“மதம் சார்ந்த பகைமையும் வெறுப்பும் மேலோங்கி வருவதாக நம்பப்படும் வேளையில் தமிழ்நாடு தழுவிய அளவில் ஒரு குவளை நோன்புக்கஞ்சி வேற்றுமைகள் அனைத்தையும் கடந்து எல்லோரை யும் இணைத்துக் கட்டுகிறது என்பது எவ்வளவு மகிழ்வான ஒன்று.”
- ஹாமீம் முஸ்தபா
1875-1880 தாதுவருஷ பஞ்சத்தின் காலம். தமிழகமே பஞ்சத்தில் அடிபட்டுக்கிடந்தது. பசியும், பட்டினியும் அன்றாடமானது. குஞ்சரம் மாள் வரலாற் றை இங்கு நினைவு படுத்திக்கொள்ளலாம். மதுரை யைச் சார்ந்தவர். கணிகையர் குலம். கைநிறைய மட்டு மல்ல அதற்கு மேலும் செலவம். மதுரையின் வடக்கு ஆவணி மூல வீதியில் இருந்த இரண்டு மிகபெரிய வீடுகளும் குஞ்சரம்மாளு டையது. தாதுவருஷ பஞ்ச காலத்தில் முதல் இரண்டு ஆண்டு காலத்தை இயல்பாகக் கடந்து சென்ற குஞ்சரம் மாக்கு உண்ண எதுவுமற்ற மக்களின் வலியைத் தாங்க முடியவில்லை.
ஒருநாள் முடிவெடுத்தார் . தன்னுடைய வீட்டுத்திண்ணையில் அண்டாக்களை கொண்டு வைத்து அதில் கஞ்சி வைத்து மக்களுக்கு வழங்கத் தொடங்கினார். ஊரெல்லாம் அவரின் வீட்டு வாசலை நோக்கியே இருந்தது. நாதியற்ற மக்களின் பெருந்துயரை அவரின் இரக்கம் ஆற்றுப்படுத்தியது. தன்னுடைய சேகரிப்பு அனைத்தையும் கரைத்து கஞ்சி தயாரித்தார். மக்களின் வயிறு குளிர்ந்ததில் அவரின் மனம் நிறைந்து தழும்பியது . மக்களின் கண்கண்ட தெய்வமானாள். குஞ்சரம்மா இறந்தபோது திரண்ட மக்கள் கூட்டத்தைப் பற்றி குறிப்பு எழுதிய மதுரைக் கலெக்டர் ‘கோவில் விழாக்களுக்கு இணையான கூட்டம்’ என்றார். மக்கள் அவளை தெய்வ மாக்கினார்கள் .குஞ்சரம்மா கணிகையர் குலம் என்பதால் சதங்கையை அவருக்குப் படைலிட்டு வழி பட்டார்கள்.
பசியை நோயாகவே தமிழ்ச்சமூகம் அணுகியது.’பசிப்பிணி என்னும் பாவி’ என்கிறார் சீத்தலைசாத்தன். பசியை வெல்லவேண்டும் அவர் தன்னுடைய மணிமேகலையில் ‘அமுதசுரபியை’ உருவாக்கிக் காட்டி னார். அதிசயங்கள் நடந்தாவது மக்கள் பசி நீங்கவேண்டும் என்பது சீத்தலையின் கனவாக இருந்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கஞ்சித்தொட்டியின் வரலாறு எட்டாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. சைவ பக்தி எழுச்சியுடன் இது அறிமுக மாகிறது. அதற்கு முந்தயப் பொருளாதாரம் வணிகத்தை மையப் படுத்தியதாக இருந்தது. சமணமும் பெளத்தமும் வணிகத்தை மையப்படுத்தின. மக்களின் அன்றாடத் தேவைக்கான வேளாண் உணவுப்பொருள் உற்பத்தியில் கவனம் கொடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து வேளாண் எழுச்சியுடன் சைவம் மேலெழுந்து வந்தபோது மக்களின் பசி முன்னிலைப்பட்டது. கஞ்சித் தொட்டிகள் தொடங்கப்பட்டன.
தமிழர் வாழ்வில் அமிழ்துக்கு இணையான சொல் கஞ்சி. சோறு என்னும் சொல் புழக்கத்தில் இருந்தாலும் சென்ற நூற்றாண்டின் மத்தியகாலம் வரை சோறு என்பது அபூர்வமான ஒன்று.உணவு என்றாலே கஞ்சிதான். வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடிய பல்வேறு காலங்களில் கஞ்சித் தொட்டிகளே மக்களின் அமுத சுரபிகள். அரிசி உணவுக்கு வந்த பிறகும் கஞ்சியிலிருந்து நாம் விடுபடவில்லை.இந்த நெடும் மரபில் வேர்விட்டு படர்ந்து நிற்கிறது நோன்புக்கஞ்சி .
முஸ்லிம்களின் உணவுப் பழக்கத்தில் தீவிர இடையீடு ஒன்றினை நிகழ்த்தும் காலமாக ரமலான் இருக்கிறது. இந்த மாதத்தில் முப்பது நாட்களும் முஸ்லிம்கள் மேற்கொள்ளும் நோன்பு அவர்களின் உணவு முறையில் உண்ணும் நேரத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.. தமிழ்நாடு முழுவதும் ரமலான் காலத்தில் முஸ்லிம்களின் உணவு முறை குறித்து ஆய்வு மேற்கொண்டால் பல சுவராஸ்யங்கள் நமக்குக்கிடைக்கும்.
நோன்பு இருபத்து ஏழாம் நாள் என்பது முஸ்லிம்களுக்கு முக்கியமான நாள் . அன்றைய நாளின் இரவில்தான் நபி முஹம் மதுக்கு இறையின் தரப்பிலிருந்து திருக்குர்ஆன் அருளல் ஆரம்பித்தது என்பது நம்பிக்கை. இந்த நாளில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் , அம்பாசமுத்திரம் வட்டார முஸ்லிம்களின் நோன்பு கால உணவில் வித்தியாசமான ஒரு வழக்கம் இருக்கிறது.அன்றைய அவர்களின் உணவில் சுரைக்காய் கட்டாயம் இடம்பெறும். அன்றைய சந்தையில் சுரைக்காய் வியாபாரம் அமோகமாக இருக்கும்.
சுரைக்காயை நறுக்கும்போது அதன் வித்து களை பத்திரமாக சேகரித்துக்கொள்வார்கள்.சேகரித்தவற்றை பெண்கள் தங்களின் உள்ளங்கையில் வரிசையாக அடுக்கிவைத்து அழகுபார்ப்பார்கள். என்ன காரணம்?. சீரான அளவுடன் கூடிய சுரைக்காயின் வெண்ணிற வித்து கள் போன்று நபி முஹம்மதின் பல்வரிசை இருக்கும் என்று இவர் களிடம் ஒரு கதையாடல் இருக்கிறது . அந்தக் கதையாடல் சுரைக் காயை நோன்புகால உணவுகளில் ஒன்றாக சேர்க்க வைத்துள் ளது.
எழுத்தாளர் ஜமீலா ராசிக் தன்னுடைய வளர்பிறை நூலில் குறிப்பிடும் ஏரலின் ‘பிர்னிகஞ்சி’ பற்றிய குறிப்புகள் சுவராஷ்யமானவை. நோன்பு இருபத்து ஏழாம் நாள் இரவில் சிறப்புத்தொழுகைக்குப்பிறகு வழங்கப் படும் சிறப்பு இனிப்பு உணவாக ‘பிர்னிகஞ்சி’ இருக்கிறது. அதே நாள் இரவு நான் சார்ந்திருக்கும் தக்கலை அஞ்சுவன்னம் முஸ்லிம் குடியிருப்பில் சிறப்பு உணவாக ‘பானக்கம்’ இருக்கும்.பானக்கம் என்பதைவிடவும் அதனை தயாரிக்க எடுத்துக்கொள்ளும் முஸ்தீபு அத்தனை சிறப்பானதாக இருக்கும்.
நோன்பை துறக்கும் நேரமான இப்தார் நேரத்தில் வழங்கப்படும் உணவுப் பதார்த்தங்கள் தனிப்பகுதி. நோன்பு என்பது உண்ணாநிலை யுடன் தொடர்புடையது .இருபத்தி நான்கு மணிநேரம் கொண்ட நாளின் பகுதிப்பொழுது உணவற்ற தன்மையில் இருக்க மீதி பகுதி உணவின் கொண்டாட்டமாக அமைகிறது.
உணவெனப்படுவது உண்ணுதல் மட்டுமல்ல உண்பதைக் கொண்டாட் டமாக மாற்றுவதும்தான். முஸ்லிம்களின் நோன்புக் காலம் உண்பதைக் கொண்டாட்டமாக மாற்றுகிறது .முஸ்லிம்கள் மேற்கொள்ளும் நோன்பு பசியுடன் தொடர்புடையது மட்டுமல்ல உணவுடனும் நெருக்கமானதாக இருக்கிறது.
நாளெல்லாம் பகல்வேளையில் பதினான்கு மணிநேரம் பசித்திருக்கும் முஸ்லிம்கள் நோன்பை நிறைவு செய்தபின் எடுத்துக்கொள்ளும் உணவு,அதற்கு அவர்கள் கொடுக்கும் சிரத்தை இவற்றை எல்லாம் அவதானிக்கும்போது உண்பதை அவர்கள் இந்த முப்பது நாட்களும் ஒரு கொண்டாட்டமாகவே நிகழ்த்துகிறார்கள். .
வட்டாரத்துக்கு வட்டாரம் நோன்பு சார்ந்த உணவு பழக்கம் வேறு பட்டிருந்தாலும் தமிழ்நாட்டுக்கு உரிய நோன்பின் பொதுவான உணவாக கஞ்சி அமைந்துள்ளது . ஆடம்பர உணவல்ல; மிகமிக எளிமையான உணவு.ஆனாலும் தமிழ்ப்பண்பாட்டில் கஞ்சி பெற்றிருக்கும் இடம் தனித்துவமானது.
தமிழர் உணவுப் பழக்கத்தில் கஞ்சியின் இடம் நெடும்காலத்திற்குரியது. புற்கை,(புறம்,84;1), சிறுதானியங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட அம்புளி (புறம்,215;1-4), வரகரிசியில் தயாரிக்கப்பட்ட கஞ்சி குறித்த குறிப்பினை புறநானூறு (34;8-10 )குறிப்பிடுகிறது. பழந்தமிழ் மக்களின் கோடைகால உணவாக கஞ்சி இருந்திருக்கிறது.”கஞ்சி குடிப்பதற்கிலார்” என்னும் பாரதியின் சொல்லாடல் தமிழ்ச்சமூகத்தில் கஞ்சியின் பொதுமைத் தன்மையை உணர்த்தி நிற்கிறது.
பின்னாளில் நிவுடமையும் சாதிய ஒடுக்குமுறையும் ஒன்றிணைந்த போது பண்ணைகளில் வேலைசெய்த மக்களுக்கு வழங்கப்பட்ட உணவாக கஞ்சி இருந்ததையும் முதலாளிஅம்மா கொண்டுவரும் கஞ்சிக்காக காத்திருந்த துயர்களையும் வரலாறும் ,இலக்கியங்களும் நமக்கு அறிவிக்கின்றன.இத்தகைய பண்ணை மற்றும் சாதி ஒடுக்கு முறைகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய சமத்துவமான துவையல் பந்தியும் இங்கு கவனிக்கத்தக்கது.
பொங்காலை, கூழ்,கஞ்சி போன்ற சொல்லாடல்கள் அனைத்தும் பெண்தெய்வ வழிபாட்டு மரபோடு தொடர்புடையதாக இருக்கின்றன. திருவிதாங்கூர் மரபில் பகவதி அம்மனுக்கு பொங்காலை, தமிழ்நாட்டு மரபில் தேவிக்கு கஞ்சி அல்லது கூழ், கிறிஸ்தவ வெகுமக்கள் மரபில் மாதாக்கு நேர்ந்து கூழ் காய்ச்சுதல் என்று நாட்டார் சமய மரபுகளுடன் தொடர்புடையதாகவும் இது இருக்கிறது.
இந்தப் பின்புலத்துடனே தமிழ் முஸ்லிம் உணவுப் பண்பாட்டில் குறிப்பாக நோன்புகால உணவு பண்பாட்டில் கஞ்சி முக்கியமான இடம் வகிக்கிறது. தமிழகத்தில் பொதுஉணவு முறையில் குமரிமாவட்டம் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் அன்றாட உணவு முறைக்குள் கஞ்சி இருப்பதாகத் தெரியவில்லை.ஆனால் குமரி மாவட்டத்திலும் கேரளாவிலும் அன்றாட பொது உணவுக்குள் கஞ்சிக்கு முக்கிய இடமுண்டு.
சாதாரண நாட்களில் எத்தனையோ வகையான கஞ்சி உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. குமரிமாவட்ட அனுபவத்தில் இருந்து சொல்வதாக இருந்தால் சுக்குக்கஞ்சி, காயக்கஞ்சி, பயிறு கஞ்சி, பால் கஞ்சி, உளுந்து கஞ்சி, காய்கறி கஞ்சி, இறைச்சி கஞ்சி, வெள்ளை கஞ்சி, மசாலா கஞ்சி, சர்க்கரை கஞ்சி என்று வரிசைப்படுத்தலாம். இந்த அத்தனை வகை கஞ்சியும் எங்களின் சிறுவயது பருவத்தில் வீடுகளில் ஏதேனும் ஒருநாள் சமைக்கப்பட்டிருக்கும்.
இதுதவிர குமரிமாவட்ட முஸ்லிம்களிடம் குறிப்பாக கல்குளம் ,விளவங்கோடு வட்டார முஸ்லிம்களின் பண்பாட்டு மரபில் கஞ்சிவைத்து ஊத்துதல்’ என்பது நோய் சார்ந்த பரிகாரச்சடங்காகவும் இருந்தது. இந்த வட்டார முஸ்லிம்களிடம் இஸ்லாமிய வெகுமக்கள் நம்பிக்கையில் தாய்மார்கள் குறித்த ஒரு பார்வை உண்டு. தமிழ், இந்திய மரபில் சப்த கன்னியர் குறித்த பார்வை போன்றது. என்றாலும் முஸ்லிம்களிடம் இருக்கும் தாய்மார்கள் நம்பிக்கையில் பெளத்த ,சமண மதங்களின் செல்வாக்கும் , பகவதி ,தேவி போன்ற நாட்டார் சமய செல்வாக்கும் அதிகம்.
முன்பெல்லாம் (எண்பதுகள் வரை) வீட்டில் யாருக்காவது வைசூரி, அம்மன் போன்ற நோய்கள் ஏற்பட்டால். வீட்டில் தாய்மார்கள் வந்துள்ளார்கள் எனும் நம்பிக்கை இருந்தது. தாய்மார்களுள் ஒருவரின் பெயர் முத்துருவி தாய். வைசூரியால் ஏற்பட்ட புண் முத்து போல் இருக்கும். அதனை உதிர்க்கச்செய்யும் ஆற்றல் உடையவர் என்பதால் அவரின் பெயர் முத்துருவி. தாய். இந்த நாட்களில் வீடு எப்போதும் சுத்த பத்தமாக இருக்கும். மீன்,இறைச்சி போன்ற உணவுகளை அந்நாளில் வீட்டில் தவிர்த்து விடுவார்கள் .
நோய்கண்டவர் மேனியில் இருக்கும் புண்கள் எல்லாம் குணமாகி உதிர்ந்து விழும் .பின்னர் தலை குளித்து சுத்தமாகும் நாளில் கஞ்சி வைத்து வீட்டினுள் முன்வாசலின் நேராக தலைவாழை இலை விரித்து அதில் பல்வேறு எண்ணிக்கையில் காய்கறி கூட்டுகள் பரிமாறி அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தை களை அழைத்து உண்ணக் கொடுப்பார்கள். இப்போதும் சாதாரண நாட்களில் இந்தத் தாய்மார்களின் நினைவிடங் களுக்கு கஞ்சியும் , துவையலும் காணிக்கையாக கொண்டு சென்று கொடுக்கும் வழக்கம் இருக்கிறது . அதிலும் ஒரு தர்காவில் கஞ்சியுடன் காணம் கொண்டு தயாரிக்கப்பட்ட காணத்துவையல் தொடுகறியாகக் கொடுக்கிறார்கள்.
தமிழ்ப்பண்பாட்டில் வளைகாப்புச்சடங்கு முக்கியமான ஒன்று.முதல் குழந்தை பிறப்புடன் தொடர்புடைய சடங்கு இது. குமரிமாவட்ட முஸ்லிம்களின் பண்பாட்டு மரபில் இந்தச் சடங்கினை ‘கஞ்சிவச்சு பாத்திஹா’ என்று குறிப்பிடுகிறார்கள் . வட்டார உச்சரிப்பில் ‘கஞ்சூப்பு’ என்கிறார்கள் . நபி முஹம்மதுவின் மகள் பாத்திமாவை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் இந்தச்சடங்கில் முதலாவது கொடுக்கப்படும் உணவு கஞ்சியாக இருக்கிறது.
வீடுகளில் தயாரிக்கப்படும் கஞ்சிகளின் சுவையில் இருந்து வேறுபட்ட சுவையுடையது நோன்புக் கஞ்சி.நோன்புக் கஞ்சியில் இறைச்சி மசாலா சேர்த்து தயாரிக்கப்படும் மசாலா கஞ்சியும், இறைச்சி சேர்த்து தயாரிக்கப்படும் இறைச்சிக் கஞ்சியும் உண்டு .
கஞ்சி உணவு தயாரிக்க தமிழகம் முழுவதும் இப்போது பச்சரிசி பயன்படுத்துகிறார்கள். வாத நோயின் தன்மை பச்சரிசியில் உண்டு என்பதால் குமரி மாவட்டத்தில் பொதுவாக கஞ்சி தயாரிக்க குருணை அரிசிதான் பயன்படுத்துவார்கள். குருணை என்பது அரிசியின் உடைந்த மேல்பகுதி .அரிசியின் சத்து நிறைந்த பகுதி இது,
ஆனால் முஸ்லிம்கள் வீட்டளவில் தயாரிக்கும் கஞ்சிக்கு தனியாக ஒருவகை அரிசியை பயன்படுத்துகிறார்கள். ‘கஞ்சிக்கரிசி’ என்றே அதனைக் குறிப்பிடுகிறார்கள்.சோறு சமைக்க பயன்படுத்தும் அரசியை தயார் செய்யும்போது நெல்லினை முழுமையாக வேகவைப்பார்கள். கஞ்சிக்குரிய அரிசி தயாரிக்க நெல்லை வேக வைக்கும்போது முழுமை யாக வேகுவதற்கு முந்திய நிலையில் எடுத்து உலர்த்தி அதனை அரிசி யாக்கி விடுகி றார்கள். இவ்வாறு எடுக்கப்படும் நெல்லினை உலர்த்தி பெறும் அரிசி கஞ்சிக்கரிசி என்று அழைக்கப் படுகிறது. இந்த அரிசியில் கஞ்சி மட்டுமல்ல வேறுபல உணவுகளும் தயார் செய்கிறார்கள் . முக்கியமாக முஸ்லிம்களின் சிற்றுண்டியுள் ஒன்றான பாலாடை தயாரிக்க கஞ்சிக்கரிசி பயன்படுகிறது. அதுபோல் குமரிமாவட்ட முஸ்லிம்களுக்கே உரிய இனிப்பு பதார்த்தமான கிண்ணத்தப்பம் செய்யவும் கஞ்சிக்கரிசி முக்கியம்.
முன்பெல்லாம் பெரும்பாலான குடும்பங்களுக்கு சொந்தமாக சிறு அளவிலாவது நெல் விளையும் வயல் இருந்தது. எல்லா வீடுகளிலும் நெல் அவித்து உள்ரவைத்தல் என்பது இயல்பாக இருக்கும். அறுவடை செய்த நெல்லினை சேகரித்து வைக்கும் பத்தயம், நெல் அடுப்பு , நெல் அவிக்கும் குட்டுவம் , அவித்த நெல்லினை உலர்த்தும் தோட்டுப்பாய் எனப்படும் நெல்லுபாய், நெல் உலர்த்தும் போது கொத்தவரும் பறவைகளை விரட்டும் கம்பு குச்சு , அரிசி போட்டுவைக்கும் அரிசி பானை அல்லது அரிசி டப்பா, அரிசியிலிருந்து கல்லையும் , குருனையையும் தனியாகப்பிரித்தெடுக்க சொளவு , எல்லாம் புழங்கு பொருட்களாக இருந்தன
நோன்பு துறப்பின் நிகழ்வு என்பது இன்று ஒரு கொண்டாட்ட மனநிலை யில் மக்களை ஆற்றுப்படுத்துகிறது. இப்தார் என்னும் நிகழ்வு தமிழக அரசியல் ,பண்பாட்டுச் சூழலில் தவிர்க்க இயலாத சொல்லாக ஆகிவிட்டது. அரசியல் நிலைக்கு அப்பால் உறவுகளையும் சமூக நல்லிணக்கத்தையும் பேணவும் பாதுகாக்கவும் கூடிய ஒன்றாக இப்தார் மாறி இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ரமலான் மாதத்தில் ஒருநாள் சென்னை வாலாஜா பள்ளிவாசலில் நோன்பு துறக்கவரும் நோன்பாளிகளுக்கு சகோதர சமூகத்தவர்கள் அதற்கான உணவினை தங்களின் சார்பில் வழங்குகிறார்கள்.
அனைத்துத் தரப்பு மக்களுடனும் சேர்ந்திருந்து உண்பது, பகிர்ந்து உண்பது, ஒரே உணவை ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒன்று கூடுவோர் எடுத்துக்கொள்வது. என கூட்டுமனம் ஒன்று இதற்குள் தொழிற் படுகிறது . இந்த கலாச்சாரம் இன்று தமிழகத்தின் கடைகோடி வரைக்கும் வந்து சேர்ந்துள்ளது.
நோன்பை முடித்து உணவேற்பதின் அடையாளமாக .பேரீத்தம் பழமும் தண்ணீரும் கொண்டு முஸ்லிம்கள் நோன்பு திறக்கின்றனர். எத்தனை வகையான உணவுகள் விதம் விதமாக பரத்தி வைக்கப்பட்டிருந்தாலும் பேரீத்தம் பழமும் தண்ணீரும்தான் முதல் உணவு .இந்த உணவு முறை உலகு தழுவியதாக இருக்கிறது. அரபுலகு சார்ந்த உணவாக இருந்த பேரீத்தம் பழம் இன்று உலகு தழுவியஅளவில் முஸ்லிம்களின் ரமலான் உணவு என்னும் அடையாத்தைப் பெற்றுள்ளது. பேரீத்தம் கனிக்கு ஏன் நோன்பில் இத்தனை முக்கியத்துவம் .
ரமலான் என்றால் சுட்டெரித்தல் என்பது பொருள்.அரபு நாடுகளில் ரமலான் மாதம் அடிக்கிற வெயில் அத்தனை உக்கிரமாக இருக்கும் .தக்கலை ஹலீமாவின் சொற்களில் சொல்வதாக இருந்தால் “சூரியனைத் திருப்பிச்சுடும் பாலைவனச்சசூடு “ தான் அரபுலகின் ரமலான் காலத்து வெயில்காலம்.
சங்ககாலத் தமிழ்ச் சமூகம் கார் காலத்தை எப்படி பொருள் ஈட்ட இயலாத காலமாக கருதியதோ அதேபோன்று தான் பழங்குடி அரபுகள் ரமலான் மாதத்தின் வெயிலின் உக்கிரம் காரணமாக பொருள் தேட வெளியில் செல்ல முடியாத நிலைக்கு ஆளா யினர்..கூட்டுக்குள்ளேயே சுருங்கிக்கொள்வார்கள்.
தொடக்கத்தில் முஹம்மது நபியைப் பின்பற்றி இஸ்லாத்தை ஏற்றவர்களுள் பெரும்பான்மையோர் எளிய மனிதர்களாக இருந்தனர். ரமலான் மாதம் வெயிலின் உக்கிரம். வெளியில் சென்று பொருளீட்ட முடியாது. உணவுத்தேவையை எப்படி சமாளிப்பது என்னும் கேள்வி எழுகிறது. இந்த ஒரு மாத காலத்தையும் எப்படிக் கடந்து செல்வது என்று வரும்போது இஸ்லாம் அதற்கொரு மாற்றுத்திட்டம் ஒன்றை சமய ரீதியாக முன்வைத்தது..
ரமலான் மாதம் முழுவதும் பகல் வேளையில் உண்ணாமல் பருகாமல் நோன்பு இருத்தல் என்பது சமயக்கடமைகளுள் ஒன்றாக ஆகியது. ஒரு புறம் பசியை இறைவனுக்காக ஏற்றுக்கொள்ள உளவியலாக முஸ்லிம்களை அது பக்குவப்படுத்தியது.மறுபுறம் இறைவனுக்காக பசியைப் பொறுத்திருத்தல் என்னும் சகிப்புக்கு பதிலியாக மரணத்துக்கு அப்பால் கிடைக்கும் சொர்க்கமும் அதன் சுகங்களும் இறையியல் ரீதியாக உறுதி செய்யபட்டது. இந்த அடிப்படையில் இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ஒன்றாக ரமலான் மாதத்தின் நோன்பு ஆக்கப்பட்டது.
பகலில் உண்ணா நோன்பு சரி. நோன்பை முடித்துவிட்டு எதை உண்பது என்று வரும்போது அந்த மண்ணில் விளையும் உணவில் இருந்தே மாற்று முன்வைக்கபட்டது .ரமலான் மாதத்தில் அரபு நாடுகளில் இயற்கையாக காய்த்து கனியும் பேரீத்தம் பழங்கள் குறைந்தபட்சம் பசி தீர்க்கும் நிவாரணியாக இருந்தன. நோன்பு திறக்கும் உணவு குறித்துப் பதிவாகி இருக்கும் நபி மொழிகளில் கனிந்த பேரீத்தம் பழமும் தண்ணீரும் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன.
நம்மூர்களில் பாக்கெட்டில் கிடைக்கும் பேரீத்தம் பழமல்ல ,அரபுலகில் விளையும் பேரீத்தம் கனியின் தன்மையே வேறு. காயசண்டிகை காலால் இடறி தீரா பசி நோய்க்கு ஆளான முனிவன் கொண்டுவந்த கனியை விடவும் சக்தி நிறைந்தது..
ஒரு காலத்தில் பழங்குடி அரபுகளின் பசிக்கு ஒற்றை நிவாரணியாக இருந்த பேரீத்தம் பழம் இன்றும் அந்த அடிவயிற்று பசிப்பிணியின் நிவாரணியாக இருந்த ஈரம் குறையாமல் முஸ்லிம்களின் ஒர்மை களில் புனிதப்பிரதிகள் வழியாகத் தங்க வைக்கப்பட்டுள்ளது
நோன்பை நிறைவு செய்யும் முஸ்லிம்கள் எடுத்துக்கொள்ளும் முக்கிய உணவு கஞ்சி. தமிழகத்தில் சுமார் எட்டாயிரம் தொழுகைப் பள்ளிகள் இருக்கிறது என்றால் எல்லா இடங்களிலும் கஞ்சி பரிமாறப்படு கிறது. தற்போது தமிழ்நாட்டு அரசாங்கம் விலையில்லா அரிசி நோன்பு கஞ்சி தயாரிக்க வழங்குகிறது.
இன்று நாம் துரித உணவுக் கலாச்சாரத்தில் நுழைந்து வெகு தூரம் பயணித்து விட்டோம் . ஆனால் கஞ்சியுடன் இருக்கிற தொப்புள் கொடி உறவு அறுந்து போகவில்லை என்பதற்கு நோன்புக் கஞ்சி ஓர் அடையாளம். மாதத்தின் முப்பது நாட்கள் பகலெல்லாம் உண்ணாமல் பருகாமல் இருந்த நிலையில் உடம்பின் சூடேறிய நிலையை தணித்திடும் குளிரூட்டியாக கஞ்சி இருக்கிறது. .
முஸ்லிம்கள் தங்களுக்குள் நடத்தும் இந்த உணவுப்பாதீடு இன்று முஸ்லிம் சமூகத்துக்குள் மட்டும் நின்று போகாமல் மதமற்ற ஒன்றாக மாறிஇருக்கிறது..அதன் பொதுக் குறியீடுதான் நோன்புக் கஞ்சியாக வடிவம் எடுத்துள்ளது . உண்மையில் மதம் சார்ந்த மாச்சர்யங் களாலும் , பகைமையாலும் தமிழ்ச்சமூகம் இன்னும் தன்னிலை இழக்கவில்லை என்பதன் அடையாளம் இது.
நோன்புக் கஞ்சி முஸ்லிம்களுக்கானது என்னும் எல்லையைக் கடந்து எல்லாரையும் தன்னுள் ஈர்த்துக்கொண்டுள்ளது. உண்மையில் அது எல்லோருக்குமான ஓர் அனுபவமாக மாறுகிறது. ஒவ்வொரு ரமலான் காலத்திலும் தனக்குத் தெரிந்த முஸ்லிம் நண்பர்களிடம் நோன்புக் கஞ்சி வேண்டும் என்று உரிமையோடு கேட்டு வாங்கும் தோழமை களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகம் தழுவிய மன நிலை இது. இதுவோர் ஆரோகியமான அடையாளம் நோன்புக் கஞ்சியை விரும்பி உண்பவர்களாக, நோன்புக் கஞ்சிவைக்க நன்கொடை வழங்குப வர்களாக முஸ்லிம் அல்லாத பிற சகோதரர்கள், சகோதரிகள் இருக்கி றார்கள் என்பது நோன்புக்கஞ்சிக்கான தனிச்சிறப்பு.
தமிழகம் போலவே கேரளாவிலும் நோன்புக்கஞ்சி பிரபலம்..பர்மா என்றழைக்கப்படும் அன்றைய மியான்மரில் உணவகம் நடத்திவந்த கடையநல்லூர் ஊரைச்சேர்ந்த முஹம்மது அலி என்பவரின் கண்டுபிடிப்புதான் நோன்புக் கஞ்சி என்னும் குறிப்பும் இருக்கிறது .
நோன்புக்கஞ்சி தயாரிக்கும் முறை குறித்தும் அதன் சேர்மானங்கள் குறித்தும் எழுதவேண்டும் .அதுவே ஒரு தனி கட்டுரைக்கானது .பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம் .
ஹெச்.ஹாமீம் முஸ்தபா
.