ஜெகத்தினில் ஒருவருக்கு உணவு கிடைத்தால் !!

ஒரு மனிதன் உயிர்வாழ தேவையான அடிப்படை விஷயங்கள்  மூன்று. உணவு, உடை, உறைவிடம். அதில் முதலாவதாக உணவு வரும் போதே புரிந்து விடுகிறது. நாம் உயிர்வாழ முதலில் உணவு தேவை. உடலை மறைத்துக் கொள்ளும் உடை தேவை. அகண்ட விசும்பின் கீழ் அமைதியாக உறங்கியெழ ஓர் உறைவிடம் தேவை. மற்ற இரண்டு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், அதனை உழைத்துப் பெறுவதற்கும்  ஒரு மனிதனுக்கு சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தி உணவு மூலமே ஒரு மனிதனுக்கு கிடைக்கிறது. எனவே மீண்டும் சுற்றி ஓர் உயிர் வாழவேண்டும் என்றால் உணவில் வந்துதான் நிற்கிறோம்.

‘உடம்பை வளர்த்தேன்  உயிர் வளர்த்தேனே’ என்கிறார் திருமூலர். நல்ல ஆரோக்கியமான உணவை உண்டு வாழ்ந்தால் உயிரை வளர்த்து வாழ்நாளை ஆரோக்கியமாக நீட்டிக்கலாம் என்கிறார். இது தெரிந்தது தானே என நினைப்போம். எந்த ஒன்றையும் வரைவோடு நிறுத்திவிட்டால் பயன் ஏது? செயல்முறைப் படுத்தும் போது தானே அதன் முழுப்பயனும் கிட்டுகிறது.

அப்படியான உணவு பற்றிய அறிவு, விழிப்புணர்வு, சுவை, உணவு அரசியல், உடற்பயிற்சி,  உணவின் தரம், ஜங்க் ஃபுட், டயட் முறைகள் போன்றவற்றை முழுமையான தெளிவோடு பயன்படுத்தும் போதுதான் அது நமக்கு உணவாகி மருந்தாகிறது. இல்லையெனில் அது விஷமாகிறது. விஷத்தை உண்டு கொண்டு ஆயுள் நீட்டிப்பு, ஆரோக்கியத்தை எப்படி நீட்டிக்க முடியும் என்கிற கேள்வி ஒரு புறம் கிளம்புகிறது. இவற்றை என் அனுபவங்கள் மூலம் பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரை.

கண்ணதாசன் ஓரிடத்தில் சொல்கிறார்; ஒருவன் எப்படி எல்லாம் வாழக்கூடாதோ அப்படி எல்லாம் நான் வாழ்ந்திருக்கிறேன். அதனால் ஒருவன் எப்படி வாழவேண்டும் எனச் சொல்லும் தகுதி எனக்கிருக்கிறது என்பார். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் கிட்டத்தட்ட ஓரளவுக்கு நிறைய டயட் முறைகளைப் பின்பற்றியதாலும் அதன் சாதகபாதகங்களை அறிந்ததாலும் உணவு பற்றிய விஷயங்களை பேச சிறு தகுதி இருப்பதாக உணர்கிறேன்.

இன்றைய நுகர்வோர் கலாச்சாரம் வீடுவரை சுலபமாக எல்லாவற்றையும் கொண்டு வந்துவிடுகிறது. எங்கும் எதற்கும் விளம்பரங்கள், மார்க்கெட்டிங் டிஜிட்டல் மயமாகி கிடக்கிறது. அவற்றில் இருந்து முழுமையாக தப்பித்து நாம் பழைய வாழ்க்கை முறைக்கு ஓட முடியாத தொலைவை அடைந்து விட்டோம். குறைந்த பட்சம்  நம்மால் எதைச் செய்ய முடியும் என்றாவது யோசிக்கலாம் என்பதைத்தான் இந்தக் கட்டுரை வழியே விரிவாக உங்களோடு பகிர நினைக்கிறேன்.

1.உணவு பற்றிய அறிவு 

**************************************

                 முதலில் ஓர் உணவின் உடற்கூறுகள், அதன் இயல்பு, அதன் நன்மை முதலியவற்றைத் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அன்றாட சமையலையே எடுப்போம். ஒரு சாம்பார் வைக்கிறோம்…பருப்பு புரோட்டின் ஆனால் அதிகம் வாயுத் தன்மை உடையது. அதனால் சீரகம், பெருங்காயம் சேர்க்கிறோம். ஒரு புளிக்குழம்பு வைக்கிறோம்.. காரம் தூக்கலாக இருப்பதால் புளி சேர்த்து மட்டுப்படுத்துகிறோம். ஒரு நாட்டுக் கோழி குழம்பு வைக்கிறோம் அது சூடு அதனைத் தணிக்க நல்லெண்ணெய் சேர்த்து செய்கிறோம்… இப்படி சின்னச்சின்ன விஷயங்களை நாமறிவதோடு மட்டுமல்லாது நம் குழந்தைகளிடம் அவ்வப்போது சொல்லி வந்தால் அவர்களுக்கும் இப்போதே உணவு பற்றிய அறிவு வளரும். நமக்கு முந்தைய தலைமுறை அப்படித்தான் நமக்குப் புகட்டியது என்பதை நம் தலைமுறை அம்மா, அப்பாக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக சாக்லேட் விரும்புகிற குழந்தையிடம் கேரட் சாப்பிடு, கறிவேப்பிலை நல்லது, பாகற்காய் நல்லது என்று வெறுமனே சொன்னால் சாப்பிட மாட்டார்கள். அதன் பயன்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் படி பாசிட்டிவாக பொறுமையாக சொல்லித் தெரிய வைக்கலாம். 

‘உனக்கு கருகருனு முடி வளரணுமா?’

‘கண்கள் க்யூட்டாக இருக்கணுமா?’

இப்படி உரையாடலில் ஈடுபட்டு சாப்பிட வைக்கலாம். முக்கியமாக நம் குழந்தைகளுக்கு நாம் தான் ரோல்மாடல். முடி வளரும் என்று சொல்லி விட்டு நாம் கறிவேப்பிலையை தட்டில் இருந்து தூக்கி எறிந்தால் அவர்கள் சாப்பிட மாட்டார்கள். 

ஒருவருக்கு வயிற்றுவலி, காய்ச்சல், இருமல் போன்ற சிறிது சிறிதான பிரச்சினைகளுக்கு நாம் இன்று, நேற்று என்ன சாப்பிட்டோம் என்றுதான் முதலில் யோசிக்க வேண்டும். டாக்டரும் அதைத் தானே கேட்கிறார். உணவு பற்றிய அறிவில் எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் என்ன நன்மை என தெரிந்து வைத்திருப்பதைப் போல என்னென்ன உணவுகளை அதிகமாக எடுத்தால் பிரச்சினைகள் வரும் எனவும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். உடல் நிலை சரியில்லாத காலங்களில் என்ன உணவு வகைகளை எடுக்க வேண்டும் என்பதையும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். இன்று இளம் ஆண்கள் இளம் பெண்கள் என எல்லோரும் தனியாக வீடு, ரூம் எடுத்து தங்குகிற சூழலில் உடல் நிலை சரியில்லை என்றால் எளிமையாக என்னென்ன உணவுகள் எடுக்கலாம் தெரிந்து கொண்டால் மட்டுமே காலம் தள்ள முடியும். 

எனது தோழி ஒருத்தி மகனுக்கு இப்போதே ஃபேட்டி லிவர் பிரச்சினை. அது கூட வாழ்வியல் முறையில் சரி செய்யலாம். பித்தப்பையில் கல் என ஆபரேஷன் ஆகி உணவுகளைப் பிரித்து சாப்பிடும் படி ஆகியிருக்கிறது. 

இப்போது கடைகளில் வாங்கும் மளிகை பொருட்கள் எக்ஸ்பயரி டேட் பார்த்து தான் வாங்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படிச் சாப்பிட்ட ஒரு பையனுக்கு ஃபுட் பாய்சன் ஆகி மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு மேல் நடந்தது. கொஞ்சம் கவனமாக இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகளை முளையிலேயே தடுத்து விடலாம். இல்லையெனில் அதுவே நம் உடலுக்கு, உயிருக்குத் தீங்கு உருவாக்கிவிடும் அபாயமும் உள்ளது.

2. உணவு பற்றிய விழிப்புணர்வு 

**************************************************

          பருவங்களுக்கு ஏற்றார் போல் உணவு உற்பத்தி நடக்கிறது. எந்த உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் அதிக நாட்கள் கெடாமல் அதன் இயல்பில் இல்லாமல் இருக்கிறதோ அவற்றின் உடல் முழுவதும் உரங்கள் கொட்டிக் கிடக்கிறது எனப் புரிந்து கொள்வது விழிப்புணர்வில் அடிப்படைத்தேவை. எல்லாப் பருவங்களிலும் சில உணவுகளை எடுக்கலாம். ஆனால் சளி மூக்கோடு ஒழுகிக் கொண்டிருக்கும் போது ஐஸ்கிரீம் சாப்பிட்டால் என்னாகும்? நான் ஏறுக்கு மாறாக சாப்பிடுவேன் என்பவர்களின் நாம் பேசமுடியாது. உணவிற்கு பருவங்கள் எப்படி உண்டோ அப்படித்தான் மனிதனுக்கும். சின்ன வயதில் ஒரு டசன் இட்லி கூட சாப்பிட முடிந்திருக்கும். வயோதிகத்தில் இரண்டுதான் முடிகிறது என்றால் அதை ஏற்கும் பக்குவம் வேண்டும். காலை சாப்பிடும் உணவுகள் என்ன? மதியம், இரவு சாப்பிடும் உணவுகள் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வு அடைதல் மிகவும் அவசியம். 

