ஜவ்வாதுமலை வாழ்வியலில் உணவு சார் பண்பாடு

இந்த உலகிலுள்ள தொல்பழங்குடிகள் காலங்காலமாகத் தங்களுக்கெனத் ஒரு தனிப் பண்பாட்டு அடையாளங்களை கொண்டுள்ளனர். ஜவ்வாதுமலை மருத நிலக்கட்டமைப்புக்கு முன்பிருந்த குறிஞ்சி, முல்லைத் தினை சார்ந்த வாழ்விலிருந்தே உணவுசார் பண்பாடு காணப்படுகிறது.

அடர்ந்த காட்டுப்பகுதியை உடைய ஜவ்வாதுமலை சிறிதும் பெரிதுமான மலைத்தொடர்களை உடையது. இம்மலை கடல் மட்டத்திலிருந்து 2315 அடி முதல் 3300 அடி வரை உயரம் கொண்டது. மலைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்குகள் 1640 அடி முதல் 2625 அடிவரை ஆழம் கொண்டதாக உள்ளது. இது புவிக்கோளத்தில் 1200 மற்றும் 12046 வரை வடக்கு அட்சரேகை 78038 இல் இருந்து 79045 கிழக்கு தீர்க்க ரேகைக்கு இடையில் அமைந்துள்ளது. இதில் கானமலை, பதிமலை, சேப்ளிமலை, நாச்சாமலை, வடபாதி மலை, தென்பாதிமலை, மேல்மலை, துரித்திமலை, கோட்டமலை, உடும்புமலை ஆகிய மலைகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

“உணாவே வல்சி உண்டி ஓதனம்

அசனம் பதமே இரை ஆகாரம்

முறையே ஊட்டம் உணவினாலாகும்”

– பிங்கல நிகண்டு. 153

மேலும், உணவைக் குறிக்கும் இலக்கியச் சொற்கள் அசனம், அடிசில், அமலை, அயினி, அன்னம், உண்டி, உணா, ஊன், ஓதனம், கூழ், சரு, சொன்றி, சோறு, துற்று, பதம், பாத்து, பாளிதம், புகா, புழுக்கல், புன்கம், பொம்மல், போனகம், மடை, மிசை, மிதவை, மூரல், வல்வி, வேவை, விசயம், வாட்டு, பிளவை ஆகியவை ஆகும்.

உணவு வகைகள் போன்று உணவு உண்ணல் வகைகள்: 1.அருந்துதல், 2.உண்ணல், 3.உறிஞ்சல், 4.குடித்தல், 5.தின்றல், 6.துய்தல், 7.நக்கல், 8.பருகல், 9.மெல்லல், 10.விழுங்கல் ஆகியன ஆகும். ஜவ்வாதுமலையில் சோறு என்றும் தின்றல் என்றும் வழங்குகின்றனர்.

பழங்குடியின மலையாளிகள் தங்கள் காட்டு நிலப்பகுதிகளில் சிறுதானியங்களை விதைக்கூடையில் இருந்து விதையை கையில் எடுத்து உடன் கையை தலைக்கு மேலே தூக்கி கடவுளுக்கு நன்றி செலுத்தி வேண்டுகின்றனர்.

‘காத்தவன் தின்றது போக

கள்வன் தின்றது போக

கண்டவன் தின்றது போக

பறவைகள் தின்றது போக

எனக்கும் கொஞ்சம் விளையனும் சாமி’

என்று வேண்டிக்கொள்கிறான். இந்த மனத்தைத்தான் தற்போதுள்ள பொதுச் சமூகம் தவற விட்டிருக்கிறது. உயர்ந்த பண்பாட்டை கொண்ட பழங்குடியை பாதுகாக்க தவறினால், இவர்கள் அழிந்தால் வனம் அழியும், வனம் அழிந்தால் நம் எதிர்கால வாழ்க்கை வளம் அழியும். நாம் விவசாயம் செய்யும்போது காக்கைக்கு கம்பிவேலி, மின்சாரவேலி எலிக்கு, வேறு எவரும் தின்னாமல் நாம் மட்டும் தின்னவேண்டும் என்ற பேராசை பிடித்தவர்களாக வாழ்கிறோம் என்கிறார் சோளகர் தொட்டி நாவலிலும் இப்பதிவை காணமுடிகிறது.

பழங்குடியினரின் தனி இயல்புகள்

மலையில் வாழும் பழங்குடியினர் வாழ்வியலானது இன்றும் மலைக்கிராம வாழ்வியலாகத் தான் காட்சியளிக்கின்றது. மேலும், இப்பொழுது கல்வி சேர்ந்திருக்கிறது. பேருந்து வசதி சேர்ந்து இருக்கிறது, என்றாலும் அவர்களுடைய வாழ்க்கை முறையில் பெரியளவில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று பார்த்தால், மலையில் தன் படிப்பை தொடங்கி பட்டம் பெற்று கீழே சென்றவர்கள் கூட, பொருந்தாமால், தங்களை தனிமைப்படுத்தி கொண்டோ, பொதுவாக நகரப்பகுதியில் உள்ள ஆடம்பரங்களில் திலைப்பது போன்றோ பார்வையில், இயல்பான தரைக்கிணையான மாந்தரின் வாழ்வியலுக்கு வருவதில்லை காரணம் பழங்குடிகள் ஆகும்.

வேட்டை சார் பண்பாடு

பழங்குடியினர் இயல்பானது உணயில் இருந்து வெளிப்படுகிறது. வேட்டை வழி வாழ்வியல், அடுத்து சேகரிப்பு வாழ்வியல் அடிப்படையாக திகழ்கிறது. இதில் வேளாண் வாழ்வியல் சேர்ந்தாலும், இவர்கள் தரையில் இருப்பது போல மிகுதியான எல்லோர்க்குமான பொது உணவை விளைவிப்பதும் இல்லாமல், தங்களின் வாழ்வியல் தன்மையில் கையாண்ட காலங்காலமாய் கையாண்டதையே எடுத்துக்கொண்டனர். உதாரணமாக திருமண வாழ்க்கையில் பன்றி விருந்து இடம் பெறுகிறது. திருமணத்தில் பன்றி சீர் தரும் வழக்கமும் உண்டு. மான் கறி விருந்து முக்கியமான  ஒன்று. ஆனால் அரசு வந்து வனவிலங்குத் தடைச்சட்டத்தால் இது வெளிப்படையாக இல்லை. தற்போதும் மான்கறி இருந்தால் கைது செய்து செய்திதாளில் பார்க்க முடிகிறது. மான் வேட்டையின்போது மான் கருவுற்று இருந்தால் காதின் பின்பகுதி துடிக்கும். அதையறிந்து வேட்டையாடாமல் விட்டுவிடுவது உண்டு என்கின்றனர். 

