இவை வயிற்றுக்கு எந்தவித கெடுதலையும் ஏற்படுத்தாது. அதேபோல் வீடுகளில் இருக்கும் நேரங்களில் வெந்தயக்களி, உளுந்தங்களி, பால் கொழுக்கட்டை, வாழைப்பூ வடை, இனிப்பு மற்றும் கார பணியாரம் என மாற்றி மாற்றி செய்து கொடுக்கலாம்.
உணவு தயாரிக்கும்போது அவற்றின் பலன்களையும் எடுத்துச் சொல்ல வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போது, நமது முன்னோர் உண்டு வந்த உணவுகளின் மகத்துவத்தை எடுத்துச் சொல்வதுடன் நோய் நொடியில்லாமல் அவர்கள் வாழ்ந்தது பற்றியும் சொல்ல வேண்டும். தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடப் பழக்குவது, நிதானமாக மென்று சாப்பிடச் சொல்வது என எல்லா விஷயங்களையும் குழந்தைப்பருவத்திலேயே எடுத்துச் சொன்னால் நாளைய தலைமுறை நோய் நொடியில்லாமல் வாழ்வார்கள்.
உணவே மருந்து என்ற கூற்றை நீங்கள் எப்படி அணுகுகின்றீர்கள் ?
உணவே மருந்து என்பதை நம்மில் பலர் அதையும் ஒரு மருந்தாகவே நினைக்கிறார்கள். அப்படியல்ல… நாம் அன்றாடம் உண்ணக்கூடிய உணவை ஒழுங்குபடுத்தி சாப்பிட வேண்டும். உதாரணமாக நம் முன்னோர் சாப்பிட்ட பழைய சோறு இன்றைக்கு வெளிநாடுகளில்கூட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. ஆனால், நாம் பழைய சோற்றினை மறந்துவிட்டு நூடுல்ஸ், பாஸ்தாவை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். பழைய சோற்றுக்கென சில மருத்துவ குணங்கள் உள்ளன. அதை எப்படி தயாரிக்க வேண்டும், யார் யாரெல்லாம், எந்தெந்த காலகட்டத்தில் சாப்பிடலாம் என்ற ஒரு வரைமுறை உள்ளது. பட்டை தீட்டப்பட்ட அரிசியை பழைய சோறாக்கிச் சாப்பிடுவது சரியல்ல. பாரம்பரிய அரிசிகளை பழைய சோறாக்கிச் சாப்பிட்டால்தான் அதிலுள்ள மருத்துவ குணம் நமக்குக் கிடைக்கும்.
முந்தின நாள் இரவில் அரிசிச்சோறு சமைத்து அதில் நீர் ஊற்றி வைக்கும்போது லாக்டோபாசிலஸ் என்ற பாக்டீரியா உற்பத்தியாவதுடன் நொதித்துப்போயிருக்கும். இதனால் புரோபயாடிக் உணவாக மாறுவதுதான் பழைய சோறு. ஆக, உணவே மருந்து அடிப்படையில் பழைய சோறு மருத்துவ குணம் நிறைந்திருக்கிறது. பழைய சோறு சாப்பிட்டால் உடல் சூடு குறையும். அந்த அரிசி கைக்குத்தல் பாரம்பரிய அரிசியாக இருப்பது நல்லது. நல்லது என்பதற்காக பழைய சோற்றினை எல்லா காலங்களிலும் சாப்பிடுவது சரியல்ல. மழை மற்றும் குளிர்காலங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவும் என்பதால் பழைய சோறு சாப்பிடும்போது சிலருக்கு சளி பிடிக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல, வாதக்கோளாறு உள்ளவர்களுக்கு நோயை தீவிரப்படுத்தலாம் என்பதால் பழைய சோறு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் என்ற சித்தர்கள் பாடலின்படி தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடுவது உடல்நலத்துக்கு நல்லது. ஆனால், நம்மில் பலர் இஞ்சி நல்லது, சுக்கு நல்லது, கடுக்காய் நல்லது என்று வருடக்கணக்கில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் பலர் நான் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தினமும் காலை எத்தனைவேளை டீ குடித்தாலும் அதில் தவறாமல் இஞ்சி சேர்ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதை ஆரோக்கியமான பழக்கம் என்று சொல்வதைவிட சுவைக்கு அடிமைப்பட்ட ஒரு நிலை என்றே சொல்லலாம். அதேபோல் சுக்கு மல்லி காபியை காலையில் குடிக்கும் பழக்கமும் சிலருக்கு இருக்கிறது. நேரம் தவறி சாப்பிடுவதுடன் நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வதால் மருந்தாக வேண்டிய அவை நமது ஊறுவிளைவிக்கலாம் என்பதால் கவனம் தேவை.
கத்தரிக்காயில் தொடங்கி சுரைக்காய், பூசணிக்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைப்பூ என ஒவ்வொன்றுக்கும் மருத்துவ குணம் இருக்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி சாப்பிடுவது சரியல்ல. உருளைக்கிழங்கு வாய்வுக்கோளாறை ஏற்படுத்தும் என்பதால் அதை சமைக்கும்போது கூடுதலாக பெருங்காயம், பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. அதுமட்டுமல்ல வாய்வுப்பிரச்சினை உள்ளவர்கள் அதை அளவுடன் உண்பதோ அல்லது உண்ணாமல் தவிர்ப்பதோ நல்லது. நீர்க்காய்கறிகளுக்கு மருத்துவ குணம் இருந்தாலும் சிலருக்கு வேறு வித பக்கவிளைவுகளை ஏற்படுத்தினால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
உணவு மருந்து என்றாலும் அதற்கும் ஓர் எல்லை உண்டு என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் உணவு வேறு சில உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தலாம். ஆகவே, அதன் பொருள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
உணவு சிறப்பிதழ் வழியாக மக்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது ?
உணவு சிறப்பிதழ் என்று பெயருக்கு இல்லாமல் அதன் பொருளை உணர்த்தும்விதமாக இருக்க வேண்டும். நாம் அன்றாடம் உண்ணக்கூடிய உணவு உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் நோய் தீர்க்க உதவ வேண்டும். நமது முன்னோர் அவரவர் வாழ்விடங்களில் விளையக்கூடிய இயற்கை விளைபொருள்களை உண்டு நலமுடன் இருந்தனர். மேலும் அந்த விளைபொருள்கள் அனைத்தும் இயற்கைச்சூழலில் எந்தவித ஊட்டமும் அளிக்காமல் இலைச்சருகுகள் மற்றும் பறவைகள் மற்றும் விலங்குகளின் எச்சங்களை உட்கிரகித்து வளர்ந்தன. தினமும் யாரும் நீர் ஊற்றவில்லை; மாறாக மழைநீரில் மட்டுமே உயிர்வாழ்ந்தன.
இன்றைக்கும்கூட காடுகளில் வளரக்கூடிய தாவரங்கள் அப்படித்தான் வளர்கின்றன. ஆனால், அவற்றில் சில தாவரங்கள் நீரை சேமித்துவைக்கும் தன்மையை இயல்பாகக் கொண்டுள்ளன. ஆக, முழுக்க முழுக்க இயற்கையாக வளர்ந்த தாவரங்களை உணவாக உட்கொண்டவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. பயிர் நன்றாக செழித்து வளர வேண்டும்; பெருவாரியான மக்களுக்கு கிடைக்க வேண்டும்; லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விவசாய முறைகள் மாற்றமடைந்ததால் அவை எல்லாம் நிலை மாறிப்போயின. அதன் விளைவாக நோய்கள் பெருகிவிட்டன. அதுமட்டுமல்ல முன்பெல்லாம் மக்களிடையே உடல் உழைப்பு இருந்தது. ஆண், பெண் என அனைவரும் வேட்டையாடுவது, விவசாய நிலங்களில் வேலை பார்ப்பது என்று இருந்தனர். இன்றைக்கு நிலைமை தலைகீழாகிவிட்டது.
உடலுழைப்பு குறைந்தாலும் நம்மில் பலர் நமது முன்னோர் உண்டபடி இறைச்சி உணவுகள் உண்கின்றனர். இதனால் செரிமானக்கோளாறில் தொடங்கி பல்வேறுபிரச்சினைகள் உண்டாகின்றன. ஆகவே, சூழல் அறிந்து உடல் நிலை அறிந்து அதற்கேற்ப உணவு உண்ண வேண்டும். ஒருவேளை நமக்குப்பிடித்த உணவுகளை உட்கொண்டாலும் அவை செரிமானமாவதற்கென சில மூலிகைகள் உள்ளன. மிகச்சாதாரணமாக நமது வீட்டின் அஞ்சறைப்பெட்டிகளில் உள்ள ஓமம் அரை ஸ்பூன் அளவு எடுத்து இளம்வறுப்பாக வறுத்து அதைப் பொடித்து வெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். ஒவ்வொருவேளை உணவுக்குப்பிறகும் வெற்றிலை (பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து) சாப்பிட்டால் உணவு மிக எளிதாக செரிமானமாகும்.
ஆக, நாம் அன்றாடம் உண்ணக்கூடிய உணவுகளை முறைப்படுத்தி உண்டாலே நோய்கள் வராமல் தற்காத்துக்கொள்ளலாம். காலையில் தொடங்கி இரவு வரை நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது என்பதை புரிந்துகொண்டு செயல்பட்டால் நோய்களை வெல்லலாம். ஆனால், இன்றைக்கு சுவைக்கு அடிமைப்பட்டதன்விளைவாக சுவையூட்டிகளையும், வேதிப்பொருள்களையும் சேர்த்து உண்கிறோம். அதன்விளைவு எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்குக்கூட உயிரைப்பறிக்கும் புற்றுநோய் வரை பாதிக்கிறது என்றால் எங்கே தவறு நிகழ்கிறது என்பதை சிந்திக்க வேண்டும்.
பட்டை தீட்டப்பட்டு வெள்ளை வெளேர் என்று ஜொலிக்கும் அரிசியையும், கோதுமையுடன் பல்வேறு ரசாயனங்களைச் சேர்த்து மென்மையாக்கப்பட்ட மைதாமாவையும், செறிவூட்டப்பட்ட இறைச்சிகளையும், ரசாயன கலவைகளால் உருவாக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையையும் விரும்பிச் சாப்பிடுகிறோம். குழந்தைப்பருவத்துக்கு பிறகு செரிமானமாகாத மாட்டின் பாலையும் காலை, மாலை என ஆயுள் முழுக்க அருந்திக்கொண்டிருக்கிறோம். இதன்விளைவாக பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறோம். இவை அனைத்தும் கடந்த சில ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்பதை புரிந்துகொண்டு நமது முன்னோர் வாழ்ந்துவந்த வாழ்வியலை புரிந்துகொண்டு அதன்படி செயல்பட்டால் நலமுடன் வாழலாம்.