இன்றைய இளம் பெண்கள் ஜீரோ பெல்லி, டயட் கடைப்பிடிக்கறேன் பேர்வழி எனப் பாதி நாள் சாப்பாடு இல்லாமல் கிடப்பது ஆபத்தைத் தான் விளைவிக்கும். என் குடும்ப மருத்துவரிடம் சென்றபோது அவர் கூறினார்…இன்றைய இளம் பெண்கள் நீர்க்கட்டி, ஃபைப்ராய்டு கட்டி போன்றவற்றால் சிகிச்சை எடுக்க அதிகம் வருகிறார்கள் என்று. அப்போது விட இதன் விழுக்காடு இப்போது அதிகரித்திருக்கிறது என்கிறார். மாதவிலக்கு சீராக வரத் தரப்படும் மருந்துகள் நம் உடலை இயற்கையான சுற்றுக்கு பழக்காது மாத்திரை போட்டால்தான் வரும் என்கிற நிலைக்கு இழுத்து விடும். 

பிரச்சினையை சரி செய்ய தயக்கம் இன்றி முன்வருவது நல்ல விழிப்புணர்வு தான். மறுக்கவில்லை.  ஆனால் வியாதிக்கு மருத்துவம் எடுப்பதில் இருக்கும் விழிப்புணர்வு ஏன் வியாதி வராமல் தடுப்பதில் இல்லை என்பதுதான் கேள்விக்குறி. ஒரு பெண் பூப்படைந்த பிறகு நல்ல ஆரோக்கியமான சத்தான உணவுகளை உண்டால்தான் முறையான மாதவிலக்கு, சரியான எடை இதெல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கும். ட்ரீட், டீம் அவுட், பார்ட்டி என்று பெருநகரப் பெண்களும், நகரப்பெண்கள் போல நாமும் ஆகவேண்டும் என்று அவர்கள் போல மாடர்னாக மாற நினைக்கும் கிராமத்து பெண்களும் முதலில் கைவைப்பது உணவில்தான். இவை பின்னாளில் கர்ப்பப்பை கோளாறுகள், கர்ப்பப்பை இறக்கம், கால்சியம் இல்லாமல் விரைவில் கைகால்கள் மூட்டு வலிவருவது, தேய்மானம் ஆகி கழுத்து, முதுகு வலி வருவது, வீணாகிறது என பழையதை சாப்பிட்டு உடல் எடையை ஏற்றுவது இப்படிப்பல பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள்.

விழிப்புணர்வு நிலை என்பது என்ன? ஒரு விஷயம் நடக்கும் போது நம் கவனம் முழுமையாக அதில் இருப்பது. அப்படி முழுமையான கவனத்தோடு ஒன்றி உண்ண வேண்டும். காலை உணவை ஸ்கிப் செய்யாமல் இருப்பது குறிப்பிட்ட இடைவெளியில் இல்லாமல், அதிக அல்லது குறைந்த இடைவெளியில் உணவு எடுப்பதைத் தவிர்ப்பது இதையெல்லாமும் கவனத்தில் கொள்ள வேண்டும். பழைய மொழி ஒன்று உண்டே காலையில் அரசன் போலவும் மதியம் இளவரசன் போலவும் இரவு துறவி போலும் உண்ண வேண்டும் என்பது. அந்த விழிப்புணர்வுடன் பருவத்திற்கேற்ற, வயதுக்கேற்ற, பொழுதிற்கேற்ற உணவுகளை உண்ணப் பழக வேண்டும். 

3. சுவை

***************

        அவசர உலகில் நாம் செய்யும் மற்றொரு விஷயம் உணவை சுவைத்து பெரும்பாலானோர் உண்பதில்லை. பழைய வாழ்வு முறை மாதிரி எல்லோரும் அமர்ந்து பேசி சிரித்து உண்ணும் உணவு இப்போது வாய்ப்பில்லை. குறைந்த பட்சம் உணவு உண்ணும் போது  எதிர்மறை உணர்வுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நலம். 

வாயில் ஈ போவது தெரியாமல் வேடிக்கை பார்க்கிறார் என்று கேலிப் பேச்சு ஊர்களில் உண்டு. சிலர் இருக்கிறார்கள்! இப்படித்தான் வாயில் உணவு போவது தெரியாமல் டிவி, லேப்டாப், மொபைல் இதுபோல் ஏதோவொன்றின் மீது கவனம் வைத்துக் கொண்டு சாப்பிடுவது.

ஒவ்வொரு உணவிற்கும் மென்று அசைபோடுவது மாறுபடும். சில கடினமான உணவுகள், மைதா உணவுகள், இறைச்சி போன்றவை நன்கு அரைத்து உள்ளே தள்ள வேண்டியவை. எதையாவது பார்த்துக் கொண்டே உண்ணும் போது உணவின் சுவை அறியாது உண்ணும் போது அதன் பலன்கள் முழுதாக கிட்டுவதை நாமே தடை செய்கிறோம். நாவின் சுவை அரும்புகள் அதனை முழுமையாக சுவைத்து ரசித்து உண்ணும் போதுதான் உமிழ்நீர் நன்கு சுரந்து அதன் வேலையை ஒழுங்காக செய்கின்றன. அதேபோல் நின்றபடி சாப்பிடுவது, அவசரம் அவசரமாக வாயில் போட்டு நேராக தொண்டைக்குள் தள்ளுவது போன்றவையும் பலன்கள் தருவதில்லை. நமக்குப் பிடித்த உணவு என்பதற்காக ஒரேநேரத்தில் சுவை கருதி காணாததை கண்டதைப்போல நிறைய உண்பதும் தொந்தரவுகளை உருவாக்கும். அதையே கொஞ்ச நாட்களில் மீண்டும் செய்து சாப்பிடலாம் என்று சமாதானம் அடைய மனதைப்‌ பழக்க வேண்டும்.

4. உணவு அரசியல் 

*******************************

            இன்றைய உணவு அரசியல் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. அது விளைச்சலிலேயே தொடங்கி விடுகிறது. வீரியமிக்க உரங்கள், மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் என்று எல்லாவற்றிலும் உரங்கள் பயன்பாடு அதிகரித்து விட்டது. மேலும் அவற்றால் அதிக அளவில் உடல் தொந்தரவுகள்உருவாகின்றன. அதனால் நோய் பெருகுகிறது. நோயின் விளைவுகள் மருந்துகள்,  பின் மருந்துகளின் அளவு அதிகரிப்பு, ஒரு கட்டத்தில் மருந்தில்லாமல் வாழ்வு இல்லை என வட்டச்சுழற்சியாகி கண்ணுக்குப் புலப்படாத உணவு அரசியல் உருவாகி இருப்பதை உணர்ந்திருப்பதில்லை நம்மில் பெரும்பாலானோர். நம் உணவுமுறையை வைத்தே மருந்துச்சந்தை இயங்குகிறது. நன்கு பளபளக்கும் காய்கறிகள் வாங்காது சிறு வியாபாரிகள் தோட்டங்களில் இருந்து நேரடியாக இயற்கை விவசாயம் செய்து கொண்டு வருபவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். இன்னும் சிலர் மாடித்தோட்டம் போடுகின்றனர். அதுவே நலம். அந்த காலங்களில் வீட்டைச் சுற்றி எல்லா கொடிக்காய்களும் கிடக்கும். அதை தனிவிவசாயமாக செய்யாது வீட்டில் இருந்து போகும் நீரிலேயே விளைந்துவிடும். வாங்கவே அவசியம் இருந்ததில்லை. இந்த சுழற்சி முறைதான் ஹோட்டல் உணவுகளுக்கும் பொருந்தும். ஹோட்டல் உணவுகள் அடிக்கடி உண்பது அதன் மூலம் வயிறு கெடுவது பின் மருந்துகள் உட்கொள்வது இதன் பின்னும் பெரும் வியாபார அரசியல் தலைவிரித்து ஆடுகிறது.

ஒரு முறை பாலக்கீரையை வாங்கி வந்திருந்தேன். அதைக் கழுவலாம் எனக் கழுவ ஆரம்பித்தால் பச்சைப் பசேலென்று சாயம் போவதுபோல் போனபடியே இருக்கிறது. அதில் நிறமி ஏதோ தளதளப்பாக இருப்பதற்கு சேர்த்திருக்கிறார்கள்… நான்கைந்து முறை கழுவியும் இலைகளில் இருந்து நிறம் முழுமையாக நீங்கவில்லை. வேறு வழியின்றி அதையேதான் செய்து சாப்பிட வேண்டியிருந்தது. இதற்காகப் போய் சண்டை போடவோ, போராடவோ யாருக்கும் நேரமும் இல்லை. கடையை மாற்றிக் கொள்ள முடிந்தது மட்டும் தான் ஒரு சராசரி மனுஷியாக என்னால் செய்ய முடிந்தது. ஒரு உணவுக்கான மூலப்பொருள் தயாராகும் போதே அதன் சுவை, நிறம், மணம் எல்லாவற்றையும் மாற்றி இறுதியில் சந்தையை வந்தடைகிறது. இதன் பின்னர் இருப்பது என்ன என யோசித்தால் இந்த தலைப்பை மீண்டும் படித்துப் பாருங்கள்.

5. உடற்பயிற்சி 

*************************

          உணவு முறையில் உடற்பயிற்சி என்பது முக்கியப் பங்காற்றுகிறது. ஒரு துணிக்கடைக்குப் போகிறீர்கள். உங்களால் ஐநூறு ரூபாய் பெறுமானம் உள்ள ஒரு சட்டைதான்

எடுக்க முடியும் சூழல். ஆனால் ஆசைப்பட்டு அதன் நிறம், டிசைன், தரம் இப்படி ஏதோ ஒன்று உங்களைக்கவர இரண்டாயிரம் ரூபாய் சட்டையை எடுத்து விடுகிறீர்கள். மீதி ஆயிரத்து ஐநூறு ரூபாய் உங்களுக்கு கடன். அதை உழைத்துக் கழித்து தீர்க்கத்தானே வேண்டும். அவ்வளவு தான் உணவும் உடற்பயிற்சியும். தினமும் ருசிக்காக எவ்வளவு உணவை உண்கிறோம்.  அதன் மூலம் நம் உடலில் தேவைக்கு அதிகமான கலோரிகள் உணவை எடுத்து கொழுப்பாக சேமிக்கிறோம்.

அதைக் கழிக்கும் வழி. உடற்பயிற்சிதான்…எனில் தினமும் நாம் எவ்வளவு தேவையற்று கடன் வாங்கி குவிக்கிறோம் என்று யோசித்தால் போதும். உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு தானே கிடைத்துவிடும். அன்றன்றைய உணவு செரிக்க உடற் பயிற்சி செய்தாலே போதுமானது. நெடுங்கால கடன் எனில் அதனைத் தீர்க்கவும் காலம் எடுக்கும். நான்கு நாட்கள் வேலைக்குப் போகவில்லை எனில் ஓவர் டைம் பார்த்து அந்தக்காசை சம்பாதித்துக் கடனை ஈடுகட்டுவது போலாகிவிடும் நாம் அடிக்கடி விட்டுவிட்டு உடற்பயிற்சி செய்வதும். தேவைக்கு அதிகமான உணவை உண்டு உடற்பயிற்சி எதுவுமே செய்யாமல் எல்லா நோய்களுக்கும் வழி விடுவது எப்படி சரி இல்லையோ அதேபோல் தான் அதிக அளவிலான உடற்பயிற்சியும். ஒரு நாளின் உணவு,தூக்கம் எப்படி அவசியமோ அதைப் போல உடற்பயிற்சியும் கட்டாயம் என்பதை வழக்கமாக்கி அளவான உணவை உண்டு அளவான உடற்பயிற்சியை விடாமல் செய்வது மட்டுமே சீரான, ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி.

அதிகமாக உடற்பயிற்சி செய்கிறேனென சிக்ஸ்பேக் வைப்பது எய்ட் பேக், டென் பேக் என கூட்டினார்கள். சமீபங்களில் ஆங்காங்கே உடற்பயிற்சி செய்யும் போதே நிகழும் மரணங்கள் அளவுக்கு அதீதமாக செய்யும் போதுதான் நிகழ்கின்றன என்பதை நினைவில் நிறுத்தினால் போதுமானது.

6. உணவின் தரம் 

****************************

           நம் உணவு முறையே சுத்தம், தரம், ஆரோக்கியம், சுவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு சுவையையும் உணவில் சேர்த்துக் கொள்வது. அந்த சுவைகள் கூடுதலாக அல்லது குறைவாக இல்லாது சமநிலை பேணுவது. அதனால் உடல் தொந்தரவுகள் வியாதிகள் இல்லாது பாதுகாப்பது இதெல்லாம் வீடுகளில் செய்யும் உணவுகளுக்கு மட்டுமே சாத்தியம். எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும் ஹோட்டலில் செய்பவற்றில் தரத்தின் அளவு ஒப்பீட்டளவில் குறைவுதான். வீடுகளில் சமைப்பதிலேயே வேட்டு வைக்கும் அளவுக்குத் தரமற்று கிடைக்கின்றன காய்கறிகள், பழங்கள் எல்லாமும். நாம் தேடித்தேடி வாங்கி வந்தும் பின் அதை கொரோனா காலங்களில் ஊறவைத்துக் கழுவி எடுத்து சமைத்தது போலத்தான் சாதாரண நாட்களிலும் இருக்க வேண்டியிருக்கிறது. ஹைஜீன் என்பதை நாம் பெரும்பாலான ஹோட்டல்களில் எதிர்பார்க்க முடியாத சூழலில் அடிக்கடி அல்லது தினமும் ஹோட்டல்களை நாடாது நாமே தரமாக உணவு தயாரித்து உண்பதே சிறந்தது.  

வடையில் எலி, பிஸ்கட்டில் கம்பி, ஷவர்மா சாப்பிட்டு இறப்பு, நூடுல்ஸால் ஆபரேஷன் இப்படி அனுதினமும் வரும் செய்திகள் எல்லாம் நம் உணவகங்களின் தரத்திற்கு எடுத்துக்காட்டு. எங்கேயாவதுதானே என சப்பைக்கட்டு கட்டும் ஒவ்வொரு விஷயமும் ஓர் உயிரைக் காவு வாங்குகிறது. ஓர் உயிர் என்பது நமக்கு அவ்வளவு சாதாரணமாகப் போய்விட்டது என்பதுதான் வேதனை.

7. ஜங்க் ஃபுட்

************************

          இன்றைய உணவுக் கலாச்சாரத்தில் அதிக நுகர்வோர் நோக்குடனும், நம் வாழ்வியல் முறைக்கு, உணவு முறைக்கு நேர் எதிரானதாகவும், அதிகமாக விற்பனையாவதாகவும், தவிர்க்க முடியாததாகவும் மலிந்து பெருகிப்போனது ஜங்க் ஃபுட் தான். இன்று இதை சாப்பிடாத மனித விழுக்காடு மீச்சிறு அளவே இருக்கக் கூடும். ஜங்க் ஃபுட்டால் வரும் உடற்பருமன் முதல் கேன்சர் வரை வியாதிகள் உருவாவது தெரிந்தும் அதன் சுவைக்கு அடிமையாக மாறியிருக்கிறது நம் தலைமுறை.

நானெல்லாம் தொடணும்னு நினைச்சால் தான் தொடுவேன் எனும் வைராக்கிய ஆட்களுக்கு பிரச்சினை இல்லை. அதன் தீமைகள் தெரிந்தும் அடிக்ஷனாகி இருப்பவர்கள் தனக்கு தானே ஒரு பெஞ்ச் மார்க் வைத்துக் கொள்ளலாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடுபவராக இருப்பின் வாரம் ஒரு முறை, வாரம் ஒரு முறை சாப்பிடுவோர் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை , பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் சாப்பிடுவேன் என்போர் மாதம் ஒரு முறையுமாக முடிந்தளவு குறைத்து எடுக்க ஆரம்பித்தால் நாளடைவில் ஜங்க் ஃபுட் அடிக்ஷனில் இருந்து மீண்டு கொள்ளலாம்.

ஜங்க் ஃபுட் எனப்படும் குப்பை உணவுகள் ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுகள் இரண்டும் நம் வாழ்வியல் முறைக்கு எதிர்மாறான வை.. ஏன்? குளிர் நாடுகளில் சூடான தன்மையை உடல் அடைய மைதா சார்ந்த பிரட் பீட்சா பர்கர் போன்றவை உண்கின்றனர். நம் நாடு இயல்பில் சூடு உள்ள பூமி அதை அடிக்கடி சாப்பிடும்போது‌ உடல் மேலும் சூடடைகிறது. ஆனால் எல்லாவற்றிலும் மேற்கத்திய மோகம் பிடித்து அலையும் நாம் அவர்கள் உணவையும் இங்கே இறக்கிவிட்டோம்.

மேலும் அதீத கொழுப்பு, கலோரிகள், கெட்ட கொலஸ்டிரால், சீஸ் போன்றவற்றை பேஸாக கொண்டுள்ளதால் உடற்பருமன் மட்டுமன்றி விரைவில் பெண் குழந்தைகள் பூப்பெய்தும் நிலையும் உண்டாகியிருக்கிறது. இன்றைய காலேஜ் பெண்களில் பெரும்பாலும் இரண்டு வகைதான் காண முடிகிறது. ஒன்று எதுவுமே சாப்பிடாமல் அதுதான் டயட் என நினைத்து ஈர்க்குச்சி போலாவது, இல்லையெனில் கண்டபடி இந்த உணவுகளை சாப்பிட்டு ஒவ்வொரு பாகங்களும் தனித்து தெரியும் அளவிற்கு பெருத்துப் போவது. இந்த நிலையை எப்படி இன்றைய தலைமுறையை விழிப்புணர்வு அடைந்துவிட்டது என ஏற்க முடியும்.

எனது தோழி ஒருத்தி சொல்கிறாள் , அவள் பெண் வயதுக்கு வந்த பிறகு ஒரு வருடம் கழித்துத் திடீர் திடீரென மாதவிலக்கு சுழற்சி அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது என. அவள் வேலைக்குச் செல்வதால் தினமும் சிப்ஸ், சீஸ் பால்ஸ் என எண்ணெய் உணவுகளை வாங்கி சாப்பிட்டு இருக்கிறாள். எந்த டாக்டரைப் பார்ப்பது என்பது இப்போதே அவளுக்கு ஸ்ட்ரஸ்ஸை உண்டாக்கி இருக்கிறது. சமூக அழுத்தம் ட்ரீட், பார்ட்டி என செல்லும் இடங்களில் இதையெல்லாம் தான் சாப்பிடும் கட்டாயம் உள்ளது. சாப்பிடவில்லை என்றால் கேலி செய்கிறார்கள் என குழந்தை சாப்பிட்டிருக்கிறாள்… விளைவு சுழற்சி கன்னாபின்னாவென்று மாறிவிட்டது.

8. டயட் முறைகள்

*******************************

             சமீப காலங்களில் அடுத்த ஸ்டைலிஷான விஷயமாக மாறி இருப்பது நான் டயட்ல இருக்கிறேன் என சொல்வது.  தவறில்லை. நம் விருந்து உணவுகள் அதிகக் கலோரிகள் கொண்டவைதான். ஆனால் சாப்பிட்டு விட்டு அன்று நன்றாக நடந்தோ அல்லது உடற்பயிற்சி செய்தோ அதைச் சரி செய்துகொள்ளலாம். ஆனால் வயிற்றைக் கட்டி டயட் இருந்து விட்டு அடிக்கடி சீட்டிங் டே என்ற பெயரில் வெளுத்துக் கட்டுவது எடையை இரட்டிப்பாக்கும்.

உடற் பருமனால், அல்லது சில வியாதிகளால் நீங்கள் டயட் மேற்கொள்ள நினைக்கிறீர்கள் என்றால் சில விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

மேலும் ஜிஎம் டயட், கீட்டோ டயட், பேலியோ டயட், இயற்கை உணவு முறை, சிறுதானிய டயட் என எதைத் தொடங்கினாலும் நமது உடலின் மெட்டபாலிசத்தை மாற்றுகிறோம். பல வருடங்களாக உண்ட உணவை மாற்றி வேறொரு உணவை உள்ளே அனுப்பும் போது அது தன்னை தயார் படுத்திக் கொள்ள அவகாசம் தேவைப்படுகிறது. எல்லா டயட் முறைகளிலும் ஆரம்பித்தவுடன் சுத்தப்படுத்தும் முறை நடைபெறுவதால் வயிற்றுப் போக்கு, கஃபைன் வெளியேற்றத்தால் ஏற்படும் தலைவலி, கார்போஹைட்ரேட் குறைந்தவுடன் வரும் சோர்வு முதலியவை உண்டாகும். நாம் எதனால் இது எனக் குழப்பமாகி டயட்டை இரண்டு நாளில் விட்டு பழைய முறைக்குப் போவோம். உடல் எந்த உணவை நீங்கள் இப்போது அனுப்புவீர்கள் என்ற குழப்பத்தை அடைந்து விடும். விளைவு ஒவ்வாமை வாந்தி…. என தொடரும். அதனால் நண்பர்கள் பரிந்துரையில், யூட்யூப் பார்த்து விட்டு டயட் துவங்குவதல் ஆபத்தானது. முறையான குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுத் துவங்குவது நல்லது.

டயட் இருக்கிறோமோ இல்லையோ இரவு நேரம் தான் நமது செரிமான உறுப்புகள் ஓய்வெடுக்கும் நேரம். அப்போது அதிக மசாலா உணவுகள், இறைச்சி உணவுகள், ஜங்க் ஃபுட் உணவுகள் எதை எடுத்தாலும் செரிக்க முடியாமல் உடல் தடுமாறும். அதற்குள் மறுநாள் காலை அடுத்த உணவை தள்ளுவோம். செரிக்காத உணவு கொழுப்பாக மாறி இதுவே நாளடைவில் தொடர தொடர அசிடிட்டி , வயிற்று வலி, பேட்டிலிவர், இளவயதில் மாரடைப்பு போன்றவை உருவாகக் காரணமாகிறது.

எல்லோரும் சொல்லாததை நான் சொல்லவில்லை. ஆனால் திரும்பத் திரும்ப ஒன்றை வாசிக்கும் போது, நடைமுறைப் படுத்தும் போது, செய்யும் போது சிறிது சிறிதாக மாற்றம் உருவாகும் என நினைத்துத்தான் நானும் இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன்.

_____

ஒரு பகடிக்காக எனது பக்கத்தில் எழுதியதை இங்கே பகிர்கிறேன்.

*******************”************************************************************************************

             ஆதிமனிதன் வேட்டையாடி கிடைத்த பொருட்களை பச்சையாக உண்டான்.  பின்னர் நெருப்பை கண்டுபிடித்து அதில்  சுட்டு உண்ணலானான். அப்புறம் பயிர்களை பயிரிடத் தொடங்கி தானியங்களை உற்பத்தி செய்து அதை உண்ணத் தொடங்கினான்.  கம்பு, சோளம், ராகி இது மாதிரி பயிரிட்டு அதன் பயன்களை அனுபவிச்சான். சும்மா இருந்துதா மூளை. நெல்லைப் பயிரிட்டுத் தீட்டாமல் உண்ணுகிறேன்னு ஆரம்பிச்சான். அப்புறம் நாக்குக்கு அடிமையாகி அதில் இருக்கும் நார்ச்சத்துக்களை எடுத்துட்டு சத்தில்லாத அரிசியைத் தின்ன ஆரம்பிச்சான். அது சூப்பர்னு நம்ம நாக்க அதுக்கு அடிமை ஆக்கினான்.  பொறந்தா சாவணுமே ஒவ்வொரு வியாதியா வந்துச்சு.  பரிணாம வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி வளரவளர ஏதாவது கண்டுபிடிச்சாகணுமே.  அரிசி தான் ஆப்பு. கார்போஹைட்ரேட் ஜாஸ்தினான். கோதுமைதான் டாப்பு அதைத் தின்னுங்கனாங்க. தின்னோம்.

அப்புறம் எங்கயோ குதிரைக்கு போடற ஓட்ஸ் இங்கே விக்கணுமே, ஓட்ஸ் நல்லதுனாங்க அதைத் தின்னோம். கஞ்சியா காய்ச்சி குடிச்சு தள்ளினோம். மனுசன் வியாதி குறைஞ்ச மாதிரி இல்லை. 

ஆட்ட, அரைக்க, கூட்ட, பெருக்க, துவைக்க மிசினை கண்டுபிடிச்சு வியாபாரம் ஜோராக வியாதியைப் பெருக்கியாச்சு.  சீக்கிரம் வேலை முடிச்சு சும்மா இருக்கமேனு எல்லாரும் வேலைக்குப் போக ஆரம்பிச்சான். வேலைக்குப் போறப்ப நீட்டி முழக்கி சமைக்க முடியாதுனு துரித உணவு தான் பெஸ்ட்  பிரட், பீட்சா, பர்கர், உருளை கிழங்கு பிங்கர்ஸ் செமனாங்க. அதையாவது ஒழுங்கா திங்க வுட்டாங்களா. அய்யய்யோ அதை எல்லாம் தின்னா நார்ச்சத்து இல்லை அடைச்சுக்கிச்சு. அதுதான் அத்தனை வியாதிக்கும் மூலகாரணம் மூலத்துக்கும் காரணம்னாங்க. சரி. ஓகே. 

இப்ப அய்யய்யோ, கோதுமைல குளூட்டன் இருக்குனாங்க. ஓட்ஸ் வேணாம்னாங்க. பழைய கம்பு, சோழ , வரகு, சாமை, திணை நோக்கி ஓடுங்கனாங்க. ஓடுனோம். ஒரு சைடு சீசன் பழங்கள், காய்கறிகள் தின்னுங்கனாங்க. அதையே டயட்டா மாத்துங்க. ஒண்ணும் இல்லாதபோது மனுசன் அதைத் தான் தின்னான்னாங்க. 

அப்புறம் பூமிக்கு அடியில் விளைஞ்சது தின்னா சுகர் ஏறுதுனு திங்க திங்க பாதில நிறுத்துங்க நிறுத்துங்கனாங்க.  சப்புக்கொட்டி தின்ன எண்ணெய்ப் பலகாரம்தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம்னான். அப்புறம் யாருயா அதை எல்லாம் கண்டுபிடிக்க சொன்னது. கண்டுபிடிக்கலைனா நாங்க சாப்பிட்டு இருக்க மாட்டம்ல. அதனால் கொலஸ்ட்ரால் கூடுச்சு. மருந்து வித்துச்சு. அதுல ஏறுன கொழுப்பை கொழுப்பால கரைக்கறோம்னு ஒரு பக்கம் ஓடுனோம்.

விரதம் இருக்கக் கூடாது.. விரதம் இருந்தா ரொம்ப நேரம் சாப்பிடாமல் இருந்தா சுகர் ஏறும்னாங்க.  அப்புறம் இப்ப விரதம் இருந்தா தான் இன்சுலின் சரியா இருக்குங்கறாங்க. 

இம்புட்டு குழப்பி விட்டாச்சு. இப்ப கூலா நம்ம தட்பவெப்ப நிலைக்கு தகுந்த மாதிரி தான் இயற்கை அங்கங்கே உணவுகளை உருவாக்குது. நம்ம ஏரியால என்ன கிடைக்குமோ அதை மட்டும் சாப்பிடுங்க போதும். அதைத் தானடா இவ்வளவு நாளா பண்ணோம். மனுசங்கள சோதிக்கறதுக்கு ஒரு அளவு வேணாமா. நம்ம சாப்பாட்டையும், வாழ்வியலையும் கொலை பண்ணி உலக அரசியலா மாத்தியாச்சு. 

கடைசில வீட்டு ரசஞ்சோறுதான் பெட்டர்னு ஐநாவுல அறிவிப்பாங்க பாருங்க.

சுபி.

வாய்ப்பு தந்த புழுதி இதழுக்கு நன்றி 🙏.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *