உணவும் உடலும் உயிரும்

எல்லா ஜீவராசிகளும் ஜனிக்கத் தொடங்கியதிலிருந்து  அந்த உயிர் நிலைத்திருக்கவும் இயங்கவும்  முக்கியத் தேவையாய்  இருப்பது ஏதேனும்  வகையிலான உணவு.  அந்த உணவானது உலகம் முழுமைக்கும் பல்வேறுபட்டது.

இப்போதிருக்கும் உலகம் மெல்ல மெல்ல உருவாக்கப்பட்டது. இந்த வாக்கியம் உலகுக்கு  மட்டுமானதில்லை. உணவுக்கும் கூடத்தான் பொருந்தும். ஆதிகாலந்தொட்டு எல்லாமே ஆம் எல்லாமே ஆன்மீகமோ கலையோ கலாச்சாரமோ இப்படி எல்லாமும் மெல்ல மெல்ல மாற்றம் பெற்று மாற்றம் பெற்று இன்றைய இந்த நிலைக்கு வந்திருக்கிறது.  அதில் உணவு என்பது  விலங்குகளோடு வேட்டையாடி பச்சை மாமிசம் உண்டு பிறகு நெருப்பைக் கண்டறிந்து விவசாயம் செய்து பயிர்பச்சையென விளைவித்து அதனையும் வேகவைத்து ருசிகூட்டி உண்ணத் தொடங்கி இன்றைக்கு பல்லாயிரம் விதமான உணவு வகைகள் உண்ணக் கிடைக்கின்றன.

உலகம் முழுமைக்கும் என்று பார்த்தோமானால் அந்தந்த நாட்டு தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு உணவுப் பயிர்கள் விளைவிக்கப் படுகின்றன. அந்த மண்ணில் விளையும் பொருட்களே அந்த வெப்பநிலைக்கு அங்கு வாழும் மக்களுக்கு சரியான தேர்வாகும்படி படைக்கப்பட்டிருக்கும் போல. ஆனால் நாம் என்ன செய்வோம்? நாம் வசிக்கும் இடத்தைவிட்டு வேறு மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்லும்போது அங்குள்ள உணவை ருசிக்காமல் இங்கு நாம் உண்டு பழகிய உணவேதான் வேண்டும் என நினைத்துத் தேடியலைந்து உண்பதெல்லாம் மடத்தனம். 

இங்கே உணவில் சாதி மதம் இனம் இவையெல்லாம் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது. ஆம் உணவு வகைகளிலும் செய்முறைகளிலும் சாதி ரீதியிலான வேறுபாடுகள் நிறைந்திருக்கின்றன.  முன்னர் மேல்தட்டு வர்க்கத்தினர் காலை இரவு உணவை பலகார வகைகளாக அதாவது இட்லி தோசை இடியாப்பம் புட்டு கொழுக்கட்டை பணியாரம் என்று உண்பார்கள். மதியம் ஒருவேளைக்கு அரிசி சோறும் குழம்பு மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொண்டனர். 

ஆனால் எளிய உழைக்கும் வர்க்கத்தினரின் உணவாக கூழ் கஞ்சி களி இவையே இடம்பெற்றன. எப்போதேனும் அல்லது பண்டிகை நாட்களில் இட்லி தோசை என்பதைக் கண்ணில் காண்பார்கள். உழைக்கும் வர்க்கத்தினர் என்று கூறுவது நமக்கெல்லாம் உணவுப் பயிர்களை விளைவித்துத்தரும் விவசாயிகள் போன்ற கடின உழைப்பாளிகள். 

உணவே மருந்து. மருந்தே உணவு. இந்தச் சொற்றொடர் எத்தனை பொருளுடையது. ஆம் நம் பாரம்பரிய உணவெல்லாம் மருந்தாகத்தான் இருந்தன.. இப்போது மருந்து உணவாக மாறிக்கொண்டிருக்கிறது என்ற துயரமான உண்மையை நாம் உணரத்தான் வேண்டும்.  இன்றைக்கு விவசாயிகள் மெல்ல மெல்ல தங்கள் விவசாய நிலங்களை வீட்டுமனைகளுக்கும் வணிக வளாகங்களுக்கும் விற்று விவசாயத்தை விட்டுத் தொலைதூரம் சென்று கொண்டிருக்கிறார்கள். பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆணிவேராக இருப்பது இதுவே.  அதாவது  உலகமகா யுத்தத்திற்குப் பிறகு உணவுத் தேவை அதிகரித்தபோது செயற்கை உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற்றனர்.  ஏன் உலகமகா யுத்தம் என்று குறிப்பாகக் குறிப்பிட்டேன் என்றால் யுத்தத்திற்காக உற்பத்தி செய்து சேமிக்கப்பட்ட அணுகுண்டுகளின் ரசாயனங்கள் மறுஉபயோகமாக செயற்கை உரமாக உருமாறின. இவையெல்லாம் மூன்றாம்தர நாடுகளுக்கு அதாவது வளர்ந்துவரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இன்னும் சொல்லப்போனால்  நம்மைப் போன்ற நாடுகள் இறக்குமதி செய்தன. 

இயற்கை உரங்களால் விளைவிக்கப்படும் மகசூலுக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். ஆனால் இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை உரங்களும் பூச்சி மருந்துகளும் சரியாக தங்கள் வேலையைச் செய்யத் தொடங்கின. விரைவான விளைச்சலும் மகசூலும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தந்தன.  அதன்பின்னர் விளைநிலம் வீரியம் இழந்து மலடானதுதான் கண்டவினை. பூச்சி மருந்து அடிக்கப்பட்டு விளைந்தவற்றை என்னதான் கழுவினாலும் மருந்தின் வீரியம் நம் உணவில் கலக்கத்தான் செய்யும். விளைவு சமீப ஆண்டுகளாக பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் புற்றுநோயே சாட்சி.

ஆன்லைன் வர்த்தகம் கொடிகட்டிப் பறக்கும் இன்றைய சூழலில் உணவுப் பொருட்களும் மளிகைப் பொருட்களும் விலை மலிவாகக் கிடைக்கும் பிராண்டுகளையே மக்கள் அதாவது பெரும்பாலும் நடுத்தர மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.  அந்தப் பொருட்களெல்லாம் பூச்சிமருந்து தெளித்தே விளைவிக்கப்பட்டவையாகவோ கெட்டுப் போகாமல் பாதுகாக்க கெமிக்கல்கள் சேர்த்தோ தயாரிக்கப்பட்டவைதான் என்பதை யாரும் அறிவுறுத்துவதேயில்லை. 

உணவு உற்பத்தி இப்படி நோயை உருவாக்கும் அரசியலாகி பிறகு அந்த நோய்க்கு மருந்து உருவாக்கி உண்ணச் செய்து வணிகம் பெருக்குகிறது. 

இது ஒரு புறம் என்றால் வளரும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் திட உணவு  கொடுக்கப் பழக்கும் காலத்தில் இருந்தே எதெது உடலுக்குத் தீங்கு விளைவிக்காதவை எவற்றையெல்லாம் நாம் உணவில் தவிர்க்க வேண்டும் என்று கற்றுத்தந்து உண்ணப் பழக்க வேண்டும். அது மட்டுமல்ல பள்ளிக்காலத்திலும் உண்டு உறைவிடப் பள்ளிகளிலும் இதையே கடைப்பிடிக்கும்போது அதன் நன்மைகளையும் உண்மைகளையும் அறிந்துகொள்வார்கள். அதன்பிறகு பிள்ளைகள் தங்களை சரியாகப் பார்த்துக் கொள்வார்கள். 

அதைவிடுத்துப் பெற்றோரே பிள்ளைகள்  அழுது அடம்பிடிக்கிறார்கள் என்று அவர்களைத் தவறாக ஈர்க்கும் துரித உணவு வகைகளை வாங்கித்தந்து கெடுக்கிறார்கள். பின்னர் உடல்நலக்கோளாறும் நோயும் வராமல் என்ன செய்யும்? 

இதில் பெரியவர்களுக்கே மிகுந்த விழிப்புணர்வும் பொறுப்பும் தேவை. குழந்தைகளுக்குச் சத்தான உணவு தருவதில் காய்கறிகள் கீரை வகைகள் பழங்கள் இவற்றையெல்லாம் தவிர்க்கவே இயலாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் நம் பாரம்பரிய காலை நீராகாரத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது மீதமான சோற்றுடன் வடித்த கஞ்சி சிறிதளவும் தண்ணீரும் விட்டு வைத்து மறுநாள் மோர் கலந்து எடுத்தால் அதுதான் நீராகாரம். காபி தேநீர் புழக்கத்துக்கு வருமுன்னர் இதுதான் நம் காலைத் தேநீர் போல இருந்தது.  ஆற்றுநீர் வாதம் போக்கும், அருவிநீர் பித்தம் போக்கும், சோற்றுநீர் ரெண்டும் போக்கும் என்ற சொலவடையே உண்டு.

காலை உணவாக பயறு வகைகள் முட்டை அல்லது காய்கறி சாலட், காய்கறி ஸ்மூத்தி என்று சத்தான ஆகாரம் எடுத்துக் கொண்டால் சர்க்கரை இரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மதிய உணவாக மாப்பிள்ளைச்சம்பா கவுனி அரிசியில் சமைத்து உண்ண நலமாகும். இடையில் பசித்தால் நெல்லிக்காயோ கொய்யாவோ வெள்ளரியோ எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடல் எடையும் அதிகரிப்பதில்லை. இந்தவகை உணவில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலும் வருவதில்லை. 

ஒருகாலத்தில் சகஜமாகப் புழங்கிய சிறுதானிய உணவெல்லாம்  பின்னர் திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டு இப்போது மீண்டும் விலை அதிகரிக்கப்பட்டு சந்தையில் நுழைந்திருக்கிறது.  அதற்கேற்ப சிறுதானிய உணவு உண்ணச் சொல்லி மருத்துவர்களின் ஆலோசனையும் பரிந்துரையும் வேறு. அதுமட்டுமல்ல குழந்தைகள் துரிதஉணவை விரும்பி உண்கிறார்கள், அதிலும் அடம்பிடித்து அதையே தொடர்ந்து உண்பதால் சிறுவயதிலேயே வயதுக்கு மீறிய உடல்பருமன் அதுசார்ந்த நோய்களான இரத்த அழுத்தம் சர்க்கரை நோய் இப்படி வரிசைகட்டி உடலில்வந்து ஒட்டிக்கொள்கின்றன.

சரி மீண்டும் விவசாய நிலங்கள் பற்றிப் பார்ப்போம்.  சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை என்று நம் ஐயன் வள்ளுவன் கூற்று அத்தனையும்  உண்மை.  ஒரு நாட்டில் விவசாயி செழிப்பாக இருந்தால்தான் மற்ற எல்லாத் தொழில்களும் சிறப்பாக இருக்கும்.  பெரிய பெரிய தொழிலதிபர்கள் எனப்படும் பெருமுதலைகள் வங்கிகளில் வாங்கும் கோடிக்கணக்கிலான கடன் தள்ளுபடி செய்யப்படும் இதே நாட்டில்தான் ஏழை விவசாயி உரத்திற்கோ டிராக்டருக்கோ வாங்கும் சில ஆயிரங்களோ லட்சங்களுக்கோ வாங்கும் கடனுக்காக அவமானப்படுத்தப்பட்டு டிராக்டரைப் பிடுங்கிச் செல்லும் துயரச்சம்பவங்களும் நிகழ்கின்றன.  அந்த விவசாயியோ அவமானம் தாங்காமல் தற்கொலை  செய்துகொள்ளும் கொடூரமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

உணவை வீணடிக்கும் இதே நாட்டில்தான் பட்டினிச்சாவும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. சில மேலை நாடுகளில் உணவு விடுதிகளில் வாங்கும் உணவை சாப்பிடாமல் வீணாக்கினால் இடண்டு மடங்கு பணம் அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் இங்கே ஏராளமான திருமண வீடுகளிலும் உணவு விடுதிகளிலும் வீணாக்கப்படும் உணவின் அளவெல்லாம் சொல்லி மாளாது..  

உணவு நம்மைப்பொறுத்த வரையில் நம் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. எப்படியென்றால் எளிய மக்கள் உணவுக்கு வழியில்லாதபோது உழைக்கத்தானே செய்வார்கள்? அதுவும் குறைந்த கூலிக்கோ பழைய சோற்றுக்கோ என்று. 

காமராஜர் முதல்வராய் இருந்தபோது பதவிக்கு வந்து  மூடப்பட்ட ஆறாயிம் அரசுப்பள்ளிகளை முதலில் திறக்க ஆணையிட்டார். கல்விக்கட்டணத்தை ரத்து செய்தார். ஆனாலும் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு கூடவில்லை. காரணம் தேடியலைந்தபோது ஏதோ ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று கொண்டிருந்த காமராஜர் காரை நிறுத்தச் சொல்லி இருக்கிறார். ஒரு குடியானவன் தன் பிள்ளைகளோடு மாடுமேய்த்தபோது பள்ளிகளெல்லாம் திறந்ததையும் கல்வி இலவசம் என்றும் தெரியாதா? என்றபோது பள்ளிக்கூடத்துக்கு இலவசம்னு தெரியும் ஆனா சாப்பாடு இல்லையே! இங்க எங்கூட மாடுமேய்ச்சான்னா பழைய கஞ்சியாவது கிடைக்கும். அங்க வந்து என்ன செய்ய என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார் அவர் முதலமைச்சர் என்பது தெரியாமலேயே.  இறுதியில் காரணம் கண்டடைந்த காமராஜர் உடனடியாக மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார்.

அதுவே பின்னர் சத்துணவுத் திட்டமாகி, ஊட்டச் சத்து மிகுந்த கலந்த சாதம் கீரை வகைகள் முட்டை என்றாகி இன்றைக்கு காலைச் சிற்றுண்டி வரை பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கின்ற  தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது.

இப்போதெல்லாம் கையில் கைபேசி வைத்திருக்கிறவர்கள் எல்லாம் யூட்யூப் சேனல் வைத்திருக்கிறார்கள். சரியோ தவறோ அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் எல்லாம் தெரிந்தவர்கள் போல உணவில் மருந்து என்று மருத்துவர்கள் போலத் தங்களை பாவித்துக்கொண்டு எதையெதையோ பதிவிடுகிறார்கள். இது ஒரு புறம் என்றால் ஃபுட் பிளாக்கர்ஸ் என்று ஒரு வகை.., அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கெங்கே என்னென்ன சாப்பிடுகிறார்களோ அதை வீடியோ எடுத்து அந்தந்த உணவகங்களில் பணம் பெற்றுக்கொண்டு தங்கள் சேனலில் பகிர்கிறார்கள். அவை எல்லா நேரமும் எல்லோருக்கும் நல்ல அனுவங்களையே தரும் என்று உறுதி கூற இயலாது. 

பெருநகரங்களில் கண்டகண்ட நேரங்களில் அதாவது இரவு பனிரெண்டு மணி இரண்டு மணிக்குக் கூட பிரியாணி உண்ணும் ஒரு பழக்கமும் கூட்டமும் உருவாகியிருப்பது ஆரோக்கியக்கேடு. இரவென்பது உடலின் செரிமான உறுப்புகள் ஓய்வு கொள்ளும் நேரம். அந்த நேரத்தில் உடல் ஏற்காத அல்லது ஏற்க இயலாத உணவைத் திணிப்பது காலம் கடந்து உடலுக்குப் பிரச்சனைகளை உருவாக்கும். 

ஏதோ திட்டமிட்டு சிறுதானியங்களை மறக்கடித்தது போல இப்போதெல்லாம் உணவு விடுதிகளுக்குச் சென்று என்ன இருக்கிறதென்று கேட்டோமானால் புரோட்டா, நூடுல்ஸ், பிரியாணி, அதிலும் சிக்கன், மட்டன் வகைகள் காளான் பன்னீர் என்றும் நாண் தந்தூரி வகைகளுமாகத்தான் சொல்வார்கள். மறந்தும் இட்லி தோசை இடியாப்பம் என்ற எப்போதும் உண்டுவந்த இயல்பான உணவு பற்றி வாயே திறப்பதில்லை. அவை வேண்டுமென்று கேட்டால் ஒரு அசட்டுச் சிரிப்புடன் அதெல்லாம் கிடையாது என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிடுவர். ஆனால் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு வயோதிகர்கள், நோய்மையில் இருப்பவர்கள், திட உணவு தொடங்கும்  குழந்தைகள் முதல் எல்லோருக்கும் ஏற்ற ஆகச் சிறந்த உணவு ஆவியில் வேகவைத்த இட்லி என்று ஆய்வுலகமே ஏற்றுக் கொண்டது அனைவரும் அறிய வேண்டிய உண்மை. 

வியாபார ஒப்பந்த நிகழ்வுகளிலும் அரசியல் போன்றவற்றிலும் உணவு ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. வயிறாற உண்ணும் போதினில் மனம் சமநிலையில் இருந்து நல்ல திட்டங்களுக்கான முடிவை எடுக்கச் செய்யும்.  அதேபோல ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்லும் இந்தக் காலத்தில் குடும்பத்தோடு சேர்ந்துண்ணும் வாய்ப்பு எல்லாப் பொழுதிலும் அமைவதில்லை.  ஒவ்வொரு நாளும் ஒரு வேளையாவது ஒன்றாக அமர்ந்து உண்பது உடல் மட்டுமில்லை மன ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. குடும்பத்தில் மிக முக்கிய முடிவுகள் எளிதாக எடுக்க முடிவதும் உணரலாம். அதுபோல விடுமுறை நாட்களில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு விருப்பமான தனித்துவமான உணவென்று இருப்பதை சமைத்துப் பரிமாறி சேர்ந்து உண்பது அத்தனை மகிழ்ச்சியைக் கொடுக்கும்.  உறவை பலப்படுத்தும்.

என்னதான் யூட்யூப் பார்த்துக் கற்றுக் கொண்டாலும் அந்தந்தப் பகுதி அல்லது அந்தந்த சமூக சமையலுக்கென்று ஒரு தனித்த ருசி உண்டு.  எங்கள் வீட்டில் நான் செய்யும் கத்தரிக்காய் கிச்சடிக்கும், பீர்க்கங்காய் கிச்சடிக்கும்,  இஞ்சித் துவையலுக்கும்,  இஞ்சிப் பச்சடிக்கும், புளிஇல்லாக் கறிக்கும்,  பால் பாயாசத்திற்கும்  அத்தனை பேரும் அடிமை. ஒரு உதாரணத்திற்கு நான் செய்யும் புளி இல்லாக்கறி செய்முறை சொல்கிறேன். 

நான்கு பேருக்கு : 

150 கிராம் பாசிப்பருப்பை வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அன்றைக்கு சமைக்க எடுக்கும் அரிசியை  முதலில் லேசாகக் கழுவி ஊற்றிவிட்டு இரண்டாவது தண்ணீர் ஊற்றி களைந்து அலசி அந்தத் தண்ணீரை எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும்.  

தேவையான காய்கறி: கத்தரிக்காய் 3 -4 எண்ணம் , முருங்கைக்காய் 1 முருங்கைக்கீரை இரண்டு கைப்பிடி அளவு.

அரைக்க : மிளகாய் வத்தல் 4 – 5 , சீரகம் 1 டீஸ்பூன், மிளகு 1 1/2டீஸ்பூன் நிறைய, பூண்டு 10 – 15 பல்,  சின்ன வெங்காயம் 15 , தேங்காய் அரை மூடிக்கு சற்று குறைவாக.  

கழுவிச் சேகரித்த அரிசிக் கழுநீரோடு தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து அதில் கலந்து மஞ்சள் தூள் சேர்த்து காய்கறியை துண்டுகளாக்கி அதில்  சேர்த்து அடுப்பில் ஏற்றி கொதிக்கவிடவும்.. காய்கறி வெந்ததும் உப்பு சேர்த்து வேகவைத்த பாசிப்பருப்பைக் கலந்து ஒரு கொதி விடவும். பிறகு ஒருகடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து சீரகம் சிறிது ஒன்றிரண்டாய்ப் பொடித்த மிளகு பெருங்காயத்தூள் சேர்த்து கழுவிஎடுத்த முருங்கை இலையை சேர்த்து வதக்கி கொதிக்கும் குழம்பில் இட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து மூடிவைத்துவிடவும். இந்தக் குழம்பிற்கு ஒரு மருத்துவ குணம் உண்டு. நல்ல மிளகும் சீரகமும் சேர்த்த புரோட்டீனும் இரும்புச்சத்தும் நிறைந்த இந்தக் குழம்பு ஜலதோஷத்திற்கு நல்ல நிவாரணி ஆகும்.  சூடாக சூப் போலவும் அருந்தலாம்.  சூடான சாதத்தில் இட்டும் சாப்பிடலாம். எங்க வீட்ல இந்தக் குழம்பு வச்சா நீச்சலே அடிப்பாங்க. அனைவருக்கும் அவ்வளவு பிடித்தமானது. மறுநாள் வயிறே கழுவி வைத்தாற்போல லேசாகிவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

இப்படியெல்லாம் ஒவ்வொரு உணவுக்கான மகத்துவத்தையும் நமக்காகச் சேர்த்துவைத்த நம் முன்னோர்கள் ஆரோக்கியத்தையே பெரிதாக நினைத்தார்கள். 

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற மகாகவி பாரதியின் வரிகளை மனதில் இருத்திக்கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் அதிகாரத்தில் இருக்கிற அத்தனை பேருக்குமானது.

ஒவ்வொரு கண்டத்திற்கும், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மதத்துக்கும்  இவ்வளவு ஏன் ஒவ்வொரு சமூகத்துக்கும் என்று வகைப்படுத்தப்பட்ட உணவு வகைகள் என்று உண்டு. இங்கு நாம் அதுபற்றிக் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அவரவர்க்கான உணவை அவரவர் பொருளீட்டி உண்ணும் சுதந்திரம் உள்ளது.  ஆனால் ஒரு அரசோ அதிகாரிகளோ இதைத்தான் உண்ணவேண்டும்; இதை உண்ணக்கூடாது என்று சொல்வது ஏற்புடையது அல்ல. அது அநாகரீகமானது. அநீதியானது. இன்னும் சொல்லப்போனால் அராஜகமானது. இதைவிடுத்து அனைவரும் பசியின்றி உண்ணும் உணவுக்கு உத்திரவாதம் செய்வதுதான் அரசின், அதிகாரிகளின்  கடமை. 

எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம். அந்த வயிற்றுக்குப் பஞ்சம் விளையாமல் பாதகமின்றிப் பார்த்துக்கொண்டால் குற்றங்குறை நிகழ்வதுகூடக் குறையும். கூட்டிக்கழித்துப் பார்த்தால் இந்த உணவுச்சங்கிலியின் கண்ணி சரியாகத்தான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *