இவர்கள் தங்களுக்குத் தேவையான உணவைக் காடுகளிலும், சமவெளிப் பகுதிகளிலும் சேகரிப்பர். சில நேரங்களில் பட்டினிக் கிடப்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பெரும்பாலும் ஒரு நாளைக்கு இரு முறையே உணவு உட்கொள்கின்றனர். இத்தலைமுறை இருளர்கள் அரிசி உணவையே விரும்பி உட்கொள்கின்றனர். பலாப்பழம் விரும்பி உண்பார்கள். மலைப்பகுதியில் கிடைக்கும் பலாப்பழத்தை நண்பகல் உணவாக உட்கொள்வார்கள். தினை, கேழ்வரகு இவற்றைக் களியாகக் கிண்டி உண்கிறார்கள். மேலும், இறைச்சி வகை உணவுகள், பழவகைகள், காய்வகைகள், கிழங்குகள், கீரை, தழை வகைகள், விதை வகைகள், புல் விதைகள், தினைவகைகள், மூங்கில் விதை, தானியவகைகள், புளியங்கொட்டை, இலுப்பம்பூ போன்றவைகளை உணவாக உட்கொள்வார்கள
இறைச்சி வகை உணவுகள்
இருளர்கள் வேட்டையாடி எலி, முயல், அணில், உடும்பு, காட்டுப்பூனை. ஆமை போன்றவற்றின் இறைச்சியையும், மைனா, கௌதாரி, புறா, மீன்கொத்தி, கொக்கு, காக்கா, வாத்து, கோழி, வெளவால், துறிஞ்சல், நாரை, கல்லிக்காக்கா போன்றவற்றின் இறைச்சியையும், இவை மட்டுமின்றி, ஏரி, குளம், குட்டை, ஆறு, கிணறு போன்ற நீர் நிலைகளில் கிடைக்கும் நண்டு. நத்தை, ஊமிச்சி (சிறிய நத்தை) போன்றவற்றில் உப்பு சேர்த்து அவித்து அல்லது குழம்பு வைத்தும் உண்ணுவார்கள். சிலர் சுட்டு உண்பார்கள்.
மீன் வகைகளில், வெரால், ஆராமீன், அனைமீன், தேளிமீன், கோலாமீன், விலாங்குமீன் போன்ற மீன் வகைகள் பிடித்து, குழம்பு செய்து சாப்பிடுவார்கள். அடுத்து ஈசலைப் பிடித்து வந்து சுத்தம் செய்து வறுத்து மிளகாய்த்தூள் சேர்த்து பொரி, அல்லது மிக்சரில் கலந்து உண்பார்கள். சில இறைச்சி வகைகளை எந்தெந்தக் காலத்தில் சேகரிப்பார்கள் என்பதைக் கீழே காணலாம்.
முயல்
மாதாமாதம் அமாவாசை தொடங்கி ஐந்து நாட்கள் வரை பிடிப்பார்கள்
அறுவடைக் காலங்களில் (பயிர்களில்) காடுகளில் (ஆண்டு முழுவதும் பிடிப்பார்கள்)
ஆமை
நீர் நிலைகளைப் பொறுத்துநண்டு நத்தைபுரட்டாசி, ஐப்பசிமழை காலங்களில் மற்றும் (ஐப்பசி, கார்த்திகை, மார்கழி)
ஈசல்
ஈசல் மேற்குறிப்பிட்ட பருவ காலத்தில்தான் இவைகளைப் பிடித்து உண்கிறார்கள்.
எலி
எலி என்பது இருளர்களின் பிரதான உணவாக இருக்கின்றது. இருளர்கள் எலி உணவை விரும்பி உண்ணுகின்றனர். மேலும் வயலில் விளைகின்ற எலிகளையே இவர்கள் உணவாக உண்ணுகின்றனர்.
பழவகைகள்
கனிகளை உண்டும் இவர்கள் பசியைத் தீர்த்துக் கொள்வார்கள். பலாப்பழம், கோவைப்பழம், ஈச்சம்பழம், வீரப்பழம், கொத்துக்கலாக்காய் பழம், குருவிப்பழம், எலந்தைப்பழம், காட்டு மாதுளை, கம்பிமரப்பழம். தரணிப்பழம், சொடலைப்பழம், ஆனைக்கல்லுமுளையான் பழம் போன்ற பழ வகைகளை விரும்பி உண்பார்கள்.
கிழங்கு வகைகள்
இருளர்கள் காடுகள் மற்றும் சமவெளிகளில் கிடைக்கும் கிழங்குகளைக் சுடப்பாரையால் தோண்டுவார்கள். பிறகு அதனைப் பச்சையாகவும், கட்டும் சிலவற்றை அவித்தும் சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பிடும் கிழங்குகள். காட்டுவள்ளிக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு, பெரி கொட்டிக்கிழங்கு, சேர்மான் கிழங்கு, ஈரக்கிழங்கு, நெசக்கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு. இந்தத் தண்ணீர் விட்டான் கிழங்கு தண்ணீர் தாகம் தீர்க்கவும் பசியைத் தீர்க்கவும் உண்பார்கள். உணவு கிடைக்காத வேலையில் இக்கிழங்குகளை உண்டே பல நாள் வாழ்வதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
காய் வகைகள்
இவர்கள் வேட்டையாடும்போதும், மூலிகைகளைச் சேகரிக்கும் போதும், விறகு சேகரிக்கும் பொழுதும் பசியைத் தீர்த்துக்கொள்ள மரம், செடி, கொடி போன்றவற்றில் கிடைக்கும் காய்களைப் பறித்துண்பார்கள். இக்காய்கள் அன்றைய நாள் முழுவதும் உணவாக அமைந்து விடும்.
1.பலாக்காய் 2. ஆனைக்கல்லு முளையான், 3.காரக்காய் 4. நரிப்பயந்திக்காய் 5. கம்பிமரக்காய் 6. காட்டு வெள்ளரிக்காய் 7.அத்திக்காய் 8. நொரைப் பீர்க்கன்காய் 9. கொட்டிக்காய் 10. சரட்டைக்காய் போன்ற காய்வகை உணவுகளை உண்ணுகின்றனர். இக்காய்களைப் பச்சையாகவும். குழம்பு வைத்தும் உண்பர். இக்காய்கள் தன்னிச்சையாக வளர்ந்த செடி, கொடி. மரங்கள் போன்றவற்றில் இருந்து கிடைப்பவை.
தினை வகைகள்
காடுகளில் விளையும் சேமத்தினை, மஞ்சந்தினை, வெள்ளைத்தினை போன்றவற்றைச் சேகரித்து இடித்து மாவாக்கி அதனைத் தேனோடு சேர்த்து உண்பர். இந்த மாவினைப் புளிக்கவைத்து சேக்கால் (கூழ்) காய்ச்சியும் குடிப்பர். காக்கா சோளத்தைக் குத்திப் புடைத்து ஊற வைத்து இருமுறை உரலில் இடித்து மாவைச் சோறாக்கியும், கூழ் செய்தும் உண்பார்கள்.
தழை, கீரை வகைகள்
இவர்கள் தழைகளை உண்பார்கள் அவை, 1. குருவித்தழை 2. பில் சொட்லான் 3. எலசொட்லான் போன்றவற்றின் தழைகளைப் பச்சையாக மென்று சாப்பிடுவார்கள். கீரைகளை அளித்து பூண்டு, மிளகாய், உப்பு சேர்த்துக் கடைந்துண்பர். அவ்வாறு உண்ணும் நீரை வகைகள் பின்வருமாறு: பொத்திக்கீரை, பண்ணைக்கீரை, பொன்னாங்கள்னிக்கீரை, ராட்டனக்கீரை. குப்பைக்கீரை, முருங்கைக்கீரை, ஈருக்குலிக்கீரை, கொய்யாக்கீரை, பசலைக்கீரை, மூக்கரட்டைக்கீரை போன்றவை ஆகும். இக்கீரைகள் அனைத்துமே ஒவ்வொரு நோயைத் தீர்க்கும் குணமுடையனவாகும். உதாரணமாக, கொய்யாக்கீரையும்,
பசலைக்கீரையும் சேர்த்துப் பூண்டு, மிளகு சேர்த்து அவித்துக் கடைந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும் என்று கூறுகிறார்கள்.
விதைகளை உணவாக உண்ணல்
இருளர்கள் அரிசி உணவுகளை உண்பதற்கு முன் காடுகளில் முளைத்திருக்கும் புல் விதைகளைச் சேகரித்துக் காயவைத்துச் சோறு செய்து உண்டார்களாம். பிறகு எலி வலையில் இருக்கும் நெற்களைச் சேகரித்து நெற்கதிர்களை எடுத்து வந்து சோறு செய்து வந்தனர். அரிசியை உணவாக உண்பதற்கு முன் எறும்பு வலையைத் தோண்டி புல் விதைகளைச் சேகரித்து, இடித்துச் சோறு செய்து உண்பார்கள். இவ்வாறு, சாமப்புல், வர் கொர்த்தான்புல், தெனப்புல், கேழ்வரகு போன்றவற்றைத் துடைப்பக் குச்சியால் எறும்பு வலையில் இருந்து வெளியே தள்ளி ஆமை ஓடு அல்லது கொட்டாங்குச்சியில் சேகரித்து இடித்துச் சோறாக்கி உண்டு வந்தனர். இப்பொழுது பெரும்பாலோர் இதனை உண்ணுவது சற்று குறைந்து உள்ளது. காரணம் நகரத்தை நோக்கி குடியேறுபவர்கள் மட்டும் மாறி வருகின்றனர்.
அல்லி விதை
குளம், குட்டைகளில் உள்ள அல்லிக்காயைச் சேகரித்து மண் பானையில் தண்ணீர் ஊற்றி வைப்பார். இரண்டு நாள் கழிந்தபின்னர் அழுகிய நிலையிலுள்ள அக்காயைக் கழுவி மேல்தோலை நீக்கி நெல் அவிப்பதுபோல் அவித்துக் காயவைத்து அதை உரலில் இடித்து அரிசி யெடுத்து வெந்நீரில் நான்குமுறை கழுவியபின் சோறு செய்வார்கள். இச்சோற்றில் நண்டு, எலி, உடும்பு போன்றவற்றைக் குழம்பு வைத்துண்பர். இதே போன்று செவ்வரிசி, வெள்ளை அல்லி, மஞ்சள் அல்லி, ரோஸ் அல்லி ஆகியவற்றின் விதைகளையும் உணவாக உண்பர்.
மூங்கில் விதை
காட்டு மூங்கில் விதைகளைச் சேகரித்து அவித்துக் காயவைத்து உரலில் இடிப்பர். இதை அவிக்காமல் இடித்துத் தோல்நீக்கி மாவாகவும் உண்பர். மாவு
உண்பது அதிக சூடு என்பதால் பெரும்பாலும் அவித்து அரிசியெடுத்துச் சோறாக்கித் தயிர், மோர் போன்றவற்றொடு உண்பர்.
புளியங் கொட்டை
புளியங்கொட்டையை வறுத்து இடித்து மாவாக்கியவுடன் அதில் தேங்காய் துருவிப் போட்டு, பனைவெல்லம், சுக்கு ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிடுவார்கள். இதை ‘சிமிலி’ என்று கூறுவார்கள்.
இலுப்பம்பூ உருண்டை
காட்டு இலுப்பம்பூவைச் சேகரித்து ஓலைப்பாயில் காயவைத்துப் பூவிற்குள் இருக்கும் அரும்பு கொட்டியவுடன் மண் சட்டியில் வறுத்தெடுத்து ஆற வைத்து உரலில் இடிப்பர். அப்போது அது புண்ணாக்குப் போலாகும்.
மிளகாய்த் தூள், பனைவெல்லம், சுக்கு, தேங்காய் போன்றவற்றையும் தனியாக இடித்து, இடித்த புளியங்கொட்டை மாவையும், இடித்து வைத்திருக்கும் இலுப்பைப் பூவுடன் சேர்த்திடிப்பர். இதன் பின்னர் இதை உருண்டையாக்கி, பானையில் வைத்திருந்து மழைக்காலங்களில் உண்பார்கள். இந்த உருண்டை சுமார் நான்கைந்து மாதங்கள் வரை கெடாமல் இருக்குமாம். எனவே இதனை விரும்பி உண்பார்கள் என்பதை அறிய நேர்கிறது.
பிற தானிய வகைகள்
இருளர்கள் காடுகளில் தங்களுடைய வாழ்விடத்தை அமைத்துக் கொண்ட காலங்களில் மேற்குறிப்பிட்ட உணவுகளை உண்டு வந்தனர். இப்பொழுது இடப்பெயர்வினால் மேற்குறிப்பிட்ட உணவு வகைகளோடு அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றை முயல், உடும்பு, ஈசல், தேன் போன்றவற்றைக் கொடுத்து வாங்கி வந்தனர். இவை தவிர எலியின் வலையில் இருக்கும் நெல், கேழ்வரகு, சோளம் போன்றவற்றை மாவாக மாற்றிக் கூழாகச் சேர்த்தும் கலந்து உண்பார்கள். இக்கருத்துக்களை எல்லாம் கள ஆய்வின் போது இருளர்கள் விரிவாக எடுத்துக் கூறினார்கள் என்பதை இங்கே நினைவு படுத்திக் கொள்ளலாம்.(கன்னியம்மாள் 27/3/2015 திருப்போரூர்)
இனி சங்க இலக்கியத்துக்கும் இருளர்களின்உணவு முறைகளையும் ஒப்பீடுகளை பின்வருமாறு விரிவாக ஆராயலாம்.
எலும்பி அணையிற் குறும்பல் சுனைய
உவைக்கல் லன்ன பாறை யேறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்குங் (குறுந்.12)
பாலைநில வருணனையோடு வேட்டுவர்களின் வாழ்விடம் சுட்டப்படுகிறது. சிறிய அரண் போன்று வளர்ந்திருக்கும் எறும்புப் புற்றுகளையும் நீரில்லா சுனையையும் கொல்லன் உலைக் கலந்துள்ள பட்டைக் கல்லின் வெம்மையை ஒத்த பாறைகளையும் உடைய காட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் வேட்டுவர்கள் அம்பைத் தீட்டிக் கூர்மைப்படுத்துவதை ஓதலாந்தையார் பதிவு செய்துள்ளார். திருவண்ணாமலைப் பகுதியில் போளூர் தாலுக்காவில் இருளர்கள் பாறைகளின் இடுக்கில் வாழ்ந்துள்ளனர். அப்பகுதியை “இருளன் பாறை” என்று வழங்குகின்றனர். இருளர்கள் பாறை இடுக்குகளில் வாழ்ந்துள்ளனர் என்பதனை தற்பொழுது அங்கு வாழ்கின்ற மலையாளி பழங்குடிகளும் கூறுகின்றனர். அவர்களிடம் கேட்கும்பொழுது அவர்கள் இருளர்களை “வேட்டுவர்” என்றும் “வில்லியர்” என்றும் அழைப்பதாகவும் கூறுகின்றனர். அப்பாறையை நேரில் சென்று காணமுடிந்தது. இருளர்கள் வருடம் ஒருமுறை அப்பகுதிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதுபோன்று சங்க பாடல்களில் காணப்படும் எயினராகிய வேட்டுவர் வாழ்ந்ததை போன்று இருளர்கள் வாழ்ந்துள்ளனா் என்பதை அறியலாம்.
ஒரு சமூகத்தின் உணவுமுறை என்பது அச்சமூகத்தின் அசைவியக்கங்களை உணர வைக்கின்றது. அவர்களின் உணவுமுறையை உற்று நோக்கினால் ஒரு சமூகத்தின் பருவச் சூழ்நிலை, வாழ்நிலத்தின் விளைபொருள்கள், சமூகப் படிநிலைகள், உற்பத்திமுறை, பொருளாதார நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளமுடியும்.
சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் நிலத்திற்குக் கேற்ப தனது உணவுமுறைகளை வைத்திருந்தனர். ஒரு நிலத்தில் விளைந்த பொருட்களைப் பண்டமாற்றம் செய்துள்ளனர். வேட்டையாடி கொண்டுவந்த பொருட்களை முல்லை நிலத்து பெண்களிடம் கொடுத்து பண்டமாற்றம் செய்துள்ளனர் என்பதனை கீழ்க்காணும் பாடல் வரியின் மூலம் அறியமுடிகின்றது.
அல்குறுகானல், ஓங்குமணல் அடைகரை
தாழ் அரும்பு மலைந்த புணரிவளை ஞரல்
இலங்குநீர் முத்தமொடு வார்துகிர் எடுக்கும்
தண்கடற் படப்பை மென்பா லனவும்
காந்தள் அம் கன்னி கொலைவில் வேட்டுவர் (பதிற்று.30:9)
வேட்டுவர்கள் தான் வேட்டையாடிய ஆமான் இறைச்சியையும் யானையின் தந்தத்தையும் விற்று அதற்கு ஈடாகக் கள்ளினை பெற்றனர் என்றும் மேற்கூறிய பாடல் கூறுகின்றது. இதுபோன்று புறம். 33:1-6, பதிற்று.30:10-14, பொரு. 214-15 போன்ற பாடலிலும் வேட்டுவர்களின் பண்டமாற்று முறையைக் காணமுடிகின்றது. பாலை நிலத்தில் வாழ்ந்த வேட்டுவர்கள் ஆநிரை கவர்ந்தும் வேட்டையாடியும் வாழ்க்கை நடத்தினர். வேட்டையாடி உடும்பு, முயல், பன்றி போன்றவற்றை உண்டனர் என்பதனை பின்வரும் பாடலின்வழி அறியலாம்.
உடும்பு, கொலீஇ, வரிநுணல் அகழ்ந்து
நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி
எல்லுமுயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல்வேறு பண்டத் தொடை மறந்து இல்லத்து
இருமடைக் கள்ளின் இன்களி செருக்கும் (நற்றி.59:3)
இப்பாடலில் காட்டில் வாழ்கின்ற வேட்டுவர் உடும்பு, முயல் மட்டுமல்லாமல் புற்றின்கண் எடுத்த அரிசியை உண்டும் கள்ளிணை அருந்தியும் கிடந்தனா் என்று கூறப்பட்டுள்ளது. இது போன்று புற்றில் வாழும் ஈசலை உணவாகக் கொள்ளும் பொருட்டு வேட்டுவர்கள் புற்றினைத் தோண்டுதல் வழக்கமாக வைத்திருந்தனர். என்பதனை “செம்புற்றுத் தோண்டுதல் வழக்கம் புறம். 119:4 ஈர்வாய்ப் புற்றத்து, ஈயல் பெய்தட்ட இன்புளி வெஞ்சோறு அகம். 394:23ஆகிய பாடல்களின் வழி வேட்டுவர் புற்றின்மீது உள்ள ஈசலையும் புல்லரிசியையும் உண்டனர் என்பதை அறியமுடிகின்றது.
மான் அதட் பெய்த உணங்கு திணை வல்சி
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென
ஆரநெருப்பின், ஆரல் நாற, (புறம். 320)
இப்பாடலில் வேட்டுவர்கள், திணையையும் கானக் கோழியும் உணவாகப் பயன்படுத்தினர் என்பதனை அறியலாம்.
நெல் அமல் புரவின் இலங்கைத் கிழவோன்
வில்லியாதன் கிணையேம் பெரும
குறுந்தாள் ஒன்றைக் கொழுங்கண் அவ்விளர்
நறுநெய் உருக்கி, நாட்சோறு ஈயா (புறம். 379)
இப்பாடலில் வில்லியாதன் மாவிலங்கையில் வாழ்ந்தான் என்பதனையும் அவன் நெல் உணவான வழங்கிய செய்தியையும் அறியமுடிகிறது.
இவ்வேட்டுவ சிறுவர்கள் வேட்டையாடி கொண்டு வந்த உடும்பினைப் பாணருக்கு உண்ணக் கொடுத்தனர் என்பதன் மூலம் உடும்பினை அனைவரும் பயன்படுத்தியுள்ளனர். எனினும் வேட்டைத் சமூகத்திலேயே இவ்வுணவு அதிகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனை புறம்.326, 319, 325, 328, 333 பாடல்களின் வழியும் அறியலாம்.
கிழங்கு, தேன், போன்றவைகளையும் உண்டுள்ளனர் என்பதனை மலை. 174, 152, 55, 181, 184 பாடலின் வரிகளின் மூலம் அறியமுடிகின்றது. சங்க காலத்தில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களுக்கு வள்ளிக் கிழங்கு முக்கிய உணவாக அமைந்துள்ளது. இக்கிழங்குகளை வேட்டுவர்களும் உண்டுள்ளனர். இன்றும் பழங்குடிகள் காட்டில் கிடைக்கும் ஏராளமான கிழங்கு வகைகளைச் சுட்டும் வேக வைத்தும் உணவாகப் பயன்படுத்துகின்றனர்.
கிழங்குகளைத் தோண்டும் பொழுது கூட்டாக உழைக்கின்றனா். இருளர்கள் வள்ளி கிழங்கு, கொட்டிகிழங்கு, மரவள்ளிகிழங்கு போன்றவற்றை உணவாக உண்ணுகின்றனர். ஈசல், கற்றாழைச் சோறு, பொச்சிகீரை, பண்ணைக் கீரை, எலி, புல்லரிசி போன்றவற்றை இன்றும் உண்ணுகின்றனர்.
கணேசன், வேடல், வயது 60 என்பவர் நாங்கள் மழைபெய்தால் புற்றின் மீது இருக்கும் ஈசலை புடிச்சிகிட்டு வந்து தருவோம். அந்த புல்லரிசியை உலர்த்தி இடிச்சி பெண்கள் எல்லாம் சமைப்பாங்க, என்று கூறினார். கோவிந்தன், குருவராஜப்பேட்டை, வயது 32என்பவர் இன்னகி வேட்டையில் பிடிச்சிகிட்டுவந்த உடும்பைதான் இப்ப குழம்பு வைக்கிறேன். முயல், எலி, அணில், கோழி எல்லாத்தையும் சாப்பிடுவோம் எனக் கூறினார். கள ஆய்வின் பொழுது உடும்பு கறி குழம்பு உண்ணுவதையும் அணில் குழம்பு உண்ணுவதையும் நேரில் காணமுடிந்தது.
குமார், உசிமணிகுப்பம் வயது 28 எனபவர் 10 இல்லானா 15 அணிலு பிடிச்சிகிட்டுவந்தால் எங்க வீட்டுல 3 இல்லான 4 குழம்பு வச்சிவிட்டு, மீதியை எங்க மக்களுக்கு கொடுப்பாங்க எனக் கூறினார். முயல், உடும்புலாம் வேட்டையாடுன எங்களுக்கு போக மீதியை ஊருக்குள்ள இருக்கும் நபர்களிடம் விற்றுவிடுவோம் என்றும் கூறுகின்றார். இச்செய்தியில் பங்கீட்டு முறைமையைக் காணமுடிகிறது.
இதுபோன்று நத்தை, ஈறல், மீன், போன்றவற்றை பிடித்த சாப்பிடுவோம் மீதியிருந்தால் விற்றுவிடுவோம் எனக் கூறுகின்றார். சங்க காலத்தில் கூறப்பட்ட வேட்டுவர்களின் உணவு முறை இன்றும் இருளர்களிடமும் காணமுடிகின்றது.
வட்டவட்டப் பாறையிலே வரகரிசி தீட்டியிலே
ஆருதந்த சோமன் சேலை ஆலவட்டம் போடுதடி
என்று வசந்தி, போளுர், வயது 25 என்பவர் பாடுவதில் இருந்து, இவர்கள் வரகு அரிசியை உண்டனர் என்பதனையும் அறியமுடிகிறது. இப்பாடலை திணை குறுமகளிர் இசைபாடும் வன்மையும் இலக்கிய நயத்தையும் இருளர்களிடம் காணலாம்.
இம்மக்கள் வேட்டையாடும் விலங்குகளை உண்ணுவதால் இம்மக்களின் வாயில் ஒருவித நாற்றம் வீசும். இத்தன்மையை,
வெருக்கு விடையென்ன வெருள்நோக்குக் கயந்தலைப்
புள்ளூன் தின்ற புரவு நாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணையகா அர் (புறம். 324)
மேற்குறிப்பிட்ட பாடலில் இவ்வேடுவர்கள் ஆண்காட்டுப் பூனைபோல் வெருண்ட பார்வையும் பெரிய தலையையும் பறவைகளின் ஊனைத்தின்பதால் புலால் நாற்றம் வீசும் மென்மையான வெளுத்த வாயைமுடைய வேட்டுவர்கள் என்று கூறுகிறது.
பக்தி இயக்க கால கட்டமாகிய கி.பி.7. üற்றாண்டில் சுந்தரா் தான் பாடிய தேவாரத்தில் இவ்வேட்டுவர்களின் வாய் புலால் நாற்றம் வீசும் என்று கூறியுள்ளார்.
பசுக்க ளேகொள்று பாவிகள்
பாவம் ஒன்றறியார்
உதிர்க்கொ லைபல நேர்ந்து நான்தெறும்
கூரை கொள்ளுரிமிடம்
முசுக்கள் போற்பல வேடர்வாழ் (தேவா. 500)
இப்பாடலில் புலால் உணவை உண்ணுபவா்கள் வேட்டுவர்கள் என்றும் அவர்கள் பாவம் அறியாதவர்கள் என்றும் நாற்றம் வீசும் வாயினை உடையவர்கள் என்றும் சில வேட்டுவர்கள் பசுக்களைக் கவர்ந்தும் அவற்றை தின்றும் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
இம் மக்களின் நிலையை சங்க காலத்தில் உள்ளது போன்றே இன்றும் உள்ளது இம்மக்களிடம் ஒருவித நாற்றம் வீசும். இவர்களின் வாழ்வில் எவ்வித முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. இவர்களின் இந்நிலையைப் சுந்தர தேவாரம் இவர்கள் இழிந்த நிலையில் உள்ளவர்கள் என்று கூறி அவர்கள் திருட்டு தொழில் செய்யும் காட்டுப் பாதையில் எதற்கு வந்து அமர்ந்தாய் சிவனே என்று கூறுவதோடு, கொடிய வேட்டுவர்கள் எனவும் கூறியுள்ளார்.
இருளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேலை உணவையே உண்ணுகின்றனர். இவர்கள் பட்டினி கிடப்பதற்கு அஞ்சுவதில்லை. மலையில் கிடைக்கும் பொருட்களையும் அவர்கள் உண்டு வாழ்கின்றனர். எட்கர் தா்ஸடன் இருளர்களை வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கற்பட்டு இருளர்கள் எனப் பிரித்து உணவுப் பழக்க வழக்க முறையைப் பற்றி கூறியுள்ளார். “மறியாடு, வெள்ளாடு, வயல் எலி, கோழி, மான், பன்றி, முயல், காட்டுக்கோழி, புறா, காடை ஆகியவற்றை உண்பர்.
குளிர்காலத்தில் அல்லது காட்டில் உணவு தேடி அலைந்து திரியும்போது பசியின் கொடுமையால் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய நேர்வது உண்டு, அப்பொழுது பெண்களும் குழந்தைகளும் தனித்தவர்களாகி விடுவர். அப்போது தன் குழந்தையின் பசியைத் தீர்க்க பால் ஊட்ட இயலாத தாய் அது கடைசியில் படப்போகும் வேதனையை எதிர்ப்பார்த்து அக்குழந்தையை உயிரோடு புதைத்து விடுவாள் என்று கூறியுள்ளது. (எட்கா் தா்ஸடன், தென்னிந்திய குலங்களும் குடிகளும் ப.494) மேற்குறிப்பிட்ட செய்தியைப் போன்று இருளர்கள் வறுமையினால் குடும்பத்துடன் வேறு ஊருககு செல்வதும் அல்லது இறந்துவிடுவோம் என்று களஆய்வில் கூறுகின்றனர். தற்பொழுது வரைகூட இம்மக்கள் உணவிற்காகக் கடுமையாக உழைத்தும் சரியாக உணவை உண்பது இல்லை.
வேட்டையாடி உணவு சேகரித்து வாழ்ந்தாலும் இம்மக்களுக்கு நிலையான வீடுகள் இல்லை என்பதால் இம்மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் இலவச அரிசி கூட கிடைப்பது இல்லை. கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் நிலையே காணப்படுகிறது. “இங்கப் பத்து வருஷமா இருக்கோம். எங்களுக்கு ரேஷன் அட்டை, ஓட்டு அட்டை எதுவும் கிடையாதுங்க. சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டம் பாதிபேருக்கு அட்டை இருக்கு அதுலவருதைக் கொஞ்சம் கொடுப்பாங்க இல்லையென்றால் பட்டினி என்று இராமாபுரத்தை சார்ந்த குப்பு என்பவர் வயது 38 கூறினார்.
உணவு முறையால் இம்மக்கள் எவ்வாறு பிற சமூகத்தரால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்பதனையும் அக்கால வேட்டுவரின் தொல் எச்சமாக இவர்கள் இருப்பதையும் அறியமுடிகிறது.
முடிவுரை
உணவு என்பது ஒரு சமூகத்தின் வெளிப்பாடு உணவு முறையை சங்க இலக்கியத்தோடு ஒப்பிட்டு ஆராய்ந்ததன் மூலம் இவர்களின் உணவு முறை என்பது ஆதிகால உணவு முறை என்பது நமக்கு புலப்படும்
இன்றும் இருளர்கள் இயற்கை சார்ந்த உணவுகளையே உட்கொள்கின்றனர் இயற்கையையே மருந்தாகவும் இயற்கை பொருள்களையே உயிராகவும் போற்றி வாழ்ந்து வருகின்றனர் இருளர்கள் என்பதனை இக்கட்டுரையின் வழி அறிய முடியும்.
துணை நூற்பட்டியல்.
1. இருளர்கள் ஒரு அறிமுகம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை
2.இருளர்களின் மருத்துவம் விஜயலட்சுமி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை.
3. சங்க இலக்கியம் முழுவதும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை
4. களாய்வு பகுதிகள் முழுவதும்.