அடுத்தாக சேகரிப்பு வாழ்வியலில், தேன், சீதா, பலா, மா, கொய்யா, மூங்கில் அரிசி, விளாம்பழம், நாவப்பழம், எலுமிச்சைபழம், காரப்பழம், சூரப்பழம், அத்திப்பழம், கொட்டாம்பழம் ஆகிய பழங்கள், கொலஞ்சங்காய், நெல்லிக்காய், எட்டிக்காய், எலுமிச்சங்காய் ஆகிய காய்கள் ஆகும். மேலும், வள்ளிக்கிழங்கு, மாவளிக்கிழங்கு, வெத்தலைவள்ளி கிழங்கு, முள்ளிவள்ளிகிழங்கு, கப்பைக்கிழங்கு ஆகியவை அடங்கும். திருமணவிழா, ஊர்த்திருவிழா நிகழ்வின்போது ஒறமரைகளுக்கு தேனையும் பலாப்பழத்தையும் இணை உணவாகத் தருவது வழக்கம். இவைகள் சேகரிப்பை மட்டும் அல்லாது நாள்பட வைத்திருக்கும் தன்மை கொண்டதாகும். தங்கள் தேவைக்குப் போகத்தான் விற்பனைக்குச் செல்லும்படியாக உள்ளது. சேகரிப்பில் கூட்டு முயற்சியே காணப்படுகிறது.

இறைச்சி உணவு

உணவுக்காக வேட்டையாடுதல் தொடங்கி, பிற்காலத்தில் அதுவே தொழிலாக மாற்றம் பெற்றது. வேட்டையும் உணவு சேகரிப்பும் அடிப்படை தேவையாக இருப்பதால் மலைக்காடுகளில் இது காணப்படுகிறது. வனவிலங்கு தடைச்சட்டம் வரும் வரையில் மலையில் வேட்டையாடுதல் இருந்துள்ளது. குழுவாகச் சென்று வேட்டையாடி உள்ளனர். வேட்டைக்குச் செல்லும் போதும் வேட்டைச்சாமி வழிபாடு, வேட்டைக்குச் சென்று வந்த பிறகும் வேட்டைச்சாமி வழிபாடு உண்டு. தற்போது வேட்டையாடுதல் இல்லை என்கின்றனர்.

அந்தக் காலத்தில் மான், முயல், காட்டுப்பன்றி உடும்பு, முள்ளம்பன்றி ஆகியவை வேட்டையாட்டி உள்ளனர். வேட்டையாடுதல் குலத்தொழிலாகப் போற்றிப்பட்டு, இன்று குலதெய்வச் சடங்காக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடு, கோழி, பன்றிகளை திருவிழாக்காலங்களில் பலியிட்டு பகிர்ந்து உண்ணும் வழக்கம் இனக்குழு அடையாளத்தை காட்டுகிறது. மலைவாழ் மக்களின் வாழ்வியல் அனைத்து சடங்குகளும் பன்றி இறைச்சி முக்கிய பங்கு வகிக்கின்றது.

மலையாளிப் பழங்குடிகள் ஆண்டுதோறும் நிகழும் குலத்தெய்வ வழிபாட்டிலும், திருமணவிழா சடங்கில் இரவு விருந்தளித்தல், திருமணத்தை ஊர் மக்களே முன்னின்று நடத்தி வைப்பதால் மணமகன், மணமகள் இருவீட்டாரும் தனித்தனியே ஊர் விருந்து கொடுத்தலிலும், இறந்தவரை கூப்பிட்டு அழைக்கும் நிகழ்விலும், யுகாதி, தீபாவளி போன்ற விழா நாட்களிலும் பன்றிக்கறி உணவை அனைவருக்கும் பகிர்ந்தளித்து உண்ணும் மரபு காணப்படுகிறது. அளவுக்கதிகமாக பன்றிக்கறி மீந்துவிட்டால் சரிபாதியாக வெல்லம் கலந்து வேகவைத்து பதப்பத்தி தேவையின்போது உண்ணுகின்றனர். இதைப் புளிவாரு என்கின்றனர்.

திருவிழாக்காலங்களில் தேவைக்கு மிஞ்சிய ஆட்டுக்கறிகளை உப்புச் சேர்த்து தோரணமாக கட்டி காய வைத்து பதப்படுத்தி வைக்கின்றனர். அதன் பிறகு எப்போது தேவையோ அப்போது உண்ணுகின்றனர்.

வேட்டையாடிய விலங்குகறியைப் பங்குப் பிரிக்கும்போது, இந்த ஊரிலிருந்து வெளி ஊருக்குப் புலம் பெயர்ந்து உள்ளவர்களுக்கும் பங்குத் தருவது வழக்கம். இதை ஒறமரைக்கறி என்கின்றனர். காட்டில் வேட்டைக்குச் சென்றவர்கள் இரண்டு நாள், மூன்று நாள் காட்டிலேயே தங்கி வேட்டையாடும் நிலை ஏற்படின், அப்போது கிடைத்த விலங்குக்கறியில் சிறியது தனியாக எடுத்துப் படையல் போடுவதற்கு நெருப்பில் சுடுவதற்கான கறியை சுடுவாங்கறி என்பர். இதைப் படையலுக்குப்பிறகு உண்ணுகின்றனர்.

தெலுங்கு வருடப்பிறப்பு, திருமண விருந்து, தீட்டுக்கழிக்கும்போது (ஊரைவிட்டு ஓடியவர்கள், ஆடு திருடியவர்கள், செருப்பால் அடித்தவர்) ஆகிய நிகழ்வுகளில் பன்றியை அறுக்கும்போது, ஊர்ப்பங்கு கறி தரும்போது வேடிக்கை பார்ப்பவர்களுக்கு பங்குகறிபோக மீதமுள்ள உடல்உறுப்புகளை ரத்தத்துடன் உப்பு சேர்த்து மண்பானையில் வேகவைத்து, தேக்கு இலையில் தொண்ணை செய்து ஆளுக்கொரு அகப்பை தோகெறி தரும் மரபு உண்டு.

காட்டில் வேட்டைக்குச் செல்லும் போது நீண்ட தூரம் சென்றுவிட்டால், இரவு நேரத்தில் காட்டில் உள்ள பாறைகளின் மேல் தங்குவதும் உண்டு. இரவு உணவாக வேட்டையில் கிடைத்த கறியை பீஞ்ச மரத்து இலைகளை வட்டமாகக் கோர்த்து அதில் கறியை வைத்தோ, மூங்கிலில் இருபக்க கணுவு உள்ளவாறு வெட்டி, அதிலுள்ள உள்ளீடை எடுத்து விட்டு அதனுள் கறியை வைத்து இருபக்கமும் நாரில் கட்டித் தொங்கவிட்டு, கீழே அனல் போட்டுக் கறியை வேகவைத்த பூங்க போட்ட கெறியைப் பகுத்து உண்ணும் மரபு காணப்படுகிறது.

மீன் உணவு

மலையில் புது மழை பெய்து புது வெள்ளம் ஆற்றில் வரும் போது மீன் ஏறுவது வழக்கம். திருவண்ணாமலை ஜவ்வாதுமலையில் செய்யாறு, கமண்டலநதி, நாகநதி, மிருகண்டாநதி, வண்ணாந்துறை ஆறு, பட்டறைக்காடு ஆறு, மஞ்சளாறு ஆறு, மிரட்டாறு ஒலஆறு, கொட்டாறு. பேராறு, தொம்ரெட்டியாறு, தஞ்சாங்கொல்லை ஓடை, பச்சை கொல்ல ஓடை என ஏழு நதிகளும், ஐம்பத்தாறு துணையாறுகளும் மலைப்பகுதியில் செல்வதால் வெள்ளப் பெருக்குக் காலத்தில் மீன்கள் அதிகளவில் ஏறும். ஆற்றில் நீர் வந்த உடன் அந்தந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில், அந்தந்தப் பகுதி மக்கள் குழுவாகச் சென்று, அசரமீன், பன்னிமீன் (சிறிய வகை) ஜிலேபி, கெண்டை ஆகிய மீன் வகைகள் மட்டும் அதிகளவில் கிடைக்கும். கிடைக்கும் மீனை பகிர்ந்து கொண்டும், குறைவாக உள்ள மீனை குழம்பு வைத்து பகிர்ந்து கொள்ளும் வழக்கம் மரபாக உள்ளது.

நண்டு உணவு 

மழை பெய்து, வெள்ளம் வந்து முடிந்தவுடன், ஆறுகள், ஓடைகளில் நீர்த்தேங்கி நிற்கும் இடங்களில் நண்டுகள் அதிகமிருக்கும். இரவில் கையில் தீப்பந்தங்களை எடுத்துக்கொண்டு 10, 20, 30 பேர் எனக் குழுவாக இளைஞர்கள் நீர்நிலைகளில் சென்று நண்டு பிடித்து, அதைப் பகிர்ந்து கொள்கின்றனர். இதைச் சுட்டும் தின்னும் உணவாகவும், குழம்பு, ரசம் உணவாகவும் உண்ணுகின்றனர். 

ஈசல் உணவு 

இது ஒருநாள் மட்டும் வாழும் உயிரினம். இது மழைக்காலங்களில் மலையாளி பழங்குடியினர் உணவாக எடுத்துக்கொள்வதுண்டு. மழை பெய்யும் இரவு நேரத்தில் காற்றல் அணையாதவாறு விளக்கு ஏற்றி வைத்து புற்றின் அருகில் நீருள்ள பாத்திரம் வைத்துவிட்டால், விளக்கொளியில் வந்தவுடன் நீரில் விழுந்துவிடும். அதை எடுத்து இறக்கைகளை நீக்கி காயவைத்து, வானலில் எண்ணெய் விட்டு ஈசலுடன் அதில் மிளகாய்தூள், மஞ்சள்தூள், அரிசி சேர்த்து வறுத்துவைத்து உண்ணுவதுண்டு.

பறவை இறைச்சி

பறவைகளில் வீட்டுப்பறவைகள் கோழி, காட்டுப்பறவைகள் காட்டுக்கோழி, புறா, மைனா, காடை கௌதாரி, நீர்க்கோழி, கானாங்கோழி, குருவிகள் சில எருமலாங்குருவி, கொண்டிலத்தான் குருவி, பூனைக்கண்ணு குருவி, பொருகுருவி, குண்டு பூசிட்டாங்குருவி, சின்னச்சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி, செலட்டகுருவி, பெரியதலைசிட்டுக்குருவி, கண்ணாடி பூசிட்டாங்குருவி, வானிலாங்குருவி, கருங்குருவி, கறுப்புபூசிட்டாங்குருவி, சிவப்புக்குருவி, பச்சைக்குருவி, மாமல்தாங்குருவி, வண்ணாத்திகுருவி, வெளிச்சாங்கல்குருவி, மஞ்சள் பூசிட்டாங்குருவி, மஞ்சள்சிட்டு, தூக்கணாங்குருவி, ஆத்துக்குருவி, கிணற்றுக்குருவி, மண்சுட்டுக்குருவி, கும்பல் ஆத்துக்குருவி, மண்சுட்டுக் குருவி, கும்பல்சிட்டுக்குருவி, சூக்கைக்குருவி, நச்சிட்டுக்குருவி, சாராகுருவி. தேன்மலாங்குகுருவி, தொட்ரிக்காகுருவி, சீசால்தான் குருவி, கொடதியாங்குருவி, சூரக்குருவி, சரக்கொத்திக்குருவி, டிக்காங்குருவி, சாணிகழிஞ்சாங்குருவி, மரங்குத்திகுருவி, மேற்கண்ட குருவிகளின் பெயர்கள் அனைத்தும் பழங்குடியினர் வழங்கும் வட்டார வழக்குப் பெயர்கள் ஆகும். இப்பெயர்கள் எல்லாம் விலங்குசார்ந்த உருவம் சார்ந்த, நிறம் சார்ந்த, தொன்மம் சார்ந்த, இடம் சார்ந்த பண்பு சார்ந்த வகைகளில் காணப்படுகிறது. குருவிகளை ‘குரீ’ என்றுதான் அழைக்கின்றனர்.

மேலும், மலைவாழ் மக்களின் நம்பிக்கைச் சார்ந்த சில குருவிகள் காணப்டுகின்றன.

1. கைமுடக்கணாங்குருவி

இக்குருவிகள் வேலிகளில் முட்டையிட்டு இருந்தால், அதை யாராவது கையால் தொட்டு எடுத்து சுட்டுத் தின்றால் கை முடங்கிவிடும் என்ற நம்பிக்கை உண்டு,

2. மைனாக்குருவி

இக்குருவியைச் சுட்டு சாப்பிட்டால் 3 மாதத்தில் ஆபத்து ஏற்படும் என்பது நம்பிக்கை உண்டு என்கின்றனர் 

3. சர்கொஞ்சாங்குருவி

இக்குருவியின் கறியைச் சாப்பிட்டால் உடலில் சுறுசுறுப்பு அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

4. சூத்தாட்ணாங்குருவி.

இக்குருவியைச் சுட்டு சாப்பிட்டால் ஆண்மை விருத்தியாகும் என்று நம்புகின்றார் 

5. கறுங்குருவி (குயில்)

இக்குருவியைச் சுட்டு சுப்பிட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

6. கொண்டிலத்தாங்குருவி

‘கொண்டிலத்தான் குருவி குவா குவா

மாட்டுக்கண்ணு நெல்லாயிருக்கா

மாட்டுக்கார் பசங்கல்லாங் சாக சாக’

என்பது சொலவடை, இக்குருவியை அதிகமாக பள்ளி மாணவர்கள் அடித்துவிடுதால், இக்குருவி இடும் சாபத்தால்தான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் நின்றுவிடுகின்றனர் என்ற நம்பிக்கை உண்டு.

7. கட்டுக் காடை

இக்காடையைச் சுட்டு சாப்பிட்டால் தொண்டை நோய் நீங்கி, இருமலுக்கு மருந்தாக உள்ளது. என்ற நம்பிக்கையும் உண்டு. 

மேற்கண்ட பறவையினங்களை பிசினுகோல், பட்டாங்கோல், டபார், பில்லுண்டு, மூங்கபில்லு. கண்ணி வைத்தும், கவன்கல் ஆகிய வேட்டைக் கருவிகளை கொண்டு வேட்டையாடி சுட்டுத்தின்கின்றனர். ஆனால், வனவிலங்கு வேட்டையாடுதல் தடைச்சட்டம் வந்தபிறகு, பறவைகள் பிடிப்பதை தவிர்த்து விட்டனர். கோழி இறைச்சியை மட்டும் உண்டு வருகின்றனர்.

மலையில் 5 வயது முதல் 10 வயது வரை உள்ளவர்கள் குருவிக் குஞ்சு அடிப்பதும், 11 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் குருவிக் குஞ்சுகளைப் பிடிப்பதும் 19 வயதுமுதல் 60 வயது வரை உள்ள வர்கள் தாய்க்குருவி குஞ்சுக்குருவிகளை இணைந்திருக்கும்போது குருவியை அடிக்க முற்படும்போது, இதில் எது கத்தினாலும் விட்டுவிடும் கருணை மனம் கொண்ட பாண்பாடு இருந்ததைக் காணமுடிகிறது.

சரக்கு பழக்கம்

ஜவ்வாதுமலையில் வாழும் மக்கள் தினம்தினம் உழைக்கும் உழைப்பாளிகள் ஆகும். இவர்கள் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்வதால், உடல் சோர்வை போக்கிக்கொள்ள சரக்கு அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன் மலைமக்களே உற்பத்தி செய்த சாராயம் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. தற்போது காவல்துறையின் நடவடிக்கையால் கைவிடப்பட்டது. அரசு மதுக்கடையில் மதுவாங்கி குடிக்க பழகிவிட்டனர். 

ஜவ்வாதுமலையில் அத்திப்பட்டு, தும்பைக்காடு, ஜமுனாமரத்தூர், நெல்லிமரத்தூர் கூட்ரோடு, நம்மியம்பட்டு படவேடு ஆகிய பகுதிகளில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகின்றன. 

வேளாண் சார் பண்பாடு

மலை வந்து வானம் பார்த்த தன்மை உடையது. உற்பத்தி அடிப்படையில் பார்த்தால், நீர் வந்து மேட்டில் இருந்து இப்பகுதிகளுக்குச் செல்ல கூடியதாக உள்ளது. வளமான நீரினைச் கொண்டு சமவெளிப் பகுதியை உருவாக்க முடியாத நிலையில் உள்ளது. இருப்பினும் இருக்கும் மலைநிலைப் பகுதியில் சாமை, தினை, அவரை, வரகு, குதிரைவாளி, எள்ளு, கொள்ளு, கேழ்வரகு, மொச்சை, கடுகு, அவரை, துவரை, மக்காச்சோளம், மிளகு ஆகியவை புன்செய் நிலப் பயர்களாகப் பயிரிடப்படுகிறது.

மலையில் ஒரு சில இடங்களில் பரந்துபட்ட சமநிலைப் பகுதியில் நெல் பயிரிடுதல் இருந்தாலும் நெல்லுக்கு முதன்மை கொடுக்காமல் சிறுதானியங்களுக்கு முதன்மை கொடுத்து பயிர் செய்கின்றனர். இப்படி இவர்கள் எதைச் சேகரிக்கிறார்களோ எதை வேட்டையாடுகிறார்களோ, எதை உற்பத்தி செய்கிறார்களோ அதுவே இவர்களின் உணவாகத் திகழ்கிறது. இந்த வாழ்க்கை முறையே உணவுசார் பண்பாடாக உள்ளது. இதில் காலமாற்றம் உருவாகும்போது, அரசின் நல திட்டங்கள் சேரும் பட்சத்தில் மலையிலும் ரேசன் அரசி, ரேசன் பொருள்கள் தருவதால் பொது உணவிற்கு மாறுதல் என்ற நிலை வரும்போது இவர்கள் வாழ்வில் அரிசி ஒரு பகுதியாக மாறிவிடுகிறது.

அரிசி உணவு

ஜவ்வாதுமலைப் பகுதியில் நெல் பயிரிடுவதற்குக்கான நிலவியில் அமைப்பு இல்லை எனினும் ஒருசில இடங்களில் குட்டக்கரை, பாதிரி, மஞ்சுயூத்து, நம்மியம்பட்டு கோவிலாண்டூர், மேல் சேப்பிளி, பட்டறைக்காடு ஆகியப் பகுதிகளில் தங்களுக்குத் தேவையான அளவிற்குப் நெற்பயிர் செய்கின்றனர்.

ஜவ்வாதுமலை அடிவாரப் பகுதிகளான போளூர், தானியார், செங்கம், பரமனந்தல், அமர்தி, சிங்காரப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், குடியாத்தம் ஆகிய நகர்ப்புறப் பகுதிகளுக்கு வணிகத்திற்குச்  சென்று வரும் காலத்தில், அங்குச் செய்யப்படும் வேளாண்மை முறைகளைப் பார்த்து, மலைமேல் பகுதியில் ஊற்று, நீரோடை உள்ள பகுதிகளில் புதுக்காடு நெறவி பயிர் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதில் நீர் பாயாத இடத்தில் மோட்டாங்கால் நெல்லும், நீர்த் தேங்கும் இடத்தில் மடுமுலுங்கி நெல்லும் பயிர் செய்கின்றனர். முதல் கதிரை அறுத்து உரலில் குத்தி பொங்கிலிட்டு முதல் கொல்லை முனிக்கும், தன் குலதெய்வத்திற்கும் படைக்கின்றனர்.

மூங்கில் குருத்தை பொரியல், துவையல் உணவாக செய்து, அதனை கம்பு ரொட்டியில் வைத்து சாப்பிடுவதும் உண்டு, இதில் புரோட்டின், தையமின், நயமின், வைட்டமின்கள் உள்ளதால் உடல் எடை குறைப்புக்கும் இது பயன்படுகிறது. இந்த உணவில் அதிக வெப்பம் அதிகளவில் இருப்பதால் மழைக்காலங்களில் இதன் பயன்பாடு அதிகளவில் உள்ளது.

கிழங்குகள்

அடர்ந்த காட்டுப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் சில குறிப்பிட்ட காலம் வரை காட்டுக் கிழங்குகளை மட்டுமே உணவாக உண்டு வாழ்ந்தனர். வெத்தல வள்ளிக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, கப்பைக் கிழங்கு, முள்ளிவள்ளிக் கிழங்கு, மாவளிக் கிழங்கு, ஆகியவை ஆகும். இவைகளில் காட்டுப் பகுதியில் வெட்டி எடுக்கப்படும் கிழங்குகளை காட்டுக்கிழங்கு என்ற பொதுப் பெயர் வழங்குகின்றனர். 

மேலும், `தை’ மாதம் முதல் ஆனி மாதங்கள் வரை காட்டில் கிழங்கு வெட்டும் மரபு காணப்படுகிறது. கிழங்கை வெட்டி எடுக்கும் போது, அதன் வேரை முழுமையாக அறுக்காமல், அடுத்த ஆண்டிற்கும் கிழங்குக்கிடைக்கும் வகையில் மண்ணை அணைவிட்டு வருவதுண்டு.

வெத்தலை வள்ளிக்கிழங்கை, சிறுக அரிந்து வேக வைத்து, குழம்பு, பொரியல் செய்து உண்ணுகின்றனர். மரவள்ளிக் கிழங்கை தீ சுட்டும், பச்சையாகவும் உண்ணலாம்.

மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து பிறகு, தேன், வெல்லம் கலந்து உண்ணும் வழக்கம் உண்டு.

மாவளிக் கிழங்கை சிறுசிறு பொடிகளாக வெட்டி, காய வைத்து பால் வற்றிய பிறகு மோரில் போட்டு ஊற வைத்து, தினம் அதை வெயிலில் வைத்து காய வைந்து, மோர் முழுவதும் வற்றிய நிலையில் மிளகாய் இடித்துப் போட்டுப்போட்டு ஊறுகாய் போல் தாளித்து துணை உணவாகப் பயன்படுத்துகின்றனர். மேலும், முள்ளிக்கிழங்கு, கப்பைக் கிழங்குகளை வேக வைத்து சிறிது உப்புப் போட்டு உண்ணும் மரபும் உண்டு. காட்டில் வெட்டிய கிழங்கை அங்கேயே சிறு சுள்ளிகளைப் பொறுக்கி போட்டுக் கொளுத்தி தீயில் இட்டு சுட்டு உண்ணுகின்ற வழக்கமும் உண்டு.

கீரைகள்

காட்டுப் பகுதியில் கிடைக்கும் கீரைகளை உணவாகப் பயன்படுத்தி உள்ளனர். வண்டக்கீரை முருங்கைக் கீரை, அம்மன் பச்சரிசி கீரை, பண்ணக்கீரை, கடுகுக்கீரை, தொப்புள் கீரை, சித்திரமூலம் கீரை, நெய்ரெட்டிகீரை, சுட்டுக்கொடி கீரை, காக்கமூஞ்சிகீரை (மணத்தக்காளி), நீர்முள்ளிக்கீரை, சிறுகீரை ஆகிய கீரைகளைத் தனியாகவும் வேகவைத்து செய்வதும் உண்டு. மேற்கண்ட பலதரப்பட்ட கீரைகளை ஒன்றாகச் சேர்த்து சிறு சிறு பொடிக்களாக அரிந்து நீரில் அலசிக் விட்டு, உலையில் போட்டு அரை வேக்காடாக வேகவைத்து, இதில் சாமை அரிசியைச் கலந்து பொங்குகின்றனர். இதற்கு ‘சுண்டஎகிரி சோறு’ என்கின்றனர். இதை மலைவாழ் மக்களின் பாரம்பரிய உணவு என்றும் கூறுகின்றனர்.

கொட்டை உணவு

ஜவ்வாதுமலையில் பெரும்பாலான பயிர்கள் விதைச் சார்ந்தே காணப்படுகின்ற காரணத்தால், கொட்டை உணவு முக்கிய இடம் பெற்றதாக காணப்படுகிறது. பலாக்கொட்டை, துவரங்கொட்டை, கொள்ளுக்கொட்டையை அவித்து உண்ணுகின்றனர். கொள்ளுக்கொட்டைக் குழம்பு வைக்கின்றனர். இதை வழக்குச் சொல்லில் உளுளுசாறு என்றழைக்கின்றனர். கொள்ளுக்கொட்டையில் குழம்பு, இருத்து ஊத்தினால் ரசம் என்கின்றனர். பலாக் கொட்டை சுட்டு திண்ணவதும் உண்டு. குழம்பு செய்வதும் உண்டு. பலாப்பழப்பத்தின் அருகில் இருக்கும் நரம்பு போல இருப்பதை எடுத்து வேகவைத்து உண்ணுகின்றனர். பலாப்பிஞ்சை வெட்டி சிறுவ கொந்தி அதைக் குழம்பு செய்கின்றனர். இதை ‘கொஞ்துகா கொழும்பு’ என்கின்றனர்.

அடுத்ததாக புளியாங்கொட்டையை வறுத்து, இடித்து மேல் தோலை நீக்கி, உப்பு சேர்த்து அவிழ்த்து ஊற வைத்து உணவாக எடுத்து கொள்கின்றனர். இதைக் சம்பா கொட்ட என்று அழைக்கின்றனர்.

காடுகளில் உள்ள மரக்கிளைகளில் தேன் கூடுகள் இருக்கும். தரையில் புகைப்போட்டு, தேன் சேகரிப்பு பொருளாதாரம் இருப்பினும், தேன் எடுத்தப் பிறகு அதிலுள்ள ‘பூமணத்தைக் பசி நேரத்தில் உண்ணும் வழக்கம் உண்டு. இதை தேன்ராடு என்று கூறுகின்றனர். இதில் மெழுகுபோல காணப்படுவதை எடுத்து வெல்லம் சேர்த்து குழைத்து பானையில் உள்ள ஓட்டை அடைத்துள்ளனர்.

சாறு உணவு

சாறு என்பது சாப்பாட்டிற்குத் தேவையான துணை உணவு. காய், கனிகள் செலவுகள் வைத்து செய்யப்படும் குழம்பு ஆகும். குழந்தைப் பிறந்ததும் அந்தத் தாய்க்குத் தரும் கொடி செலவுக் குழம்பு. இது உடலுக்கு வெப்பத்தை தரக்கூடியது. இது தற்காலத்தில் ஒருசில ஊர்களில் மட்டுமே உண்டு.

பருப்பு சாம்பாரில் அரிசி மாவை கலந்து சமைப்பது மாவுட்டாங் சாறு ஆகும். இது பெரும்பாலும், சந்தக்களி உணவுக்காக பயன்படுத்துகின்றனர்.

வீட்டில் குழம்புக்கு எந்தப் பொருளும் இல்லாத நேரத்தில், உடனே தயார் செய்யும் உணவுப் பொருள். அதாவது புளி, பச்சமிளகாய், உப்புச் சேர்த்து கரைத்த சாற்றை சாப்பாட்டில் சேர்த்து உண்டது, இதைக் கைபுளிசாறு என்கின்றனர்.

சாதம் வடிக்கும் நீரில் சிறிது பருக்கை (சாதம்) போட்டு உப்புச் சேர்த்து உண்பது, கஞ்சி பெருக்கு ஆகும். பழைய சாதத்தைக் கரைத்து நீராகாரமாகக் குடிப்பது வழக்கம், சோற்றை நீர் விட்டுக் கரைத்துவைத்து விட்டால், சோறு எல்லாம் கீழ்பாகத்திலும் நீர்த்த பாகம் மேலேயும் இருக்கும். மேலே உள்ள நீரை மட்டும் குடித்துவிட்டு, மீண்டும் நீர் விட்டு கரைத்து வைத்து குடிப்பது, நீத்துபாகம் ஆகும். 

விழாக்கால உணவு

ஊரில் திருமணமான ஆணோ பெண்ணோ அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஊர் மக்களுக்கு விருந்து அளிப்பது வழக்கம். விருந்துக்கு ஊர் பெரியவர்களிடம் 12 மரகா அரிசி, 50 கிலோ பன்றி குழம்புச் செலவிற்கான பொருள்கள் அனைத்தையும் கொடுத்து விடுவார்கள். அவர்கள் பன்றிக் கறி விருந்து சமைத்து மணமக்களை அமரவைத்து ஊர் மக்கள் வாழ்த்திய பிறகே ஊரு விருந்து வழங்கப்படும்.

திருமணத்தில் மக்கள் கூட்டம் அதிகமானால் சாப்பாட்டிற்கு அரிசி பற்றாக்குறை ஏற்படுவதுண்டு. அப்போது, ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பேசி, தங்கள் வீட்டில் உள்ள அரிசி கொண்டு வந்து தருவதும், அதே சமயம் கல்யாணத்திற்கு வாங்கிய அரிசி மீதியானால் ஊர்மக்களுக்கும் பிரித்து தரும் மரபும் உண்டு.

நாவுசோறு என்பது உறவுச் சோறு ஆகும் திருமணத்திற்கு முந்தைய நாட்களில், உறவுகளில் உள்ள உறவுமுரைகள் (உறவினர்கள்) அனைவரும் சேர்ந்து மணமக்களுக்கு தரும் விருந்தாகும்.

நிச்சயம் செய்த பிறகு மணமக்களுக்கு நலங்கு வைக்க நாள் குறிக்கும் சடங்கு நிகழும். அன்று முதல் ஒறமரைகள் மணமக்களை அழைத்து தங்கள் வீடுகளில் விருந்தளிப்பது. மேலும் நலங்கு வைக்கும் நபர்களுக்கு மணமகன் வீட்டில் விருந்து உபசரித்தல் நடைபெறும். திருமணம் முடிந்த பிறகும் நாவுசோறு வழங்கும் நிகழ்வு தொடரும்.

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண் வீட்டில் மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளைத் தோழனுக்கும் அளிக்கும் விருந்து பூதகளசோறு. இது மாப்பிள்ளையின் உடலில் உள்ள பூதங்களின் உறுதிக்காக, சாதம், கொள்ளுச்சாறு, சாதத்தில் நெய், தயிர், வெல்லம் ஆகியவை கலந்து மணப்பெண் தரும் விருந்தாகும்.

ஜவ்வாதுமலையில் தெய்வ வழிப்பாட்டில் திருவிழாக்களில் வழிபாடுகள் நிறைவுபெறும்போது, ஒவ்வொரு வீட்டிலும் சமைத்த சாதம், சாம்பார், கூட்டு, பொரியல் ஆகியவற்றை எடுத்துவந்து. தெய்வ சந்நிதியில் சமமாக கொட்டி, தெய்வத்திற்குப் படையலிட்டு, அதன்பிறகு எல்லாச் சாதத்தையும் கலந்து உருண்டையாக உருட்டி விடுவார்கள்.  இதைக் கும்பசாதம் என்றும் கூறுவர். இந்த உருண்டையில் ஒறமரைகளுக்கு ஐந்து உருண்டையும், ஊர்க்காரர்களுக்கு மூன்று உருண்டையும் அளிக்கப்படுகிறது. இந்தச் சாதம் சாப்பிட்டால் குழந்தைப் பாக்கியம் கிட்டும் என்னும் ஐதீகம் நிலவுகிறது. மேலும் இது இனக்குழு வாழ்க்கையின் அடையாளமாகத் திகழ்கிறது.

பச்சரிசி மாவு, வறுத்த மல்லாக்கொட்டை, வெல்லம் ஆகியவை சேர்த்து ஆவியில் வேகவைக்கும் உணவு கொழுக்கட்டையாகும். இதில் புடிக்கொழுக்கட்டை, இலை கொழுக்கட்டை, விழாக்காலங்களில் ஒறமரைகள் வருகைக்காக செய்யும் உணமாகும்.

கம்பு அடையோ, கேழ்வரகு அடையோ செய்து, இதனுடன் வறுத்த மெல்லாக்கொட்டையையும். வெல்லத்தையும் சேர்த்து உரலில் போட்டு இடித்து உருண்டையாகப் பிடிப்பது எளிபூண்டி எனப்படும். இதை ஒரட்டி உருண்டை, அடை உருண்டை என்றும் கூறுவர். இது ஒவ்வொரு ஆண்டும் ஒகாதி பண்டிகையில் செய்து முன்னோர்களுக்கு படைத்து உண்ணுகின்றனர்.

SORU.jpeg

ஜவ்வாதுமலையில் காலை நேர உணவாகக்கூழ் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. கேழ்வரகு அல்லது கம்பு மாவினாலும் இதில் சாமை, மக்காச்சோளம் மற்றும் நெல்லரசியைச் சேர்த்து கூழ் உணவு செய்யப்படுகிறது. இதை ஆடி, தை மாதங்களில் மாரியம்மனுக்குப் படைக்கப்படுகிறது. 

பெண்கள் வயதுக்கு வந்தால், கம்பு, கேழ்வரகில் மாவு அரைத்து புட்டுக்களி செய்து அதற்கு எக்ரிசாறு, சீசீசாறு, கருவாட்டுசாறு என்றவாறு குழம்புச் செய்து உண்ணுகின்றனர்.

காரமணி, பச்சைப்பயிறு, மொச்சக் கொட்டை ஆகிய பயிறு வகைகளை அவித்து உப்புச் சேர்த்து உண்பதோடு, குழம்பாகவும் செய்து உண்ணுகின்றனர். ஜவ்வாதுமலை பகுதியில் இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அதிகளவில் உணவாக எடுத்துக் கொள்கின்றனர். அதில் முருகைக்காய், சுரைக்காய், பூசணிக்காய், வாழைக்காய், சுண்டைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய், கோவக்காய், முள்ளுகத்தரிக்காய், கண்டங்கத்திரிகாய் ஆகிய காய்கறிகளைச் சேர்த்து கூட்டு குழம்பாகச் செய்து, இதில் தினை அரிசியைச் சேர்த்து உண்ணும் வழக்கும் காணப்படுகிறது. மேலும், கொத்தவரங்காய் கூட்டும், மாங்காய் இடிப்பும் கூழுக்குத் துணை உணவாக உண்ணுகின்றனர்.

வெல்லம்

கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம் ஆகிய தானிங்களை மாவாக அரைத்து,  மண்ணுக்கல்லில் (சாணக்கல்) வெல்லப்பாகில் கலந்து எண்ணெய் இல்லாமல் அடைத்தட்டிப் போட்டு வரட்டி செய்து உண்பதும் உண்டு. மழைக்காலங்களில் வீடுகள் தோறும் இவ்வுணவு உண்ணுவது வழக்கம். இந்த உணவு முன்னோர் வழிபாட்டில் முக்கிய உணவாகக் கருதுகின்றனர். இந்த உணவு வெளியூர்களுக்கு எடுத்துச் சென்றால் பேய் பிடிக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. இதை வெல்லவரட்டி என்கின்றனர், கம்பவரட்டி, சோளவரட்டி, கேழ்வரகுவரட்டி எனத் தனித்தனியாக செய்வதும் உண்டு. 

நெல்லரிசி, சாம அரிசியை பொங்க வைக்கும்போது, அதில் வெல்லம் கலந்து கஞ்சி போல் செய்யும் உணவு. இது மாரியம்மன்னுக்குப் படைக்கும் சிறப்பு வழிப்பாட்டில் இடம் பெறும், படையலுக்குப் பிறகு உண்பது வழக்கமாகும். இஃது ஆதிகால வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இது ஊர் முழுவதும் சேகரிக்கும் அரிசியில் செய்யப்படும் உணவாகும். இதை வெல்லங்கஞ்சி  என்றழைக்கின்றனர்.

வெல்லம், ஏலக்காய், நீர்சேர்த்து செய்யும் செய்வதை வெல்லந்தெண்ணீ என்கின்றனர். இது எருதுகாட்டு விழாவில் மாரியம்மன் கரத்திற்குப் படைக்கின்றனர். இது கரகம் எடுத்துவர்களுக்கு முதலில் கொடுத்து பிறகு மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும் என்கின்றனர்.

ஜவ்வாதுமலையில் இருந்து சந்தைப் பகுதிக்கோ வெளியூருக்கோ சென்று வரும்போது, தலைச்சுமை இருந்தால் நடக்க முடியாது என்பதால், போகும்போது ஒரு பாத்திரத்தில் சாப்பாடு எடுத்து செல்லும் வழக்கம் உண்டு. வரும்போது அந்த பாத்திரம் காலியாக இருக்கும். மலைக்கு வரும்போது வெல்லம், பொரி வாங்கி கொண்டு மலையேறும்போது சுனைநீர் உள்ள இடத்தில் அமர்ந்து, பாத்திரத்தில் நீர் எடுத்து, வெல்லம் போட்டுக் கரைத்து அதில் பொரியைப் போட்டு ஊறவைத்து சற்று நேரம் பொறுத்து குடிக்கும் மரபு உண்டு. இதை அருகே இருக்கும் கன்னிமார்களுக்கும், வானுக்கும், பூமிக்கும் வைத்து படைத்துவிட்டு உண்ணும் வழக்கம் உண்டு. இதைச் சாப்பிட்டால் பசி எடுக்காது என்கின்றனர்.

சந்தைக்குச் சென்று வீட்டிற்குத் தேவையான பொருள் வாங்கி வரும்போது. மலைக்குச் செல்லும் வழியில் உள்ள நடுகல், வனதேவதை, கன்னிமாருக்கோ பச்சைப்போடுதலும் உண்டு. பச்சைப்போடும்போது, தேங்காய், வெல்லம், வெற்றிலைபாக்கு பழம் வைத்து வழிபாடு செய்வது உண்டு. பொருள் சுமையோடு உணவுச் சுமையும் சுமக்க கடினமானது என்பதால் தேங்காயை நசுக்கி, வெல்லம் சேர்த்து உண்டு பசியாறுதல் உண்டு என்கின்றனர். அரிசி மாவில் அதிரசம் செய்து திருமணத்தில் சீர்வரிசை தரும் வழக்கமும் உண்டு. பச்சரிசி மாவில் வெல்லம் கலந்து மாவிளக்கு போட்டு அதை மாவாகவும் கரைத்து தோசை செய்தும் உண்பது உண்டு. வெல்லத்துக்கு பதிலாக தேன் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேய்ச்சல் சார் பண்பாடு

ஜவ்வாதுமலையில் பெரும்பாலும் நாட்டு மாடுகளையே வளர்க்கின்றனர். மற்ற இனமாடுகளை வளர்ப்பதில்லை. ஐவ்வாதுமலைக்கே உரிய ‘ஜமுனாமரத்தூர் குட்டை’ வகையான மாடுகளின் பால் மிக அடர்த்தியாகவும், சுவையாகவும் இருக்கும். ஜவ்வாதுமலையில் மாடுகள் கன்று ஈன்றால் சீம்பாலை மண்ணில் பீச்சி விடுகின்றனர். அடுத்து கரக்கும் பாலைக் காய்ச்சி அதில் 3 அடிநீள மூங்கில் குச்சி வெட்டி, அதன் முனையில் வெட்டி நான்காகப் பிரித்து வட்டமான அளவில் கயிற்றில் இணைத்து, இதில் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து ஞாயிற்றுக்கிழமையில் வீட்டில் தெய்வம் கும்பிடும்போது, பொங்கல் வைத்து பால் ஊற்றி பொங்கி, மூங்கில் குச்சியின் முனையில் துணி சுற்றி அதில் வெண்ணெய் தடவி தீபம் ஏற்றி, அந்த வீட்டில் இறந்தவர்கள் எத்தனைப்பேரோ அத்தனைப் பொட்டு வைத்து,  அனைத்திற்கும் இலைப்போட்டு, கைபடாமல் மூங்கில் குச்சியில் பொங்கல் அள்ளி இலையில் வைத்து, சிறு தேங்காய் ஓட்டில் மூங்கில் குச்சிப் போட்டு அகப்பை செய்து அதில் நெய்யை எடுத்து இலையில் வைப்பது ஆயிரமூச்சி தேங்காய் என்பர்.

மூங்கில் குச்சியில் தீப ஆரத்தி காட்டி வீட்டில் உள்ள அனைவரும் வழிபடுவது வழக்கம். வீட்டில் உள்ளோர் சாப்பிட்ட பிறகு, மறுநாள் தான் உறவினர்களுக்குச் சாதமோ, பாலோ, தயிரோ, மோரோ கொடுக்கும் மரபு இருப்பதாக கூறுகின்றனர். மேய்ச்சல் சார் பண்பாட்டில் பால், தயிர், மோர் ஆகியவை உண்பதையும், மற்றவர்களுக்கு கொடுப்பதையும் வழிபாட்டு சடங்கோடு இணைத்து காணப்படுகிறது.

விடியற்காலையில் தயிரை மோராகக் கடைந்து, அதில் கூழுடன் சேர்த்து உண்ணுகின்றனர். மோர் கடையும் மூங்கில்குச்சி, மத்து பல வீடுகளில்  இன்றும் புழக்கத்தில் உள்ளது. 

ஜவ்வாதுமலையில் வாழும் மலையாளிகளில் காட்டு மாடு என்றழைக்கப்படும் நாட்டு பசுக்களிடம் கிடைக்கின்ற பால், தயிர், மோர் மற்றும் நெய் ஆகியவை அன்றாட உணவுமுறையில் முக்கிய இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மலையில் உற்பத்தியாகும் சிறுதானியங்களை 10சதவிதம் தங்கள் பயன்பாட்டிற்கு வைத்து கொண்டு 90சதவிதம் விற்பனைக்குக் கொடுத்து விடுகின்றனர். அரிசி சோறு சாப்பிடுவதில் கௌரவம் நிலையும் காணப்படுகிறது.

மலை உணவில் மக்களிடம் மக்காச்சோளம் ஒரு முக்கிய உணவு. காரணம், ஒரு பகுதி விற்பனைக்குப் போனாலும், ஒரு பகுதியை டோளி கட்டி அடுப்புக்கு நேராக வைத்து விடுவார்கள். ஆண்டுதோறும் எப்போது தேவையோ குறிப்பாக மழைக்காலங்களில் வறுத்து, பொரி செய்து உண்பதும், அதை அரைத்து போண்டா, ஒரட்டி செய்து உண்பதும் உண்டு. சந்தக்களி உணவு என்பது மலைவாழ் பாரம்பரிய பண்பாட்டு உணவாகும். இதில் சாமை மாவும், அல்லது கேழ்வரகு மாவும் இளகுவாக சூடாக்கி சந்தக்களி மரத்தில் போட்டு, செய்து, இதற்கு மாவுட்டாங்சாறு, எக்ரிசாறு, சீசீசாறு எனச் செய்தும் உண்பது உண்டு. ஒரு காலத்தில் திருமணத்தில் பெண்களுக்கு சந்தக்களி மரம் சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளில் இரண்டு வேளையில் அரிசி உணவும், ஒரு வேளையில் மட்டும் சிறுதானிய உணவும் எடுத்துக் கொள்கின்றனர். தற்போது மாற்றம் என்னவென்றால். பெரும்பாலும் பொது உணவுக்கு மாறுவதற்காக அரசு தரும் ரேசன் பொருளும், சட்டதிட்டங்கள் மூலம் இறைச்சி சார்ந்த விலங்குகளை வேட்டையாட கூடாது என்றால், அதிலிருந்து அவர்கள் விலகுகின்றனர். மலையில் விலையும் பொருள்கள் தரையில் விற்பனைக்கு மாறும் சூழலில், அவர்கள் இதன் மூலம் பெறுகின்ற பணத்தில் தரைச் சார்ந்த பொருள்களை மாற்று உணவை நோக்கி நகரும் பார்வை இருந்தாலும், `சாராயத்தை’ விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. மேலும் பன்றி இறைச்சி, சிறுதானியம், சந்தக்களி, விழாக்காலங்களில், சீசீகலக்கின்ற வழிப்பாட்டிலும், திருமண விருந்திலும் அரிசியானது பண்பாட்டில் மேலேங்கி உள்ளது. அறுபது ஆண்டுகள் தன் வளர்ச்சியில் நிறைவடைந்த மூங்கிலில் இருந்து மூங்கிலரிசி எடுத்து உணவுக்குப் பயன்படுத்துகின்றனர். மூங்கில் வளரும் காலத்தில் மூங்கில் குருத்து உணவு சிறப்பு வாய்ந்தாக காணப்படுகிறது. காட்டுக் கிழங்கு வகைகளையும் கீரை வகைகளையும் உணவில் பயன்படுத்துகின்றனர்.

SANTHAIKALI.jpeg

இவர்களுக்கு என்னதான் கிடைத்தாலும் மலையில் வளமான வாழ்விற்கான வழியில்லை எனலாம். தரையிலுள்ள பொருளாதாரப் பார்வையைப் போன்று மலையில் பார்த்தால் பொருளாதாரப் பார்வைக்கான வாய்ப்புகள் இல்லை. அப்போது அரசு தரும் நலத்திட்டங்களை  நம்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

தரைப்பகுதியில் வாழும் மக்கள் அரிசி உணவில் தங்கள் உடலைப் பெருத்துக்கொண்டு, அதன் காரணமாக உருவான நோய்களில் இருந்து தங்களை மீட்டுக்கொள்ள மாற்று உணவுக்கு முதன்மை கொடுத்து கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, மூங்கிலரிசி இவற்றை சந்தை மையமாக மாற்றும்போது, அவர்களின் குறி, மலையை நோக்கி இருக்கிறது. எனவே மலையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் இடைத்தரகர்கள் மூலம் தரையில் விற்பனைக்குரிய சந்தைப்பொருளாக மாறுகிறது. அவர்களிடம் வாக்குத் தருதல் என்னும் முக்கியமான பார்வை காணப்படுகிறது. இதனடிப்படையில் ஒப்புக்கொண்டால், தரையில் மரம் வெட்டுதல், செங்கல் சூளை, கட்டிடம் கட்டுதல் போன்ற பணிகளுக்குச் செல்லும் சூழல் காணப்படுகிறது.  செல்வமிகுதியாக இப்படி செய்தாலும், வசதி வாய்ப்புகள் ஏற்படுவதில்லை. ‘சரக்கு’ என்பது ஆண்கள் வாழ்வில் முதன்மையான ஒன்றாக இன்றுவரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரையில் இடம்பெறும் வாக்காற்றுப்படை

1.சுடுவாங்கறிநெருப்பில் சுடும் கறி
2.தீட்டுக்கழித்தல்பூசை செய்து தீர்த்தம் போடுவது
3.தோகெறிதொக்குக்கறி
4.உள்ளீடுமூங்கலின் உள்ளிருக்கும் வெண்மை நிறப்பகுதி
5.பூங்க போட்ட கெறிஅனலில் வேகவைத்த கறி
6.குரீகுருவி
7.மானத்திலவானத்தில்
8.சர்கொட்டாங்குருவிசருகளை கலையும் குருவி
9.சூத்தாட்ணாங்குருவிஇதன் சுவாச உறுப்பு வால் பகுதியில் உள்ளதால், அதை அசைத்து கொண்டே இருக்கும் குருவி
10.கறுங்குருவிகறுமையான நிறத்தில் உள்ள குருவி
11.கொண்டிலத்தாங்குருவிதலையில் கொண்டிபோல் கொண்டை  வளைந்திருக்கும் குருவி
12.நெறவிசமமாக செய்தல்
13.எக்ரிகீரை
14.சுண்ட எகிரி சோறுகீரையுடன் சமைக்கும் சோறு
15.உளுளுசாறுகொள்ளுக்கட்டை குழம்பு
16.சம்பாகொட்டபுளியங்கொட்டை
17.சாறுகுழம்பு
18.மாவுட்டாங்சாறுசாம்பாரில் அரிசி மாவு கலந்த குழம்பு
19.கைபுளி சாறுகையில் கரைத்த புளிகுழம்பு
20.நீத்துபாகம்மேல்கஞ்சியில் உள்ள நீர்
21.ஊரு விருந்துஊர் மக்களுக்கு தரும் உணவு
22.நாவுசோறுஉறவினர் தரும் சோறு
23.நாள் சோறுநிச்சயத்திற்கு நாள் குறித்த பிறகுத் தரும் உணவு
24.பூதகளசோறுஉடலிலுள்ள பூதங்களின் உறுதிக்காக தரும் உணவு
25.ஒரட்டிமண்ணுக்கல்லில் எண்ணெய் இல்லாமல் சுடும் அடை
26.புட்டுகெளிவயதிற்கு வந்த பெண்களுக்கு தரும் உணவு
27.சீசீ சாறுஇறைச்சி குழம்பு
28.சாணக்கல்மண்ணுக்கல்
29.வெல்லம் வரட்டிவெல்லம் கலந்த அடை
30.வெல்லங்கஞ்சிவெல்லம் கலந்த சோறு
31.வெல்லந்தெண்ணீவெல்லம் கலந்த நீர்
32.ஆயிரமூச்சி தேங்காய்சிறிய ரக தேங்காய்

எழுத்தாளர் க.ஜெய்சங்கர் 

திருவண்ணாமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *